World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

SEP European Election campaign: Oppose the assault on immigrants and asylum seekers

சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில்: குடியேறுவோர் மற்றும் புகலிடம் நாடுவோர் மீதான தாக்குதலை எதிர்

By Statement by SEP candidate Danny Dickinson 
21 April 2014

Back to screen version

இந்த மாத தொடக்கத்தில் 19 வயது மாணவி யாஷிக்கா பகீரதியை நாடுகடத்தியது, குடியேறுவோர் மற்றும் அகதிகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடூரமான மற்றும் பழிவாங்கும் முறை பற்றி நிறையவே பேசுகின்றது.

அவருடைய உயர்-தர (A-levels) தேர்வுகளுக்கு இன்னமும் 6 வாரங்களே இருக்கும் நிலையில், தன்னுடைய குடும்பத்தில் இருந்து பகீரதி பிரிக்கப்பட்டு ஏப்ரல் 2 அன்று மொரிஷியஸுக்கு நாடுகடத்தப்பட்டார். பாராளுமன்ற உள்துறை விவகார குழு கூட இதை “தேவையில்லாத கொடூரம்” என விளக்கியுள்ளது.

ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி கடைசி நிமிட தடை உத்தரவை வழங்க மறுத்து, அப் பெண் மேல்முறையீடு கேட்கப்படும் வரை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். உள்துறை செயலர் நாடுகடத்தல் ஒத்திவைக்கப்படலாம் என்னும் அழைப்புக்களையும் புறக்கணித்தார்: தேர்வுகளுக்குப்பின் “ஒரு பாதுகாப்பான இடத்திற்கு” தாமே அனுப்புவதாக குடும்பம் கூறியதையும் ஏற்கவில்லை.

யாஷிக்கா தன் தாயார், சகோதரர் மற்றும் சகோதரியுடன் உடல்ரீதியில் கொடுமைப்படுத்திய உறவினரிடம் இருந்து தப்புவதற்கு மொரிஷியசைவிட்டு நீங்கினர். அவர்கள் கடந்த கோடையில் தஞ்சம் கோரினர். அவருடைய முழுக் குடும்பமும் வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கியுள்ளது; அவருடைய வயதினால் யாஷிக்கா விவகாரம் தனியே பரிசீலிக்கப்பட்டது. அவர் மட்டும் தனியே அனுப்பப்பட்டது, “பெரும் பீதியை” ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மிகப் பெரிய Yarl’s Wood Detention Centre இல் யாஷிக்கா வைக்கப்பட்டிருந்தார். அவர் நாடுகடத்தப்பட்ட வாரம், ஜமைக்காவை சேர்ந்த மற்றொரு காவலில் இருந்த 40 வயது கிறிஸ்டின் கேஸ் பல்மொனரி தோரம்போ எம்பாலிச நோயால் இறந்தார். Yarl’s Wood Detention Centre, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் மன உளைச்சல் மற்றும் துயரத்தைக் குறைத்து மரணத்தை தடுக்க உள்ளூர் NHS அளிக்க வந்த உதவி வாய்ப்புக்களையும் நிராகரித்துள்ளது.

கிறிஸ்டின் கேஸ், கடந்த 10 ஆண்டுகளில் குடியேறுவோரை வெளியேற்றும் மையத்தில் இறந்த 14வது நபராவர். கடந்த ஆண்டு 84 வயதான ஆலோய்ஸ் ட்வோர்ஜாக் ஐக்கிய இராச்சியத்தில் அனுமதி மறுக்கப்பட்டார். அவருக்கு அல்சைமர் நோய் இருந்தது. மருத்துவர்கள் அவரை “தடுப்புக் காவல் அல்லது நாடுகடத்தலுக்கு தகுதி இல்லாதவர்” என்று உறுதிப்படுத்தியிருந்தனர். இரண்டு வாரங்களுக்குப் பின் ஒரு காவல் மையத்தில் கைவிலங்குகளுடன் அவர் இறந்து போனார்.

கடந்த ஆண்டு ஒரு நடுவர் மன்றம் நடத்திய விசாரணையில், மூன்று G4S பாதுகாப்புப் பிரிவினர் சட்டவிரோதாமாக ஜிம்மி முபெங்காவை அவர் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அங்கோலாவிற்கு 2010ல் அனுப்பப் படுகையில் கொன்றனர் என்று கண்டது.

யாஷிக்கா பகீரதிக்கான மனு 175,000 கையெழுத்துக்களை ஈர்த்தது. கிறிஸ்டின் கேஸின் இறப்பு Yarl’s Wood இல் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தூண்டியது; காவலில் உள்ளவர்கள் உணவு உட்கொள்ள மறுத்தனர். பிரித்தானியாவில் மகளிருக்கு எதிரான வன்முறையை விசாரித்த ஒரு ஐ.நா. அதிகாரி இம்மாதம் முன்னதாக Yarl’s Wood க்குள் உள்ள நிலைமைகளை விசாரிப்பதில் இருந்து தடுக்கப்பட்டார் என Observer  தெரிவிக்கிறது.

மகளிர் குழுக்களின் பிரதிநிதிகள் ரஷிடா மஞ்சூ, மகளிருக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி, Yarl’s Wood க்கு செல்ல வேண்டும் என்று கோரினார். எனினும், நிலையத்திற்கு அவர் வருவார் என்று கூறப்படவில்லை, இது உள்துறை அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

குடியேறுவோரும் புகலிடம் கோருவோரும் இப்பொழுது வாடிக்கையாக செய்தி ஊடகத்தில் தூற்றப்படுகின்றனர், அரக்கத்தனமாக சித்தரிக்கப்படுகின்றனர். குடியேற்ற- எதிர்ப்பு சிந்தனைக் குழுவான MigrationWatch UK, குடியேற்றம், பிரித்தானிய பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்னும் கூற்றுக்களுக்கு வாடிக்கையாக ஆதரவு கொடுத்து மேற்கோளிடுகிறது.

குடியேறுவோரை பலிகடா ஆக்குபவர்கள் பரந்த பொருளாதார நெருக்கடி குறித்து எதுவும் கூறுவதில்லை; ஏனெனில் குடியேறுவோர்கள் 2008 வங்கிச் சரிவு மற்றும் நிதிய உயரடுக்கின் பிணை எடுப்புக்களின் உட்குறிப்புக்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பத் துல்லியமாக இலக்கு கொள்ளப்படுகின்றனர். குடியேறுவோரைத் தாக்குதல் தொழிலாளர்களை பிரிப்பதற்கும் உதவுகிறது, அதே நேரத்தில் வாழ்க்கைத் தரங்களில் மேலும் தாக்குதல்கள் ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

பிரித்தானிய அரசாங்கம் குடியேறுபவர்களின் நலன்களில் கடுமையான மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது, இது நலன்கள், பணிகள், ஊதியங்கள் மீதான தாக்குதலுக்கு வசதி கொடுத்துள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நலச் சீர்திருத்தங்கள் புதிய குடியேறுவோரை பாதிக்கும் என்பது மட்டுமில்லாமல், பெருகும் தொழிலாளர் எண்ணிக்கையை (குறிப்பாக இளைஞர்கள்) 1930 களின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்குப்பின் உண்மையான வேலைவாய்ப்புக்களை இல்லை எனச் செய்யும்.

இதேபோன்ற தாக்குதல்கள்தான் ஐரோப்பா முழுவதும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு 15 வயது ரோமா மாணவி லியோனார்டா டிப்ரானி, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து கூக்குரல் எழுந்தது.

அப்பொழுது உள்துறை மந்திரியாக இருந்த மானுவல் வால்ஸ் எல்லா ரோமாக்களுமே பிரான்சை விட்டு நீங்க வேண்டும், கிழக்கு ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும் என்றார். வால்ஸ், பரந்த குடியேறுவோர் நாடுகடத்தப்படுவதற்கு தலைமை வகித்தார்.

ஹாலண்ட், அவர் குடும்பமின்றி நாடு திரும்பலாம் என்று கூறியதை லியோனார்டா நிராகரித்து, குடும்பம் நான்கு ஆண்டுகளாக பிரான்சில் இருந்தது என்றும், “நான் ஒருத்தி மட்டும் பள்ளிக்குச் செல்வில்லை” என்றார். ஒரு நிர்வாக நீதிமன்றம் குடும்பத்தின் மேல்முறையீடை நிராகரித்துவிட்டன.

வால்ஸ் இப்போது பிரதம மந்திரியாக உள்ளார்.

கடந்த அக்டோபரில் 400 அகதிகளுக்கு மேல் இத்தாலியில் லம்பெடுசா தீவிற்கு அருகில் மூழ்கினர். 1990ல் இருந்து ஐரோப்பாவை மத்தியதரைக்கடல் வழியே அடைய முயற்சித்த 25,000 பேருக்கு மேல் இறந்து போயினர். ஐரோப்பிய கோட்டை கொள்கையின் ஒரு பாகமாக ஐரோப்பிய ஒன்றியம் FRONTEX எல்லைப் புற நிறுவனத்தை அமைத்து, அதற்கு மிக நவீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் அளித்துள்ளது. ஆபத்தான மத்தியதரைக் கடலை அகதிகள் எதிர்பார்க்கும் வகையில் நில எல்லைகளுக்கு வேலிபோடப்பட்டுவிட்டன. லம்பெடுசா பெரும் சோகத்தை அடுத்து FRONTEX எல்லைகளை வலுப்படுத்தி அதன் பொலிஸ் கருவிகளையும் விரிவாக்கியுள்ளது.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சமூகப் பேரழிவை முகங்கொடுக்கின்றனர். குடியேறுவோரும், புகலிடம் கோருவோரும் இருமுறை பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். உள்நாட்டில் பொருளாதாரப் பேரழிவில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில், பின்னர் அவர்கள் அதற்குப்பின் தஞ்சம் நாடும் இடத்தில் பொருளாதார சரிவிற்கும் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

இது அரசியலில் ஒரு வலதுசாரித் திருப்பத்திற்கு உந்துதல் கொடுத்துள்ளது; அரசியல் நடைமுறை, ஐக்கிய இராச்சியத்தின் சுதந்திரக் கட்சி (UKIP), பிரான்சின் தேசிய முன்னணி (FN) போன்ற கட்சிகள் முன்வைக்கும் குடியேறுவோர் எதிர்ப்புச் செயல்பட்டியலை பின்பற்றுகிறது. இதையொட்டி தீவிர வலதிற்கு பெருகிய வாக்குகள் கிடைக்கின்றன.

இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேனிய அரசாங்கத்தில் பாசிச சக்திகளை உயர்த்தியிருப்பது ஆளும் வர்க்கம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் அவற்றின் உட்குறிப்புக்கள் பற்றிய எச்சரிக்கை ஆகும்.

பிரிட்டனில் மிக வெறுப்பைத்தரும் பேரினவாத மற்றும் தேசியவாத வார்த்தைகளுக்கு ஆதரவு தொழிற் கட்சியில் இருந்தும் அதன் இடது தாராள செய்தி ஊடகத்தில் இருந்தும் வருகிறது. தொழிற் கட்சி அதிகப்படியான குடியேற்றத்திற்கு எதிராக, கன்சர்வேடிவ்களை விட மிஞ்சிப் பேசுகிறது.

தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட், கடந்த தொழிற் கட்சி அரசாங்கம் குடியேறுவதை “கட்டுப்பாட்டைமீறி” நடக்கச் செய்துவிட்டது என்றார். கூட்டணி அரசாங்கம் குடியேற்றம் பற்றி “அரை வேக்காடாக உள்ளது” என்று குற்றம் சாட்டிய அவர், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியின் ஆதாரம் குடியேறுவோர் என்றார்; மேலும் “நம் பொருளாதாரத்தை மாற்றச் செயல்படாவிட்டால், குறைந்த திறமை உடைய குடியேறுவோர் இடர்கள் இறுதியில் வாழ்க்கை நெருக்கடி பிரச்சினைகளை பெரிதாக்கிவிடும்” என்று எழுதியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், வணிக சார்பு ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு ஒரு வாகனமாக இருக்கிறது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பட்டியலுக்கான  விரோதப் போக்கை தேசிய சீர்திருத்த பாதையில் திருப்பிவிடுவதில் ஒரு நாசகரமான பங்கு போலி இடது கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No2EU பிரச்சாரம், எடுத்துக்காட்டாக, ஸ்ராலினிசக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் திட்டம், "பிரிட்டனில் சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சமூக ரீதியாக குவிவது"குறித்து பேசுகிறது. இந்த பெயரளவு சுரண்டல் குறித்து பேசுவது, குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற தேசிய பொருளாதார பாதுகாப்பு வாத முறைகளை சார்பு கொள்ளுவதில் இருந்து தீவிர வலது போக்கிற்கு திருப்பும் வகையாகும் No2EU, 2009 ல் "பிரித்தானியர்கள் முதலில்" என்னும் கோசத்தை  “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக அல்லது தீவிர தேசிய வாதத்தினால் அல்ல, தேசிய தொழிற்சங்க உடன்பாடுகளின்கீழ் வேலை செய்யும் அடிப்படை உரிமையைக் காப்பது ஆகும்” என நியாயப்படுத்துகிறது.

இதேதான் ஆர்தர் ஸ்கார்கிலின் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் உண்மையாகும்; அதன் தலைவர் ஆண்ட்ரூ ஜோர்டான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தன் புகார்களில் குடியேற்றக் கட்டுப்பாடுகள் இல்லாததை மையமாக்குகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடையே மூலதனம் மற்றும் உழைப்பின் தடையற்ற இயக்கம்என்பது, தொழில்துறை பிரித்தானியாவில் இருந்து வெள்ளமென வெளியேறவும் மற்றும் ஐரோப்பா முழுவதும் மிகவும் குறைவான ஊதியங்களை கொடுக்கவும் அனுமதித்துள்ளது; அதே நேரத்தில் நாம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே கட்டுப்பாடற்ற பொருளாதார குடியேற்றம் நடப்பதைக் காண்கிறோம், இதையொட்டி இங்கே குறைந்தப்பட்ச ஊதியத்தில் ஒரு தேக்கநிலைக்கு வழிவகுக்கிறது” என்றார்.

உற்பத்தி சாதனங்களின் மீது அவர்கள் கொண்டுள்ள கட்டுப்பாடு மற்றும் உறவினால் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர்; அவை ஒரு சில செல்வந்தர்களின் ஏகபோக உரிமைக்கு உட்பட்டு, இலாபத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. கௌரவமான வேலைகள், சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் இந்த சுரண்டல் நிலைமையை ஒழிக்கும் போராட்டம் தொடர வேண்டும்; உண்மையான ஜனநாயகக் கட்டுப்பாடு பொருளாதாரத்தின் மீது நிறுவப்பட வேண்டும், பொருளாதாரம் முழு சமூகத்தின் நலன்களுக்காக மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

இது ஒரு சர்வதேச போராட்டமாக இருக்க வேண்டும்; தேசிய ரீதியாக தொழிலாளர்களை பிரிக்கமுற்படும் முயற்சிகள் அனைத்தையும் அதேபோல் உள்நாட்டு மக்களுக்கும் குடியேறுவோர் மற்றும் புகலிடம் நாடுபவர்கள் இடையே பிரிக்க முற்படும் முயற்சிகளையும் நேரடியாக எதிர்க்க வேண்டும்.

பூகோள ரீதியாக இயங்கும் பெருநிறுவனங்கள் மூலம் தாக்குதல்களை முகங்கொடுக்கையில், தொழிலாள வர்க்கம் எல்லாவற்றிற்கும் மேலாக அதன் பொது நலன்களை பாதுகாக்க ஐக்கியப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒன்று மட்டும்தான், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவும் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து நிற்கிறது. முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர் அரசாங்கங்களை சோசலிச அடித்தளத்தில் அமைப்பதுதான் ஐரோப்பாவை தேசியவாதம், போர் என்னும் சரிவுகளில் இருந்து தடுக்கும், ஐரோப்பாவின் பரந்த ஆதாரங்களை மற்றும் உற்பத்தி சக்திகளை சமூகம் முழுவதின் நலனுக்காக வளர்த்துப் பயன்படுத்தும் சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.