World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The state assassination of a US citizen foretold

ஓர் அமெரிக்க பிரஜையின் அரச படுகொலை முன்னறிவிக்கப்பட்டது

Tom Carter
12 February 2014

Back to screen version

மூத்த அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து வேண்டுமென்றே கசிய விடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அசோசியேடெட் பிரஸ் திங்களன்று ஓர் அசாதாரண அறிக்கையை வெளியிட்டது. "ஒரு டிரோன் தாக்குதலில் [பெயர் வெளியிடப்படாத அமெரிக்க பிரஜை ஒருவரை] படுகொலை செய்வதா, அதை எவ்வாறு புதிய கடுமையான இலக்கில் வைக்கும் கொள்கையின் கீழ் சட்டரீதியாக செய்ய முடியுமென்று ஒபாமா நிர்வாகம் மல்லுக்கட்டி கொண்டிருப்பதாக" அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த இலக்கில் வைக்கப்பட்ட நபர் ஒரு பயங்கரவாதியாக குற்றஞ்சாட்டப்பட்டவர், "தங்கள் நாட்டில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிராகரிக்கும் ஒரு நாட்டில் அவர் வசிக்கிறார் என்பதோடு, அந்நாடு தன்னால் அவர் பின்னால் செல்ல முடியாதென்று கூறி இருக்கிறது. அந்த நபர் பாகிஸ்தானில் உள்ளார் என்பதைக் குறிப்பிட்டு, அந்த ஊடகம் தொடர்ந்து பல்வேறு செய்திகளை வெளியிட்டது.

ஓர் அமெரிக்க பிரஜையின் சட்டவிரோத படுகொலையை நடத்த வெள்ளை மாளிகை மீண்டுமொருமுறை தயாரிப்புகள் செய்து வருகிறதென்ற திங்கட்கிழமை வெளியீடு, ஜனாதிபதி ஒபாமாவின் "ஆம், எங்களால் முடியும்" என்ற பிரச்சார முழக்கத்திற்கு முற்றிலும் புதிய மற்றும் கொடிய அர்த்தத்தை வழங்குகிறது.

உண்மையில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஓர் அமெரிக்க பிரஜையின் அரச படுகொலைக்கு அரசாங்கத்தால் உத்தரவிட முடியுமென்றால், அதனால் வேறென்ன செய்ய முடியாது? கடூழிய சிறை முகாம்கள் (இது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆண்டோனின் ஸ்காலியாவினால் அண்மையில் நியாயப்படுத்தப்பட்ட ஒரு தீர்வு), சித்திரவதை, காணாமல்போகச் செய்வது, இராணுவச் சட்டம், அரசியலமைப்பு மீறல் இந்த அனைத்து பொலிஸ் அரச சர்வாதிகார முறைகளும் சம அளவில் நியாயப்படுத்தப்படுகின்றன மற்றும் சாத்தியமாகி உள்ளன.

இரகசியம், சூழ்ச்சி மற்றும் முக்கிய அரசியலமைப்பு கோட்பாடுகளை மீறுவது ஆகியவற்றில் புரையோடிய ஒரு குற்றஞ்சார்ந்த நடவடிக்கையை கவனமாக ஆராய்ந்தறிவது போல, உரிய வழிமுறை" மற்றும் வெளிப்படை தன்மை" ஆகியவற்றிற்காக ஒரு போலி வளையத்தை உருவாக்குவதன் மூலமாக, ஒரு சட்டவிரோத அரச படுகொலைக்கு எதிராக எழக்கூடிய மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதே ஒபாமா நிர்வாகத்தால் திட்டமிட்டு கசியவிடப்பட்ட அந்த செய்தியின் வெளிப்படையான நோக்கமாகும்.

ஒரு மரண உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன்னர் அது "உயர் வரம்பு" (high threshold) என்று கூறப்படும் இரகசிய விசாரணையைக் கடந்து வர வேண்டுமென AP அறிக்கை வலியுறுத்துகிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் முன்னதாக நிறைய வளைவு-சுளிவுகள் மற்றும் முறுக்கல்-வழுக்கல்கள் இருக்குமென்பதால், அதுவொரு "சிரமமான" முடிவென்று உலக மக்களுக்கு மீண்டும் மீண்டும் வலியறுத்தப்பட்டது. இந்த வலியுறுத்தல், ஒபாமா நிர்வாக அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டரின் 2012 உரை மற்றும் படுகொலை திட்டத்திற்கு சட்டரீதியிலான நியாயப்பாட்டை வழங்குவதற்காக என்று காட்டப்படும் "வெள்ளை அறிக்கையின்" அதே வரிசையில் நிற்கிறது.

அசோசியேடெட் பிரஸிற்கு கசியவிடப்பட்ட செய்தியும், அரசு படுகொலைகள் மீதான சட்டபூர்வதன்மையோடு நிர்வாகம் "மல்லுக்கட்டுவதாக" தெரிவிக்கும் மூத்த அதிகாரிகளின் வாதங்களை ஊடகங்கள் கடமையுணர்வோடு எதிரொலிப்பதும், மற்றொரு இன்னும் மேலதிகமான வஞ்சக நோக்கத்தைக் கொண்டுள்ளன. படுகொலை திட்டத்தின் மீது ஒருவிதமான தேசிய விவாதத்ததை உருவாக்குவதும், அதற்குள் விருப்பமற்ற மற்றும் சக்தியற்ற பங்களிப்பாளர்களாக பொதுமக்களை உள் இழுப்பதுமே அதன் நோக்கமாகும்.

குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்கோ இல்லாமல் ஓர் அமெரிக்க பிரஜையை அரசாங்கம் படுகொலை செய்வதென்பது, முதலாவதாக, உரிமைகள் சாசனம், அமெரிக்க சட்ட பிரமாணம், மற்றும் பல சர்வதேச உடன்படிக்கைகளை வெளிப்படையாக மீறுவதாகும்.

"உரிமைகள் சாசனத்தின் (1791) பாகமாக உள்ள ஐந்தாவது அரசியலமைப்பு திருத்தத்தின் விசாரணை நிகழ்முறை ஷரத்து, குழப்பத்திற்கிடமின்றி கூடுதல் அதிகாரத்தில் படுகொலை செய்வதைத் தடுக்கிறது. அது "சட்ட விசாரணையின்றி எந்தவொரு நபரின் உயிரோ, சுதந்திரமோ, அல்லது சொத்தோ பறிக்கப்படக்கூடாது, என்று கூறுகிறது. அதை எழுதியவர்களின் உணர்வுகள் மீது அங்கே எந்த ஐயப்பாடும் இருக்க முடியாது. தாமஸ் ஜெபர்சன் 1789இல் ஜேம்ஸ் மேடிசனுக்கு எழுதினார்: படுகொலை, நஞ்சூட்டி கொல்வது, பொய் வாக்குறுதிகள்... இவை அனைத்தும் இருண்ட காலத்தில் சட்டபூர்வ கோட்பாடுகளாக இருந்தன, அவை பண்டைய மற்றும் நவீனகால நாகரீகங்களுக்கு இடையே உழன்றன, பின்னர் அவை தகர்ந்து போய் பதினெட்டாம் நூற்றாண்டில் வெறும் கொடூரங்களுக்காக தங்கி உள்ளன.

ஐந்தாம் அரசிலமைப்பு திருத்தத்தின் ஐயத்திற்கிடம் இல்லாத மொழியை சுற்றிதிரிக்கும் ஒரு முயற்சியில் ஒபாமா நிர்வாகம், "உரிய வழிமுறை" என்பதன் பொருளை, இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், ஜனாதிபதியோடு சேர்ந்து, இரகசியமாக சந்தித்து, அவர்களால் வஞ்சிக்கப்பட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்கும் மற்றும் கொல்வதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் "வழிமுறை" என்று மீள்வரையறை செய்ய முயன்றுள்ளது. இந்த இரகசிய வழிமுறை தான் நேற்று அசோசியேடெட் பிரஸ் செய்தியில் சித்தரிக்கப்பட்ட படுகொலை விடயத்தில் காட்சிக்கு வந்திருந்தது. படுகொலைக்கு சாதகமாக ஓர் இணக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பெண்டகன் அதிகாரிகள் "தொடக்கத்தில் கருத்து வேறுபட்டிருந்ததாக" அந்த செய்தி வலியுறுத்தி இருந்தது.

உரிய வழிமுறை" மீதான இந்த நகைப்பிற்கிடமான மீள்வரையறை, மாக்னா கார்டா (1215) காலத்திலிருந்து சுமார் ஒரு பத்தாயிரம் காலத்து சட்ட முன்மாதிரிகளுக்கு எதிராக நிற்கிறது. அறியாமை என கருதத்தக்கது, ஒரு பொது வழக்கு, ஒரு வழக்கறிஞருக்கான உரிமை, ஒரு நீதியரசருக்கான உரிமை, குற்றஞ்சாட்டியவர்களை எதிர்கொள்ளும் உரிமை மற்றும் இதுபோன்ற அடிப்படை பாதுகாப்புகளைக் குறிப்பிட அந்த சொற்பதம் மாக்னா கார்டாவில் வந்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் சட்டபூர்வ நியூஸ்பீக்கில் (newspeak), ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகள் அரசின் நலன்களுக்காக "சமப்படுத்தப்பட" வேண்டி உள்ளது. தனிநபரின் ஜனநாயக உரிமைகள் இந்த சூத்திரத்தின் கீழ் இருக்கும், ஆனால் அரசுக்கு தேவைப்படுவதாக அது காணும் போது அவை புறக்கணிக்கப்படலாம். உரிமைகள் சாசனத்தில் என்ன உள்ளதோ அதன் அடித்தளத்தில் இந்த சூத்திரம் கிடையாது. உரிமைகள் சாசனம் விதிவிலக்கின்றி கலப்படமற்ற வார்த்தைகளில் பேசுகிறது. இந்த "சமப்படுத்தும்" சூத்திரம் சர்வாதிகாரத்திற்கான ஓர் உபாயம் என்பதை விட வேறொன்றுமில்லை, மேலும் இது வரலாற்றில் எந்தவொரு பொலிஸ் அரசின் நீதி பரிபாலனத்திற்குள்ளும் சௌகரியமாக பொருந்தும்.

திங்களன்று அறிவிக்கப்பட்ட படுகொலை முன்னெடுக்கப்பட்டால், அது "இலக்கில் வைக்கப்பட்டு கொல்லப்படும்" திட்டம் தொடங்கப்பட்டதற்கு பின்னர் நடத்தப்படும் ஐந்தாவது அமெரிக்க பிரஜையின் படுகொலையாக அமையும். அத்திட்டம் ஆயிரக்கணக்கிலான பிற நாட்டு அப்பாவி மக்களின் உயிரையும் பறித்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ், இந்த படுகொலைகள் அனைத்தும் யுத்த குற்றங்களாகும். ஓர் உள்நாட்டு சட்ட நிலைபுள்ளியில் இருந்து, குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்கு விசாரணைகளோ இல்லாமல் ஓர் அமெரிக்க பிரஜையின் படுகொலையில் பங்குபெறுகின்ற அல்லது அதைத் தடுக்க தவறிய ஒவ்வொரு இராணுவ, உளவுத்துறை, மற்றும் அரசு அதிகாரியும் ஒபாமா வரையில் அவரையும் சேர்த்து கொலை குற்றத்திற்கு உரியவர்கள் ஆவர். அத்தகைய நபர்கள் அனைவரும் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கில் சேர்க்கப்பட்டு, தண்டிக்கப்பட தகுதியானவர்களே.

ஒபாமாவிற்கு ஆதரவளிக்கும் தாராளவாத மற்றும் போலி-இடது அனுதாபிகள், ஒருவேளை பார்வைக்குப் புலனாகாத ஜனாதிபதியின் "இதயத்தோடு இதயமாக" தங்கி உள்ள மனிதாபிமான உணர்வுகளை மதபோதனைகளைப் போன்று வலியுறுத்துகின்றனர், நிஜமான ஒபாமாவோ அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை கருவிகளின் இரத்தத்தை உறையச் செய்யும் மற்றும் இரக்கமற்ற செயல்முறையாக மேலும் மேலும் கூடுதலாக வெளிப்படுகிறார். Double Down: Game Change 2012 என்ற தலைப்பில் மார்க் ஹால்பெரின் மற்றும் ஜோன் ஹெலிமானால் எழுதப்பட்ட சமீபத்திய ஒரு புத்தகத்தில், ஒபாமா "உண்மையிலேயே மக்களைக் கொல்வதில் சிறப்பாக" உள்ளார் என்று அவரது ஆதரவுகளை எடுத்துக்காட்டும் ரீதியில் அவர் மேற்கோளிட்டு காட்டப்படுகிறார்.

ஒவ்வொரு முந்தைய அமெரிக்க நிர்வாகத்தின் ஒருங்கிணைத்த துஷ்பிரயோகத்தையும் ஒப்பீட்டில் நிறுத்தினால், ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அவற்றை அற்பத்தனமாகவும், துச்சமாக்கியும் உள்ளன. யுத்த குற்றங்கள், ஊழல், சித்திரவதை, பொய் வாக்குறுதி, திருட்டு, புறக்கணிப்பு, முடக்குதல், கடத்தல், சூழ்ச்சி, படுகொலை, மற்றும் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத ஒரு பாரியளவிலான சட்டவிரோத உளவுபார்ப்பு உபகரணங்களைக் கட்டியமைத்தல் என ஒபாமா மீதான ஒரு குற்ற பத்திரிக்கையே ஆயிரமாயிரம் பக்கங்கள் நீளத்திற்கு இருக்கும்.

வழக்கு விசாரணையின்றி ஒரு பிரஜை படுகொலை செய்யப்படுவார் என்ற பகிரங்கமான அறிவிப்புக்கு அரசியல் ஸ்தாபகத்திற்குள் எந்தவொரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதானது, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதிகட்ட சீரழிவைக் குறித்துக் காட்டுகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் இந்த மூச்சடைக்கும் பொறிவைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் சமூக சமத்துவமின்மையாகும். பணக்காரர்களில் 1 சதவீதத்தினர் உலகின் செல்வவளத்தில் பாதியளவைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஓர் உலகோடு, அதாவது முதலாளித்துவத்தோடு, ஜனநாயகம் முரண்பட்டு உள்ளது. அமெரிக்காவை ஆளும் அதிதீவிர-பணக்கார குழு, பார்வையில் படும் எல்லா பணத்தையும் விழுங்குகின்ற அதேவேளையில், அதன் மீது அதிகரித்துவரும் அதிருப்தி குறித்து அது நனவுபூர்வமாக உள்ளது. இதனால், கடினமாக வென்றெடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக தேட்டங்களை அது ஒவ்வொரு இடத்திலும் துடைத்தெடுக்க கோருகின்ற அதேவேளையில், அது சர்வாதிகாரத்திற்கு பதிலாக மக்களை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்ற வேலை செய்து வருகிறது.

உரிமைகள் சாசனத்தில் பொதிந்துள்ள முக்கிய ஜனநாயக உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்க மற்றும் விரிவாக்க மற்றும் ஒபாமா போன்ற குற்றவாளிகளை நீதியின் முன்னால் கொண்டு வருவதற்கான போராட்டமானது, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஐக்கியத்தைக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்.