World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

The geopolitical dimensions of the coup in Ukraine

உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பின் பூகோள-அரசியல் பரிமாணங்கள்

By Peter Schwarz
27 February 2014

Back to screen version

1991 இன் பிற்பகுதியில் சோவியத் ஒன்றியம் உருக்குலைந்து கொண்டிருந்தபோது, சோவியத் ஒன்றியம் மற்றும் ரஷ்ய சாம்ராஜ்யம் மட்டுமல்லாது ரஷ்யாவும் கூட சிதறுவதைக் காண வேண்டும் என்று டிக் விரும்பினார், அப்போது தான் அது மீண்டும் உலகின் எஞ்சிய பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக மீண்டும் வர முடியாது என்று அவர் கருதினார்என்று அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலரான ரோபர்ட் கேட்ஸ் சமீபத்தில் வெளியான அவரது நினைவுகளில் எழுதியிருந்தார். டிக் என்று கேட்ஸ் குறிப்பிட்டிருந்தது அப்போது பாதுகாப்புச் செயலராகவும் பின்னாளில் துணை ஜனாதிபதியாகவும் ஆன டிக்-செனியை.

இந்தக் கூற்று உக்ரேனில் இப்போது நடந்த ஆட்சிக்கவிழ்ப்பின் பூகோள-அசியல் பரிமாணங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதாக இருக்கிறது. அதிகமாய் பணயத்தில் இருப்பது உள்ளூர் பிரச்சினைகள் அல்ல - அதிலும் ஊழலுக்கு எதிரான மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டம் எல்லாம் இல்லவே இல்லை - மாறாக கால் நூற்றாண்டுக்கும் மேலாய் நீடித்து வரும் அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்கான ஒரு சர்வதேசப் போராட்டமே அதிகமான பணயத்தில் இருக்கிறது.

ஃபைனான்சியல் டைம்ஸ் உக்ரேனின் சமீப நிகழ்வுகளை அதே வெளிச்சத்தில் நிறுத்துகிறது. பிப்ரவரி 23 அன்றான தலையங்கத்தில் அது எழுதியது: “கால் நூற்றாண்டு காலமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மிகவும் ஆபத்தானதொரு இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய இந்தப் பெரும் பிராந்தியம் ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான புவியரசியல் போட்டிக்கான இலக்காக இருந்து வந்திருக்கிறது.” 2008 இல் முன்னாள் சோவியத் குடியரசுகளான உக்ரேன் மற்றும் ஜோர்ஜியாவை நேட்டோவுக்குள் கொண்டு வர ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் மேற்கொண்ட நேர்த்தியற்ற முயற்சி தோல்வியடைந்தது, ”ஆனால் இந்த மைதான் (Maidan)புரட்சியானது ஐரோப்பாவின் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருக்கும் உக்ரேனின் நிலை குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அத்தனை கட்சிகளுக்கும் இரண்டாவதாய் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.”

1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிர்பாராதவொரு பரிசாக இருந்தது. 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியானது உலகப் பரப்பின் ஒரு கணிசமான பகுதியை முதலாளித்துவ சுரண்டல் வட்டத்தில் இருந்து அகற்றி விட்டிருந்தது. இதனை சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் ஒரு அச்சுறுத்தலாக கருதியது, இத்தனைக்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் உலக சோசலிசப் புரட்சியெனும் இலட்சியத்தை காட்டிக்கொடுத்து மார்க்சிசப் புரட்சிகரவாதிகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையும் படுகொலை செய்ததற்கு வெகுகாலத்திற்குப் பின்னரும் கூட. இதுதவிர சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் இராணுவ வலிமையானது அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக விளங்கியது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவ சந்தை அறிமுகம் செய்யப்பட்டமையானது தொழிலாளர்களின் பல தலைமுறை உருவாக்கி வைத்த சமூகச் செல்வம் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலவர் கொண்ட சிறுகூட்டத்தாலும் மற்றும் சர்வதேச நிதியத்தினாலும் சூறையாடப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்கியது. கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, கலாச்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஏற்படுத்தப்பட்ட சமூக வெற்றிகள் எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு வீழ்ச்சி காணும்படி செய்யப்பட்டன.

ஆயினும் இதுவும் கூட அமெரிக்காவுக்கும் பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கும் போதுமானதாய் இருக்கவில்லை. ரஷ்யா இனியும் தமது உலகளாவிய மேலாதிக்க நிலைக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக வரக் கூடாது என்பதை உறுதி செய்யும் நிலையைக் கொண்டு வர அவர்கள் நோக்கம் கொண்டிருந்தனர் என்பதையே டிக் செனியின் மேலே கண்ட கூற்று தெளிவாக்குகிறது.

அமெரிக்க மேலாதிக்கமுடைய நேட்டோ இராணுவக் கூட்டணியானது 2009க்குள்ளாக  ஒருகாலத்தில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் தனது கூட்டணிக்குள் இழுத்து விட்டிருந்தது. ஆனாலும் மாஸ்கோவில் இருந்து வந்த எதிர்ப்பின் காரணத்தால் எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்வேனியா ஆகிய மூன்று பால்டிக் அரசுகள் தவிர்த்து முன்னாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவுக்குள் கொண்டுவரச் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன. 46 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரேன் நாடு, ரஷ்யா, ஐரோப்பா, கருங்கடல் மற்றும் காகசஸ் இடையே மூலோபாய முக்கியத்துவத்துடனான ஒரு அமைவிடத்தைக் கொண்டிருந்த நிலையில் அது இந்த முயற்சிகளின் மையத்தில் சிக்கியிருந்தது.

ரஷ்யா முந்தைய சோவியத் ஒன்றியப் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை மறுகட்டுமானம் செய்ய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் உக்ரேன் இல்லாமல் தோல்வியைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என 1997 வாக்கிலேயே முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski  எழுதியிருந்தார். உலகளாவிய மேலாதிக்கத்தை செலுத்துவதற்கான அமெரிக்காவின் திறன் என்பது ஈரோஆசிய(Eurasia)நிலப்பரப்பில் ஒரு குரோதமான மேலாதிக்க சக்தி வளர்வதைத் தடுக்க அதனால் முடிகிறதா என்பதைச் சார்ந்ததாகும் என்பது தான் The Grand Chessboard  என்ற அவரது புத்தகத்தின் மையக் கருப்பொருளாய் இருந்தது. (காணவும்: “உக்ரேனில் அதிகாரப் போராட்டமும் அமெரிக்காவின் மேலாதிக்க மூலோபாயமும்”)

2004 இல் உக்ரேனில் மேற்கத்திய ஆதரவு அரசாங்கம் ஒன்றை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தஆரஞ்சுப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் உதவியும் நிதியாதாரமும் அளித்தன. ஆயினும் உட்சண்டை காரணமாக அந்த ஆட்சி உடைந்து சிதறிப் போனது. 2008 இல் ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலைத் தூண்டுவதன் மூலமாக ஜோர்ஜியாவை நேட்டோவுக்குள் இழுக்கின்ற முயற்சியும் தோல்விகண்டது.

இப்போது அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் உக்ரேனின் ஆட்சிக்கவிழ்ப்பைப் பயன்படுத்தி முன்னாள் சோவியத் குடியரசுகளை மீண்டும் ஸ்திரம்குலையச் செய்து அவற்றை தமது சொந்த செல்வாக்கு வட்டத்துக்குள் கொண்டு வர நோக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்யாவுடன் ஒரு பகிரங்க இராணுவ மோதல் அபாயத்தையும் அவை கொண்டு வருகின்றன.

அமெரிக்க இரகசிய சேவைகள் பிரிவுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட Stratfor சிந்தனைக் குழுஉக்ரேனுக்குப் பிறகு, மேற்குலகம் ரஷ்ய சுற்றுஎல்லை நோக்கிய தனது காய்நகர்த்தலைச் செய்கிறதுஎன்ற தலைப்பின் கீழ் எழுதுகிறது: ”உக்ரேனின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரித்ததன் வெற்றியை இன்னும் பரந்த, பிராந்திய-அளவிலான பிரச்சாரத்திற்கான மூலதனமாக்க மேற்கு விரும்புகிறது.”

"ஜோர்ஜியாவின் பிரதிநிதிகள் குழு ஒன்று இப்போது வாஷிங்டன் பயணம் செய்யவிருக்கிறது, நாட்டின் பிரதமரான Irakli Garibashvili அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும், துணை ஜனாதிபதி ஜோ பிடெனையும் வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரியையும் இந்த வாரத்தில் சந்தித்துப் பேசவிருக்கிறார்என்று Stratfor தெரிவிக்கிறது. மால்டோவா பிரதமரான  Iurie Leanca வும் மார்ச் 3 அன்று வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடெனை சந்தித்து பேசவிருக்கிறார். “இந்த இரு விஜயங்களிலும் பிரதான விஷயமாக இருக்கப் போவது இந்த நாடுகள் மேற்கத்திய ஒருங்கிணைப்பில் வருவதற்கான சாத்தியவளங்கள் தான் - அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவற்றை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கமாகவும் ரஷ்யாவில் இருந்து விலகியும் எப்படிக் கொண்டு வருவது என்கிற விடயம் தான்.”

மாஸ்கோவில் இருக்கும் அமெரிக்க அறக்கட்டளையான  Carnegie Endowment for International Peace (sic)ஐச் சேர்ந்த லிலியா ஷெட்ஸோவாவும், உக்ரேன் ஆட்சிக்கவிழ்ப்பு மற்ற நாடுகளுக்கும் மற்றும் ரஷ்யாவுக்கும் கூட விரிவுபடுத்தப்பட வேண்டியதாகும் என்று  வாதிடுகிறார். “சோவியத்துக்குப் பிந்தைய சங்கிலியில் உக்ரேன் மிகப் பலவீனமான கண்ணியாக ஆகியிருக்கிறதுஎன்று  Süddeutsche Zeitungக்கு அளித்த ஒரு கருத்துரையில் அவர் எழுதுகிறார். “இதேபோன்ற எழுச்சிகள் மற்ற நாடுகளிலும் சாத்தியமே என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்வது அவசியம்.”

உக்ரேன் புரட்சியில் இருக்கும் ஒரு அம்சத்தை ஷெட்ஸோவா மிகவும் வலியுறுத்துகிறார், எப்பாடுபட்டேனும் அதனைத் தக்க வைக்க விரும்புகிறார் என்றால் அது பாசிச போராளி சக்திகளை அணிதிரட்டுவது என்கிற அம்சத்தைத் தான். “யானுகோவிச்சின் வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணமாக ஆகியிருப்பது Maidan சதுக்கத்தில் இருந்த Right Sector உள்ளிட்டதீவிரக் கூறுகள்தான், இவை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தியாக ஆகியிருக்கின்றன.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “உக்ரேன் மக்கள் Maidan ஐத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறதா என்பதைப் பொறுத்து தான் உக்ரேனின் எதிர்காலம் இருக்கும்.”

ஷெட்ஸோவா எப்பாடுபட்டேனும் தக்கவைக்க விரும்பும்தீவிரக் கூறுகள்ஆயுதமேந்திய பாசிசப் போராளிக் குழுக்கள் தான், இவை இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் இன அழிப்புகள் என உக்ரேனிய வரலாற்றின் படுபயங்கர பாரம்பரியங்களின் மீது தங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தை பயங்கரங்களுக்குள்ளும் அச்சுறுத்தல்களுக்கும் தள்ளுவது தான் இந்த பாசிசப் போராளிகளின் வருங்காலப் பாத்திரமாக இருக்கும்.

உக்ரேன் எழுச்சியின் பிற்போக்குத்தனமான சமூக உள்ளடக்கம் தெளிவாக வெளிவர ஒரு சில மணி நேரமே பிடித்தது. பழைய ஆட்சியைத் தூக்கியெறிந்ததன் மூலம் நாட்டிற்குள் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டிருப்பதாகக் கூறப்படுகின்றஐரோப்பிய விழுமியங்கள்ஏற்கனவே வறுமைப்பட்ட நிலையில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது பிரம்மாண்டமான தாக்குதல்களைத் தொடுப்பதை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கிறது. உடனடி திவால்நிலையைத் தடுக்க நாட்டிற்கு அவசரமாய் தேவையாக இருக்கும் கடனுதவிகளுக்குரிய நிபந்தனையாக சர்வதேச நாணய நிதியம், ஹ்ரிவ்னாவின் பரிவர்த்தனை விகிதத்தை மிதவையாக்குவது, ஒரு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம் மற்றும் வீடுகளுக்கான எரிவாயுவின் விலைகளை ஆறுமடங்கு உயர்த்துவது ஆகியவற்றைக் கோருகிறது.

நாட்டின் நாணயமதிப்பை மிதவையாக்கினால் அது உக்கிரமான பணவீக்கத்திற்கு இட்டுச் செல்லும், அதற்கேற்ப வாழ்க்கைச் செலவினம் உயரும், சாமானிய உக்ரேனிய மக்களிடம் இருக்கும் எந்த எஞ்சிய சேமிப்புகளும் கூட அழிக்கப்பட்டு விடும். சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டமானது பிரதானமாக ஓய்வூதியங்கள் மற்றும் சமூகச் செலவினங்களுக்கு எதிராக செலுத்தப்பட்டதாய் இருக்கிறது அத்துடன் எரிவாயு விலை அதிகரித்தால் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு வெப்பமூட்ட இயலாமல் போகும்.

உக்ரேனின் நன்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களும் தொழிற்வல்லுநர்களும் இப்போது சீனாவில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விடக் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு உக்ரேன் சரிக்கப்பட இருக்கிறது. 7.4 பில்லியன் டாலர் அளவில் உக்ரேனின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் (ரஷ்யாவுக்கு அடுத்து)அத்துடன் இந்நாட்டின் இரண்டாவது பெரிய முதலீட்டாளராகவும் இருக்கின்ற ஜேர்மனிக்கு இது குறிப்பான நலன் பயக்கக் கூடியதாகும்.

அமெரிக்காவை பொறுத்தவரை ரஷ்யாவை தனிமைப்படுத்துவது தான் முன்னிலையான விடயம் என்ற நிலையில், 1918 மற்றும் 1941 என இரண்டு முறை உக்ரேனை இராணுவரீதியாக ஆக்கிரமிப்பு செய்திருக்கக் கூடிய ஜேர்மனி அந்நாட்டின் பொருளாதார அனுகூலங்களில் ஆர்வம் காட்டுகிறது. இந்நாட்டை மலிவு உழைப்புக்கான களமாகச் சுரண்டுவதற்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் ஊதியங்களை இன்னும் கீழிறக்குவதற்கு இதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கும்  ஜேர்மனி விரும்புகிறது.

ஜேர்மன் பொருளாதார நிறுவனம் தொகுத்திருக்கும் புள்ளிவிவரத்தின்படி, உக்ரேனில் உழைப்புக்காகும் செலவுகள் சர்வதேச அளவில் மிகக் குறைந்த முறையில் இருக்கின்றன. ஒரு மணி நேரம் உழைத்தால் 2.50 யூரோ கூலி என்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் குமாஸ்தா ஊழியர்களுக்கான சராசரியான உழைப்புச் செலவினங்கள் (மொத்த ஊதியம் மற்றும் பிற செலவுகள்)ஏற்கனவே சீனாவை விட  (3.17 யூரோ), போலந்தை விட (6.46 யூரோ) மற்றும் ஸ்பெயினை விட (21.88 யூரோ) மிகக் குறைந்ததாய் இருக்கின்றன. ஜேர்மனியில் ஒரு மணி நேர உழைப்பை பெற ஆகும் செலவு 35.66 யூரோக்கள், அதாவது 14 மடங்கு அதிகமாகும்.

சராசரியான மாதாந்திர ஊதியம் 3,073 ஹ்ரிவ்னா (220 யூரோ)என்று உக்ரேனின் புள்ளிவிவர அலுவலகம் மதிப்பிடுகிறது. கல்வித்துறையினரும் கூட மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி யானுகோவிச்சும் கூட உக்ரேன் தன்னலக்குழுவின் ஒரு பிரதிநிதி தான். சமூகப் பின்விளைவுகளுக்கு அரசியல்ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாது என்று அவர் அஞ்சிய காரணத்தால் தான் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவதற்கான ஓர் திட்டமிடப்பட்ட உடன்படிக்கையை நிராகரித்தார். இப்போது ஜனநாயக நிர்ணயங்களுடன் ஒட்டுமொத்தமாய் இணக்கமற்ற வறுமை மற்றும் சுரண்டலின் ஒரு மட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு நொண்டிச்சாக்காக அவரது வீழ்ச்சி சேவைசெய்து கொண்டிருக்கிறது, இது புதிய சமூக எழுச்சிகளுக்கு இட்டுச் செல்லும். திட்டவட்டமாக இந்த வருங்கால சமூக அமைதியின்மையை ஒடுக்குவதற்காகத் தான் பாசிசப் போராளிகள் தக்கவைக்கப்பட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்