World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Born again: Gravity directed by Alfonso Cuarón

அல்ஃபோன்ஸ்கோ காரன் இயக்கத்தில் Born again : Gravity 

By Hiram Lee
14 October 2013

Back to screen version

ஒரு பெரும் விபத்தினையடுத்து, ஒரு விண்வெளி வீரர் விண்வெளியில் தனித்துவிடப்பட்டதை சித்தரிக்கின்ற உறையவைக்கும் காட்சிகளும் பல திடுக்கிடும் விஷயங்களும் நிறைந்த திரைப்படம் Gravity. அவளது விண்கலத்திற்கு எதிராக வந்த தப்பிக்க முடியாத சிதைவுகளின் அலையினை அடுத்து அவளது விண்கலத்தின் சக பயணிகள் உயிரை இழந்தபின், ஓர் அனுபவமற்ற குழு உறுப்பினரான டாக்டர். ரியான் ஸ்டோன் (Sandra Bullock), தான் முற்றிலும் தனிமையில் விடப்பட்டதை கண்டுகொள்கிறாள்.

சிதைவுகளின் ஊடாக விண்வெளியில் நடந்துவரும் வேளையில், ஸ்டோன் விண்வெளியில் தடையின்றி பறக்க விடப்படுவதுடன், அவரது ஆக்ஸிஜனும் தீர்ந்துவருகிறது. சிறிது நேரமே இருக்கையில், அவள் தனது சேதமடைந்த விண்கலத்திற்கான வழியை மீண்டும் கண்டுபிடித்து உயிர்வாழ்வதற்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும். விண்கலத்தில் இருக்கும் மற்ற நாடுகளைச் சேர்ந்த உபகரணங்களை பயன்படுத்தப் போராடும் வேளையில், அவள் நெருப்பு, வெடிப்புகள், உயர்ந்தபட்ச வெப்பநிலைகள், எந்திரக் கோளாறுகள் மற்றும் மொழிப் பிரச்சனைகளையும்கூட எதிர்கொள்கிறாள்.

அவளது இளைய மகளது தீடீர் மரணத்தின் துயரினை அடுத்து, பூமியில் தனது வாழ்வில் சோர்வுற்ற மற்றும் வழியற்ற நிலையில் விடப்பட்ட நிலையில், தான் வீட்டுக்கு திரும்பி வருவதற்காக, ஸ்டோன் இப்போது தன்னிடமுள்ள  ஒட்டு மொத்த பலத்தினையும், துணிவினையும் திரட்டிக்கொள்ள வேண்டியுள்ளது.

மெக்சிகோவை சேர்ந்த இயக்குனர் அல்ஃபோன்ஸ்கோ காரெனது முந்தைய படைப்புகளுள் Y Tu Mamá También  (2001) மற்றும்  Children of Men  (2006), அத்துடன் பிரபல ஹரி பொட்டர் தொடர்களில் அறிமுகமானது (Harry Potter and the Prisoner of Azkaban, 2004) ஆகியவை உள்ளடங்கும், அவர் இதனை ஒரு இறுக்கமான வலிநிறைந்த திகில் திரைப்படமாக கொடுத்திருக்கிறார். ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டுமென்பது அவருக்கு தெரிகிறது. நாடகம் மற்றும் காட்சித் தொகுப்புகளின் வேகக் கட்டுப்பாட்டுக்குள் அவரது சிந்தனை சென்றிருக்கிறது. காரனின் கேமரா மக்களை படம்பிடிப்பதை மட்டும் செய்யவில்லை, மாறாக அவர்களை எண்ணிப்பார்க்கிறது. இது நிச்சயம் அதற்கே உண்டான ஈர்ப்பினைக் கொண்டிருக்கிறது. Gravity மக்களால் நன்கு வரவேற்கப்பட்டிருக்கிறது.

நாம் சமீபத்தில் பார்த்திருக்கும், அவரது பெரும்பாலான லேசான நகைச்சுவை நடிப்பைவிட, புல்லோக் (Bullock) இதில் அருமையாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாதியில் வரும் ஜோர்ஜ் குளூனியும் கதையில் ஒரு அளவுக்கு, சற்று மனித உரையாடலின் போக்கில் இருக்கும் ஈர்ப்பினை வழங்குகின்றார்.

விண்வெளியில் அமைக்கப்பட்டு ஒரு தனிநபரின் உயிர்தப்புதலுக்கான போராட்டம் குறித்து எடுக்கப்பட்ட Gravity இல், எதிர்பார்ப்பது போன்றே சில நம்பமுடியாத அம்சங்களும் உள்ளன. ஆயினும், பல அடிப்படையான விஷயங்களும் இதைவிட அதிக பிரச்சனை கொண்டதாக இருக்கின்றன.  

ஸ்டோன் தன் மகளின் இறப்பு குறித்து பேசும் போதும் அவளது தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்வதை முன்வைக்கும் போதும் திரைப்படத்தில் வாழ்க்கை என்பது மொத்தத்தில் சந்தர்ப்பங்களும் ஊமைத்தனமான அதிர்ஷ்டமும் தான் என்கிற கருத்துப்பதிவுடன் விடப்படுகின்றது. குருட்டுத்தனமான விதியை எதிர்நோக்கும்போது, ஒருவர் தனக்குள் போராடி முற்றிலும் தன்னால் மட்டுமே- தொடர்வதற்கான ஆற்றலை பெற்று, தன்னை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்வெளியில், ஒன்றும் இல்லை. அங்கு ஒரு ராபின்சன் குருசோவான, டாக்டர். ஸ்டோன் தனது கருவிகள் மற்றும் சொந்த உள்ளார்ந்த வலிமையுடன் மட்டும் இருக்கிறார்.

எந்த புறநிலை சமூக அல்லது வரலாற்று உள்ளடக்கத்திலிருந்தும் மற்றும் அதனை வடிவமைக்கும் எந்த சக்தியிலிருந்தும் முற்றாக பிரித்தெடுக்கப்பட்ட மனித தன்முனைப்பு அல்லது ஆர்வ எழுச்சி பற்றிய கருதுகோள் ஒன்றும் இதில் இருக்கிறது. கிட்டத்தட்ட தவிர்க்கமுடியாத வகையில், Gravity இல் குறிப்பிட்ட மத கருத்துக்களும் உணரும்படியாக உள்ளன. ஒரு கஷ்டமான தருணம் ஒன்றில், தான் எப்படி பிரார்த்திக்க வேண்டுமென்பதை கற்றுக் கொள்ளவில்லை எனும் உண்மையை உணர ஸ்டோன் ஆரம்பிக்கிறாள். எப்படி என்றும் யாரும் சொல்லித்தரவில்லையே என்று அவள் தனக்குள் திரும்பத்திரும்ப முணுமுணுக்கிறாள். இன்னொரு அதிக மகிழ்ச்சியான தருணத்தில், ஸ்டோன் எதிர்பார்த்தபடி சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்போது, காரனின் கேமரா, ஸ்டோன் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கட்டுப்பாட்டு பலகையின் மீது, அமர்ந்த நிலையில் கைகள் பிராத்திக்கும் வகையில் ஒரு சிறிய புத்தர் சிலையினைக் காட்டுகிறது.

பிறப்பு அல்லது மறு பிறப்பினை உணர்த்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் அதிகம் காணப்படுகின்றது. ஒரு காட்சியில், தாயின் கருப்பையில் ஒரு கரு அழைப்பது மாதிரி ஒரு அழுத்தமாற்ற குழாயினுள் (airlock) ஸ்டோன் மிதக்கிறார். பின்னணியில் பூமியிலிருந்து ஒரு தெளிவற்ற தொலைத்தொடர்பு மூலம் ஒரு குழந்தை அழுவதும் கேட்கிறது.

தீவிர கஷ்டம் மற்றும் தனிமையின் கீழ் உயிர்தப்புவது என்பதை சித்தரிக்கும் இத்திரைப்படத்திலும் சரி, இதே போன்ற பல கதைகளிலும் சரி, கதையின் முக்கிய தருணத்தில் ஒரு புத்திஜீவி அல்லது விஞ்ஞானி அவனது அல்லது அவளது உயிர் காப்பாற்றப்படுவதற்கு முன்பாக, கட்டாயமாக ஒரு வகையிலான ஆன்மிக-மத விழிப்பினை கொண்டிருக்கவேண்டும் என்பது காட்டப்படுகின்றது. தங்களது பிடிவாத குணத்திற்காக அல்லது ஒரு அறிவியல் பார்வையின் காரணமாக அவர்களது அதை கண்டுகொள்ள முடியாமலிருக்க வாழ்க்கை குறித்த முக்கியமான சிலவற்றை மறந்ததற்காக இதுபோன்ற கதாபாத்திரங்கள் தண்டிக்கப்படுவது போல் இருக்கிறது.

முடிவில், அதன் விளைவு என்னவாக இருந்தாலும், ஸ்டோன் விஷயங்களை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் மேலும் நல்லதோ கெட்டதோ அவள் மேற்கொள்ளும் பயணத்தைபாராட்ட வேண்டும். இத்திரைப்படத்தின் அடிப்படையில், ஒரு வகையான ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிநுட்பம் மற்றும் பழமைவாதம் காணப்படுகிறது. படைப்பின் மீது மிகுந்த பரபரப்பான எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அதன் மீது சுற்றப்பட்டுள்ள மனித நாடகத்தனத்தால் உண்மையில் அது பூர்த்தியாகாமல் போகிறது. Gravity தற்போது வந்து கொண்டிருக்கும் பல ஆன்மீக எண்ணமுடைய உயிர்தப்புதல் பற்றிய திரைப்படங்களுள் ஒன்று. சமீபத்தில், ஆங் லீயின் இயக்கத்தில் வெளிவந்த the  Life of Pi (2012) திரைப்படம், அதுவும் தனக்கே உண்டான மதரீதியான கருத்துக்களைக் கொண்டிருந்தது. Gravity வெளியாவதற்கு முன்பாக, J.C. சந்தோரின் இயக்கும் Margin Call, 2011 திரைப்படத்திற்கான முன்னோட்டமும் காண்பிக்கப்பட்டது, அதில் கடலில் சிக்கிக் கொண்ட மனிதனாக ராபர்ட் ரெட்ஃபோர்ட். அதில் ரெட்ஃபோர்ட்தான் ஒரே கதாபாத்திரம் என்றும் அத்திரைப்படத்தில் மிகவும் குறைவான வசனமே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த படத்தின் தலைப்பான All Is Lost என்பதே அதைப்பற்றி தெரிவிக்கின்றது.

மனித விடயங்களின் தற்போதைய நிலைமை குறித்த விஷயங்களில் இந்த திரைப்பட இயக்குநர்கள் அதிக அளவில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள் என்பதை ஒருவர் உணர முடிகிறது. பயங்கரமான கஷ்டங்களுக்கு எதிராக, ஒருவர் தன்னால் முடிந்ததற்கு அப்பாற்பட்டு எதையும் மாற்ற முடியாது என்பதாக இத்திரைப்படங்கள் கூற வருவதுபோல் தெரிகிறது. ஒருவர் செய்ய முடிந்ததெல்லாம் ஒருவருக்குள் உள்ள உறுதியின் உணர்வினை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. மனித தன்முனைப்பு பற்றிய ஓரளவு குறுகிய புகழாரத்தினை நோக்கி திரும்பிய ஒரு அவநம்பிக்கையான தன்மையும் இத்துடன் இணைந்துள்ளது.