World Socialist Web Site www.wsws.org |
The Financial Times’ attack on Thomas Piketty தோமஸ் பிகேட்டி மீதான பைனான்சியல் டைம்ஸின் தாக்குதல்
Joseph Kishore கடந்த பல நாட்களாக வெளியான தொடர்ச்சியான கட்டுரைகளிலும் மற்றும் திங்களன்று பிரசுரிக்கப்பட்ட ஒரு முக்கிய தலையங்கத்திலும், பைனான்சியல் டைம்ஸ் தோமஸ் பிகேட்டி மீதும், அவரது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மூலதனம் என்ற நூலின் மீதும் இழிவுகரமான தாக்குதலைத் தொடங்கி உள்ளது. அந்த புத்தகத்தின் மைய கருத்துக்களில் ஒன்றான உலகம் முழுவதிலும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், செல்வ திரட்சி அதிகரித்து வருவதாக குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் பெரும் பிழைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அந்த பத்திரிகை வாதிடுகிறது. “தோமஸ் பிகேட்டியின் விரிவான சமத்துவமின்மை புள்ளிவிபரங்கள் பிழையாய் போயின" என்ற ஆத்திரமூட்டும் தலைப்பில், வாரயிறுதியில் பிரசுரிக்கப்பட்ட ஒரு முதல் பக்க கட்டுரை, “அந்த புத்தகத்தின் முக்கிய வரைபடங்கள் சிலவற்றிற்கு அடித்தளமாக உள்ள புள்ளிவிபரங்களில், விவரிக்கப்படாத தரவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை மற்றும் பிழைகள் இருப்பதை" அந்த தலையங்கத்தின் ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த விமர்சனங்களுக்கான பிகேட்டியின் பதிலை கணக்கெடுப்பதற்கு முன்னரே, "சமூகத்தில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமான செல்வவளத்தின் பங்கு அதிகரித்து வருகிறது என்ற பேராசிரியர் பிகேட்டியின் வாதத்தைப் பலவீனப்படுத்த அவர்கள் போதுமான அளவிற்கு தீவிரமாக இருப்பதாகவும்", [பிகேட்டியை மேற்கோளிட்டு காட்டி] 'கடந்த காலத்தைப் போல இன்று செல்வ வளம் ஏன் சமமின்றி வினியோகிக்கப்படவில்லை என்பதற்கு எளிமையான காரணம் என்னவென்றால் 1945க்குப் பின்னர் அதற்கான போதுமான காலம் இன்னும் கடந்துவிடவில்லை'” என்றும் அந்த பத்திரிகை முடிக்கிறது. சமூக சமத்துவமின்மையை முற்றிலுமாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் தீர்த்துவிட முடியுமென்று நம்பும் மார்க்சிசத்தின் எதிர்ப்பாளரான பேராசிரியர் பிகேட்டியோடு உலக சோசலிச வலைத்தளம் அடிப்படை தத்துவார்த்த மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. அவரது புத்தகம் மற்றும் அதற்கான விடையிறுப்பின் மீது கொண்டு வரப்படும் ஒரு தனி மீளாய்வில் அதற்கான விமர்சனங்கள் கையாளப்படும். ஆனால் பைனான்சியல் டைம்ஸின் தாக்குதலுக்கான இலக்கு இந்த வரையறைகளில் இல்லை, மாறாக அந்த புத்தகத்தின் முக்கிய பலத்தின் மீதும், ஒட்டுமொத்தமாக பிகேட்டியின் வேலையின் மீதும் தங்கி உள்ளது — அதாவது, ஒட்டுமொத்தமாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் வருவாய் வளர்ச்சி மற்றும் செல்வ வளத்தின் சமத்துவமின்மை மீதான விபரமான ஆய்வின் மீது உள்ளது. எவற்றின் மீது அந்த பத்திரிகை குற்றச்சாட்டுக்களைக் காட்ட முயற்சிக்கிறதோ, (அந்த புத்தகத்தில் ஒரேயொரு அத்தியாயத்தில் மட்டுமே கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த) அதாவது FTஇன் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் அந்த கருத்துக்களுக்கும், அந்நூலின் தீர்க்கமான முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பத்திரிகையால் மேற்கோளிட்டு காட்டப்படும் பிழைகளில், தரவு படியேற்றுதலின் (data transcription) வெளிப்படையான தவறுகளும் மற்றும் உண்மையில் முக்கியத்துவம் அல்லாத ஏனைய சிறிய பிரச்சனைகளுமே உள்ளன. குறிப்பிட்ட காலக்கட்டத்திய செல்வ வள பகிர்வை ஒருங்கிணைத்து காட்ட பிகேட்டியின் முயற்சிகளின் பாகமாக தரப்பட்ட தரவுகளில், விவரிக்கப்படாத திருத்தங்களாக அது எதை கருதுகிறதோ அவற்றையும் அந்த பத்திரிகை மேற்கோளிடுகிறது. வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து, வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு காலக்கட்டத்தில் திரட்டப்பட்ட தரவுகளை ஒருங்கிணைக்கும் போது அதுபோன்ற திருத்தங்களும், அனுமானங்களும் தவிர்க்கவியலாதவையாகும் — இந்த உண்மையை பிகேட்டியே கூட ஒப்புக் கொள்கிறார். FTஇன் விமர்சனங்களுக்கு விடையிறுக்கையில், எந்தளவிற்கு வெளிப்படையாக செய்ய சாத்தியமோ அந்தளவிற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளதாக பிகேட்டி குறிப்பிட்டார், அவர் அவரது அனைத்து தரவுகளையும் இணையத்தில் கிடைக்க செய்துள்ளதோடு, பகிரங்க ஆய்விற்கும் வழங்கி உள்ளார். உண்மையில் செல்வ வளத்தின் திரட்சி அளவை அந்த பேராசிரியர் குறைமதிப்பீட்டிற்கு உட்படுத்தி உள்ளாரே தவிர மிகைமதிப்பீடு செய்யவில்லை என பலர் கருதுகின்றனர். சான்றாக, பணக்காரர்களிடம் உள்ள செல்வ வளம் மீதான அவரது மதிப்பீட்டில் "வெளிநாடுகளில் உள்ள செல்வம் முழுவதும் கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதால் அது குறைத்துக் காட்டும் பிழையை ஏற்படுத்தக்கூடும்" என்று அவர் குறிப்பிடுகிறார். FTஇன் விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள உந்துசக்தி வெளிப்படையாக அரசியல் குணாம்சத்தில் உள்ளது. “பிகேட்டியின் படைப்பில் நிலவும் பெரும் கேள்விகள்" என்ற விடயத்தின் மீதான அதன் தலையங்கத்தில், "செல்வ வளத்தை முன்பை விட அதிகமாக பணக்காரர்கள் கையில் குவிப்பதை முதலாளித்துவம் அதன் இயல்பான தன்மையாக கொண்டுள்ளது என்ற அவரது கருதாய்வை" பிகேட்டியின் தரவுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் "பலவீனப்படுத்துவதாக" அந்த பத்திரிகையின் பதிப்பாசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அந்த தரவுகளில் பிழைகள் இருப்பதால், “ஐரோப்பாவில் பணக்காரர்களிடம் உள்ள செல்வ வளம் 1980களில் இருந்து அதிகரித்துள்ளது என்ற கண்டுபிடிப்பை கேள்விக்குட்படுத்த அங்கே அடித்தளங்கள் அமைகின்றன" என்றும், அந்த முடிவு இல்லையென்றால், முன்னொருபோதும் இல்லாத வகையில் சமத்துவமின்மை அதிகரிப்பதில் அங்கே முதலாளித்துவத்தின் இரும்பு சட்டம் எதுவும் கிடையாது,” என்றும் விசித்திரமான வகையில் அந்த பத்திரிகை வலியுறுத்துகிறது. தாம் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்க்கவில்லை என்ற பிகேட்டியின் தொடர்ச்சியான வாக்குறுதிகளுக்கு இடையிலும், (உண்மையில், சமத்துவமின்மையை ஏற்படுத்தும் ஒரு “இரும்பு சட்டத்தை” அவர் எடுத்துக்காட்டவும் இல்லை) அவர் சேகரித்து, பொருத்தமான வடிவத்தில் அளித்துள்ள அந்த ஆவணம் தெளிவாக FTயையும், யாருக்காக அந்த பத்திரிகை பேசுகிறதோ அவர்களையும் மிகவும் பதட்டமாக்கி உள்ளது. அதேவேளையில் அவர்கள் மனதில் ஓடும் சோசலிசம் என்ற அந்த வார்த்தையை அவர்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. பிகேட்டி மீதான அதன் தாக்குதலில், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் மேலெழுந்து வரும் ஆழ்ந்த சமூக பதட்டங்களை உணர்ந்துள்ள நிதியியல் பிரபுத்துவத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்காக பைனான்சியல் டைம்ஸ் பேசுகிறது. அவர்கள் எந்தவொரு பொருளாதார அமைப்புமுறையைத் தாங்கிப் பிடித்துள்ளனரோ அது மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில் நம்பிக்கை இழந்திருக்கிறது என்பதை அவர்கள் நன்றாக உணர்வார்கள். மக்களின் ஒரு சிறிய அடுக்கால் திரட்டப்பட்டுள்ள பரந்த செல்வ வளத்தின் சட்டப்பூர்வமற்ற தன்மையை ஒப்புக் கொள்ளும் எதுவொன்றும், அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து, அபாயகரமாக உள்ளது. சமத்துவமின்மை உண்மையில் ஒரு ஆழமான பிரச்சினையே அல்ல என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது எந்தளவிற்கு நிலவுகிறதோ, அதை அந்தளவிற்கு நியாயப்படுத்துகிறார்கள். “தொழில்ரீதியிலான திறமை மற்றும் வாரிசு உரிமையிலிருந்து பெற்ற செல்வ வளத்திற்கு இடையே அங்கே ஒரு பெரும் இடைவெளி உள்ளது,” என்று அந்த ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். நவீனகால பிரபுத்துவத்தின் செல்வ வளத்திற்கு என்ன "தொழில்முனைவோரின் திறமைகள்" பொறுப்பாகின்றன? இலண்டனின் நிதியியல் அமைப்புகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் தலைமையிலான ஆளும் வர்க்கம், பணத்தை பங்குச் சந்தைகளுக்குள் செலுத்துவதற்காக ஒட்டுமொத்த தொழில்சாலைகளையும் அழித்து, தசாப்த காலமாக, ஒரு பாரிய ஊகவணிகத்தில் விரயமாக்கி வருகின்றன. 2008க்கு பின்னரில் இருந்து, நெருக்கடியை உருவாக்கிய ஊக வணிக குமிழிகளை மீண்டும் ஊதிப் பெருக்க வைக்க, மத்திய வங்கிகள் பூஜ்ஜியம் அளவிற்கான வட்டி விகிதங்களில் நிதியியல் அமைப்புமுறைக்குள் வெள்ளமென பணத்தைப் பாய்ச்சி உள்ளன. இத்தகைய கொள்கைகளின் விளைவுகள் என்னவென்பது பிகேட்டியால் மற்றும் அவரது பாதுகாப்பிற்காக அந்த எழுத்தாளரால் காட்டப்பட்ட பல ஏனைய ஆதாரங்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மிக சமீபத்தில் பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் அதன் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது, அது பிரிட்டனில் உள்ள 1,000 மிகப் பெரிய பணக்காரர்கள் மொத்தமாக 519 பில்லியன் பவுண்டு செல்வ வளத்தை வைத்திருப்பதையும், இது கடந்த ஆண்டிலிருந்து 15.4 சதவீதமும் மற்றும் 2008இல் இருந்ததை விட இரண்டு மடங்கும் உயர்ந்திருப்பதை எடுத்துக்காட்டியது. இந்த 1,000 தனிநபர்களின் செல்வ வளம் இப்போது அந்நாட்டின் ஒட்டுமொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமாகும். உலகின் 85 மிகப் பெரிய பணக்காரர்கள் தற்போது அடியிலுள்ள 50 சதவீதத்தினர் கொண்டிருக்கும் செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள். போர்ப்ஸ் கருத்துப்படி, உலகின் 1,165 பில்லினியர்கள் ஒட்டுமொத்த நிகர மதிப்பாக 6.4 ட்ரில்லியன் டாலரைக் கொண்டிருக்கிறார்கள், இது 2013ஐ விட 1 ட்ரில்லியன் டாலர் அதிகமாகும். அமெரிக்காவில் 400 மிகப் பெரிய பணக்காரர்களின் செல்வ வளத்தில் 2013இல் 2 ட்ரில்லியன் டாலர் அதிகரித்தது, அது அதற்கு முந்தைய ஆண்டிலிருந்து 17 சதவீத உயர்வாகும். வருமான சமத்துவமின்மையைப் பொறுத்த வரையில், உலக வருமானத்தின் பெரும் பங்குகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், மேலே உள்ள ஒரு சதவீத மற்றும் 0.1 சதவீதத்தினருக்குப் போவதாக எடுத்துக்காட்டும், பிகேட்டியால் மற்றும் அவருக்கு ஒத்துழைத்தவர்களால் திரட்டப்பட்ட பரந்த தரவுகளைக் குறித்து பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடவும் கூட இல்லை. அமெரிக்காவில், 2012இல் மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 22.46 சதவீதத்தை ஏகபோகமாக்கி கொண்டனர், இது அதற்கு முந்தைய ஆண்டின் 19.65 சதவீதத்தை விட அதிகமாகும். பிகேட்டி மீதான FTஇன் தாக்குதல், சமூக சமத்துவமின்மையின் முக்கியத்துவத்தை மறுப்பதன் மூலமாக வர்க்க முரண்டுகளின் அதிகரிப்பை கையாள்வதற்கான ஒரு முயற்சியாகும். இருந்த போதினும் உண்மைக்காரணிகள் அவற்றின் வெடிப்புமிக்க சமூக மற்றும் அரசியல் விளைவுகளுடன் அவ்வாறே உள்ளன. |
|