World Socialist Web Site www.wsws.org |
One year of Edward Snowden’s revelations எட்வர்டு ஸ்னோவ்டெனின் வெளிப்படுத்தல்களின் ஓராண்டு
Eric London and
Barry Grey அமெரிக்க அரசாங்கத்தின் பாரிய உளவுவேலை திட்டங்கள் மீதான ஆதாரங்கள் முதன்முதலில் கார்டியன் பத்திரிகையில் வரத் தொடங்கிய நாளிலிருந்து இந்த வியாழக்கிழமை ஓராண்டைக் குறிக்கிறது. அதற்கடுத்து வந்த மாதங்களில் பகுதி பகுதியாக அவற்றைப் பகிரங்கப்படுத்தியதன் மூலமாக, அமெரிக்க மக்களின் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கானவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் தகவல் பரிமாற்றங்களைத் திரட்டி, சேகரித்து, சேமித்து வைப்பதை நோக்கமாக கொண்ட அரசாங்க நடவடிக்கை ஒன்றிருப்பதை எட்வர்டு ஸ்னோவ்டன் அம்பலப்படுத்தியுள்ளார். ஸ்னோடன் அம்பலப்படுத்தி உள்ள சர்வதேச உளவுவேலை அமைப்பு, வரலாற்றில் முன்பிருந்த வேறெதையும் விட மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பில்லியன் கணக்கான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், வாசகங்கள், வீடியோ கலந்துரையாடல்கள், வெப்காம் பதிவுகள், முக அடையாளங்கள் மற்றும் கடன் அட்டை விபரங்கள் ஆகியவை வெரிஜோன், கூகுள் மற்றும் யாகூ போன்ற பெரிய பெருநிறுவனங்களின் உதவியோடு சேகரிக்கப்படுகின்றன. தகவல் பரிமாற்றங்களின் மெட்டா டேட்டா மற்றும் உள்ளடக்கம் இரண்டுமே சேமிக்கப்படுகின்ற என்பதோடு அவற்றை உத்தரவாணை இல்லாமலேயே பெற முடியும். இது அமெரிக்காவில் ஒவ்வொருவரின் மற்றும் அமெரிக்க எல்லைக்கு வெளியில் உள்ள நூறு மில்லியன் கணக்கான மக்களின் சமூக மற்றும் அரசியல் விபரங்களைப் பெற உளவுதுறை அமைப்புகளை அனுமதிக்கிறது. தேசிய பாதுகாப்பு முகமை (NSA) தனிநபர்களை மட்டும் உளவு பார்க்கவில்லை, மாறாக அரசாங்கங்களையும் மற்றும் அரசாங்க தலைவர்களையும் (“கூட்டாளிகள்” மற்றும் எதிரிகள் போன்றிருப்பவர்களை); ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ போன்ற சர்வதேச அமைப்புகளையும்; மற்றும் வெளிநாட்டு பெருநிறுவனங்களையும் கூட உளவு பார்க்கிறது என்பதை ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சீனா, ஈரான் மற்றும் ஏனைய பல நாடுகளின் தகவல்களைத் திருடி, இணைய யுத்தமுறையை நடைமுறைப்படுத்துவதில் உலகின் மிகப் பெரிய நடைமுறையாளராக அமெரிக்க அரசாங்கம் விளங்குகிறது. அமெரிக்காவின் இந்த மிகப் பிரமாண்ட நடவடிக்கையின் மிகப் பரந்த மற்றும் உலகளாவிய குணாம்சம் விவரமாக அம்பலப்படுத்தப்பட்டமை, இது "மட்டுப்படுத்தப்பட்ட" மற்றும் "குறுகியளவில் ஒருமுனைப்பட்ட" ஒரு திட்டம் என்றும், பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க "சொந்தமண்ணை" காப்பாற்றுவதற்காக ஊக்குவிக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்படும் அரசாங்கத்தின் வாதங்களை முற்றிலும் அர்த்தமற்றதாக்குகிறது. இந்த வெளிப்படையான பொய்யானது, உளவுத்துறை முகமைகள், வெள்ளை மாளிகை, மற்றும் காங்கிரஸில் உள்ள அவற்றின் ஆதரவாளர்களால், மற்றும் நீதித்துறையால் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டமை மக்களின் புத்திஜீவித்தன்மை மீதான ஒரு அவமதிப்பாகும். ஓராண்டிற்கு முன்னர் அந்த வெளியீடுகள் முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டதில் இருந்து, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்மை மற்றும் போலித்தன்மைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும், தேர்ந்தெடுக்கப்படாத உளவுத்துறை உளவாளிகளால் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளால் செயல்படுத்தப்படும் ஒரு மேலெழுந்த பொலிஸ் அரசின் யதார்த்தம் முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலன்களை அச்சுறுத்தும் சமூக மேலெழுச்சி சம்பவங்களைத் தவிர்க்கவும் மற்றும் பிடிக்கப்பட வேண்டிய "எதிரிகளின் பட்டியலை" வரையவும் அரசுக்கு உதவுகின்ற இந்த ஒடுக்குமுறை எந்திரத்தின் உண்மையான இலக்கு, வெளிநாட்டு ஜிஹாதிஸ்டுகள் அல்ல (இவர்களுடன் தான் அமெரிக்க அரசாங்கம் சிரியாவிலும், லிபியாவிலும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் ஒருங்கிணைந்து வேலை செய்து வருகிறதே), மாறாக தொழிலாளர் வர்க்கமாகும். இந்த ஒட்டுமொத்த உளவுவேலையும் அப்பட்டமாக சட்டவிரோதமானதும், அரசியலமைப்பிற்கு முரணானதும் ஆகும். இது துல்லியமாக அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் திருத்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள "காரணமற்ற" நடவடிக்கை வகையைச் சேர்ந்தது, அந்த திருத்தம் "காரணமற்ற சோதனை நடவடிக்கைகள் மற்றும் கைப்பற்றுதல்களுக்கு எதிராக தனிநபர்கள், வீடுகள், ஆவணங்கள், மற்றும் சொத்துகளைப் பாதுகாத்து வைப்பதற்கான மக்களினது உரிமை மீறப்படக் கூடாது, மற்றும் காரணமின்றி எந்தவொரு உத்தரவாணையும் வழங்கப்படக் கூடாது...” என்று குறிப்பிடுகிறது. இருந்த போதினும் ஸ்னோவ்டெனின் முதல் வெளியீடுகள் வெளியாகி ஓராண்டு ஆன பின்னரும், இந்த திட்டங்களில் எதுவுமே முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை அல்லது மட்டுப்படுத்தப்படவில்லை. அவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன, அதேவேளையில் ஜனாதிபதி ஒபாமா, சீர்திருத்தம் என்ற பெயரில், இன்னும் உறுதியாக அவற்றை அமைப்புமுறையாக்க நகர்ந்துள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பு பரந்தும், ஆழமாகவும் உள்ளன. ஸ்னோவ்டென் மீதான இரக்கமற்ற தாக்குதல்களோடு சேர்ந்து, திட்டங்களைத் தீங்கற்றவை மற்றும் சட்டரீதியிலான குணாம்சம் கொண்டவை என்று அரசாங்கம் மற்றும் ஊடகங்களால் கூறப்பட்ட மாதக்கணக்கிலான பொய்கள், இரகசியங்களை வெளியிட்டவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவைக் குறைப்பதில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், மக்களின் இந்த கண்ணோட்டங்கள் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்கு அர்த்தமற்றதாக உள்ளது. அவை வெளிப்படுத்தப்பட்டதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, அந்த திட்டங்களைப்போலவே அம்பலப்படுத்தப்பட்டதாக இருந்தது. முதல் நாளில் இருந்தே, ஊடகங்களிடம் இருந்தோ அல்லது இரண்டு பிரதான கட்சிகளிடம் இருந்தோ இந்த திட்டங்களை நிறுத்த கோரியோ அல்லது, அவற்றை அங்கீகரிப்பதற்கு மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான, ஜனாதிபதியில் இருந்து தொடங்கி, அந்த அதிகாரிகளின் மீது குற்றம் சாட்டவோ மற்றும் வழக்கு தொடர கோரியோ நடைமுறையில் எந்தவொரு அழைப்பும் இல்லை. அதற்கு நேர்மாறாக பத்திரிகைகளும், வலையமைப்புகளும், பண்டிதர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் ஸ்னோவ்டெனுக்கு எதிராக நின்றனர். அவற்றில் அரிதிலும் அரிய விதிவிலக்குகள் மட்டுமே இருந்தன. மக்களின் பாரிய ஜனநாயக உரிமைகள் மீறல்களுக்கு தைரியத்தோடும், கொள்கையோடும் விடையிறுப்பு காட்டிய அந்த இளைஞரைப் பாராட்டுவதற்கு மாறாக, இந்த சக்திகள் நிஜமான குற்றவாளிகளை விட்டுவிட்டு, ஸ்னோவ்டெனை ஒரு குற்றவாளியாகவும், தேச துரோகியாகவும் குற்றஞ்சாட்டின. விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு ஆவணங்களைக் கசியவிட்ட பிரட்லி (செல்சியா) மேனிங் போன்ற முன்னர் இரகசியங்களை வெளியிட்டவர்களை நோக்கிய ஒபாமா நிர்வாகத்தினது கொள்கையின் ஒரு தொடர்ச்சியாக, ஒபாமா நிர்வாகம் 1917 வேவுபார்ப்பு சட்டத்தை மூன்று புள்ளிகளில் மீறியிருப்பதாக ஸ்னோவ்டெனை குற்றஞ்சாட்டியது. ஸ்னோவ்டெனின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டதோடு, அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஜூலையில், ஸ்னோவ்டெனைப் பிடிக்கும் ஒரு முயற்சியில் நிர்வாகம் பொலிவியன் ஜனாதிபதி எவோ மொராலெஸ் பயணித்த விமானத்தை பலவந்தமாக தரையிறக்கியது. ரஷ்யாவில் தற்காலிகமாக தஞ்சமடைய வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்க ஸ்னோவ்டென் நிர்பந்திக்கப்பட்டார். இராணுவ மற்றும் உளவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் அவரைப் படுகொலை செய்யும் சாத்தியக்கூறு குறித்து பகிரங்கமாக பேசப்பட்டது. ஸ்னோவ்டெனை ஒபாமா நிர்வாகத்தின் "கொலைப் பட்டியலில்" சேர்ப்பது குறித்து முன்னாள் NSA இயக்குனர் மைக்கேல் ஹைடன் அக்டோபரில் பேசினார். இந்த வெளியீடுகளோடு தொழில்ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட விதத்திலோ தொடர்புபட்டிருந்தவர்கள் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு உள்ளார்கள். பிரிட்டிஷ் உளவுத்துறை ஜூலையில் கார்டியனை ஹார்டு டிஸ்டுகளை அழிக்க நிர்பந்தித்ததோடு, அந்த பத்திரிகை மூடப்படுமென்று அச்சுறுத்தியது. ஆகஸ்டில் கார்டியன் செய்தியாளர் கிளென் கிரீன்வார்டின் கூட்டாளியான டேவிட் மிராண்டாவை பொலிஸ் இலண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒன்பது மணி நேரம் தடுப்பு காவலில் வைத்திருந்தது. அவரது கணினி உட்பட அவரது உடைமைகள் சட்டவிரோதமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைப்பற்றப்பட்டன. அச்சுறுத்தல்களும், பொய்களும் இன்றைய நாள் வரையில் தொடர்கின்றன. ஸ்னோவ்டென் "தைரியத்தோடு தயாராகி" அமெரிக்க "நீதித்துறை அமைப்பிடம்" அவரைஅவரே ஒப்படைக்க வேண்டுமென கோரி கடந்த வாரம் NBC நியூசில் ஸ்னோவ்டென் அளித்த நேர்காணலுக்கு வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி விடையிறுப்பு காட்டினார். கெர்ரி NBCஇன் சக் டோட்டிடம் கூறினார், “எட்வர்டு ஸ்னோவ்டென் ஒரு கோழை. அவர் ஒரு தேச துரோகி. அவர் தனது நாட்டைக் காட்டிக்கொடுத்து விட்டார்,” என்றார். ஆளும் மேற்தட்டு ஸ்னோவ்டெனின் எழுச்சியால் பீதியடைந்துள்ளது, மில்லியன் கணக்கான இளைஞர்கள் பரந்த அரசியல்ரீதியாக தீவிரமயமாகுவதற்கு அவர் ஒரு முன்னுதாரணமாக நிற்கிறார். 1983இல் பிறந்த அவர், அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் முன்பை விட அதிகமான அமெரிக்க இராணுவவாதத்தின் இரத்தம் தோய்ந்த எழுச்சியைத் தவிர வேறொன்றையையும் அனுபவித்திராத ஒரு தலைமுறையின் கணிசமான பிரிவுக்காக பேசுகிறார். 2000ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டமை, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்,” ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தங்கள், அபு க்ஹ்ரெப் (Abu Ghraib), அரசின் பொலிஸ் அதிகாரங்களை விரிவாக்கியமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் (தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு, குவாண்டனாமா, இதர பிற) மற்றும் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு சமூக சமத்துவமின்மையின் வெறுப்பூட்டும் வளர்ச்சி ஆகியவை முக்கிய மைல்கல்களில் உள்ளடங்கும். ஸ்னோவ்டென் வெளிப்படுத்தல்கள் வெளிவரத்தொடங்கி ஓராண்டிற்குப் பின்னர், என்ன அரசியல் முடிவுகளை எடுக்க முடிகிறது? ஒரு சர்வாதிபத்திய உளவுவேலை நடவடிக்கையின் உருவாக்கம் ஒரு தற்காலிக தொடக்கமல்ல, அதை வலிநிவாரணிகளைக் கொண்டோ சீர்திருத்தத்திற்கான முறையீடுகளைக் கொண்டோ சரி செய்ய முடியாது. இந்த திட்டங்கள் கட்டியெழுப்பப்படுதல் முதலாளித்துவ அமைப்புமுறையின் மரணநெருக்கடியிலிருந்து எழும் ஆழமான தேவைகளுக்கு — வெறுமனே அமெரிக்காவில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில் — ஆளும் வர்க்கம் காட்டும் விடையிறுப்பாகும். பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், பிரான்ஸ் என — உண்மையில் ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ "ஜனநாயகத்திலும்" — இதுபோன்ற திட்டங்கள் இருப்பதை வெளிப்படுத்தியது உட்பட ஸ்னோவ்டெனின் வெளியீடுகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையில் வேரூன்றி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, இது சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்தின் பிரமாண்ட வளர்ச்சியோடு தொடர்புபட்டுள்ளது, இவை இரண்டுமே 2008இல் தொடங்கிய முதலாளித்துவத்தின் பூகோள உடைவால் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு தொழிலாளர் வர்க்கத்தின் மீது விழுகிறது. அது ஸ்னோவ்டெனையும், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் குற்றங்களை அம்பலப்படுத்த தங்களின் வாழ்வைப் பணயம் வைக்கும் ஏனைய அனைவரையும் உறுதியோடு பாதுகாக்க வேண்டும். மேலும் அது சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் ஒரு ஜனநாயக மற்றும் சமத்துவத்தின் அடித்தளத்தில் உலக பொருளாதாரத்தை மறுஒழுங்கமைப்பதற்கான ஒரு நனவுப்பூர்வமான அரசியல் போராட்டம் அவசியமாகும். அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் மாபெரும் சமூக போராட்டங்கள் வெளிப்படவுள்ளன. ஆளும் வர்க்கமோ பாரிய தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் சாத்தியக்கூறுகளால் பீதியடைந்துள்ளது. அதற்கு அதன் விடையிறுப்பாக ஒரு பொலிஸ் அரசை தயாரிப்பதாக உள்ளது. தொழிலாளர் வர்க்கம் அதன் போராட்டங்களை அதன் சொந்த சுயாதீனமான, புரட்சிகர மூலோபாயத்தில் நிலைநிறுத்த வேண்டும். வரவிருக்கின்ற போராட்டங்களை ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாக்க ஒரு புதிய தலைமையைக் கட்டியெழுப்புவது தான் முக்கிய விடயமாகும். அதற்கான போராட்டம் தான் சோசலிச சமத்துவ கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. |
|