World Socialist Web Site www.wsws.org |
EU summit in Ypres: The end of the European Union in its current form யெப்ரெஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு: இப்போதைய வடிவத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதிமுடிவு
By
Peter Schwarz ஐரோப்பிய குழுவின் தலைவர் ஹெர்மன் வொன் ரோம்பே (Herman Van Rompuy) பெல்ஜியம் நகரான யெப்ரெஸில் இன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். முதலாம் உலக போரில் பிளான்டர்ஸ் நகரைச் சுற்றியுள்ள யுத்தங்களங்களில் இறந்த நூறு ஆயிரக்கணக்கான துருப்புகளுக்கு 28 நாடுகளின் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள். “சமாதானம், ஐக்கியம் மற்றும் கூட்டுறவுக்கான ஒரு செயல்திட்டமாக ஐரோப்பாவை நாம் நிரூபித்துக் காட்டும் ஒரு உந்துதல்மிக்க நிகழ்வாக விளங்கும்,” என்று வொன் ரோம்பே அறிவித்தார். உண்மையில் யெப்ரெஸ் அதற்கு எதிர்மாறான ஒரு அடையாளமாக இருக்கிறது: அதாவது தேசிய உட்பூசல்கள், சமூக மோதல்கள், யுத்தம்; மற்றும் தற்போதைய வடிவத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதிமுடிவு ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. அந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, யார் ஐரோப்பிய ஆணைக்குழுவின் வருங்கால தலைவராக வேண்டுமென்ற மோதல், உண்மையில் எந்தவொரு சமரசமும் சாத்தியமில்லை என்ற மட்டத்திற்கு தீவிரமடைந்திருந்தது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மற்றும் அதன் அரசாங்க தலைவர்களின் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டிருக்கும் முன்னாள் லுக்சம்பேர்க் அரசாங்கத்தின் தலைவர் ஜோன்- குளோட் யுங்கரின் நியமனத்தைத் தடுப்பதில் தீர்மானமாக இருக்கிறார். வாக்கெடுப்பில் கேமரூன் தோல்வியடைவது தவிர்க்கவியலாததாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் முதன்முறையாக, புருஸ்செல்ஸ் அதிகாரத்துவத்தின் செல்வாக்குமிக்க தலைமை அதன் 33,000 பணியாளர்களோடு சேர்ந்து ஒருமனதாக தீர்மானிக்கப்பட போவதில்லை. கேமரூனின் அவமானகரமான தோல்வியானது இங்கிலாந்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்களைப் பலப்படுத்தும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்நாடு வெளியேறுவதற்கும் ஒரு தொடக்கமாக மாறக்கூடும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகார சமநிலையைக் கடுமையாக பாதிக்கும். குறுகிய கால அடிப்படையில் பிரான்ஸின், மற்றும் முக்கியமாக ஜேர்மனியின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் வெளியேறுவதானது அவ்விரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்களைத் தீவிரப்படுத்தும். பாரீசும் பேர்லினும் கடந்த காலத்தில் அவற்றின் அயல்நாட்டினை ஒதுக்கிவைப்பதற்கு தொடர்ந்து இலண்டனைச் சார்ந்து இருந்துள்ளன. கேமரூன் குடுவையிலிருந்து அவர் வெளியே கொண்டு வந்த பூதத்திற்கு அவரே இரையாகி உள்ளார். ஐரோப்பிய-ஒன்றிய விரோத UKIP கட்சியினதும் மற்றும் அவரது சொந்த டோரி கட்சியினுள் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஐயுறவுவாதிகளினதும் செல்வாக்கைத் தடுப்பதற்காக கேமரூன், யுங்கரை ஐரோப்பிய "சமஸ்டிவாதத்தின்" உருவடிவமாக குற்றஞ்சாட்டுகிறார். யுங்கரை "வெறிப்பிடித்த சமஸ்டிவாதத்தின் இழிவார்ந்த" ஒரு மனிதராகவும், மற்றும் "மக்கள் விருப்பம், கலாச்சார அடையாளங்கள், ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் வெகு சிறிய பொது உணர்வைக்கூட நிராகரிக்கின்ற ஒரு அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியத்தின் கண்ணோட்டத்தை விடாபிடியாக பிடித்து பின்பற்றி வருபவராக" அவரை வர்ணித்த Daily Mail உடன் சேர்ந்து, பிரிட்டிஷ் பரபரப்புசெய்தித்தாள்களும் அந்த உட்பொருளை ஆர்வத்தோடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவொரு முழு மிகைப்படுத்தலாகும். அரை மில்லியன் மக்கள் வசிக்கும் மாபெரும் டச்சி (Grand Duchy) என்றழைக்கப்படும் லுக்சம்பேர்க்கை அவரது 19ஆண்டுகால ஆட்சியில் வங்கிகள் மற்றும் பெரிய பெருநிறுவனங்களுக்கான வரிவிலக்கு சுவர்க்கமாக மாற்றியுள்ள லுக்சம்பேர்க் கிறிஸ்துவ ஜனநாயகவாதி, பல அரசியல் பிரச்சினைகளில் கேமரூனோடு அதேமாதிரியான கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். யூரோ குழுமத்தின் தலைவராக யுங்கர் பொதுப்பணத்திலிருந்து பில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கி நலிந்த வங்கிகளை மீட்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். எவ்வாறிருந்த போதினும், பிரிட்டிஷ் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதானது உண்மையின் உட்கருவைக் கொண்டிருக்கிறது. அதாவது, அவர் இலண்டன் பெருநகர நலன்களை விட யூரோ மண்டல நாடுகளின் நலன்களை முன்னிலையில் நிறுத்த முனைகின்றார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக யுங்கர் விவகாரத்தில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் பரிந்துரைக்கப்படுகிறார் என்ற உண்மை தான் கேமரூனுக்கு உறுத்தலாக இருக்கிறது. புருசெல்ஸ் அதிகாரத்துவத்தின் தலைவர் பதவி ஒரு மைய ஐரோப்பிய ஒன்றிய அமைப்பான அந்த நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதை விட தேசிய அரசுகளின் பிரதிநிதிகளான அரசு மற்றும் அரசாங்க தலைவர்களால் பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்தில் கேமரூன் இருக்கிறார். முதல்முறையாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிகப் பெரிய குழுக்கள் ஐரோப்பிய சார்பு முன்னணி வேட்பாளர்களோடு இந்த ஆண்டின் ஐரோப்பிய தேர்தல்களில் நுழைந்திருந்தன என்பதோடு, அவை வெற்றிபெறும் பிரிவின் வேட்பாளரை மட்டுமே குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கவும் உடன்பட்டிருந்தன. இப்போது, அனைத்திற்கும் மேலாக, சமூக ஜனநாயகவாதிகளும் இந்த உடன்பாட்டோடு இணங்கி வந்துள்ளனர். எல்லா சமூக ஜனநாயக அரசாங்க தலைவர்களும் மற்றும் ஜேர்மனியின் சமூக ஜனநாயக்கட்சியும் (SPD) யுங்கருக்கு, அதாவது புதிய நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய பிரிவாக உள்ள பழமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) அந்த முன்னணி வேட்பாளரை ஆதரிக்கின்றனர். ஐரோப்பிய தேர்தலைத் தொடர்ந்து ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (CDU), கேமரூனை சாந்தப்படுத்துவதற்காக, அவரது சொந்த வேட்பாளரான யுங்கரிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையோடு தன்னைத்தானேதூர விலகி இருந்தபோது, அவர் வாக்காளர்களை ஏமாற்றுவதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். கேமரூனால் அவருக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வேறு உயர்பதவி வழங்குவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. அந்த பிரதம மந்திரி இப்போது முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்; சர்வாதிகார ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்போன் மட்டுமே அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். அவரது "முட்டாள்தனமான" நடவடிக்கையோடும், அதனோடு சேர்ந்து யுங்கரை முதலிடத்தில் முன்னணி வேட்பாளராக தேர்ந்தெடுக்க ஒருபோதும் உடன்பாடு தெரிவித்திராத மேர்க்கெல் மீதான விமர்சனங்கோடும் தன்னைத்தானே தனித்துக்காட்ட உபாயம் செய்திருந்த கேமரூனின் "தந்திரோபாய தவறுகளின்" மீது தொடர்ச்சியான கருத்துக்களை வழங்கி ஊடகங்கள் விடையிறுப்பு காட்டியுள்ளன. எவ்வாறிருப்பினும் அதிகரித்துவரும் பதட்டங்களுக்குப் பின்னால், தந்திரோபாய தவறுகளுக்கும் அதிகமானவை உள்ளடங்கியுள்ளன. சர்வதேச நிதியியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் ஐரோப்பாவில் மையத்திலிருந்து விலகி செல்லும் போக்குகளைப் (centrifugal tendencies) பலப்படுத்தி உள்ளன. மந்தநிலைமை மற்றும் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களின் அழுத்தத்தின் கீழ், அரசாங்கங்கள் அதிகளவில் அவற்றின் தேசிய நலன்களை முதலிடத்தில் வைத்து வருகின்றன. ஐரோப்பா மற்றும் ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் உள்ள ஏறத்தாழ அனைத்து ஆளும் கட்சிகளுக்கு எதிராகவும் ஒரு பாரிய மக்கள் வெறுப்பைக் கண்ட மே மாத ஐரோப்பிய தேர்தல்களின் நிழலில் இந்த யெப்ரெஸ் உச்சிமாநாடு நடைபெறுகிறது. சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர், அதேவேளையில் ஐந்தில் ஒரு பங்கினர் ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிக்கும் அல்லது நிராகரிக்கும் கட்சிகளுக்கு வாக்களித்திருந்தனர். சமூக ஜனநாயகவாதிகளும் மற்றும் ஐரோப்பிய இடதும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்ற நிலைமைகளின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு உணர்வைப் பயன்படுத்தி வலதுசாரி, தேசியவாத கட்சிகளால் ஆதாயமடைய முடிந்தது. இங்கிலாந்தில் UKIPஉம், மற்றும் பிரான்சில், தேசிய முன்னனியும் (National Front) மிக அதிகளவிலான வாக்குகள் பெற்றன. இங்கிலாந்து தன்னைத்தானே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி நிறுத்திக் கொண்ட போதினும், ஒரு வலுவான ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமென்று ஆதரிப்பவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய தாக்குதல்களோடு தேர்தல் முடிவுகளுக்கு பிரதிபலிப்பு காட்டி வருகிறார்கள். இது தான் வருங்காலத்தில் ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையைக் (Stability Pact) கையாள்வதன் மீது எழுந்துள்ள பிரச்சினையின் சாரமாக உள்ளது, அந்த உடன்படிக்கை, யுங்கர் மீதான சர்ச்சைகளோடு சேர்ந்து, அந்த உச்சிமாநாட்டிற்கு முந்தைய நாட்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. சமூக ஜனநாயகவாதிகளான பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டும் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சியும் ஸ்திரப்பாட்டு உடன்படிக்கையின் கடுமையான சிக்கன நடவடிக்கை இலக்குகளை மிகவும் வளைந்துகொடுக்ககூடியதாக்க வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ், யுங்கருக்கு அவர்களின் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். மேர்க்கெலின் மாபெரும் கூட்டணியில் பொருளாதாரத்துறை மந்திரியாக உள்ள ஜேர்மன் சமூக ஜனநாயக்கட்சித் தலைவர் சிக்மார் காப்ரியலின் ஆதரவையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகள் செய்ய இந்த வாரத்தின் தொடக்கத்தில் பாரிசில் கூடிய சமூக ஜனநாயக அரசாங்க தலைவர்களின் கூட்டத்தில் காப்ரியல் பங்கெடுத்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்ட பாரிய சமூக வெட்டுக்களை நிறுத்துவது சமூக ஜனநாயகவாதிகளின் நோக்கமல்ல. அதற்கு நேரெதிராக, தொழிலாளர் சந்தைக்குள் பாரிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த போதிய அவகாசம் வழங்குவதும், அதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்துவதுமே சிக்கன இலக்குகளைத் தளர்த்துவதன் நோக்கமாகும். உலக வங்கி வெளியிட்ட உலகளாவிய போட்டித்தன்மை குறித்த பட்டியலில் 65வது இடத்தில் இருக்கும் இத்தாலியை 15வது இடத்திற்கு கொண்டு வருவதை ரென்சி தனக்குத்தானே இலக்காக வைத்திருக்கிறார். சமூக ஜனநாயக் கட்சியின் சான்சலர் ஹெகார்ட் ஷ்ரோடரால் (1998-2005) அறிமுகப்படுத்தப்பட்டதும் மற்றும் ஜேர்மனியில் ஒரு பெரிய குறைவூதிய துறையை உருவாக்கிய"2010 நிகழ்ச்சிநிரலே" அவரது முன்மாதிரியாக உள்ளது. Süddeutsche Zeitung நாளிதழ் சமூக ஜனநாயகவாதிகளின் திட்டங்களைப் பின்வருமாறு தொகுத்தளித்தது: “வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் மற்றும் கடன்களைக் குறைப்பதற்காக, வேலை நீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்பைத் தளர்த்துவது, கட்டாய சம்பள உயர்வுகளை நீக்குதல் அல்லது மானியங்களைக் குறைப்பது போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களை அரசாங்கங்கள் அவர்களின் பிரஜைகள் மீது திணிக்க தயாராவதற்கு இன்னும் கூடுதலாக அவகாசம் தேவைப்படும்,” என்று எழுதியது. சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர் காப்ரியல் இந்த நிகழ்வுபோக்கை ஒரு எடுத்துக்காட்டோடு சித்தரித்தார்: மலிவு உழைப்பை உருவாக்கியும், 20 பில்லியன் யூரோ வருவாய் இழப்பைக் குறைப்பதன் மூலமாகவும், ஒரு அரசாங்கத்தால் தொழிலாளர் ஊதிய செலவுகளைக் குறைக்க முடியுமென்றால், அந்த தொகையைப் பற்றாக்குறை கணக்கீட்டில் சேர்க்க முடியும் என்று அவர் பாரீசில் தெரிவித்தார். இது பாரிய சமூக எதிர்ப்பைத் தூண்டிவிடுமென்பது ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு நன்றாக தெரியும். அந்த உச்சிமாநாட்டிற்கு முந்தை நாள், பெரிதும் ஊடகங்களால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஐரோப்பிய மந்திரிகள் "ஒருமைப்பாடு சட்டவிதி" (solidarity clause) என்றழைக்கப்படுவதை நடைமுறைப்படுத்துவதற்காக உறுதிமொழி ஏற்றனர், அந்த சட்டம் "மக்கள் மீதோ, சுற்றுச்சூழல் மீதோ அல்லது உடைமைகள் மீதோ கடுமையான தாக்கத்தை" ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளின் போது இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு படைகளை ஐரோப்பா முழுவதிலும் பயன்படுத்த நெறிமுறைகளைக் கொண்டிருக்கிறது. போராட்டங்கள் மற்றும் கலகங்களைக் கட்டுப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும். உக்ரேனுடன் ஒருங்கிணைப்பு உடன்படிக்கையின் (Association Agreement) பொருளாதார பாகத்தில் கையொப்பமிடுவதும் அந்த உச்சமாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறது. இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்தமையே, பாசிசவாதிகளால் முன்னெடுக்கப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்டதுமான முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சிற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு இட்டு சென்றது. உண்மையில் அந்த உச்சிமாநாடு ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அதிகரிப்பது குறித்தும் முடிவெடுப்பதாக இருந்தது. ஆனால் ரஷ்ய ஜனாதிபதியின் ஒரு பின்வாங்கலைத் தொடர்ந்து, இது அனேகமாக நடக்காமல் போகலாம். ஆனால் உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இறுக்கமாக பிணைக்கும் ஒருங்கிணைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதன் மூலமாக அந்த உச்சிமாநாடு, ரஷ்யாவிற்கு எதிரான அதன் ஆக்ரோஷமான தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. |
|