World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German foreign minister Steinmeier woos Ukrainian oligarchs

ஜேர்மன் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மையர் உக்ரேனிய தன்னலக்குழுக்களின் ஆதரவை நாடுகிறார்

By Peter Schwarz 
25 March 2014

Back to screen version

வார இறுதியில் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) கிழக்கு உக்ரேனிலுள்ள டோனெட்ஸ்க்கிற்குப் பயணித்து அந்த தொழில்துறை பெருநகரத்தின் தன்னலக்குழுத் தலைவர்களுக்கு தனது மரியாதையை தெரிவித்தார். அவரை முதலில் வரவேற்றவர் தன்னுடைய கண்ணாடி மாளிகை பெருநிறுவனத் தலைமையகத்தில் இருந்த ரினட் ஆக்மெடோவ் ஆவார். அங்கு ஒருமணி நேரம் நீடித்த தனிப்பட்ட உரையாடலை அவர்கள் மேற்கொண்டனர்.

கிட்டத்தட்ட $18 பில்லியன் சொத்துக்கள் கொண்டுள்ளார் என மதிப்பிடப்பட்டுள்ள ஆக்மெடோவ் உக்ரேனில் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். இவருடைய முதலீட்டு நிறுவனம் SCM System Capital Management கிழக்கு உக்ரேனில் எஃகு, நிலக்கரித் தொழில்களில் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் உணவு போக்குவரத்துத் துறைகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளதுடன், விவசாய வர்த்தகதொழில்களிலும் பங்கு கொண்டுள்ளது. ஆக்மெடோவ் பிராந்திய செய்தி ஊடகத்திலும் செல்வாக்கைக் கொண்டுள்ளார், Shakhtar Donestak என்ற உதைபந்தாட்ட குழுவின் தலைவரும் ஆவார். அதற்கு அவர் பெரும் நிதி ஆதரவு கொடுத்து முக்கிய உக்ரேனிய உதைபந்தாட்ட குழுவாக கட்டியெழுப்பியுள்ளார்.

நீண்ட காலமாக டோன்ட்ஸ்க்கின் தந்தை பெப்ருவரி 22 அன்று பதவியில் இருந்து அகற்றப்பட்ட விக்டர் யானுகோவிச்சிற்கு உற்ற ஆதரவாளராவார். ஆக்மெடோவ் 2004, 2010 தேர்தல்களின் போது யானுகோவிச்சின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு நிதி அளித்தார் உக்ரேனிய பாராளுமன்றத்தில் 2006ல் இருந்து யானுகோவச்சின் Party of Regions என்னும் கட்சியின் பிரதிநிதியாக இருந்தார். ஆனால் அவர் எப்பொழுதும் அனைத்து அரசியல் திசைகளிலும் ஆதரவாளர்களை கொண்டிருந்தார். யானுகோவிச்சின் போட்டியாளர் யூலியா திமோஷெங்கோவும் இந்த பெரும் செல்வம் படைத்த உக்ரேனிய தன்னலக்குழுத் தலைவரின் நிதிய உதவியால் நலன் அடைந்துள்ளார். ஸ்ரைன்மையருடன் டோனெட்ஸ்க்கு Süddeutschen Zeitung பத்திரிகையின் நிருபராக சென்றிருந்த ஸ்ரெபான் பிரவுன் ஆக்டெமோவுடன் பரந்த தனிப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஜேர்மனிய வெளியுறவு மந்திரி மிக மகிழ்ச்சியாக தோன்றுகிறார் என்று எழுதியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இங்கு பொருளாதார அரசியல் செல்வாக்கு உடையவர்கள் ஆதரவு கொடுக்கின்றனரா என்பதை கண்டுபிடிக்க அவர் இங்கு வந்துள்ளார் என்று பிரவுன் வெளியுறவு மந்திரி பற்றி எழுதியுள்ளார். இப்பொழுது, ஆக்மெடோவுடன் பேச்சுக்களுக்குப்பின் அவர், ‘அங்கு ஒரு புதிய உக்ரேன் இருக்கும் என்பது ஏற்கப்பட்டுள்ளது. என்ற கருத்தைக் கொண்டுள்ளார்.

ஸ்ரைன்மையரின் கருத்து அவருடைய கொள்கையை பற்றிய பெரும் குற்றச்சாட்டாகும். பல வாரங்களாக அவர் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளிடமும் செய்தி ஊடகத்திடமும் உக்ரேனில் ஒரு ஜனநாயக மாற்றம் நிகழ்ந்துவிட்டது, மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் கொண்டுள்ள ஒரு புதிய அரசாங்கக்தை அதிகாரத்திற்கு கொண்டுவந்துவிட்டது என்று கூறிவந்தார். இப்பொழுது ஜேர்மனிய வெளியுறவு மந்திரி தன்னலக்குழுக்கள் பொருளாதார, அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறுகிறார். அவர்களுடைய ஆதரவு அவருக்கு தாம் முனையும் நாட்டின் மாற்றங்களை முற்றுப்பெற செய்ய தேவை என்கிறார்.

ஸ்ரைன்மையர் ஆக்மெடோவிடம் இந்த மாற்றங்கள் அவருடைய நலனுக்குத்தான் என்று நம்பவைத்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை.

ஜேர்மனி, அமெரிக்கா இன்னும பல ஐரோப்பிய நாடுகளால் ஆதரவழிக்கப்பட்ட கியேவ் ஆட்சிசதிக்கான இலக்கு ஒருபொழுதும் ஜனநாயகத்திற்கானதோ அல்லது சுதந்திரத்திற்கானதோ அல்ல. மாறாக மூலப்பொருட்களும் மற்றும் உக்ரேனிய குறைவூதியத் தொழிலாளர் பிரிவினரை மேற்கு நிறுவனங்களால் சுரண்டப்படுவதற்கும் மற்றும் ரஷ்யாவின் இழப்பில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நிலப்பரப்பில் ஏகாதிபத்திய சக்திகள் ஊடுருவுதலும் ஆகும். இந்த இலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வழிவகைகளான புதிய அரசாங்கத்திற்கான எவ்வித எதிர்ப்பையும் அச்சுறுத்தும் ஸ்வோபோடா, Right Sector என்னும் பாசிசவாதிகளுடன் வெளிப்படையாக ஒத்துழைத்தல் என்பதுடன் ஒத்துள்ளது.

ஆக்மெடோவ் மனவுளைச்சல் எதுவும் இல்லாமல் அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை கொள்ளையடித்த தன்னலவாதிகளின் ஒட்டுண்ணி குழுவின் உயிர்வாழும் பிரதிநிதியாவார். இக்குழுக்கள் பெரும் சொத்துக்களை சேகரித்து, தங்கள் சொத்துக்களின் பெரும்பகுதியை பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரித்தானியத் தலைநகரான லண்டனில் இதுவரை விற்கப்பட்ட  156 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான  மிக அதிக விலை உடைய தனியார் வீட்டை வாங்கியபோது செய்திகளின் தலையங்கங்களில் குறிப்பிடப்பட்டார்.

கையில் தொப்பியுடன் டோனேட்ஸ்க்கிற்கு ஸ்ரைன்மையரின் விஜயத்தின் நோக்கம் டோனேட்ஸ்க்கின் தந்தைக்கும் அனைத்து உக்ரேனிய தன்னலக்குழு தலைவர்களுக்கும் அவர்களுடைய சட்டவிரோதமான சொத்துக்களை ஏகாதிபத்தியம் எடுத்துக் கொள்ளும் எத்தகைய ஆபத்தும் இல்லை என்று உத்தரவாதம் கொடுப்பதற்கும் அவர்கள் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தை தொடரந்து சுரண்டலாம் என்றும் உறுதியளிக்கத்தான்.

ஆக்மெடோவைச் சந்தித்தபின ஸ்ரைன்மையர் மற்றொரு டோனேட்ஸ்க் தன்னலக்குழுத் தலைவரும் டான்பாஸ் பிராந்தியத்தின் புதிய ஆளுனரான சேர்ஜி டாருடாவைச் சந்தித்தார். இந்த வருகை ஆயிரக்கணக்கான ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுனர் மாளிகையை அடைவதைத் தடைக்கு உட்படுத்தியதால் கிட்டத்தட்ட நிறைவேறாது போகவிருந்தது.

ஆக்மெடோவைப் போல் டாருடாவும் உக்ரேனிய எஃகுத் தொழிலில் பல பகுதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார். மேலும் அவர் போலந்தில் டன்ஸ்க் நகரில் இருந்த முன்னாள் லெனின் கப்பல்கட்டும் தளத்தையும், போலந்திலும் ஹங்கேரியிலும் இரு எஃகு ஆலைகளை வாங்கியுள்ளார். $660 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள சொத்தைக் கொண்ட இவர் செல்வம் படைத்த உக்ரேனியர்களில் ஆக்மெடோவிற்கு மிகவும் கீழே 55வது இடத்தில்தான் உள்ளார்.

டாருடா தன் பதவிக்கு எத்தகைய ஜனநாயகத் தேர்தலை ஒத்த முறையையும் நம்பியிருக்கவில்லை; செல்வாக்கான பதவிகளுக்கு (தேர்ந்தெடுக்கப்படாத) புதிய உக்ரேனிய ஜனாதிபதி ஒலெக்சாந்தர் துர்ஷினோவால் உயர்த்தப்பட்டார்.

தன்னுடைய தாய்நகரமான Dnipropetrovsk  இல் துர்ஷினோவ் ஒரு தன்னலக்குழுத்தலைவரை ஆளுனராக நியமித்துள்ளார்: தன்னுடைய செல்வத்தை எண்ணெய், இரும்பு, உணவுத்துறையில் ஈட்டிய ஈஹோர் கோலோமோஜெஸ்கை மூன்றாவது பெரும் செல்வம் படைத்த உக்ரேனியர் என்ற தகுதியில் $2.4 பில்லியனுடன் உள்ளார். இவர் விட்டாலி கிளிட்ஷ்கோவிற்கு நன்கொடை கொடுப்பவராவார். ஸ்ரைன்மையர் அவரைப் பார்க்கவில்லை, ஒருவேளை நேரம் இல்லாததால் போலும்.

மாறாக அவர் தன்னுடைய மரியாதையை கியேவில் உள்ள செர்கே டிஹிப்கோவிற்கு ($370 மில்லியன் சொத்துடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது) வழங்கினார். இந்த Dnipropertrovsk வில் உள்ள தன்னலக்குழுக்காரர் வங்கித்துறையில் பணத்தை ஈட்டி பின்னர் 1990களில் இருந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏனைய பதவிகளுடன் அவர் தேசிய வங்கித் தலைவராகவும் பொருளாதார மந்திரியாகவும் இருந்துள்ளார். 2010ல் அவர் ஜனாதிபதி தேர்தலில் பங்கு பெற்றுத் தோற்றார். மார்ச் 2010 முதல் பெப்ருவரி 2014 வரை அவர் உக்ரேனின் துணைப் பிரதம மந்திரியாக இருந்தார். மே மாதம் அவர் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டால், அவர் ஐரோப்பிய ஆதரவை எதிர்பார்க்கலாம்.