World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Ukrainian regime rehabilitates Nazi collaborationists, bans communism

உக்ரேனிய ஆட்சி நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு மறுவாழ்வளிக்கிறது, கம்யூனிசத்திற்கு தடைவிதிக்கிறது

By Alex Lantier and Stefan Steinberg
16 April 2015

Back to screen version

இரண்டாம் உலக போரின் போது இனரீதியிலான பாரிய படுகொலைகளை நடத்திய நாஜி ஒத்துழைப்புவாத படைகளுக்கு மறுவாழ்வளிக்கும், அதேவேளையில் ஒரு முன்னாள் சோவியத் குடியரசான உக்ரேனில் அனைத்து கம்யூனிச அடையாளங்களுக்கும் தடைவிதிக்கும் சட்டங்களை நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சி, ஏப்ரல் 9 அன்று நிறைவேற்றியது.

உக்ரேனிய சுதந்திரத்திற்கான 20ஆம் நூற்றாண்டு போராளிகளின் நினைவாக மற்றும் சட்டபூர்வ கௌரவத்திற்காக" என்று தலைப்பிட்ட அந்த சட்டம், உக்ரேனிய தேசியவாதிகளின் நாஜி-ஒத்துழைப்புவாத அமைப்பு (Organization of Ukrainian Nationalists - OUN) மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (Ukrainian Insurgent Army - UPA) உட்பட டஜன் கணக்கான தேசியவாத குழுக்களை அதிகாரபூர்வமாக சட்டபூர்வமாக்குகிறது. இத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூக நல உதவிகளை வழங்குமாறு அது மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு கட்டளையிடுகிறது.

உக்ரேனிய சுதந்திரத்தை மீட்டமைப்பதில் OUN-UPA இன் பாத்திரத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுவது சட்டவிரோதமாகும்,” என்று குறிப்பிட்டு, இப்பட்டியலில் உள்ள அமைப்புகள் மீதான எவ்வித பகிரங்க விமர்சனத்தையும் அச்சட்டம், ஒரு குற்றகரமான அவமதிப்பாக்குகிறது.

அதேபோல "உக்ரேனிய பாதுகாவலர் தினத்தை" பெப்ரவரி 23 இல் இருந்து அக்டோபர் 14க்கு சட்டபூர்வமாக மாற்றுவதற்கும் கியேவ் ஆட்சி ஒப்புதல் வழங்கியது. பெப்ரவரி 23 விடுமுறை, அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் செம்படையின் ஸ்தாபகத்தைக் குறிக்கும் ஒரு சோவியத் விடுமுறையிலிருந்து தோன்றியதாகும்அப்போதுதான் அது முதலாளித்துவத்தை மீட்டமைக்க முயன்ற ஏகாதிபத்திய சக்திகள் தலைமையிலான இராணுவ தலையீட்டுக்கு எதிராக போராடி, அதில் சோவியத் ஒன்றியமாக மாறியது. மறுபுறம், இந்த புதிய விடுமுறை நாள், UPA இன் ஸ்தாபக நாளாக கருதப்படுவதைக் குறிக்கிறது.

இரண்டாம் உலக போரில் நாஜி ஜேர்மனி மீது சோவியத் ஒன்றிய வெற்றியின் 70ஆம் ஆண்டு நினைவுதின விழாவான மே 9க்கு முன்னதாக, உக்ரேனின் "கம்யூனிசமயத்தை கலைப்பதற்கு" (de-communization) தயாரிப்பு செய்வதாக நீதித்துறை மந்திரி பாவெல் பெட்ரென்கோவின் சூளுரைக்கு ஒத்த வகையில், உக்ரேனில் உள்ள அனைத்து கம்யூனிச அடையாளங்களுக்கும் தடை விதித்தும் ஏப்ரல் 9 அன்று ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த வாரம் தேசிய தொலைக்காட்சியில் அந்த நடவடிக்கைகளைக் குறித்து அறிவிக்கையில், பெட்ரென்கோ கம்யூனிசத்தின் பகிரங்கமான அடையாளங்களை தடுப்பதை "நாம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருக்க வேண்டும்" என்றார்.

இறுதியாக 274-0 என்ற வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட அந்த கம்யூனிச-எதிர்ப்பு சட்டம், கம்யூனிச மற்றும் நாஜி ஆட்சிகள் இரண்டையும் "அச்சட்டத்தின் கீழ் குற்றகரமாக" அறிவிப்பதுடன், அவற்றிற்கு ஆதரவான பிரச்சாரத்திற்கும் மற்றும் பொதுவிடத்தில் உள்ள சின்னங்கள் அனைத்திற்கும் தடைவிதிக்கிறது. சோவியத்தினது அதிகாரிகள், இராணுவ வெற்றிகள் அல்லது கலாச்சார நிகழ்வுகளைக் குறிக்கின்ற, இரண்டாம் உலக போரின் போது சேவையில் இருந்த இராணுவ ஒப்பனைகளையும் மற்றும் கூற முடியாதளவிற்கு ஆயிரக் கணக்கான தெரு பெயர்கள், சிலைகள், பொது கலைக்கூடங்களையும் அச்சட்டம் குற்றத்திற்குரியதாக்குகிறது.

கம்யூனிசத்தை ஆதரிப்பதாக குற்றஞ்சாட்டப்படும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுமென அது கட்டளையிடுகிறது. “அதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது, மற்றும் உக்ரேனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை நீக்க வேண்டுமென்பதே" அதன் நோக்கமென அது அறிவிக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் சுத்தியல்-கதிர் அரிவாள் சின்னம் மற்றும் நாஜி ஸ்வாஸ்திகா சின்னம் இரண்டுமே அந்த கம்யூனிசமய-கலைப்பு சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை என்று உக்ரேனிய அதிகாரிகள் எரிச்சலூட்டும் விதத்தில் குறிப்பிட்டனர். ஆனால் உக்ரேனிய சட்டவரைவின் இலக்கு தெளிவாக பாசிசம் அல்ல, மாறாக சோசலிசமும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மரபியமும் ஆகும்.

Right Sector அல்லது Aidar போராளிகள் குழு அல்லது ஸ்வோபோடா கட்சி போன்ற கியேவ் ஆட்சியை ஆதரிக்கும் பாசிசவாத குழுக்களை ஸ்வாஸ்திகா மீதான இந்த தடை அசௌகரியப்படுத்தாதுஅவற்றில் பல ஸ்வாஸ்திகாவிற்கு பதிலாக ஓநாயின் முகம் அல்லது ஏனைய குறைந்தளவில் அப்பட்டமான பாசிச சின்னங்களை நாஜி-ஆதரவு மாற்று சின்னங்களாக தேந்தெடுத்துள்ளன. உண்மையில் ஸ்வாஸ்திகா சின்னங்களை பயன்படுத்துவதிலிருந்து இந்த குழுக்களைத் தடுப்பதே கூட, அதன் அரசியல் நிறத்தை சர்வதேச அளவில் தொழிலாளர்களிடமிருந்து மறைக்க கியேவ் ஆட்சிக்கு உதவுகிறது.

சட்டரீதியில் தடை செய்வதற்கு உக்ரேனிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (KPU) ஏற்கனவே இலக்கில் வைக்கப்பட்டிருந்தது, அதன் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கன்னை, பரந்த சமூக எதிர்ப்பை அது தூண்டிவிடுமென எச்சரித்து, அச்சட்டத்திற்கு எதிராக ஆற்றலின்றி போராடியது. “ஒரு போர் வீரர் அவரது இரத்தத்தை சிந்திப் பெற்ற சிவப்பு நட்சத்திர அந்தஸ்தை அணிவதற்கு இப்போது தடை விதிக்கப்படுகிறது. இவையனைத்தும் இன்னும் பெரிய சமூக உடைவுக்கும், போர் தொடர்வதற்கும் மட்டுமே இட்டுச் செல்கின்றன,” என்று KPU தலைவர் Pyotr Simonenko அறிவித்தார்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் Right Sector தலைமையிலான ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு மூலமாக கியேவ் ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த வாஷிங்டன் மற்றும் பேர்லின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் மற்றும் கியேவ் ஆட்சியின் குற்றகரமான பாத்திரத்தை, இத்தகைய வெறுக்கத்தக்க சட்டப்பேரவை நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. அதன்பின்னர் நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் கியேவ் அரசாங்கம், பெரிதும் ரஷ்ய-சார்பிலான கிழக்கு உக்ரேனை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்தது, அது இப்போது நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே முழுமையான போராக தீவிரமடைய அச்சுறுத்துகிறது.

கிழக்கில் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளிடம் ஏற்பட்ட அதன் சமீபத்திய தோல்விக்கு உக்ரேனும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும், இன்னும் மேலதிகமாக பாசிச படைகள் மீது சார்ந்திருப்பதன் மூலம் விடையிறுக்கின்றனர். சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும், அனைத்திற்கும் மேலாக, வரைவு உத்தரவுகளுக்கும் எதிராக உக்ரேன் முழுவதிலும் தொழிலாளர் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்பைக் குறித்து அது அஞ்சுகிறது. மேற்கில் அந்த வரைவிற்கான பரந்த எதிர்ப்புக்கு இடையிலும், உக்ரேனிய ஆயுத படைகளின் ஒரு கூட்டாளியாக Right Sector போராளிகள் குழுவிற்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது, இதைத்தான் வாஷிங்டனும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ரஷ்ய-ஆதரவு படைகளுக்கு எதிராக ஆயுதமேந்தச் செய்து பயிற்சி அளிக்க திட்டமிடுகின்றன.

கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பின் போது பாசிச தலையீடுகள் குறித்த செய்திகளை ரஷ்ய பிரச்சாரமாக ஒதுக்கிவிட முயன்ற மேற்கத்திய ஊடகங்களின் முயற்சியையும் இச்சட்டங்கள் நிறைவேற்றம் அம்பலப்படுத்துகிறது. கியேவ் ஆட்சியில் பாசிச தலையீடு குறித்த வாதங்கள், “வெற்றுதனமானவையாக" (நியூ யோர்க் டைம்ஸ்), “ஒரு பகட்டு" (தி கார்டியன்), அல்லது "பெரும் பொய்" (Le Monde) என்றாக தாக்கப்பட்டன. ஆனால் இப்போதோ கியேவ் ஆட்சியே அதன் பாசிச அனுதாபங்களை எடுத்துக்காட்டி வருகிறது.

கியேவ் மறுவாழ்வளித்துவரும் இந்த படைகள், ஐரோப்பிய பாசிசத்தின் மிக கொடூரமான குற்றங்களை நடத்துவதில், அதாவது 6 மில்லியனுக்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலை மற்றும் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பு ஆகியவற்றில், நேரடியாக உடந்தையாக இருந்துள்ளன.

உக்ரேனிய சுதந்திரத்திற்கு போராடும் ஒரு கம்யூனிச-விரோத அமைப்பாக 1929 இல் OUN ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டாம் உலக போரின் போது அதன் மிகப்பெரிய கன்னையின் தலைவர், ஸ்டீபன் பண்டேரா, ஏனைய எல்லா தேசிய இனங்களையும் இனரீதியில் துடைத்தழித்த ஒரு சுதந்திர உக்ரேனுக்காக போராடினார்.

1941 இல் சோவியத் ஒன்றியத்தின் நாஜி படையெடுப்புக்கு பின்னர், 1942 இல் வோல்ஹ்னியா பிராந்தியத்தில் 200,000 யூதர்களின் நாஜி படுகொலைக்கு உதவியதுடன், OUN, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சண்டையிட நாஜி ஜேர்மன் இராணுவத்திற்கு (Wehrmacht) தன்னைத்தானே ஒரு துணைப்படையாக வழங்க முன்வந்தது. அது 60,000 இல் இருந்து 100,000 வரையிலான போலாந்தியரை படுகொலை செய்து, 1943 இல் போலாந்து கிராமங்களான வோஹ்னியா மற்றும் கலிசியாவிற்கு எதிராக அதன் சொந்த பாரிய படுகொலை நடவடிக்கையை தொடங்கியது. உக்ரேனில் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக சண்டையிட்ட சோவியத்-ஆதரவு கிளர்ச்சியாளர்களையும் அது தாக்கியது.

நாஜிக்களின் சோவியத் தோல்வி மற்றும் இரண்டாம் உலக போர் முடிவுக்குப் பின்னர், சோவியத் ஒன்றியத்தை இலக்கில் வைத்து இரகசிய நடவடிக்கைகளை நடத்துவதற்கு OUN உடன் சிஐஏ உறவுகளை ஸ்தாபித்தது.

இத்தகைய பாசிச குற்றவாளிகளின் வழிதோன்றல்கள் தான் இப்போது, ரஷ்யாவிற்கு எதிராக போரை தீவிரப்படுத்தவும் மற்றும் பரந்த உள்நாட்டு எதிர்ப்பை பீதியூட்டவும், கியேவின் மக்கள்விரோத ஆட்சியை ஸ்திரப்படுத்தும் ஒரு முயற்சியில் ஒன்றுதிரட்டப்பட்டு வருகின்றனர். OUNக்கு மறுவாழ்வளிக்கும் இச்சட்டம், Radical கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் யூரி சுஹிவ்ச் ஆல் வரையப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இவரது தந்தை ரோமன், நாஜி கட்டளைகளின் கீழ் செயல்பட்டு வந்த OUN உடன் தொடர்புபட்ட நைட்டிங்கேல் இராணுவ துணைப்படைக்கு (Bataillon Ukrainische Gruppe Nachtigall) தலைமை வகித்தவராவார்.

உக்ரேனின் சோவியத் கடந்தகாலம் மற்றும் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் அனைத்து குறிப்புகளுக்கும் தடை விதிக்கும் அதன் வலியுறுத்தலும் மற்றும் மே 9 விடுமுறை குறித்த அரசாங்கத்தின் அச்சமும், அதன் கொள்கைகள் பாரியளவில் மக்களிடையே மதிப்பிழந்துள்ளன என்பதைக் குறித்து அது நன்கறிந்துள்ளது என்பதையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வெடிப்பார்ந்த வடிவத்தை எடுக்கக்கூடும் என்ற அதன் கவலைகளையும் பிரதிபலிக்கிறது. நிலையான பாசிச-ஆதரவு பிரச்சாரத்திற்கு இடையிலும், கடந்த ஆண்டு சட்டபேரவை தேர்தல்களில் நாஜி-ஆதரவு படைகள் வெகு குறைவான ஆதரவையே பெற்றன. அவற்றில் ஸ்வோபோடா 4.71 சதவீதமும் மற்றும் Right Sector 1.8 சதவீதமும் பெற்றன.

உக்ரேனில் பாசிசத்திற்கான மறுவாழ்வு என்பது கியேவ் ஆட்சி மற்றும் அதன் ஏகாதிபத்திய மேல்நிலக்கிழார்களால் மேலிருந்து உந்தப்படுகிறது என்பதையே இது அடிக்கோடிடுகிறது.