World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் European Union, banks ramp up pressure on Greece’s Syriza government கிரீஸின் சிரிசா அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியமும் வங்கிகளும் அழுத்தத்தை அதிகரிக்கின்றன
By Stéphane
Hugues ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளிடமிருந்து அதிகரித்துவரும் அழுத்தித்திற்கு, கிரீஸின் நிதி வளங்களை கொள்ளையடிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மேற்கொண்டும் சிக்கன நடவடிக்கைகளைத் தயார் செய்வதன் மூலமாக, கிரீஸின் சிரிசா அரசாங்கம் விடையிறுப்பு காட்டி வருகிறது. கடன் பெறுவதற்கான அந்தஸ்தை பட்டியலிடும் அமெரிக்க நிறுவனம் ஸ்டாண்டர்டு அண்டு புவர்'ஸ், அந்த அரசாங்கத்தின் "நிச்சயமற்ற பொறுப்புறுதிகளை" காரணங்காட்டி, கிரேக்க அரசாங்கத்தின் கடன்பெறுவதற்கான அந்தஸ்தை B- இல் இருந்து CCC+ க்கு, அதாவது மதிப்பற்ற அந்தஸ்திற்கு, மீண்டும் மதிப்பிறக்கம் செய்தது. “ஆழ்ந்த பொருளாதார சீர்திருத்தம் அல்லது முன்னேற்றகரமான மீட்சி" ஆகிய வழிகளில் மட்டுமே ஏதென்ஸ் அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய முடியுமென அது தெரிவித்தது. முன்மதிப்பீட்டை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு 0.8 சதவீதம் அதிகமாக, 2014 பற்றாக்குறை, கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதத்தில் இருப்பதாக கிரீஸின் புள்ளிவிபர ஆணையம் தெரிவித்தது. இந்த பற்றாக்குறையே கிரீஸின் தேங்கி கிடக்கும் பொதுக் கடனைச் செப்பனிடுவதற்குரிய செலவின் காரணமாக வந்தது, அது இல்லையென்றால் அந்நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் வரவுசெலவு திட்டக்கணக்கு உபரியைக் கொண்டிருக்கும். கிரீஸ் மீதான பொருளாதார பார்வை, அதன் கடன்வழங்குனர்களுடன் அது ஓர் அரசியல் ஏற்பாட்டை எட்டுவதைச் சார்ந்திருப்பதாக ஸ்டாண்டர்ட் அண்டு புவர்'ஸ் தெரிவித்தது: “எங்களது பார்வையில், ஏறத்தாழ மூன்று மாதகாலத்திற்கு முந்தைய கிரேக்க அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் உத்தியோகப்பூர்வ கடன் வழங்குனர்களுக்கும் இடையே நிலவும் நீண்டகால பேரம்பேசல்களிலிருந்து எழுந்துள்ள நிச்சயமற்றதன்மையே, இந்த நிலைமைகளை மோசமடைய செய்துள்ளன.” ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுக்குக் கடனைத் திரும்ப செலுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதே சிரிசாவின் விடையிறுப்பாக உள்ளது. கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு பணம் பெறுவதற்காக, அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை அது சமீபத்திய வாரங்களில் பலவந்தப்படுத்தி வந்துள்ளது. ஓய்வூதிய பணத்தை வழங்குமாறு அரசு ஓய்வூதிய நிதியங்களை அது நிர்பந்தித்துள்ளதுடன், நோயாளிகளின் மருத்துவ செலவிற்கு செலவிட ஒதுக்கப்பட்ட நிதிகளை மருத்துவமனைகளிடமிருந்து எடுத்துள்ளது, இதன் விளைவாக அந்த அரசாங்கமே, கிரேக்க மக்களை விலையாக கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்காக பணவசூல் செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. இப்போது அது அனைத்து அரசு அமைப்புகளது மொத்த பணக் கையிருப்புகளையும் திறந்துவிடுவதற்கு ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளது. ஒரு 1951ஆம் ஆண்டு சட்டத்தின்படி, பணக் கையிருப்பு கொண்ட எல்லா அரசு அமைப்புகளையும் அந்நாட்டின் மத்திய வங்கியான கிரேக்க வங்கியின் கீழ் நிறுத்த அரசாங்கத்தால் கட்டாயப்படுத்த முடியும்—இது அதன் கடன் வழங்குனர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்த 3 பில்லியன் யூரோ வரை நிதிகளை அணுகுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கிறது. ஆனால் திருப்பி செலுத்த வேண்டிய கடன்களாக ஏதென்ஸ் 300 பில்லியன் யூரோவிற்கும் கூடுதலான தொகையை முகங்கொடுத்திருக்கையில், தெளிவாக இதுவொரு இடைக்கால தடுப்பு நடவடிக்கையாக மட்டுமே அமைகிறது. ஓர் உடன்படிக்கை இறுதியாக எட்டப்படும் வரையில், ஓர் உடன்படிக்கையை எட்டுவதில் "ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களின்" தாமதங்களையோ ஏதென்ஸால் இப்போது தாக்குபிடிக்க இயலுமென புதனன்று கிரேக்க வெளியுறவுத்துறை மந்திரி அலேகோஸ் ஃப்லாபொராரிஸ் தெரிவித்தார். சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேரம்பேச முடியுமென ஜனவரி தேர்தல்களுக்கு முன்னர் அது ஊக்குவித்த பிரமைகளை, சிரிசாவின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. ஆனால் பதவியேற்ற ஒருசில வாரங்களிலேயே சிரிசாவின் தலைவரும் கிரேக்க பிரதம மந்திரியுமான சிப்ராஸ், கடன்களைத் தொடர்ந்து திருப்பி செலுத்துவது மட்டுமல்ல மாறாக மக்கள் மீது ஆழ்ந்த தாக்குதல்களையும் தொடுக்க வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையீடுகளை ஏற்றுக்கொண்டு, முற்றிலுமாக அதன் தேர்தல் வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்தார். எவ்வாறிருந்த போதினும், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கையுடன் அது பொதுவான உடன்படுவதாக குறிப்பிட்ட சிரிசாவின் ஓர் அறிக்கையோடு, ஜேர்மனி தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் திருப்திப்படவில்லை. சிரிசா எதை வெட்ட நோக்கம் கொண்டுள்ளது மற்றும் கிரேக்க தொழிலாளர்களிடமிருந்து எத்தனை நூறு பில்லியன் யூரோக்களைப் பறிக்கும் என்பதை துல்லியமாக குறிப்பிட்டு, மேலதிகமான சிக்கன நடவடிக்கைகளுக்குரிய விரிவான திட்டங்களை அவை கோரி வருகின்றன. அப்போதிருந்து, சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் கருத்துவேறுபாடுகளைத் தீர்க்கவும் மற்றும் தொழிலாளர் மீதான தாக்குதலுக்கும் முயன்று வருகின்ற நிலையில், பேரம்பேசல்கள் மூடிய கதவுக்குப் பின்னால் இழுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மீதான ஓர் உடன்படிக்கைக்கு அழுத்தம் அளித்து வருகின்ற போதினும், ஜேர்மன் நிதி மந்திரி வொல்ஃப்காங் ஷ்யொய்பிள ஓர் உடன்படிக்கைக்கு ஃப்ளாம்புராரிஸை விட அதிக கால வரம்பைக் குறிப்பிட்டார். “ஜூன் இறுதிக்குள் கிரீஸ் ஓர் உடன்பாட்டிற்கு வர வேண்டியுள்ளது,” என்று அவர் புளூம்பேர்க் செய்திகளுக்குத் தெரிவித்தார். இதன்மூலம், கிரீஸின் யானிஸ் வாரௌஃபாகிஸ் உட்பட யூரோ மண்டல நாடுகளின் அனைத்து 19 நிதியியல் மந்திரிகளும் ஏப்ரல் 24 அன்று லாட்வியா தலைநகர் ரிகாவில் ஒன்றுகூடும் போது, சிரிசா உடன் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் ஏற்பாட்டை எட்டுமென்ற எதிர்பார்ப்புகளை அவர் கலைத்துவிட்டார். கிரீஸ், யூரோ மண்டலம் மற்றும் நேட்டோ இராணுவ கூட்டணிகள் மீது வெளியுறவு கொள்கை வட்டாரங்களில் காணக்கூடிய வகையில் நடந்துவரும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, ஐரோப்பிய ஒன்றிய தாக்குதலுக்கு முன்னிலை வகித்துவரும் ஷ்யொய்பிள, அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். “பெரும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு திட்டத்தின் மீது நாங்கள் எவ்வாறு உடன்பாடு எட்டப்போகிறோம் என்பது குறித்து யாருக்கும் ஒரு துணுக்கும் தெரியாது,” இது நியூ யோர்க்கில் வெளியுறவுகளுக்கான கவுன்சிலில் ஷ்யொய்பிள தெரிவித்ததாகும். கடந்த ஆண்டுகளின் அனைத்து பொருளாதார சாதனைகளையும் புதிய கிரேக்க அரசாங்கம் அழித்துவிட்டது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். ஓர் உடன்படிக்கை ரிகாவில் மட்டுமல்ல, மாறாக வரவிருக்கும் வாரங்களில் கூட அனேகமாக சாத்தியமாகாது என்று தெரிவித்த அவர், ஒரு கிரேக்க திவால்நிலையை யூரோ மண்டலம் தவிர்க்க விரும்புகிறது என்றாலும் கூட, யூரோ மண்டலத்தால் கிரீஸின் திவால்நிலையைக் கையாள முடியுமென அறிவுறுத்தியதுடன், கிரேக்க நாடகத்தின் எல்லா சாத்தியமான விளைவுகளுக்கும் சந்தைகள் "விலை நிர்ணயித்துள்ளன" என்று குறிப்பிட்டார். ஒரு கிரேக்க திவால்நிலைமை ஐரோப்பிய மண்டலத்தின் ஏனைய அரசுகளுக்கும் பரவுமோ என்ற நிதியியல் பீதி அபாயம் எதுவும் அங்கே இல்லையென அவர் உவகையோடு எடுத்துரைத்தார். ஜேர்மன் அதிகாரிகள் ஒரு கிரேக்க திவால்நிலைக்கான சாத்தியக்கூறை பரிசீலித்து வருகிறார்கள் என்பதற்கு மற்றொரு அறிகுறியாக, ஜேர்மன் வாரயிதழ் Die Zeit குறிப்பிடுகையில், கடன் வழங்குனர்களுக்கு பணத்தைத் திருப்பித்தர கிரீஸ் தவறினாலும் கூட ஐரோப்பிய மத்திய வங்கியிடமிருந்து கிரீஸ் நிதியுதவிகளைப் பெறுவதை அனுமதிக்கும் ஒரு திட்டத்தின் மீது பேர்லின் வேலை செய்து வருவதாக எழுதியது. “கிரீஸ் திவால்நிலையை அடையும் ஒரு சம்பவத்தில் அதற்கு தொடர்ந்து நிதியுதவி வழங்குவதற்கு ஐரோப்பிய மத்திய வங்கியை அனுமதிப்பதே, விவாதத்தின் கீழ் உள்ள இந்த திட்டத்தின் நோக்கமாகும்,” என்று Zeit கட்டுரை குறிப்பிட்டது. “இதற்கு கூடுதலாக, ஒரு அரசு திவால்நிலைமைக்குப் பின்னரே கூட, மத்திய வங்கி நடவடிக்கைகளில் தொடர்ந்து கிரேக்க வங்கிகள் பங்கெடுக்க அனுமதிக்கும் வகையில், அவை மறுசீரமைப்பு செய்யப்படும்,” என்று குறிப்பிட்டது. பகுப்பாய்வின் இறுதியாக, தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு கொள்ளையடிப்பது என்பது தான் வெவ்வேறு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களுக்கு இடையே இருக்கும் கருத்துவேறுபாடுகளாக உள்ளன. கிரேக்க அரசு திவால்நிலைமையில் நிறுத்தப்பட்டால், 2009 இல் இருந்து ஆறு ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளில் கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது என்ன திணிக்கப்பட்டதோ அதையும் கடந்து, அதன் கடன் வழங்குனர்கள் கிரேக்க சமூக செலவினங்கள் மற்றும் அரசு வரவு-செலவு திட்டங்களில் புதிய, மூர்க்கமான வெட்டுக்களை வலியுறுத்துவார்கள். சிரிசா மேலும் மேலும் புதிய சிக்கன வெட்டுக்களை நடத்துகின்ற நிலையில், இவை ஏற்கனவே பெரும் தனியார்மயமாக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்திற்குள் சமூக வெடிப்புகளை உண்டாக்கும். தங்களின் வேலைகளை இழப்பதற்கு எதிராக 4,000 தங்கச்சுரங்க தொழிலாளர்கள் நேற்று ஏதென்ஸில், ஆக்கபூர்வ மறுகட்டுமானம், சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழல் கவலைகளைக் காரணங்காட்டி வடக்கு கிரீஸின் Skouries இல் ஹெல்லஸ் தங்கச்சுரங்க செயல்பாட்டு வேலைகளை நிறுத்தும் அதன் நோக்கத்தை கிரேக்க அரசாங்கம் வெளியிட்டிருந்தது. சமூகப் போராட்டங்களை எதிர்கொள்ளுகையில் பொலிஸ் நடவடிக்கைகளை பிரயோகிக்க, சூளுரைகள் மற்றும் அச்சுறுத்தல்களை சிரிசா அதிகரித்து வருகிறது. தற்போது அது, ஒரு அராஜகவாத குழுவால் தலைமை கொடுக்கப்படும் ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆக்கிரமிப்பைப் பலவந்தமாக நசுக்குவதற்கு அச்சுறுத்தி வருகிறது. “நாம் செனட்டைக் கைப்பற்றும் கடைசி மணித்துளிகளில் உள்ளோம்,” என்று குடிமக்கள் பாதுகாப்பு துணை மந்திரி யென்னிஸ் பனௌசிஸ் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். கலக தடுப்பு பொலிஸை அனுப்புவதற்கு பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸிடமிருந்து "அனுமதி சமிக்ஞை" பெற்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். |
|