World Socialist Web Site www.wsws.org |
The political bankruptcy of Syriza Left Platform சிரிசாவின் இடது அரங்கத்தின் அரசியல் திவால்நிலைமை
Alex Lantier வியாழனன்று கிரீஸின் ஆளும் சிரிசா கட்சியின் (தீவிர இடது கூட்டணி) மத்திய குழு, கூடுதல் சிக்கன நடவடிக்கை மீது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸிற்கு அனுமதி அளித்தது. பிணையெடுப்பு மீதான பேரம்பேசல்களை முன்னரே முடிவெடுக்க வேண்டியிருந்ததால், கிரீஸிற்கான 86 பில்லியன் யூரோ மண்டல பிணையெடுப்பு மீதான விவாதத்தை செப்டம்பரில் நடைபெற உள்ள சிரிசா கட்சி மாநாடு வரையில் தள்ளிப்போட்டது. மத்திய குழுவின் தீர்மானம் சிரிசாவின் இடது அரங்கம் (Left Platform) போன்ற சக்திகளது திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது, அது கொந்தளித்துக் கொண்டிருக்கும் மக்களின் அதிருப்தியை சிரிசாவின் அரசியல் ஆதரவு வட்டத்திற்குள் தணிக்க முனைகிறது. ஜூலை 5 இல் சிக்கன நடவடிக்கை "வேண்டாமென்ற" பெரும்பான்மை வாக்குகளை உதறித்தள்ளி, ஜூலை 13 இல் பத்து பில்லியன் கணக்கான புதிய வெட்டுகளுக்கு சிப்ராஸ் ஒப்புக்கொண்ட பின்னரும் கூட, சிரிசாவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற அங்கத்தவர்கள் வெட்டுக்களுக்காக வாக்களித்த பின்னரும் கூட, சிரிசாவின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுமாறு அதற்கு முறையிடுவதே முன்னோக்கிய பாதையென இடது அரங்கம் வலியுறுத்தியது. வெறுப்பூட்டும் இரட்டை-பேச்சு பேச்சுபவர்களது இந்த குழுவாக்கம், சிரிசாவின் பல்வேறு அரசியல் போலிஉத்திகளை ஏதோ அந்த அமைப்பு சிக்கன நடவடிக்கைக்கு எதிராக இருப்பதற்கான ஆதாரம் என்பதைப் போல எடுத்துக்காட்ட தன்னைத்தானே அர்பணித்துக் கொள்கிறது. கிரீஸிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் "ஆட்சிக்கவிழ்ப்பு சதி" என்பதைப் போல சிப்ராஸின் சிக்கன உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிரிசாவின் 201 மத்திய குழு அங்கத்தவர்களில் 109 பேர் கையெழுத்திட்ட ஜூலை 15ஆம் தேதி கடிதமும் அத்தகைய தந்திரங்களில் ஒன்றாகும். ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு மீதான வாக்கெடுப்பு ஒருபுறம் இருக்கட்டும், அதன் மீதான விவாதத்தைத் தள்ளிபோடுவதன் குறித்த முன்மொழிவு மீது கூட மத்திய குழு வாக்கெடுப்பு நடத்தவில்லை. மத்திய குழுவையும் இடது அரங்கத்தையும், அரசாங்கத்தின் சிக்கன கொள்கைக்காகவோ அல்லது அதற்கு எதிராகவோ ஒரு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எடுக்க நிர்பந்திக்கும் எந்தவொரு வாக்கெடுப்பையும் தவிர்க்கும் கோழைத்தனமான பாதையை அது ஏற்றது. பெயர்கூறி அழைக்கும் வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்கு இடது அரங்கம் அழுத்தமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரீஸின் பரந்த பெருந்திரளான உழைக்கும் மக்களை, சிரிசா மற்றும் பிழையான பெயரைக் கொண்டுள்ள அதன் இடது அரங்கத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்க சக்திகளையும் பிரிக்கும் அரசியல் மற்றும் வர்க்க இடைவெளியையே இந்த மத்திய குழுக்கூட்டம் மீண்டும் உயர்த்திக் காட்டுகிறது. ஜூலை 5 இன் "வேண்டாமென்ற" வாக்குகள், சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு கிரேக்க தொழிலாள வர்க்கம் தயாராக இருப்பதற்கான ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்பியிருந்தது. கிரீஸிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, அரசியல் தலைமைக்கான நெருக்கடியே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மத்திய தடையாகும். வெகுஜன வாக்கெடுப்பின் முடிவை நிராகரித்து பேர்லினால் கட்டளையிடப்பட்ட ஒரு சிக்கன பிணையெடுப்புக்கு சிப்ராஸ் ஒப்புக்கொண்ட பின்னரும் கூட, அது முந்தைய கிரேக்க அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை விட முன்பினும் அதிகளவில் கடுமையாக இருந்த போதினும் கூட, கிரிஸில் எந்தவொரு கட்சியுமே சிரிசா அரசாங்கத்திற்கு எதிராகவோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுக்கு எதிராகவோ தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட முயலவில்லை. மக்கள் எதிர்ப்பைக் கலைப்பதில் இடது அரங்கம் ஒரு மத்திய பாத்திரம் வகித்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியில் சுயாதீனமான ஓர் இயக்கம் எழுச்சி பெறுவதைத் தடுப்பதற்காக, தொழிலாளர்களும் இளைஞர்களும் சிரிசாவின் காட்டிக்கொடுப்பிலிருந்து எந்தவித படிப்பினைகளும் பெறுவதிலிருந்து அவர்களை விலக்கி வைக்க முயன்றது. சிரிசாவிற்குள் உள்ள மோசடி "இடதின்" துரோகத்தனமான பாத்திரம், Jacobin இதழிலில் “கிரீஸ்: போராட்டம் தொடர்கிறது" என்று தலைப்பிட்ட, இடது அரங்கத்தின் முன்னணி அங்கத்தவர் ஸ்டாதிஸ் குவெலாகிஸ் உடனான ஜூலை 14 நேர்காணலில் எடுத்துக்காட்டப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்ற சிரிசாவின் தேர்தல் வாக்குறுதியை சிப்ராஸ் மறுத்தளித்து, புதிய சிக்கன நடவடிக்கைகளை திணித்தமை, அவர் கிரேக்க மக்களிடம் அவரது வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுத்ததாகும் என்பதை குவெலாகிஸ் மறுத்தார். அவர் கூறுகையில், “என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் 'காட்டிக்கொடுப்பு' என்ற இந்த வார்த்தை பொறுத்தமற்றதென நான் நினைக்கிறேன்… காட்டிக்கொடுப்பு என்ற கருத்து சில தருணங்களில், உங்களின் சொந்த கடமைப்பாடுகளை நீங்கள் கைவிடுவதற்காக எடுக்கும் ஒரு நனவுபூர்வமான முடிவை குறிக்கும்,” என்றார். இதுவொரு அப்பட்டமான பொய்மைப்படுத்தலாகும். கடந்த ஜனவரி தேர்தல் பிரச்சாரத்தின்போது பெருந்திரளான மக்கள் முன்னால் அளித்த வாக்குறுதிகளில், சிப்ராஸ், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வை முடிவுக்குக் கொண்டு வருவதாக அவரே பொறுப்பேற்றார். ஆனால் அரசாங்கத்தில் அவரது ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், அதாவது அவரது பெப்ரவரி 20 உடன்படிக்கையிலிருந்து புதிய மற்றும் இன்னும் ஆழமான சமூக வெட்டுக்களுக்கு பிரதி உபகாரமாக அவர் ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பைக் கோருவதற்கு உடன்பட்ட புரிந்துணர்வு வரையில், கிரேக்க மக்களுக்கு அவரது கடமைப்பாடுகளை விட்டோடியதில் ஒன்றாகும். கிரேக்க நாடாளுமன்றத்தில் சிப்ராஸின் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்ட உடன்படிக்கை மீது சிரிசா வாக்களிக்க இருந்த அந்த நாளைக்கு முதல் நாள் தான் குவெலாகிஸ் பேட்டி அளித்திருந்தார். அதன் வாக்குகள் புதிய வெட்டுக்களை ஏற்பதிலிருந்து நாடாளுமன்றத்தைத் தடுக்காது என்கிறபட்சத்தில் மற்றும் சிப்ராஸ் அரசாங்கம் உயிர்பிழைத்திருப்பதை அச்சுறுத்தாது என்கிறபட்சத்தில் மட்டுந்தான் இடது அரங்கம் "வேண்டாமென" வாக்களிக்கும் என்பதற்கு அவரது குறிப்புகள் ஒரு சமிக்ஞையாக இருந்தது. குவெலாகிஸ் விவரிக்கையில், இடது அரங்கம் "அந்த கட்டத்தில் ஒரு மாறுபட்ட வாக்குகளுக்கு" தயாரிப்பு செய்து வந்தது, என்னவென்றால் "வேண்டாமென்று" வாக்களிப்பதற்கு மாறாக, வாக்கெடுப்பில் சிலர் 'இருக்கிறோம்' என்று வாக்களிக்க இருந்தார்கள். இடது அரங்கத்தின் “வேண்டாமென்ற" வாக்குகள் அவரது கூட்டணிக்குள்ளேயே சிப்ராஸிற்கான பெரும்பான்மை ஆதரவை இழக்க செய்து, அவரது அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்கி இருக்கும் என்றார். "எவ்வாறேனும் அரசாங்கத்தைத் தூக்கியெறிவதல்ல எங்களின் நோக்கம்" என்பதை இடது அரங்கம் எடுத்துக்காட்ட விரும்பியதாக குவெலாகிஸ் வலியுறுத்தினார். இடது அரங்கம் தொடர்ந்து சிப்ராஸ் அரசாங்கத்தை ஆதரிக்கிறது என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்ட போதினும் கூட, குவெலாகிஸ் வாதிடுகையில், சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்பலை சிரிசாவிற்குள் கட்டமைந்து வருகிறது என்றார். “ஜூன் கடைசி வார வாக்கில், கூடுதலாகவோ குறைவாகவோ வடிவமெடுத்து வந்த உடன்படிக்கை சிரிசாவிற்குள்ளிருந்த சோதனையில் தேர்ச்சிபெறாது என்பதும், பொதுக்கருத்தின் சோதனையிலும் தேர்ச்சிபெறாது என்பதும் தெளிவாக இருந்தது,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இதை ஏற்றுக்கொள்ள முடியாதென, கட்சிக்குள்ளிருந்தும் மற்றும் இடது அரங்கத்தின் பதவிகளுக்கு வெளியே இருந்தும், தலைமைக்கும் சிப்ராஸிற்கே கூட தகவல்கள் அனுப்பப்பட்டன,” என்றார். குவெலாகிஸ் இன் கணிப்பு முற்றிலும் பிழையானது என்பது நிரூபணமானது. இடது அரங்கம் சிரிசாவின் பெரும்பான்மையை ஒரு சிக்கன-எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு மாற்றுவதற்கு மட்டும் தவறவில்லை, மாறாக அது ஐரோப்பிய ஒன்றியத்தை சிப்ராஸ் பிற்போக்குத்தனமாக கையாண்டதற்கு ஒரு பாதுகாவலாளராகவும் இருந்துள்ளது என்பதை நிரூபித்தது. மார்க்சிச பகுப்பாய்வின் அடிப்படையில், சிரிசாவை அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே எதிர்த்து வந்துள்ளதும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான நோக்குநிலை கொண்ட ஒரு முதலாளித்துவ-சார்பு கட்சியாக இருந்து தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தைத் சிரிசா தாக்கும் என்று எச்சரித்துள்ளதுமான உலக சோசலிச வலைத்தளம் மீதான ஓர் அப்பட்டமான தாக்குதலுடன் அவரது பேட்டியைக் குவெலாகிஸ் நிறைவு செய்தார். “நீங்கள் கூறுவது நடந்துவிட்டால், அது உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டது,” என்ற கருத்தை அவர் கண்டித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அது வழமையான நான் தான் முன்னரே கூறியிருந்தோமே என்னும் மூலோபாயம் தான். ஆனால் அந்த நிலைப்பாட்டிற்கு உங்களால் ஒரு திடமான பலத்தைக் கொடுக்க முடியாவிட்டால், அரசியல்ரீதியில் நீங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆகி விடுவீர்கள். ஏனென்றால் நீங்கள் அதிகாரத்தில் இல்லை என்றாலும், உண்மையில் பாரிய நடைமுறைக்குள் உங்களது நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை என்றானாலும், பின்னர் வெளிப்படையாகவே அரசியல்ரீதியில் நீங்கள் நிரூபிக்கப்பட்டவர் இல்லை என்றாகிறது,” என்றார். இந்த உளறல் நிச்சயமாக இரட்டைவேட பேச்சுக்களின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். சிரிசா அதன் தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டு, ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டத்திற்குப் பின்னால் அணிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள், சிரிசா துல்லியமாக அதையே செய்த போதினும் கூட நிரூபிக்கப்படவில்லையாம். ஏன் நிரூபிக்கப்படவில்லை? இதற்கான பதில், ஏனென்றால் சிரிசாவின் சோசலிச எதிர்ப்பாளர்கள் போராடிய, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கத்தை எதிர்த்து தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக ஒன்றுதிரள்வதை வெற்றிகரமாக தடுப்பதற்காகவே (இடது அரங்கம்) சிரிசா தலைமையோடு, ஏனைய முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களோடு இணைந்திருந்தனர்! சிரிசா குறித்த WSWS இன் எச்சரிக்கைகள் பலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல, கிரேக்க நெருக்கடி குறித்த WSWS இன் ஆவணங்கள் மார்க்சிசத்தின் சக்திக்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே முன்னெடுக்கும் புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அவசியத்திற்கும் சாட்சியமாக திகழ்கின்றன. சிரிசா மற்றும் அதேபோன்ற போலி-இடது அமைப்புகளைக் கோட்பாட்டுரீதியில் மற்றும் சளைக்காமல் உலக சோசலிச வலைத்தளம் அம்பலப்படுத்தியதன் அடிப்படையில், கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள முற்போக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரேக்க அனுபவத்திலிருந்து அத்தியாவசிய படிப்பினைகளைப் பெற வேண்டும் — இத்தகைய படிப்பினைகள் தான் கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தினது அபிவிருத்தியில் முக்கியமானவை என்பதை நிரூபணமாகும். |
|