World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan election: Pro-US UNP appeals to big business இலங்கை தேர்தல்: அமெரிக்க-ஆதரவு யூ.என்.பீ. பெருவணிகங்களுக்கு முறையிடுகிறது
By Rohantha
De Silva போட்டியாளர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் (ஸ்ரீ.ல.சு.க.) போலவே, ஐக்கிய தேசிய கட்சியும் (யூ.என்.பீ.) ஜனரஞ்சக வாக்குறுதிகள் மற்றும் பொய்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 17 பொது தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்து வருகிறது. யூ.என்.பீ. இன் தேர்தல் அறிக்கை, தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ சிலவற்றை கொண்டுள்ளது என்றாலும், அது வெற்றி பெற்றால் அதன் வாக்குறுதிகளைக் கைவிட்டு, சர்வதேச நிதி மூலதனங்களால் கோரப்பட்டு வருகின்ற சிக்கன நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தும். யூ.என்.பீ. ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷவைத் தோற்கடித்த பின்னர், யூ.என்.பீ. ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை கொடுத்துள்ளது, ஸ்ரீ.ல.சு.கட்சிக்குப் பெயரளவில் தலைமை கொடுத்துவரும் சிறிசேன, 100-நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்ரமசிங்கவைப் பிரதம மந்திரியாக நியமித்தார். இராஜபக்ஷ இன் ஊழல் மற்றும் ஜனநாயக விரோத அணுகுமுறைகளை முடிவுகட்டுவதற்காகவும் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்களை உயர்த்துவதற்காகவும் அத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அர்த்தப்படுத்தப்பட்டது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில், விக்ரமசிங்க "ஜனவரி புரட்சியை" அவரது மத்திய முழக்கமாக கொண்டுள்ளார். அவர் மீரிகமாவில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “ஜனவரி புரட்சியை நாம் முன்னோக்கி எடுத்துச்செல்ல முடிவெடுத்தால், அங்கே எந்த பயங்கரவாதமோ, ஊழலோ, போதைப்பொருட்களோ இருக்காது. அங்கே வேலை வாய்ப்புகளே இருக்கும். நாம் விவசாய மகசூலை அதிகரிக்கலாம்,” என்றார். “100 நாட்களிலேயே நல்லாட்சியை ஸ்தாபித்துள்ள" நிலையில், “60 மாதங்களில் நம்மால் ஒரு புதிய நாட்டையே உருவாக்க முடியும்,” என்றார். விக்ரமசிங்க அவரது கூட்டணிக்கு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (UNFGG) என்று பெயர் சூட்டியுள்ளார். சிங்கள பௌத்த மேலாதிக்க ஜாதிக ஹெல உறுமய (JHU), வகுப்புவாத இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC), தமிழர் முற்போக்கு கூட்டணி (TPA) ஆகியவை அதில் உள்ளடங்கி உள்ளன. தோட்ட தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுத்துள்ள தொழிலாளர்களுக்கான தேசிய தொழிற்சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை தமிழர் முற்போக்கு கூட்டணியில் உள்ளடங்கி உள்ளன. “ஜனவரி 8 வெற்றியைப் பாதுகாத்து, பலப்படுத்தி, அதை தொடரும் வகையில் பொதுவான பகிரங்க உடன்படிக்கை" என்ற ஒன்றை யூ.என்.பீ., 110 தொழிற்சங்கங்களுடன், தாராளவாத குழுக்கள், அரசுசாரா அமைப்புகள் மற்றும் உயர்மட்ட மத்தியதட்டு வர்க்க அடுக்கை அடித்தளமாக கொண்ட கல்வித்துறைசார் மற்றும் தொழில்துறைசார் குழுக்களுடன் கையெழுத்திட்டுள்ளது. நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளோடு சேர்ந்து இத்தகைய குழுக்கள், இராஜபக்ஷவை வெளியேற்றியமை ஒரு "ஜனநாயக புரட்சியாகும்" என்ற மோசடியை ஊக்குவிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தன. அது அவ்விதமானதொன்றும் கிடையாது. அமெரிக்கா ஆதரவுடன் பல மாதங்களுக்கு முன்னரே தயாரிக்கப்பட்ட நிலையில், விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவும் சுகாதார மந்திரி பதவியிலிருந்து சிறிசேன இராஜினாமா செய்ய வழிவகை செய்தனர், இராஜபக்ஷக்கு எதிராக அவர் வேட்பாளராக நிற்பதை ஆதரித்தனர். இந்த தேர்தலில் பிரதம மந்திரியாக திரும்பி வர முயலும் இராஜபக்ஷ ஊழல்மிகுந்து ஜனநாயக-விரோதமாக இருக்கிறார் என்பதற்காக வாஷிங்டன் அவர்மீது விரோதம் கொள்ளவில்லை, மாறாக அவர் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காக விரோதம் கொண்டுள்ளது. சீன செல்வாக்கைப் பலவீனப்படுத்தி அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் பரந்த அமெரிக்க திட்டங்களின் பாகமாக, கொழும்புவில் அந்த ஆட்சிமாற்ற நடவடிக்கை நடந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கும் அதிகமாக, யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கம் அதன் வெளியுறவு கொள்கையைக் கூர்மையாக அமெரிக்காவை நோக்கி திருப்பி உள்ளதுடன், மிகப்பெரிய கொழும்பு துறைமுக நகர கட்டுமானம் உட்பட சீன நிதியுதவி உடனான பல்வேறு திட்டங்களை நிறுத்தி வருகிறது. ஐக்கிய தேசிய கட்சியை ஜனநாயகத்தின் ஒரு பாதுகாவலனாக பெருமைப்படுத்துவது முற்றிலும் ஒரு மோசடியாகும். இலங்கையின் மிகப்பழைய முதலாளித்துவ கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, எப்போதுமே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் நெருக்கமாக அணிசேர்ந்துள்ளது, அது தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கும் பொறுப்பாக உள்ளது. 1977 இல் சந்தை-சார் சீர்திருத்த திட்டத்தைத் தொடங்கிய அது, அண்மித்தளவில் மூன்று தசாப்தகால வகுப்புவாத போர்களுக்கும் பொறுப்பாகிறது, அத்துடன் 1980களின் இறுதியில் இராணுவ-ஆதரவிலான கொலைக்குழுக்களை கட்டவிழ்த்துவிட்டது, அதில் பத்தாயிரக் கணக்கான கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1980 இல், யூ.என்.பீ. 100,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியதன் மூலமாக பொதுத்துறை தொழிலாளர்களது ஒரு வேலைநிறுத்தத்தை நசுக்கியது, அதன் சிக்கன நிகழ்ச்சி நிரலுக்காக, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை உடைக்க பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் பிரயோகிக்க அது தயங்காது. வெறும் ஏழு மாதங்களிலேயே, விக்ரமசிங்க அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுகாதாரத்துறை தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்தில் இறங்கிய மாணவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகளைப் பிரயோகித்துள்ளது, போர்குணமிக்க தோட்டத் தொழிலாளர்களைப் பழிவாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது. 60 மாதங்களில் "ஒரு புதிய நாட்டை" உருவாக்க விக்ரமசிங்க அளிக்கும் வாக்குறுதி உழைக்கும் மக்களை நோக்கியதல்ல, மாறாக அது அந்நாட்டின் பெருநிறுவன உயரடுக்குகளை நோக்கியதாகும், ஸ்ரீ.ல.சு.கட்சியைப் போலவே யூ.என்.பீ உம் அவற்றுடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று கொழும்பில் நடந்த பொருளாதார மாநாட்டில், அப்பிரதம மந்திரி அறிவிக்கையில், இலங்கையின் ஆண்டு ஏற்றுமதிகளை 50 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கு அதை "உலகளாவிய அளவில்" அதிக "போட்டித்தன்மை" கொண்டதாக அவர் மாற்றவிருப்பதாக அறிவித்தார். இலங்கையின் தேயிலை மற்றும் இரப்பர் உட்பட பண்டங்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துவரும் நிலைமைகளின் கீழ், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான ஜவுளி ஏற்றுமதிகள் சரிந்துள்ள நிலைமைகளின் கீழ், விக்ரமசிங்கவின் வாக்குறுதிக்கு ஒரேயொரு அர்த்தம் தான் உள்ளது. இலங்கை ஏற்றுமதிகளை "உலகளாவிய போட்டித்தன்மை" கொண்டதாக செய்ய யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கம் கூலிகள், வேலையிட நிலைமைகள் மற்றும் வரவு-செலவு திட்ட செலவுகளுக்குள் கடுமையாக ஊடுருவும். அதன் ஆசிய போட்டியாளர்களுடன் "அந்நாட்டின் போட்டித்தன்மையை" அதிகரிப்பதன் மூலமாக அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கவும், அரசு நில அனுமதிகள் மற்றும் அரசு கட்டிடங்களின் ஒரு புதிய சுற்று தனியார்மயமாக்கல், அத்துடன் சிறு வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கடன்கள் ஆகியவற்றைக் கொண்டு "ஒரு பலமான மத்தியத்தட்டு வர்க்கத்தை" உருவாக்குவதற்கும் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார். “தென்கிழக்கு ஆசியாவில் உள்ளதைப் போல அதேபோன்ற வசதிகள்" வழங்கப்பட்ட "45 மிகப்பெரும் பொருளாதார அபிவிருத்தி மண்டலங்களைக்" கட்டமைக்க யூ.என்.பீ. இன் தேர்தல் அறிக்கை பகட்டான திட்டங்களைக் காட்டுகிறது. வோல்ஸ்வேகன் உட்பட சீன மற்றும் ஜேர்மன் முதலீட்டாளர்கள் ஏற்கனவே முறையே ஒரு கப்பல்கட்டுமிடம் மற்றும் கார் உற்பத்தியாலை அமைக்க உறுதியளித்திருப்பதாக விக்ரமசிங்க தெரிவிக்கிறார். உலக சந்தைக்கு உற்பத்தி வழங்குவதற்காக கிராமங்கள் தொழில்மண்டலங்களுக்குள் இணைக்கப்படும், இதன் அர்த்தம் விவசாயிகள் பன்னாட்டு பெருநிறுவனங்களது கருணையின்கீழ் நிறுத்தப்படுவார்கள். கடந்த வார பொருளாதார மாநாட்டில், விக்ரமசிங்க அறிவித்தார்: “நாட்டின் பொருளாதார வலி அந்நாட்டின் எல்லா தரப்பினராலும் சம அளவில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், பரந்த மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது,” என்றார். என்னவொரு அர்த்தமற்ற பேச்சு! ஆகஸ்ட் 17க்குப் பின்னர் எந்தவொரு கட்சிகள் அரசாங்கம் அமைத்தாலும் அவை இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளையே ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தும். கிரீஸில் நடந்துள்ளதைப் போலவே, சுமைகள் பிரத்யேகமாக தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும், அதுவும் மிகவும் அதிகமாக மக்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட அடுக்குகள், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகள் மீது சுமத்தப்படும். நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க மே மாதம் எச்சரிக்கையில், அரசாங்கத்தின் கடன்வழங்கு-சேவை செலவுகள் "மிகவும் அதிகமாக" இருப்பதாகவும், வருவாயில் 95.4 சதவீதத்தை உட்கிரகித்து விடுவதாகவும் தெரிவித்தார். தற்போது 8.8 ட்ரில்லியன் ரூபா கடனுடன் இருப்பதால், அடுத்த அரசாங்கம் ஒரு சமூக எதிர்-புரட்சியை நடத்தியாக வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியாக வேண்டும். சர்வதேச நாணய நிதியமோ எந்தவொரு புதிய கடனுக்கும் முன்நிபந்தனையாக ஏற்கனவே ஆழ்ந்த செலவின வெட்டுக்களை கோரியுள்ளது. முந்தைய ஸ்ரீ.ல.சு.கட்சி அரசாங்கத்தைப் போலவே, யூ.என்.பீ. அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மூன்று தசாப்தகால கொடூரமான வகுப்புவாத போரில் கட்டமைக்கப்பட்ட பொலிஸ்-அரசு எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டாது. அதேநேரத்தில் வாஷிங்டன் உடனான அதன் நெருக்கமான பிணைப்பு, அப்பிராந்தியத்தை மற்றும் உலகத்தையே போருக்குள் மூழ்கடிக்க அச்சுறுத்தும் புவிசார் அரசியல் பதட்டங்களின் கொப்பறைத் தொட்டிக்குள் இலங்கை இழுக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும். சோசலிச சமத்துவ கட்சி (SEP) வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகிறது. யூ.என்.பீ. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. ஆகிய இரண்டு பெருவியாபார கட்சிகளையும் மற்றும் அவர்களது சகல கூட்டாளிகள் மற்றும் அனுதாபிகளையும் நிராகரிக்குமாறு நாங்கள் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கிறோம். சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களது மற்றும் விவசாயிகளது அரசாங்கத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைக்காக தொழிலாளர்களைச் சுயாதீனமான அணிதிரட்டுவதே, போர் உந்துதலைத் தடுப்பதற்கான மற்றும் ஜனநாயக சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழிவகையாகும். கொழும்பு, நுவரெலியா மற்றும் யாழ்பாண மாவட்டங்களில் நிற்கும் எமது 43 வேட்பாளர்களைச் செயலூக்கத்துடன் ஆதரிக்குமாறும், எமது வேலைத்திட்டம் முன்னோக்கை வாசிக்குமாறும், எமது கட்சியில் இணைய விண்ணப்பிக்குமாறும் சோசலிச சமத்துவ கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறது. |
|