World Socialist Web Site www.wsws.org |
UK stages bombing raid on Syria hours after parliamentary vote நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடந்த ஒரு சில மணி நேரங்களில் ஐக்கிய இராச்சியம் சிரியாவில் குண்டுவீச்சை அரங்கேற்றியது
By Robert Stevens சிரியாவில் குண்டுவீசுவதற்கு ஆதரவாய் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் வாக்குகள் கிட்டியதை அடுத்து, உடனடியாக முதல் வான் தாக்குதல்களுக்கு RAF படைப்பிரிவுக்கு ஒப்புதலளித்து கன்சர்வேடிவ் பாதுகாப்புச் செயலரான மைக்கல் ஃபாலோன் உத்தரவிட்டார். புதன்கிழமையன்று எம்.பி.க்கள் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆதரவாய் இரவு 10.30 மணிக்கு வாக்களித்தனர். இரவு 11.30 மணிக்கெல்லாம் இரண்டு டோர்னடோ குண்டுவீச்சு விமானங்கள் சைப்ரஸின் Akrotiri இல் இருக்கும் RAF தளத்தில் இருந்து கிளம்பின. ஒவ்வொன்றும் 100,000 பவுண்ட்ஸ் மதிப்புள்ள மூன்று பேவ்வே ஏவுகணைகளை சுமந்து சென்றன. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், பேவ்வே ஏவுகணைகளுடன் இன்னும் இரண்டு டோர்னடோக்களும் கிளம்பின. வியாழனன்று காலையில், கூடுதலான டோர்னடோ ஜெட் விமானங்கள் Akrotiri இல் இருக்கும் RAF இன் படைப்பிரிவில் இணையும் பொருட்டு நோர்ஃபோல்க்கில் இருக்கு மர்ஹாமில் இருந்து கிளம்பிச் சென்றன. ஸ்காட்லாந்தில் இருக்கும் RAF Lossiemouth இல் இருந்து சைப்ரஸுக்கு பறந்து சென்ற ஒரு RAF Airbus A400M தந்திரோபாய போக்குவரத்து விமானம் இவற்றுக்கு உதவி செய்யும். “போதுமான டோர்னடோக்கள் இருக்கின்றன, இப்போது டைஃபூன்களையும் (போர் ஜெட் விமானங்கள்) அனுப்பிக் கொண்டிருக்கிறோம்” என்று வியாழக்கிழமை அன்று ஃபாலோன் பிபிசியிடம் தெரிவித்தார். “Daesh [IS] பயங்கரவாதிகள் தங்களது வருவாயில் பெரும்பகுதியைப் பெறுவதற்கு ஆதாரவளமாக இருக்கின்ற கிழக்கு சிரியா எண்ணெய்வயல்கள் - ஓமர் எண்ணெய்வயல்கள் - மீது” பிரிட்டிஷ் விமானங்கள் குண்டுவீசியதாக ஃபலோன் தெரிவித்தார். குண்டுவீசப்பட்ட இடங்கள், ஈராக்கில் RAF விமானங்கள் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலமாய் ஏற்கனவே குண்டுவீச்சில் ஈடுபட்டு வந்திருக்கின்ற சிரிய எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 35 மைல்கள் உள்ளே அமைந்திருந்தன. “ISIS க்கு எதிரான இராணுவ நடவடிக்கை மாதங்களைக் காட்டிலும் வருடக்கணக்கில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம் என்று பாதுகாப்புச் செயலர் சுட்டிக்காட்டியதாக” தி கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. “இது ஒரு நெடிய பிரச்சாரமாக இருக்கும்.... துரிதமாக முடிவதாக இருக்காது என்பதை பிரதமர் ஊர்ஜிதம் செய்துள்ளார்” என்று ஃபாலோன் ஊடகங்களிடம் கூறினார். சொல்லப் போனால், அல் அரேபியா தெரிவிப்பதன் படி, RAF குண்டுவீசிய எண்ணெய்வயல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாய் அமெரிக்க தலைமையிலான வான்வழித் தாக்குதல் ஒன்றில் ஏற்கனவே “அழிக்கப்பட்டிருந்தவை” ஆகும். ஆளும் உயரடுக்கு மற்றும் ஊடகங்களின் அநேக போர்-ஆதரவு பிரிவுகளுக்குள், இராணுவ நடவடிக்கைக்கான ஆதரவு வாக்குமுடிவிற்கான பதிலிறுப்பாய், சிரியாவில் குண்டுவீச்சை எதிர்த்ததற்காக தொழிற் கட்சித் தலைவரான ஜேர்ரெமி கோர்பினுக்கு எதிராய் ஒரு வெறிகொண்ட பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் தொழிற் கட்சி எம்.பி.க்களை “சுதந்திரமாக வாக்களிக்க” - அதாவது போருக்கு ஆதரவாய் வாக்களிப்பதற்காக அவர்கள் எந்த வகையிலும் கண்டிக்கப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ மாட்டார்கள் - அவர் அனுமதித்துமே இந்த நிலைமை. வாக்கெடுப்புக்கு முந்தைய இரவில் கன்சர்வேடிவ் பிரதமரான டேவிட் கேமரூன் கோர்பினையும் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்கத் திட்டமிடுகின்ற எவரொருவரையும் “பயங்கரவாதி அனுதாபிகள்” என்று குறிப்பிட்டு தாக்குதலை தொடங்கினார். வாக்கெடுப்பன்று காலையில், ஃபைனான்சியல் டைம்ஸ் கோர்பின் மட்டும் அகற்றப்படுவதற்கு அழைப்பு விடுத்தது. அதன் தலையங்கத்தில் எழுதியது, “பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் தனது கட்சியை அதி இடதினை நோக்கித் தள்ளுவதற்கு கோர்பின் தீர்மானத்துடன் இருப்பதாய் தோன்றுகிறது. எத்தனை அதிக காலம் அவர் தனது பதவியில் நீடிக்கிறாரோ, அத்தனை நிச்சயமாய் ஒரு பிரதான நீரோட்ட அரசியல் கட்சியாக இல்லாது தொழிற் கட்சியை அவர் அழித்து விடுவார்.” சிரியாவில் குண்டுவீசுவதை ஆதரிப்பவரும், ஈராக் போர் மற்றும் லிபியா மீதான போர் இரண்டுக்குமே ஆதரவாக வாக்களித்திருந்தவருமான, தொழிற் கட்சியின் நிழல் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி பென், கோர்பினது ஆசியுடன் தொழிற் கட்சி சார்பில் நாடாளுமன்ற விவாதத்தை நிறைவு செய்தார். போர் முரசு கொட்டுவதற்கும் கோர்பின் அகற்றப்படுவதை துரிதப்படுத்துவதற்குமாய், இவரது “வரலாற்று” உரைக்காக வின்ஸ்டன் சர்ச்சில் உடன் ஒப்பிடத்தக்க ஒரு ஆளுமையாக இவர் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறார். கோர்பின் “தேசியப் பாதுகாப்பு”க்கான ஒரு ஆபத்தாக இருப்பதையும் அத்துடன் போர்க்கூச்சலிடும் பென்னினாலும், தொழிற் கட்சியின் வலதுசாரிப் பிரிவினாலும் மற்றும் டோரிக்களாலும் தாங்கிப் பிடிக்கப்படும் “விழுமியங்களுக்கு” அவர் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதையும் சுற்றி கோர்பின் மீதான வலது-சாரி ஊடகங்களின் தாக்குதல்கள் மையம் கொண்டுள்ளன . தி டெய்லி டெலிகிராப் செவ்வாயன்று தனது தலையங்கத்தில், பென் “வெறுமனே தலையீட்டுக்கான ஒரு உச்சமான தார்மீகரீதியிலான வாதத்தை மட்டும் வழங்கவில்லை....அவர் தனது சொந்த தலைவரின் நிலைப்பாட்டின் பயனற்ற தன்மையை அம்பலப்படுத்தினார்... அத்துடன் தேசியப் பாதுகாப்பு விடயத்தில் திரு.கோர்பின் மீது ஏன் நம்பிக்கை வைக்க முடியாது என்பதையும் மீண்டுமொரு முறை விளங்கப்படுத்தினார்.” டோரி கட்சியின் அங்கமான இந்தப் பத்திரிகை பென் உரையில் இருந்து ஒரு துண்டை எடுத்து தனது முதல் பக்கத்தில் முக்கியத்துவத்துடன் பிரசுரித்திருந்தது. அதில் அவர் IS இன் படைகளை ஐரோப்பாவின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றிய ஹிட்லரின் பாசிச இராணுவத்துடன் ஒப்பிட்டிருந்தார். பென்னின் உரை தொழிற் கட்சியின் தலைவராக அவர் அமர்த்தப்பட வேண்டும் என்பதான ஏராளமான அழைப்புகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. முன்னணி பிளேயர்வாதிகளில் ஒருவரான டெலிகிராபின் டேன் ஹோட்ஜஸ், “ஹிலாரி பென் எதிர்க்கட்சித் தலைவர் போலவே தெரியவில்லை. அவர் பிரதமரைப் போலத் தோன்றினார்.” தாராளவாத கார்டியன் பத்திரிகையானது, தனது தலையங்கத்தில், கடைசித் தருணத்தில், “ISIS ஐ தோற்கடிக்கின்ற நோக்கத்தினை நாங்கள் ஆதரிக்கிறோம், இராணுவ நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை” என்ற அதேநேரத்தில் கேமரூனின் போரை வழிமொழிகின்ற மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டது. பென்னின் உரையில் பரவசமடைந்திருந்த அது அதனை ஒரு “திகைப்பில் வாய்பிளக்கச் செய்யும் பிரச்சாரம்” என்று வருணித்தது. இந்த உரை பென்னை “ தலைமைக்கான ஒரு தீவிரப் போட்டியாளராக” நிறுத்தியிருந்ததாக மார்ட்டின் கெட்டில் கூறினார். கட்சியின் வலதுகள் மீது தொழிற் கட்சி உறுப்பினர்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் மீண்டுமொரு முறை முயற்சி செய்ததே இந்தத் தாக்குதலுக்கு கோர்பின் மற்றும் அவரது நெருங்கிய சகாவான நிழல் சான்சலர் ஜான் மெக்டோனல் காட்டியிருக்கும் பதிலிறுப்பாக இருக்கிறது. போருக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்கள் தொழிற் கட்சியின் உள்ளூர் தொகுதிகளால் ”தெரிவுஅகற்றம்” செய்யப்படுவதான எந்த முயற்சியையும் தனிப்பட்ட வகையில் தாங்கள் எதிர்ப்பதாக இருவருமே அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். தொழிற் கட்சி எம்.பி.க்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினரை போருக்கு ஆதரவாய் வாக்களிக்க அனுமதித்ததன் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சமீபத்து இரத்தவெள்ளம் பாய்ச்சும் முயற்சியை நியாயப்படுத்துவதற்கு கேமரூன் கோரியிருந்த “கருத்தொற்றுமை”யாகக் கூறப்பட்ட ஒன்றை வழங்கிய பின்னர், மெக்டோனல் கூறினார், “தொழிற் கட்சியில் நாங்கள் மனிதர்களை அவர்களது மனச்சாட்சிக்கேற்ப வாக்களிக்க அனுமதித்திருக்கிறோம் என்பது இந்த முழு விவாதத்திலும் எனக்கு பெருமைப்படக் கூடியதாக இருக்கிறது, மனிதர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதை அனுமதித்து பிரிட்டிஷ் அரசியலை நாங்கள் ஒரு அடி, பண்புரீதியான ஒரு அடி முன்னால் எடுத்துச் சென்றிருக்கிறோம் என்றே நினைக்கிறேன்.” “தொகுதியின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் கட்சியின் கட்டுப்பாட்டு உத்தரவால் தங்களது மனச்சாட்சி நசுக்கப்படுவதற்காக நாடாளுமன்றத்திற்கு வர முடியாது என்றே நினைக்கிறேன். அது ஏற்கத்தக்கதன்று.” 30 வருடங்களுக்கும் அதிகமாய் தொழிற் கட்சியின் பின்வரிசையில் அமைதிதவழ அமர்ந்து வந்திருக்கும் கோர்பின் முதலாளித்துவத்தால் நன்கு அறியப்பட்டவராவார். அவர்களது தாக்குதல்கள் பிரதானமாக அவரை நோக்கியதல்ல. மாறாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகி வரும் போர்-எதிர்ப்பு உணர்வை முறையற்றதாகவும் சகிக்கமுடியாததாகவும் காட்டி அவர்களை ஒடுக்குவதன் மீதும் வாய்மூடச் செய்வதின் மீதுமே அவை செலுத்தப்படுகின்றன. சிரியாவில் குண்டுவீச்சைத் தொடங்க ஆதரவாய் சுவற்றுக்குச் சுவர் ஊடகப் பிரச்சாரம் செய்தும் கூட, மக்களில் ஒரு சிறுபான்மையினர் மட்டுமே போருக்கு ஆதரவாய் உள்ளனர் என்பதை வாக்கெடுப்பன்று காலையில், தி டெய்லி மெயில் ஒப்புக்கொண்டது. ஸ்காட்டிஷ் வாக்காளர்களில் 72 சதவீதம் பேர் குண்டுவீச்சை எதிர்த்ததை இன்னுமொரு கருத்துக்கணிப்பு காட்டியது. வாக்கெடுப்புக்கு முன்னதாய் கோர்பின் ஏற்பாடு செய்திருந்த கருத்துக்கணிப்பிலும், தொழிற் கட்சி உறுப்பினர்களில் 75 சதவீதம் பேர் போரை எதிர்த்தனர் என்பது வெளியானது. ஆளும் உயரடுக்கைப் பொறுத்தவரை, இத்தகைய சமூகரீதியான மற்றும் அரசியல்ரீதியான துருவப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் இன்னுமொரு ஆக்கிரமிப்புப் போரில் அது இறங்குகின்ற சமயத்தில், எதிர்ப்பு அத்தனையையும் ஒடுக்குவது அதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. போரை எதிர்ப்பது என்பது பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கு ஒப்பானதாகும் என்ற கேமரூனின் கூற்று ஒரு கூர்மையான எச்சரிக்கையாக எடுக்கப்பட்டாக வேண்டும். அதேகாலத்தில் பிரபுக்கள் சபையில் சிரியாவிலான போர் குறித்து நடந்த ஒரு விவாதத்தில், தொழிற் கட்சியைச் சேர்ந்த ஜேப்ஃரி ரூக்கர் கூறியதும் அதற்கு சமானமானதாகும். தொழிற் கட்சி கோர்பினை “அகற்ற” வேண்டும் என்று கூறிய அவர், பிரிட்டிஷ் வாழ்க்கைமுறை”க்கு ISIS காட்டும் “பிறவிக்குண சகிப்பின்மை”யுடன் “கட்சியின் கட்டுப்பாட்டை முயன்று அடைவதற்கு நமது சகிப்புத்தன்மையை பயன்படுத்தி”யிருந்த “தொழிற் கட்சியிலுள்ள பிரிட்டிஷ் விரோத ட்ரோட்டுகள்” உடன் அடையாளப்படுத்தினார். போரை எதிர்ப்போரே மக்களின் பெரும்பான்மையினராக உள்ளனர். 9/11 தொடங்கி, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற வேடத்தில், பொதுவாக ஒரு போலிஸ் அரசுடன் தொடர்புபட்ட வழிமுறைகளை அறிமுகம் செய்கின்ற பாரிய பிற்போக்குத்தனமான சட்டங்கள் ஜனநாயக உரிமைகளையும் குடிமைச் சுதந்திரங்களையும் தாக்கி வருகின்ற நிலைமைகளின் கீழ், போரை எதிர்ப்பவர்கள் இப்போது பயங்கரவாதத்தின் ஆதரவாளர்களாகவும், பிரிட்டிஷ்-விரோதிகளாகவும், பிரிட்டிஷ் வாழ்க்கை முறைக்கான அச்சுறுத்தலாகவும் முத்திரை குத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சென்ற ஆண்டில், தீவிரப்படல் மற்றும் தீவிரவாதத்தைக் கையாளுவதற்கான பிரதமரின் சிறப்புப் படையானது (Prime Minister’s Task Force on Tackling Radicalisation and Extremism) ”தீவிரவாத”த்தை “ஜனநாயகம், சட்ட ஆட்சி, தனிநபர் சுதந்திரம் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் மீதான பரஸ்பர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படையான பிரிட்டிஷ் விழுமியங்களுக்கு எதிரான பேச்சுரீதியான அல்லது செயல்ரீதியான எதிர்ப்பு...” என்று வரையறை செய்தது. “இஸ்லாமியவாதிகள், அதி வலதுகள் மற்றும் மற்றவர்கள் உட்பட்ட பலதரப்பான தீவிரவாத தனிநபர்களும் அமைப்புகளும் இருக்கின்றன.” புதிதாகக் கொண்டுவரப்பட இருக்கும் சட்டம் குறித்துக் கேமரூன் இவ்வாறு கூறினார்: “பயங்கரவாத அச்சுறுத்தலைக் கையாளுவதென்பது வெறுமனே புதிய அதிகாரங்களைக் குறித்ததல்ல, மாறாக தீவிரவாதத்தை அதன் அத்தனை வடிவங்களிலும் நாம் எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறோம் என்பது குறித்ததாகும். அதனால் தான் தீவிரமயமாக்கத்தை கையாளும்போது, வெறுமனே வன்முறையான தீவிரவாதத்தை மட்டுமல்லாமல் தீவிரவாதத்தின் அத்தனை வகைகளின் மீதும் கவனம் குவிக்கின்ற வகையான ஒரு புதிய அணுகுமுறையை நாம் எடுக்கிறோம்.” |
|