World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து France sells 24 Rafale fighter jets to Sisi dictatorship in Egypt எகிப்தின் சிசி சர்வாதிகாரத்திற்கு பிரான்ஸ் 24 ரஃபால் போர்விமானங்களை விற்கிறதுBy
Antoine Lerougetel பெப்ரவரி 12இல், கிழக்கு உக்ரேனிய உள்நாட்டு போர் மீதான மின்ஸ்க் பேச்சுவார்த்தைகளிலிருந்து திரும்பியதும், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசியின் இரத்தந்தோய்ந்த ஆட்சிக்கு 24 ரஃபால் (Rafale) போர்விமானங்கள் விற்பதைக் குறித்து அறிவித்தார். ஏனைய எதிர்நோக்கியுள்ள விற்பனைகளோடு சேர்ந்து, அது, 2015இல் எகிப்திய சர்வாதிகாரத்தை பிரான்சின் மிகப் பெரிய ஆயுத வாடிக்கையாளராக மாற்றும். பிரெஞ்சு அரசு உத்தரவாதத்துடன், பல பிரெஞ்சு வங்கிகளிடமிருந்து வரும் கடன்கள் மூலமாக நிதியுதவி வழங்கப்படும் அந்த கொள்முதல் உடன்படிக்கை, திங்களன்று கெய்ரோவில் கையெழுத்தாக உள்ளது. முன்னதாக செப்டம்பரில் பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோனின் கெய்ரோ விஜயத்தின் போது பேசப்பட்ட இந்த உடன்படிக்கையில் ஒரு கடற்படை வேவுகலம் மற்றும் ஏவுகணைகளின் விற்பனையும் உள்ளடங்கும். ஹோலாண்ட் தெரிவித்தார், “நாடெங்கிலும் நிலவும் அச்சுறுத்தல்களைக் கணக்கில் கொண்டு, எகிப்து தரமான விமானம் ஒன்றை கோரியது.” Le Monde இனால் மேற்கோளிடப்பட்ட ஒரு வல்லுனரின் கருத்துப்படி, அமெரிக்க ஆயுதங்களுக்கு எதிராக பிரான்ஸின் விற்பனை புள்ளிகளில் ஒன்றாக இருப்பது என்னவென்றால், அவை யாருக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன என்பதன் மீதான தடைகளை பிரான்ஸ் விதிப்பதில்லை. எகிப்து சமீபத்தில், லிபியாவின் இஸ்லாமிய படைகள் மற்றும் எகிப்தின் சொந்த சினாய் தீபகற்பத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் முதல்முறையாக வெளிநாட்டுக்கு ரஃபால் போர்விமானங்களை விற்பதில் வெற்றி கண்டுள்ளதால், அந்த உடன்படிக்கையின் அறிவிப்பு பிரெஞ்சு ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தால் பரவசத்துடன் வரவேற்கப்பட்டது. “நமது மகிழ்ச்சியை மறைக்க வேண்டியதில்லை" என்று Le Monde உற்சாகம் காட்டியது. 2011இல் எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து கவிழ்த்த புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சிக்குப் பின்னர், சிசி ஆட்சியின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அரசியல் எதிர்ப்பு மீதான அதன் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறைக்கு ஹோலாண்டால் பகிரங்கமாக ஒப்புதல் வழங்கப்படுவதையே இந்த ஆயுதங்கள் விற்பனை எடுத்துக்காட்டுகிறது. ஜூலை 2013இல் சிசியின் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி மொஹம்மது முர்சியின் முஸ்லீம் சகோதரத்துவத்தின் குறைந்தபட்சம் 1,000 உறுப்பினர்கள் உட்பட, குறைந்தபட்சம் 3,000 உறுப்பினர்களைப் படுகொலை செய்துள்ளது. அது பொது ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான கடுமையான தடைகளை விதித்துள்ளதுடன், பத்தாயிரக் கணக்கானவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் தற்போது இரகசிய சிறைக்கூடங்களிலும் மற்றும் சித்திரவதை கூடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மீதான மானியங்களை வெட்டி வரும் சிசி, தொழிலாள வர்க்கத்தை மேற்கொண்டும் வறுமைக்குள் தள்ளி வருகிறார். மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கான சிசி ஆட்சியின் ஆதரவும், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அதன் வன்முறைரீதியிலான விரோதமும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திடையே அதற்கு பரந்த ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளது. சார்லி ஹெப்டோ வாரயிதழ் இதழாளர்கள் மீதான இஸ்லாமிய துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கி சூட்டிற்குப் பின்னர் பாரிஸில் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட்ட "நானே சார்லி" ஆர்ப்பாட்டங்களில், சிசியின் பிரதிநிதிகள், ஹோலாண்டின் அழைப்பின் பேரில், கலந்து கொண்டனர். அல்-சிசி உடனான உடன்படிக்கையானது, வடக்கு ஆபிரிக்கா மற்றும் சாஹெலின் புவிசார் மூலோபாய கனிம வளங்களின் மீது தங்களின் கட்டுப்பாட்டை பேண மற்றும் விரிவாக்க, இஸ்லாமிக் அரசு (IS) குழுவுக்கு எதிராக பிரெஞ்சு மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தால் அல்ஜீரியா உட்பட ஆபிரிக்க அரசாங்கங்களுடன் அபிவிருத்தி செய்யப்படும் கூட்டணிகளின் பாகமாக உள்ளது. கடந்த ஆகஸ்டில், எகிப்தும் ஐக்கிய அரசு எமிரேட்ஸூம் (UAE), மேற்கத்திய ஆதரவிலான லிபிய அரசாங்கத்தையும் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் அச்சுறுத்திய இஸ்லாமிய போராளிகள் குழுவுக்கு எதிராக எண்ணெய் வளம்மிகுந்த லிபியா மீதான விமான தாக்குதல்களில் பங்கெடுத்தன. UAE விமானப்படையால் பயன்படுத்தப்படும் போர் விமானங்களில் பாதியை அமெரிக்க அரசாங்கம் வழங்குகிறது, மீதியை பிரான்ஸ் வழங்கி வருகிறது. பாலஸ்தீனத்திற்கு அத்தியாவசிய பண்டங்களைக் கொண்டு செல்ல எகிப்திலிருந்து பாலஸ்தீன வளாகத்திற்கு செல்லும் பதுங்கு குழிகளை மறிப்பதில் மற்றும் அழிப்பதில், காசாவின் குரல்வளையை நசுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையில் அல்-சிசியும் பங்கெடுக்கிறார். சிசி ஆட்சி தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கும் மற்றும், ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைக்குப் பின்னால் வரும் என்ற புரிதலின் மீது இந்த உடன்படிக்கை தங்கியுள்ளது. ராய்டரின் செய்தி வெளியீடு ஒன்று குறிப்பிட்டது, “குறிப்பாக வட-ஆபிரிக்காவில் ஜிஹாதிஸ்ட் குழுக்களுக்கு எதிரான சண்டையில் கெய்ரோவும் சரி பாரீஸூம் சரி இரண்டுமே, அவற்றின் புவிசார் அரசியல்ரீதியாக அந்த உடன்படிக்கை அவற்றிற்கு பொருந்தி இருப்பதாக இராஜாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்லாமிய போராளிகள் அண்டைநாடான லிபியாவைக் கட்டுப்பாட்டில் எடுத்து நேரடியாக எகிப்தை அச்சுறுவார்களோ என்ற அச்சத்தில் சிசி, எகிப்தின் இராணுவ தளவாடங்களை நவீனப்படுத்த பார்த்து வருகிறார்,” என்று எழுதியது. “எகிப்திற்கு உடனடியாக விமானங்கள் தேவைப்படுகின்றன,” என்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கமிட்டி தலைவர் பாட்ரிசியா ஆடம் தெரிவித்தார். “அதன் எல்லையில் என்ன நடந்து வருகிறது என்பதை நீங்கள் பார்த்தாலே போதுமானது. அவர்கள் குறிப்பாக லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதனால் கவலை கொண்டுள்ளனர்.” லிபியாவை அடித்தளமாக கொண்டுள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் மாலியை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த படைகளை வழங்கக்கூடும். அந்த யுரேனிய வளம் மிகுந்த பிரான்ஸின் முன்னாள் காலனியான சாஹெலின் பரப்பெல்லையில் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி வைக்க, ஆயிரக் கணக்கான துருப்புகளை பிரான்ஸ் நிலைநிறுத்தி உள்ளது. ரஃபாலை அது சந்தைப்படுத்துவதுடன் சேர்ந்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் போர்களில் பிரான்ஸ் சண்டையிட்டு வருகின்ற நிலையில், பிரான்ஸின் பாதுகாப்பு தொழில்துறையோ அதிகரித்துவரும் போரினால் விமானத்தின் சாதனையளவிலான நீண்ட போட்டாபோட்டியிலிருந்து இலாபம் பெற முயன்று வருகிறது. 2004இல் முதன்முதலில் பிரெஞ்சு விமானப்படையின் சேவையில் இறக்கப்பட்ட ரஃபால், ஆப்கானிஸ்தானில் (2007-2012), லிபியாவில் (2011), மாலியில் (2013இல் இருந்து) மற்றும் ISக்கு எதிராக ஈராக்கில் (கடந்த செப்டம்பரில் இருந்து) நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, கட்டார் மற்றும் மலேசியா உட்பட பல அரசாங்கங்களுடன், ரஃபால் விற்பனைகளுக்கு சாத்தியமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் எகிப்திய உடன்படிக்கைக்கு முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகியவற்றின் ஒப்பந்தங்களால் தோற்கடிக்கப்பட்தால், பிரெஞ்சு இராணுவம் மட்டுமே ரஃபாலின் ஒரே வாடிக்கையாளராக இருந்து வந்தது. எதிர்நோக்கப்பட்ட பல வெளிநாட்டு வாங்குபவர்களுடன் விற்பனை உடன்படிக்கைகள் எட்ட முடியாமல் போனதற்குப் பின்னர் மற்றும் இராணுவ வரவு-செலவு வெட்டுக்களை முகங்கொடுத்த நிலையில், தற்போதைய பிரெஞ்சு இராணுவ படைகளின் பிரதான குண்டுவீச்சு போர் விமானமாக விளங்கும் ரஃபாலின் உற்பத்தியே பொறிந்து போவதற்கான ஒரு சாத்தியக்கூறை பாரீஸ் முகங்கொடுத்தது. பிரெஞ்சு ஆயுதப்படைகள் 320 ரஃபால்கள் வாங்கும் அதன் திட்டத்தை 2013இல் 225ஆக குறைத்தது, இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 11 விமானங்கள் உற்பத்தியில் வைத்திருப்பதும் அச்சுறுத்தப்பட்டது. எகிப்திற்கு விற்பனை செய்ய விமானத்துறை நிறுவனம் Dassaultஉம், அத்துடன் பாதுகாப்புத்துறை மின்னணு நிறுவனம் Thales மற்றும் விமான எந்திர உற்பத்தியாளர் Safran ஆகியவையும் ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்தன என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. |
|