World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Obama, Cameron discuss war and state repression following Charlie Hebdo attack

சார்லி ஹெப்டோ தாக்குதலைத் தொடர்ந்து ஒபாமா மற்றும் கேமரூன், போர் மற்றும் அரச ஒடுக்குமுறையை விவாதிக்கின்றனர்

By Chris Marsden and Jerry White
16 January 2015

Back to screen version

மத்திய கிழக்கில் அவ்விரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளையும், ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்டு நேட்டோ ஆத்திரமூட்டல்களையும் மற்றும், பிரான்சில் சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் பெரும் உள்நாட்டு ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கிறார்.

அவர்களது சந்திப்பிற்கு முன்னதாக ஒபாமாவும் கேமரூனும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், இது இலண்டனில் உள்ள ரூபெர்ட் முர்டோக்கிற்கு சொந்தமான Timesஇல் பிரசுரிக்கப்பட்டது. “நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கும், ரஷ்யாவின் ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்பதற்கும் மற்றும் நம்முடைய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்குரிய எமது முயற்சியைத் தொடர்வதற்கும், எமது மக்களுக்கு உகந்த பாதுகாப்பு மற்றும் செல்வ வளமையை முன்னெடுப்பதை நாங்கள் தொடர்வோம்,” என்று அவ்விருவரும் அறிவித்தனர்.

தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி சித்திரவதைகளைச் செய்துள்ள, பொய்களின் அடிப்படையில் போர்களைத் தொடுத்துள்ள மற்றும் அவர்களது சொந்த மக்களுக்கு எதிராகவே பொலிஸ் அரசு முறைமைகளை நடைமுறைப்படுத்தி உள்ள அவ்விரு நாடுகளின் இரண்டு அரசு தலைவர்களும், “பேச்சு சுதந்திரம் வாயடைக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று எழுதினர். “நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குரிய நமது ஆற்றல் நமது பொருளாதார பலத்திலும் மற்றும் நாம் போற்றி பேணி வைத்திருக்கும் மதிப்புகளிலும்அதாவது கருத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பலமான ஜனநாயக அமைப்புகள் இவற்றில் வேரூன்றி உள்ளது,” என்பதையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

நாங்கள் தனித்தனியாக கொள்கை வெறியர்களை முகங்கொடுத்தாலும் சரி அல்லது அல் கொய்தா, இஸ்லாமிக் அரசு (ISIS) அல்லது போக்கோ ஹரம் போன்ற பயங்கரவாத அமைப்புகளை முகங்கொடுத்தாலும் சரி, நாங்கள் தீவிரவாதிகளுக்கு அடிபணிய மாட்டோம். நாங்கள் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான கொலைகாரர்களையும், அவர்களது திரிக்கப்பட்ட சித்தாந்தங்களையும் தோற்கடிப்போம், பெஷாவரில் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் ஆகட்டும், அல்லது வடக்கு நைஜீரியாவில் தற்கொலைப்படை குண்டுதாரிகளாக மாற பலவந்தப்படுத்தப்பட்ட பெண்கள் ஆகட்டும், அவை அப்பாவி மக்களின் படுகொலைகளை நியாயப்படுத்த முயல்கின்றன,” என்று தொடர்ந்து அந்த அறிக்கை குறிப்பிட்டது.

உண்மையில் மத்திய கிழக்கின் சூறையாடல் பெரிதும் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் செய்யப்பட்டன என்பதை அவ்விருவரும் குறிப்பிடவில்லை, அவை, துருக்கி மற்றும் அவற்றின் வளைகுடா கூட்டாளிகளுடன் சேர்ந்து லிபியா, சிரியா மற்றும் ஏனைய நாடுகளில் ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுக்காக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கின; அவர்களை ஆயுதபாணி ஆக்கின.

உக்ரேனைப் பொறுத்த வரையில், ஒபாமாவும் கேமரூனும் மேற்கத்திய ஆதரவிலான கடந்த பெப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இட்டுச் சென்ற அதிதீவிர தேசியவாதிகளையும் மற்றும் நவ-நாஜிக்களை ஆதரித்தனர். அந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் தான் விக்டர் யானுகோவிச் தூக்கியெறியப்பட்டு, ஒரு நேட்டோ-சார்பான மற்றும் ரஷ்யாவுக்கு விரோதமான ஆட்சி நிறுவப்பட்டது. ரஷ்யாவினது எல்லைகள் வரை நேட்டோ படைகளை விஸ்தரித்தமை பூமியையே ஒரு அணுஆயுத உலகப் போருக்குள் கொண்டு வர அச்சுறுத்தி உள்ளது.

குறிப்பாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற அமெரிக்க இணைய சேவை நிறுவனங்கள் இங்கிலாந்து உளவுவேலை முகமைகளுடன் இன்னும் மிக நெருக்கமாக வேலை செய்வதற்காக அவற்றின் மீது "அழுத்தம்" அளிப்பதில் கேமரூன் ஒபாமாவின் ஒத்துழைப்பைக் கோரி வருகிறார். அவர் MI5, MI6 மற்றும் அரசு தகவல் தொடர்பு தலைமையகம் (GCHQ) போன்ற பிரிட்டிஷ் உளவுவேலை முகமைகளுக்கு மறை-குறியீட்டு தகவல் தொடர்புகளை அணுகும் அதிகாரம் வழங்கக்கூடிய ஒரு "மின்னணு தகவல் சேகரிப்பு சாசனம்" எனும் தகவல் தொடர்பு சட்ட மசோதாவை அமல்படுத்த வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒபாமாவும் சரி கேமரூனும் சரி இருவருமே, தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் மீது தாக்குதல்களை முன்னெடுத்தமைக்காகவும், அதேவேளையில் 2008 பொறிவிற்குப் பொறுப்பான நிதியியல் குற்றவாளிகளை செழிப்பாக்கிய கொள்கைகளைப் பின்தொடர்வதற்காகவும் அவரவர்களது சொந்த நாடுகளில் வெகுஜனங்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.

பிரெஞ்சு அரசாங்கம், அதன் சமதரப்புகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போலவே, இப்போது வெளிநாடுகளில் இராணுவவாதத்தை நியாயப்படுத்தவும் மற்றும் உள்நாட்டு எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" பயன்படுத்தி வருகிறது. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இவரது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகவும் மதிப்பிழந்துள்ள நிலையில் நாடெங்கிலும் 10,000 துருப்புகளை அனுப்பி உள்ளதோடு, பாசிச தேசிய முன்னணியின் தலைவரை சமாதானப்படுத்தியதுடன், ஈராக்கில் விமான தாக்குதல்களை விரிவாக்கி பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவுடன் அதன் கூட்டு கடற்படை பிரசன்னத்தை விரிவாக்கி உள்ளார்.

NBC Nightly News செய்தியின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி "தீவிர கொள்கையுடைய தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுறவு" குறித்து விவாதிக்க இன்று பாரீஸில் ஹோலாண்டை சந்திக்க உள்ளார்.

ஐரோப்பா எங்கிலும் பாதுகாப்பு ஒடுக்குமுறை பாரீஸ் தாக்குதலைப் பின்தொடர்ந்தது. வியாழனன்று பெடரல் பொலிஸின் சிறப்பு துணைஇராணுவப்படை பிரிவுகள் ஜேர்மன் எல்லைக்கு மிக அருகில் கிழக்கு பெல்ஜிய நகரமான வேர்வியே (Verviers) இல் இரண்டு பேரை கொன்றதுடன், மூன்றாவது ஒரு நபரைக் கைது செய்தது. சிரியாவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒரு ஜிகாதிஸ்டுகளின் குழுவை பொலிஸ் இலக்கில் வைத்திருந்ததாக செய்தியாளர்களுக்கு தெரிவித்த அரசு வழக்கறிஞர் எரிக் வொன் டெர் சிப்ட், அந்த பொலிஸ் தாக்குதல் பெல்ஜியத்தில் நிகழவிருந்த "பெரியளவிலான" பயங்கரவாத தாக்குதல்களை தடுத்துவிட்டதாக, எந்தவித ஆதாரமும் வழங்காமல், தெரிவித்தார். அடையாளம் தெரியாத அந்த இரண்டு சந்தேகத்திற்குரியவர்களும் உயிர்பறிக்கும் ஆயுதங்களுடன் பொலிஸ் மீது சுடத் தொடங்கிய பின்னர் தான் அவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெல்ஜியத்தின் சம்பவங்கள் "ஐரோப்பாவில் இஸ்லாமிய தீவிரவாத பயங்கரத்திடமிருந்து நாம் முகங்கொடுக்கும் பெரும் அபாயத்திற்கு மற்றுமொரு அறிகுறியாக தோன்றுகிறது. நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி உள்ளது. இந்த அரக்கனை நாம் அழிக்க வேண்டுமானால், நாம் எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியுள்ளது,” என்று வாஷிங்டனிலிருந்து கேமரூன் செய்தியாளர்களிடையே கூறியதாக BBC குறிப்பிட்டது.

பிரான்சில், அதன் அட்டைப் பக்கத்தில் மற்றொரு ஆத்திரமூட்டும் முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரத்தை கொண்ட சார்லி ஹெப்டோவின் சமீபத்திய பதிப்பை, மேலும் அதிகமாக பிரசுரிக்க ஹோலாண்ட் அரசாங்கம் நிதி வழங்கியது. அரசு, பேச்சுரிமை மீது அடக்குமுறையை நடத்தி வருகின்ற நிலையிலும் கூட, அந்நாட்டின் பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் அந்த முதல் பக்கத்தை திரும்ப திரும்ப காட்டி, பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு கடமைப்பாடாக அறிவித்து நியாயப்படுத்தின.

நவம்பர் 13, 2014இல் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின்னர் முதல் முறையாக, பயங்கரவாத நடவடிக்கைகளை "நேரடியாக தூண்டிவிடுவது" அல்லது "பகிரங்கமாக அனுதாபம் காட்டுவது" ஆகிய இரண்டையும் குற்றகரமாக்கும் ஒரு சட்டத்தை பிரான்ஸ் அமல்படுத்தி உள்ளது, இதன் கீழ் 75,000 யூரோ அபராதத்துடன் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும். சமூக வலைத் தளங்களில் ஆகட்டும், ஒரு வலைப்பதிவு அல்லது வீடியோவில் ஆகட்டும், இணையத்தில் வெளியிடப்படும் பயங்கரவாதத்திற்கான அனுதாபங்களுக்குரிய தண்டனைகள், ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையாகவும் மற்றும் 100,000 அபராதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களைப் பெருமைப்படுத்திய குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக 50க்கும் மேற்பட்டவர்கள் விசாரணையின் கீழ் உள்ளனர் என்பதுடன், இணைய தளங்களை இலக்கில் வைக்க பிரதம மந்திரி மானுவேல் வால்ஸ் கூடுதல் அதிகாரங்களையும் கோரி வருகிறார்.

பிரிட்டனில், The Timesஇல் இருந்து பெயரளவிலான தாராளவாத Guardian வரையில், பல செய்தியிதழ்கள் சார்லி ஹெப்டோவின் அட்டைப்படத்தைக் காட்டுவதில் சேர்ந்து கொண்டன. ஜேர்மனியில், Deutsche Welle, Der Spiegel, Frankfurter Allgemeine Zeitung, Süddeutsche Zeitung, Frankfurter Rundschau மற்றும் பசுமை கட்சியோடு இணைப்பு கொண்ட Die Tageszeitung ஆகியவை சிறப்பாக அந்த அட்டைப்பட காட்சியை எடுத்துக்காட்டின.

Australianஆல் பிரசுரிக்கப்பட்ட அந்த படம், பிரதம மந்திரி டோனி அப்போட்டால் "எனக்கே கூட அந்த நையாண்டி சித்திரம் பிடித்திருக்கிறது" என்று கூற பயன்பட்டது.