World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political fraud of Syriza’s referendum on EU austerity in Greece

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீது கிரீஸில் சிரிசாவின் வெகுஜன வாக்கெடுப்பு எனும் அரசியல் மோசடி

Alex Lantier
3 July 2015

Back to screen version

கடந்த சனியன்று கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்ததற்கு பின்னர், அந்த ஒட்டமொத்த முயற்சியும் ஓர் அரசியல் மோசடி என்பது அம்பலப்பட்டுள்ளது. வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு மேலும் மண்டியிடுமாறு செய்வதற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெகுஜன வாக்கெடுப்பிற்கு முன்னதாக, சிரிசா அரசாங்கம் முழு அளவில் பின்வாங்கி உள்ளது. “ஆம்" என்பதற்கு சார்பாக வாக்குகள் கிடைத்தால், சிப்ராஸ் அரசாங்கம் பதவியை இராஜினாமா செய்து, ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகள் என்னவாக இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு மிக பகிரங்கமான வலதுசாரி ஆட்சிக்கு வழிவிட தயாராகி வருகிறது. “வேண்டாமென" வாக்கிடுமாறு அழைப்புவிடுத்த அவரது திங்கட்கிழமை உரையில், சிப்ராஸ் "ஆம்" எனும் வாக்குகள் வென்றால் அதற்குப் பின்னர் அவரது அரசாங்கம் பதவியிலிருந்து விலகும் என்பதற்கு சமிக்ஞை காட்டினார், “நாங்கள் அதை [வாக்குகளை] மதிப்போம், ஆனால் அதுபோன்றவொரு தீர்ப்புக்கு எங்களால் சேவை செய்ய இயலாது,” என்றவர் அறிவித்தார்.

வேண்டாம்" என்ற வாக்குகள் வென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிக்கன நடவடிக்கைகளை பேரம்பேசுகையில் அவரது நிலைப்பாட்டை பலப்படுத்திக் கொள்ள அதை அவர் பயன்படுத்துவார் என்பதை சிப்ராஸ் புதனன்று அளித்த தேசிய உரையில் அறிவித்தார். ஆனால் 30 பில்லியன் யூரோ பிணையெடுப்புக்கு பிரதியீடாக, அவர் தோற்றப்பாட்டாளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் திணிக்க விரும்புவதை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார். அவர் ஆழ்ந்த ஓய்வூதிய வெட்டுக்களை மெதுவாக படிப்படியாக செய்வதற்கும் மற்றும் கிரேக்க தீவுகள் மீதான விற்பனை வரிகளில் (VAT) பின்னோக்கி செல்லும் அதிகரிப்பிற்கு பகுதியாக விலக்கீட்டுரிமை வழங்குவதற்கும் மட்டுமே கோரி வருகிறார்.

அவரது வெகுஜன வாக்கெடுப்பின் உள்ளடக்கம் குறித்து உழைக்கும் மக்களுக்கு சிப்ராஸ் ஒருவரியில் விவரித்தால், இப்படி தான் அவர் கூற வேண்டியிருக்கும்: தலை விழுந்தால் ஐரோப்பிய ஒன்றியம் ஜெயிக்கும், பூ விழுந்தால் நீங்கள் தோற்பீர்கள். ஐந்தாண்டுகால சிக்கன நடவடிக்கையை நிறுத்துவதாக வாக்குறுதி அளித்து சிரிசா தேர்தலில் வெற்றி பெற்று வந்த சில மாதங்களிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடிபணிவதற்கு அரசியல் மூடிமறைப்பை வழங்குவதற்காக இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. சிரிசா எதிர்த்து போராட நினைத்திருந்தால், கிரேக்க மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை மீது, ஒரு வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.

அந்த வெகுஜன வாக்கெடுப்பு, கிரேக்க தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற தாக்குதலுக்கு ஒரு போலி-ஜனநாயக போர்வையை வழங்கி, சிக்கன நடவடிக்கைக்கு வாக்குகளை வழங்கும் நிலைமைகளை உருவாக்குவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூர்க்கமான சிக்கன நடவடிக்கைக்கு கடந்த ஆண்டுகளில் பரந்த வெறுப்பு நிலவுகிற போதினும், சிரிசாவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் மக்கள் எதிர்ப்பை குழப்பவும் மற்றும் குலைக்கவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்துள்ளனர்.

அனுமானிக்க தக்கவாறே, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான சிக்கன நடவடிக்கைக்கும் மற்றும் கிரீஸில் ஆட்சி மாற்றத்திற்கும் அழுத்தமளித்து வருகிறது. புதனன்று, ஒரு அநாமதேய உயர்மட்ட ஜேர்மன் பழமைவாதி இலண்டனை மையமாக கொண்ட டைம்ஸிற்கு கூறுகையில், “ஆம்" என்ற வாக்குகள் ஜெயித்து, சிப்ராஸ் மற்றும் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் இருவரும் இராஜினாமா செய்தால் ஒழிய, கிரீஸ் உடனான எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையையும் பேர்லின் தடுக்கும் மற்றும் யூரோவிலிருந்து அதை வெளியேற்றும் என்றார்.

ஆம்" வாக்குகள் ஜெயித்தால் அவரும் இராஜினாமா செய்யவிருப்பதாக உறுதியளித்து வாரௌஃபாகிஸ் நேற்று விடையிறுத்தார். ஐரோப்பிய ஒன்றியம் என்ன சிக்கன பொதியைக் கோரினாலும் அதை அவருக்குப் பின்வருபவர் நிறைவேற்றுவதற்கு அவர் உதவுவார் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். வாரௌஃபாகிஸ் இப்போதும் "வேண்டாம்" என்ற வாக்குகளுக்கு அழைப்பிடுவதாக கூறக்கொண்டாலும், நேற்றைய முன்நாள் அவரது நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாக மாற்றிக் கொண்டார். நிதி அமைச்சகத்தின் மீது தொங்கவிடப்பட்டிருந்த சிக்கன நடவடிக்கை மற்றும் மிரட்டல் வேண்டாம்" என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை நீக்குவதற்கு அவர் பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.  

அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, வேறொன்றுமில்லை தமது பதவியை இராஜினாமா செய்வதாக கூறிய வாரௌஃபாகிஸின் அறிவிப்பு, சிரிசாவின் அவநம்பிக்கைவாதம் மற்றும் ஒழுக்கக்கேட்டை பகிரங்கமாக எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் தோல்வியை மட்டும் எதிர்நோக்கவில்லை, அவர்கள் கூடுதலாகவோ குறைவாகவோ தோல்வியை வரவேற்கிறார்கள். மேலும் அவ்வாறு செய்வதன் மூலமாக அதிலிருந்து நிறைய பணம் பார்க்க முடியுமென தெரிந்து அவ்வாறு அவர்கள் செய்கிறார்கள் என்ற இந்த முடிவைத் தான் சிரிசா நிர்வாகிகளின் பேச்சைக் கேட்கும் ஒருவர் தீர்மானிக்க முடியும். இவ்விதமான முதலாளித்துவ-சார்பு, போலி-இடது கட்சியின் அரசியல் போலித்தனம் மற்றும் அழுகியநிலைக்கு இதுவொரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

முரண்பாடான சமிக்ஞைகளை சிரிசா வெளிப்படுத்துவது அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு நிலவும் பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும் ஓர் இடதுசாரி கட்சியைப் போல காட்டிக்கொண்டு, அது ஜனநாயக வார்த்தைஜாலங்களை பயன்படுத்தும் ஒரு முதலாளித்துவ அமைப்பாகும். எவ்வாறிருப்பினும் அது யூரோ செலாவணி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலாக ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கட்டமைப்புகளுக்கு ஆழமாக பொறுப்பேற்றுள்ளது. அதன் பங்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிக்கன நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவித எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளாது, மேலும் சிரிசாவின் சிக்கன-விரோத தோரணை நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் வெற்று அரசியல் அரங்கமாக அம்பலப்பட்டுள்ளது.

அதிகாரத்தை ஏற்றதும், சிரிசா கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவிய சிக்கன நடவடிக்கைக்கு விரோதமான எதிர்ப்பைத் தணிக்க அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்துள்ளது. சிப்ராஸ் மற்றும் வாரௌஃபாகிஸ், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பலனளிக்கும் ஓர் உடன்படிக்கையை எதிர்பார்த்து, ஒருசில வாரத்திற்கு ஐரோப்பிய மூலதனங்களைச் சுற்றியே பறந்தார்கள், பின்னர் சிரிசா எதற்கு எதிராக பிரச்சாரம் செய்திருந்ததோ அந்த சிக்கன புரிந்துணர்வை நீடித்து ஒரு பெப்ரவரி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அதற்கு பின்னரும் கிரீஸிற்கு கடன் பாய்ச்சுவதை மீட்டமைக்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்ததும், சிரிசா அதன் கடன் வழங்குனர்களுக்கு கடன்களைத் திரும்ப செலுத்துவதற்காக இந்த வசந்தகாலத்தில் பொதுக் கருவூலங்களில் இருந்து பில்லியன் கணக்கான யூரோக்களைக் கொள்ளையடித்தது.

இந்த நிதிகள் இறுதியில் கடந்தவாரம் தீர்ந்துபோனதும், கிரேக்க வங்கிகளை மூடி மற்றும் அரசு உடனடியான பொறிவை முகங்கொடுத்த நிலையில் அந்த பொருளாதார கொந்தளிப்பின் நிலைமைகள், அனேகமாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் பதட்டத்துடன் மண்டியிட வேண்டியதாக இருந்திருக்கும் என்பதிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள சிரிசா அதன் இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தது. அதுதான் அவர்களது குறிக்கோளாகவே இருந்தது என்று சில கிரேக்க அதிகாரிகளே கூட தெரிவித்தனர். கிரீஸிற்கு அவர்களின் பிணையெடுப்பை நிறுத்திவிட்டு, கிரீஸை யூரோவிலிருந்து வெளியேற்ற அச்சுறுத்தியதன் மூலமாக ஐரோப்பிய அதிகாரிகள் விடையிறுத்ததும், அதிர்ச்சியடைந்த வாரௌஃபாகிஸ் அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னரே சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்படிக்கையை எட்ட விரும்புவதாகவும், இறுதியில் "ஆம்" என்று வாக்களிக்க பிரச்சாரம் செய்ய விரும்புவதாகவும் விடையிறுத்தார்.

சிரிசாவின் கோழைத்தனமும், நேர்மையின்மையும் அது பிரதிநிதித்துவம் செய்யும் கிரேக்க முதலாளித்துவத்தின் மற்றும் தனிச்சலுகைபெற்ற மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளது கண்ணோட்டத்திற்கு அரசியல் வெளிப்பாட்டை வழங்குகின்றன. யூரோவிலிருந்து வெளியேற்றப்படுவதும் மற்றும் ஒரு பலவீனமான கிரேக்க தேசிய நாணயத்திற்கு திரும்புவதும் அவர்களது வங்கி கையிருப்புகள் மற்றும் பங்கு விலைகளைப் பாதிக்குமென அஞ்சும் இத்தகைய அடுக்குகள், உத்வேகத்தோடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவைப் பாதுகாக்கின்றனர். இத்தகைய மனோபாவங்கள் சிரிசாவிற்குள்ளேயே இருக்கின்ற தனிச்சலுகைபெற்ற நாடாளுமன்றவாதிகள், கல்வித்துறையாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

சிரிசா அரசாங்கமும் மற்றும் கிரேக்க வெகுஜன வாக்கெடுப்புக்கான அழைப்பும், கிரேக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் ஆழ்ந்த அனுபவமாகும். ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், செல்வாக்குமிகுந்த மத்தியதர வர்க்கத்திற்கு சேவை செய்யும் சிரிசா மற்றும் அதன் சர்வதேச கூட்டாளிகளான ஸ்பெயினில் பெடெமோஸ், அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரான்சில் புதிய முதலாளித்து-எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி போன்ற கட்சிகளின் அரசியல் திவால்நிலையை நேரடியாக பார்த்து வருகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் அவர்களின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையை வைக்கையில், கிரேக்க தொழிலாளர்களின் பரந்த பிரிவுகள் "வேண்டாம்" என்று வாக்களிக்க விரும்புகின்றனர். எவ்வாறிருந்த போதினும், சிரிசாவிற்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே, அதுபோன்றவொரு வாக்கு அர்த்தத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளுக்கு ஒரு நிஜமான அடியை வழங்கும். வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், கிரீஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு அதையொரு சாக்காக பயன்படுத்தும் என்பது வெளிப்படையாக உள்ளது.

ஐரோப்பிய முதலாளித்துவம் மற்றும் சிரிசா போன்ற அதன் போலி-இடது பாதுகாவலர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதே அதுபோன்றவொரு போராட்டத்தை நடத்துவதற்கு மையத்திலுள்ள முன்நிபந்தனையாகும். சிரிசா போன்ற செல்வாக்குமிகுந்த மத்தியதர வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான கருவிகள் தொழிலாள வர்க்கத்திற்கு பேரிடர்களை அல்லாமல் வேறொன்றையும் வழங்க முடியாது.