World Socialist Web Site www.wsws.org |
On eve of referendum Rumbles of military coup as Greek workers demand end to EU austerity வெகுஜன வாக்கெடுப்பின் தறுவாயில் கிரேக்க தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையை நிறுத்த கோருகையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி பற்றிய முழக்கம் கேட்கின்றதுAlex
Lantier வெள்ளியன்று மத்திய ஏதென்ஸின் வீதிகளில் சிக்கன நடவடிக்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளமென திரண்டதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், சில ஓய்வூபெற்ற கிரேக்க இராணுவ அதிகாரிகள், "வேண்டாமென" வாக்களிக்குமாறு அறிவித்த பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸின் அழைப்பை எதிர்த்து, ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகள் மீதான ஞாயிறன்று வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டும்" என வாக்களிக்குமாறு பகிரங்கமாக அழைப்புவிடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கையை நிராகரிக்கும் பெருந்திரளான தொழிலாளர்களுக்கும் மற்றும் முக்கிய இராணுவ பிரமுகர்களின் அறிவித்தல்களுக்கும் இடையிலான முரண்பாடு இந்தளவிற்கு கூர்மையாக ஒருபோதும் இருந்திருக்காது. ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரியும் மற்றும் ஒருமுறை தலைமை கிரேக்க இராணுவ தளபதியாக இருந்தவருமான ஓய்வூபெற்ற தளபதி Fragkoulis Fragkos, “ஞாயிறன்று வேண்டும்" என்று வாக்கிடுவதற்கு "பலமாக" அழைப்புவிடுத்தார். 2011 இல், ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்த வதந்திகளுக்கு இடையே அப்போதைய பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ ஆல் Fragkos பதவியிறக்கப்பட்டார். தெளிவாக சிப்ராஸைச் சுட்டிக்காட்டி, Fragkos கூறுகையில், “தமது சொந்த கட்சி நலன்களை முன்னெடுத்து வருகின்ற எவ்வித ஆதாரமற்ற மற்றும் வரலாற்றுரீதியில் அறிவீனமானவரால் [அரசியல்வாதியால்], கிரேக்கர்களாகிய நமது இலக்கணமாக எப்போதும் இருந்துள்ள தார்மீக மதிப்புகளும் மற்றும் கொள்கைகளும் பேரம்பேசப்படக் கூடாது,” என்றார். ஓய்வூபெற்ற 65 உயர்மட்ட அதிகாரிகளின் ஒரு குழு அவர்களது “தந்தைநாடு மற்றும் தேசியக்கொடி மீதான சத்தியப்பிரமாணத்தை" மேற்கோளிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டு, “தனிமைப்படுவதை தேர்ந்தெடுப்பதன் மூலமாக, நாம் தந்தைநாட்டையும் மற்றும் அதன் எதிர்காலத்தையும் ஆபத்திற்குட்படுத்துகிறோம்,” என்று எச்சரித்தனர். அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது: “நமது நாட்டின் பலம், நம்மிடமிருக்கும் மிக முக்கியமானதாகும், இது ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலிருந்து நாம் வெளியேறுவது என்பது நமது நாட்டை பலவீனப்படுத்தும். நமது தரப்பில் இருந்த கூட்டாளிகளை நாம் இழப்போம். நாம் வரலாற்றுரீதியிலும் மற்றும் கலாச்சாரரீதியிலும் நாம் சொந்தமாக இருந்த அமைப்புகள் மற்றும் குழுக்களிடமிருந்து ஆதாயங்களைப் பெற்றோமோ அந்த பலத்தை இழந்துவிடுவோம்.” இத்தகைய அறிவிப்புகள் ஒரு பாரிய அரசியல் மிரட்டல் நடவடிக்கையாகும். சிஐஏ ஆதரவுடன் இருந்த தளபதிகளின் இராணுவ ஆட்சி பொறிந்து வெறும் 40ஆண்டுகளுக்குப் பின்னர், நன்கு-இணைந்துள்ள அதிகாரிகள் நடுநிலைமையின் எல்லாவிதமான பாசாங்குத்தனத்தையும் ஒதுக்கி வைத்து, மக்களின் பெரும் பிரிவுகளுக்கும் மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனின் நிலைப்பாட்டுக்கு அவர்களது ஆதரவை அறிவித்துள்ளனர். கிரேக்க அதிகாரிகளின் அறிக்கைகளது முக்கியத்துவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமானால், ஒருவர் 1967 ஆட்சிகவிழ்ப்பு சதியை நினைவுகூர வேண்டும். அது ஓர் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மூர்க்கமான இராணுவ ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது, அந்த ஆட்சி 1974 வரையில் ஆட்சியில் இருந்தது. தொழிலாள வர்க்க போராட்டத்தை நசுக்குவதும், கிரீஸின் வெளியுறவு கொள்கையை நேட்டோ மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே நடுநிலைமை நோக்கி திருப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் முன்கூட்டியே தடுப்பதுமே அதன் நோக்கமாக இருந்தது. அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, சிஐஏ உடன் தொடர்பில் இருந்த உயர்மட்ட அதிகாரி தளபதி George Papadopoulos தலைமையில் நடந்தது, அவர் குறைந்தபட்சம் 10,000 அரசியல் எதிர்ப்பாளர்களைச் சுற்றிவளைப்பதை மேற்பார்வையிட்டார், அவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வாரம், மூத்த ஜேர்மன் அதிகாரிகள் கூறுகையில் சிப்ராஸின் சிரிசா கட்சி தலைமையிலான அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்காக கிரேக்க வெகுஜன வாக்கெடுப்பில் "வேண்டும்" எனும் வாக்குகளைப் பெற செய்வதே அவர்களின் நோக்கமென்பதைத் தெரிவித்தார்கள். கெய்ரோ கிரேக்க ஆயுதப்படைகளுடன் கூட்டு இராணுவ ஒத்திகைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் இரத்தக்கறைபடிந்த எகிப்திய சர்வாதிகாரி ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-சிசி ஐ பேர்லினுக்கு வரவழைத்து சிப்ராஸின் பாணியிலேயே ஓர் எச்சரிக்கை செய்தியை அனுப்பியிருந்தார். அதற்கடுத்து பேர்லின் சிசி ஆட்சியால் வழங்கப்பட்ட ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மீது அல் ஜஜீரா இதழாளர் அஹ்மத் மன்சூரைக் கைது செய்தது. கிரேக்க இராணுவத்திலிருந்து வரும் அறிக்கைகள், மன்சூர் கைது செய்யப்பட்ட பின்னர் உலக சோசலிச வலைத்தளம் செய்த எச்சரிக்கையை நிரூபிக்கின்றன. “இது, இராணுவ சர்வாதிகாரங்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுடன் பகிரங்கமாக ஒத்துழைப்பதற்கு அது தயாராக உள்ளது என்பதற்கு பேர்லினிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு கணக்கிடப்பட்ட சமிக்ஞையாகும்… இந்த தகவலை பெறவேண்டியவர்களாக பார்க்கப்படுபவர்களில் ஒருவர், கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் ஆவார்,” என்று உலக சோசலிச வலைத் தளம் எழுதியது. ஐரோப்பிய ஒன்றியம், நிதியியல் மூலதனத்தின் ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரியாக முன்பினும் அதிக பகிரங்கமாக மேலெழுந்து வருகிறது. பேர்லின் மற்றும் புருசெல்ஸின் ஒத்துழைப்புடன் கிரேக்க அதிகாரிகள் வெகுஜன வாக்கெடுப்பில் தலையீடு செய்வார்கள் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் கிரீஸ் சம்பவங்களை ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான போரின் பாகமாக, அவசியமானால் அரசு வன்முறை மற்றும் ஒடுக்குமுறை கருவிகளைக் கொண்டு நடத்துவதற்குப் பார்க்கிறார்கள். வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளின் கட்டளைகளுக்கு எவ்விடத்திலும் எந்தவொரு சவாலையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை கிரீஸை உதாரணமாக கொண்டு உலகுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறார்கள். பேர்லின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை லெனினின் மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது. “நிதி மூலதனம், சுதந்திரத்திற்காக அல்ல, மேலாதிக்கத்திற்காக போராடுகிறது,” என்பதை கண்டுணர்ந்த அவர், “அரசியல் பிற்போக்குத்தனம் அதன் பாதை முழுவதிலும் ஏகாதிபத்தியத்தின் ஒரு குணாம்சமாக ஆகிவிடுகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். ஏகாதிபத்தியம் இலக்கில் வைக்கப்பட்ட நாடுகளின் பிற்போக்குத்தனமான வர்க்கங்களுக்குள் ஆதரவைத் தேடுகிறது. அவ்விதத்தில் தான் கிரீஸில் மத்தியதர வர்க்கத்தின் உயர்மட்ட அடுக்குகளில் உள்ள அதன் கூட்டாளிகளுடனும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துடனும் அது நிற்கிறது. கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள். அதாவது ஒருபுறம் பாரிய பெருந்திரளான தொழிலாளர்களும் மற்றும் இளைஞர்களும் சிக்கன நடவடிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர், மறுபுறம் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன், இராணுவத்துடன் சேர்ந்து, செல்வசெழிப்பான வியாபாரிகளும் மற்றும் தொழில் வல்லுனர்களும் தாக்குதலில் உள்ளனர். இவை கிரீஸில் நிலவும் கூர்மையான மற்றும் சமரசப்படுத்தவியலாத வர்க்க பிளவை வெளிப்படையாக காட்டுகிறது. இத்தகைய சம்பவங்கள் சிப்ராஸ் அரசாங்கத்தின் திவால்நிலையையே அம்பலப்படுத்துகின்றன. அதன் ஒட்டுமொத்த கொள்கையுமே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சமரசத்தை எட்ட முடியுமென்ற தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் கருத்தின் அடித்தளத்திலும் இருந்துள்ளது, அத்துடன் வேலைகள், கூலிகள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக சேவைகள் மீதான வக்கிரமான வெட்டுக்களுக்கு ஆதரவளிக்கும் கிரீஸிற்குள்ளேயே உள்ள சமூக அடித்தளத்திற்கு எதிரான ஒரு போராட்டம் இல்லாமலேயே, அதுபோன்ற கொள்கைகளைச் சிலகாலம் தள்ளிப்போட முடியும் என்ற கருத்தும் அடித்தளத்தில் இருந்தது. கிரேக்க மூலதனத்தின் பொருளாதார நலன்களுக்கு சவால்விடுக்க சிரிசா எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு மறுத்துள்ளது என்பது மட்டுமல்ல, அது அந்த அரசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக மக்களைப் பாதுகாக்க ஒரேயொரு அடியைக் கூட எடுக்கவில்லை. அதற்கு முரண்பட்ட விதத்தில், அது சுதந்திர கிரேக்கர்கள் (Anel) போன்ற தீவிர வலது சக்திகளை அதிகாரத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தி உள்ளது. சுதந்திர கிரேக்கர்கள் கட்சியின் தலைவரும், பாதுகாப்பு மந்திரியுமான பேனொஸ் கமெனொஸ், உள்நாட்டு எதிர்ப்பின் மீது ஒடுக்குமுறையை நடத்த இராணுவத்தைப் பயன்படுத்தவும் மற்றும் இராணுவம் கோரும் வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை கிட்டதட்ட முழுமையாக நேற்று ஒப்புக்கொண்டார். “நாட்டின் ஆயுத படைகள் உள்நாட்டு ஸ்திரப்பாடு, தேசிய இறையாண்மையின் பாதுகாப்பு, மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நாட்டினது கூட்டணிகளுடன் சம்பந்தப்பட்ட ஸ்திரப்பாடு ஆகியவற்றிற்கு உத்தரவாதமளிக்கும்,” என்று இராணுவ படைப்பிரிவுக்கு சிப்ராஸூடன் விஜயம் செய்த போது தெரிவித்தார். ஐயத்திற்கிடமின்றி சிப்ராஸ் அரசாங்கம், அதன் வெகுஜன வாக்கெடுப்பை அதன் சொந்த பின்வாங்கலுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேக்க முதலாளித்துவம் இரண்டினோடும் சேர்ந்திருப்பதற்கும் அரசியல் மூடிமறைப்பை வழங்குவதற்குரிய ஒரு வழிவகையாக கருதியது. “வேண்டும்" என்ற வாக்குகள் வெற்றிபெற்றால் ஒட்டுமொத்த அடிபணிவை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும், அதேவேளையில் "வேண்டாமெனும்" வாக்குகள் ஜெயித்தால், இந்த வாரம் சிப்ராஸ் அறிவித்ததைப் போல, அது சற்றே மாற்றியமைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கான ஒரு உடன்படிக்கையைப் பெறுவதற்கான மற்றொரு பலனில்லா முயற்சியில், பேரம்பேசும் மேசைக்குத் திரும்புவதற்கு ஒரு சாக்காக சேவை செய்யும். ஆனால் நேற்றைய பாரிய போராட்டங்கள் எடுத்துக்காட்டியதைப் போல, அந்த வெகுஜன வாக்கெடுப்புக்கான அழைப்பானது பொதுமக்கள் கருத்தில் பாரியளவில் தீவிரத்தன்மையை உண்டாக்கி உள்ளது. “வேண்டாம்" என்ற வாக்குகளுக்கு அழைப்புவிடுத்து வீதிகளுக்கு வந்திருந்த பெருந்திரளான தொழிலாளர்கள், அதுபோன்றவொரு வாக்கை சிக்கன நடவடிக்கை கொள்கைகளை நிறுத்துவதற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரும்புபிடியிலிருந்து உடைத்துக் கொள்வதற்குமான தொடக்கமாக பார்க்கிறார்கள். தொழிலாள வர்க்கம் சிரிசாவின் கொள்கைகளால் கட்டுண்டு கிடக்க முடியாது, அதன் நோக்கமே சிக்கன திட்டத்தின் மிகச்சிறிய அடையாள திருத்தங்களை செய்வதன் மூலம், ஐரோப்பிய வங்கியாளர்களின் சர்வாதிகாரம் மற்றும் கிரேக்க முதலாளித்துவத்தை சிறப்பாக பாதுகாப்பதாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தை குறித்தல்லாமல் அது இந்தளவிற்கு வேறெதையும் குறித்து அஞ்சவில்லை. அத்தகைய இயக்கத்திற்கு எதிராக தான் அது பொலிஸ் மற்றும் இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட தயாரிப்பு செய்துள்ளது. என்ன தேவைப்படுகிறதென்றால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான ஆதரவிற்கு பரந்தவிதத்தில் அழைப்பிடுவதும், அதனுடன் சர்வதேச நிதியியல் மூலதனத்தின் உள்ளூர் கூட்டாளிகளினது அதிகாரத்தை முறிக்க கிரீஸிற்குள்ளேயே மிக தீர்க்கமான நடைமுறைகளை இணைத்துக் கொள்வதும் ஆகும். கிரேக்க மக்களின் பாதுகாப்பிற்காக புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடங்குவது அவசியமாகும்: வங்கியியல் அமைப்புமுறை மற்றும் பிரதான தொழில்துறைகளை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவது, தேசிய கடனை தள்ளுபடி செய்வது, இராணுவத்தைக் கலைப்பது, மக்களுக்கு எதிராக இராணுவ சதிகளில் ஈடுபடும் அதிகாரிகளைக் கைது செய்வது, மற்றும் தொழிலாளர்களது அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது. |
|