World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greek government approves brutal austerity measures in proposal to EU கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்களித்த உத்தேசத் திட்டத்தில் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒப்புதலளிக்கிறதுBy Alex
Lantier ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு சென்ற ஞாயிறன்று மிகப்பாரிய “வேண்டாம்” என்ற கருத்துக்கணிப்பு வாக்களிப்பு கிட்டி ஒரு வாரம் கூட முடிவடைந்திராத நிலையில், நேற்று மாலை கிரீசின் சிரிசா தலைமையிலான அரசாங்கமானது ஒரு புதிய பிரம்மாண்ட 13 பில்லியன் யூரோ (14.34 பில்லியன் டாலர்)சிக்கன நடவடிக்கைத் தொகுப்புக்கு உடன்பட்டது. இந்த உத்தேசத் திட்டம் 2009 இன் பின்பகுதியில் கிரீஸின் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைச் செலுத்தம் தொடங்கிய காலம் முதலான மிக ஆழமான வெட்டுகளின் தொகுப்பாக இருக்கும். சிரிசா உடனான பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பத்தில் முன்வைத்த உத்தேச வெட்டுகளின் அளவான 8 முதல் 9 பில்லியன் யூரோக்கள் வெட்டுகளின் அளவையும் தாண்டிச் செல்வதாய் இது இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவை முன்னதாக நிர்ணயத்திருந்த நள்ளிரவு கெடுவுக்கு முன்னதாக அந்த ஸ்தாபனங்களின் முன்பாக 13-பக்க உத்தேசத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. வெட்டுகளுக்கான பிரதிபலனாக, கிரேக்க அரசாங்கம் 53.5 பில்லியன் யூரோக்கள் (59.2 பில்லியன் டாலர்கள்) கிரேக்க அரசுக்கான கடனுதவி அளிக்கவும், அதன் மூலம் அரச திவால்நிலையை தவிர்த்து யூரோ நாணய வலயத்திற்குள் தொடர அனுமதிக்கவும் கோருவதாகக் கூறப்படுகிறது. இந்த சிக்கன நடவடிக்கைகளில் பிற்போக்குத்தனமான VAT விற்பனை வரியை மிகக் கணிசமாக அதிகரிப்பது 2022 ஆம் ஆண்டுக்குள்ளாக ஓய்வுதிய வயதை 67 ஆக உயர்த்துவது ஆகியவையும் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக அட்டவணையிடப்பட்டிருந்த ஆண்டை விடவும் ஓராண்டு முன்னதாக, மிக ஏழ்மையான ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகைகளை நிறுத்துவது, அதாவது 2019 ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக நடந்தேற இருக்கிறது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படுவதான திட்டங்கள் நடந்தேறும். பெருநிறுவனங்களுக்கான வரிவிதிப்பு 29 சதவீதத்திற்குப் பதிலாக, சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டவாறு 28 சதவீதமாக குறைக்கப்படுவதும் இந்த உத்தேசத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனநாயக பொறுப்புறுதிக்கான ஒரு மாதிரி என சிரிசாவே அழைத்த மற்றும் சித்தரித்த ஞாயிறன்றான கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவை, புதிய சிக்கன நடவடிக்கை தொகுப்பை முன்வைத்திருப்பதன் மூலம், சிரிசா அசாதாரண துரிதத்துடன் மறுதலித்திருக்கிறது. அரசாங்கம் இப்போது கையிலெடுத்திருக்கும் நடவடிக்கைகளைத்தான் 61 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வேண்டாம் என்று நிராகரித்திருந்தார்கள். சிரிசா உத்தியோகபூர்வமாக “வேண்டாம்” வாக்குகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், சிப்ராஸுக்கு ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் எந்த நோக்கமும் இருக்கவில்லை. வாக்கெடுப்பில் தோற்று, அதன் பதிலிறுப்பாக, பதவியில் இருந்து விலகி வெட்டுகளைத் திணிப்பதை வேறொரு அரசாங்கத்திடம் விட்டு விடலாம் என்று தான் பிரதமர் எதிர்பார்த்தார். (இதையும் காணவும்: புதிய சிக்கன நடவடிக்கை ஒப்பந்தத்திற்கு சிப்ராஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனு அளிக்கிறார்) வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிரிசா தலைமையிலான அரசாங்கம் கிரீசுக்குள்ளான சிக்கன-நடவடிக்கை ஆதரவுக் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டவும் ஐரோப்பிய வங்கிகளுக்கு ஏற்கத்தக்க ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புதலளிக்கவும் எத்தனை சாத்தியமோ அத்தனை துரிதமாய் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கைகள் கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், துணைப் பிரதமர் ய்யானிஸ் ட்ராகசாக்கீஸ், நிதி அமைச்சர் ஏக்ளிட் சக்காலட்டோஸ் மற்றும் பொருளாதார அமைச்சர் ஜியோர்ஜியோஸ் ஸ்ராத்தாக்கீஸ் - இவர்கள் அனைவரும் ஆளும் சிரிசாவை (”தீவிர இடதுகளின் கூட்டணி”) சேர்ந்தவர்கள் - ஆகியோருக்கு இடையிலான விவாதங்களில் இறுதி செய்யப்பட்டு வியாழனன்று கிரேக்க அமைச்சரவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று கிரேக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பைக் கோர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, அங்கு சிக்கன நடவடிக்கை ஆதரவு புதிய ஜனநாயகம் மற்றும் PASOK கட்சிகளது ஆதரவை அது வெளிப்படையாக சார்ந்திருக்கிறது. யூரோ வலைய நிதி அமைச்சர்கள் இந்த உத்தேச திட்டத்தை மதிப்பாய்வு செய்ய சனிக்கிழமையன்று சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் ஒரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. கிரீசுக்கான நிதி உதவிகளை ஒட்டுமொத்தமாக துண்டிக்கவும் அந்நாட்டை யூரோ வலயத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றவும் ஐரோப்பிய நிர்வாகிகளிடம் இருந்து வந்த மிரட்டல்களின் இடையே இந்த புதிய சிக்கன நடவடிக்கை உத்தேசத் திட்டமானது அவசர அவசரமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மிரட்டல்களுக்கான பதிலிறுப்பாக முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை அச்சுறுத்துகின்ற எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சிரிசா தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறது என்பதோடு, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்கு ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் எதனையும் செய்வதையும் அது நிராகரித்தது. சிரிசா முன்வைத்திருக்கும் சரணாகதி அம்சங்களுடன் கூட ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புதலளிக்குமா என்பது நிச்சயமில்லை. கிரீசை அதன் கடன் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளி, அதனை யூரோ வலையத்தில் இருந்து வெளியேற்றி, மதிப்புக் குறைந்த தேசிய நாணயமதிப்பை அது மீட்சி செய்ய நிர்ப்பந்திப்பதன் மூலமாக அதனை ஒரு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவது குறித்து ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. கிரீசின் கடன்களிலான எந்த கணிசமான மறுசீரமைப்பும் கடினமே, ஏனென்றால் அது ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறுவதாகும் என்று ஜேர்மன் நிதி அமைச்சரான வொல்ப்காங் ஷொய்பிள நேற்று தெரிவித்தார். மற்ற ஐரோப்பிய நிர்வாகிகள் கிரேக்க அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டும் விருப்பத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். கிரீஸ் முன்வைக்கும் சிக்கன நடவடிக்கைத் தொகுப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்கத்தக்கதாக இருக்கும் வகையில் அதனை திருத்தியெழுதுவதில் பிரெஞ்சு நிதி அமைச்சக அதிகாரிகள் கிரேக்க நிதி அமைச்சர் சக்காலட்டோஸ் உடன் இணைந்து வேலை செய்திருப்பதாக சிரிசா உறுப்பினர்கள் கார்டியன் பத்திரிகையிடம் கூறினர். கிரீசை அதன் கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்கும் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டு தலைவரான டொனால்ட் டஸ்க் ஐரோப்பிய அதிகாரிகளை வலியுறுத்தினார். “கிரீசிடம் இருந்தான ஒரு நடைமுறை சாத்தியமான திட்டமானது அதேபோன்று கடன் கொடுத்தவர்கள் கடனைக் காப்பாற்ற அளிக்கும் நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்துடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும்” என்று டஸ்க் தெரிவித்தார். கிரீஸ் யூரோமண்டலத்தில் இருந்து தள்ளிவிடப்படக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்கு ஜேர்மனிக்கு ஒபாமா நிர்வாகத்திடம் இருந்தும் அழுத்தம் கிட்டியிருக்கிறது. கிரீசுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் சிக்கன நடவடிக்கை விவகாரத்தில் ஒரு உடன்பாடு எட்டப்படுவதற்கும் ஏதோவொரு வடிவத்தில் ”கடன் மறுசீரமைப்பு”க்கும் புதனன்று அமெரிக்க கருவூலச் செயலரான ஜாக் லூ பகிரங்க தலையீடு செய்தார். ”இதுபோல ஏறக்குறைய வாழ்வா-சாவா வகையான கெடுக்களை” விதிப்பவர்களை விமர்சனம் செய்த லூ, அவர்கள் தெற்கு ஐரோப்பா எங்குமான ஒரு விரிந்த நிதியியல் பீதி மற்றும் ஐரோப்பா உடையும் சாத்தியம் உள்ளிட்ட மிகப் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் அபாயங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார். கிரீஸ் நேட்டோவிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும், ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார ஆக்கிரோஷ பிரச்சாரத்தை அது தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய அமெரிக்கா விரும்புகிறது. நெருக்கடிக்கு மத்தியில் கிரீசின் வங்கிகள் இன்னும் மூடப்பட்டிருக்கும் நிலையிலும், வைப்புதாரர்கள் ஒருநாளைக்கு 60 யூரோக்களுக்கு மிகாமலேயே பணத்தை எடுக்க முடிகின்ற நிலையிலும், கிரேக்க பொருளாதாரமானது துரிதமாக ஒரு ஸ்தம்பித்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. கிரேக்க வணிகங்களின் தேசிய கூட்டமைப்பு (The National Confederation of Hellenic Commerce) புதனன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், வங்கிகள் மூடப்பட்டது முதல் நுகர்வு 70 சதவீதம் சரிந்து பொருளாதாரத்திற்கு 1.2 பில்லியன் யூரோக்கள் இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகம் உருக்குலையக் கூடிய சாத்தியத்திற்கு அஞ்சி முக்கியமான மருந்துகளையும், அரிசி, பாஸ்தா போன்ற உடனடியாக கெட்டுப் போகாத உணவுப் பொருட்களையும் கிரேக்க மக்கள் அதிகமாய் வாங்கிச் சேமிப்பதாக கூறப்படுகிறது. |
|