World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Relatives of “disappeared” Tamils protest in Colombo

இலங்கை: “காணாமல்போன தமிழ்களின் உறவினர்கள் கொழும்பில் மறியல் போராட்டம்

By S. Jayanth
13 April 2015

Back to screen version

நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்துவந்த அரசாங்களால் நடத்தப்பட்ட இனவாத யுத்தத்தின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் கைது செய்யப்பட்ட அல்லது கடத்தப்பட்ட தமிழர்களின் பல டசின் கணக்கான உறவினர்கள், ஏப்பிரல் 7 அன்று கொழும்பில் ஒரு மறியல் போராட்டத்தினை நடத்தினார்கள்.

தாய்மார்கள் மற்றும் மனைவிமார்களுமே ஆர்ப்பாட்டக்காரர்களில் கூடுதலானவர்களாக இருந்தார்கள். பலர் வடக்கில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இருந்து இரவிரவாக பயணம் செய்திருந்தனர். அவர்கள் தமது உறவினர்களின் புகைப்படங்களை தூக்கிப் பிடித்த வண்ணம் அவர்களை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். தமது பிள்ளைகள் அல்லது கணவன்மார் இரகசிய தடுப்பு முகாம்களில் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர்கள் சந்தேகிக்கின்றார்கள்.

2009ம் ஆண்டு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன், நீண்ட தசாப்த கால யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும், ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் காணாமல் உள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக், 2006ல் யுத்தத்தினை புதுப்பித்த பின்னர், ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள் மற்றும் இராணுவத்தினாலும் அதனுடன் இணைந்து செயற்பட்ட துணைப்படைக் குழுக்களாலும் அடிக்கடி படுகொலை செய்யப்பட்டார்கள்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா வின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. யுத்தத்தின் முடிவில் புலிகள் அங்கத்தவர்கள் மற்றும் புலி சந்தேக நபர்களாகவும் 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிலர் இராணுவத்தினால் நடத்தப்பட்ட அகதி முகாம்களில் இருந்து தடுப்பு முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். அந்த முகாம்களில் 300,000 மக்கள் முட்கம்பிகளுக்கு இடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

 “புனர்வாழ்வழிக்கப்பட்டபுலி சந்தேக நபர்கள் அனைவரையும் விடுதலை செய்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது, ஆனாலும் ஆயிரக் கணக்கானவர்கள் இன்னமும் காணாமல் போனவர்களாக உள்ளார்கள். தனது அரசாங்கத்தின் மீதான யுத்தக் குற்றம் சம்பந்தமான விமர்சனங்களை திசை திருப்பும் ஒரு முயற்சியாக, ராஜபக்ஷகாணமல் போனவர்களைகண்டு பிடிப்பதற்காக எனக் கூறி ஒரு ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமித்தார். அந்த ஆணைக் குழு கடந்த இரண்டு வருடத்தில் 15 ஆயிரம் முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டது, ஆனால் 2,000 முறைப்பாடுகள் மட்டுமே விசாரிக்கப்பட்டன. உறவினர்கள் இவற்றில் எதுவிதமான முன்னேற்றத்தினையும் காணவில்லை.

மன்னாரில் இருந்து வருகை தந்த 5 பிள்ளைகளின் தாயாரான கோணேஸ்வரி, யுத்தத்தின் இறுதி நாட்களில் தனது 14 வயது மகள் கார்த்திகா காணாமல் போனதாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். “2006ல், ஜனாதிபதி ராஜபக்ஷவினால் யுத்தம் புதுப்பிக்கப்பட்ட பின்னர், ஷெல் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சில் இருந்து தப்புவதற்காக நாங்கள் மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு தப்பியோடினோம். அது ஒரு நீண்டதும் பயங்கரமானதுமான பயணமாக இருந்தது. தப்பியோடிக் கொண்டிருக்கும் போது சிலர் இறந்து போன உறவினர்களை புதைத்துவிட்டு வந்தார்கள்.”

இறுதியில் நாங்கள் புதுமாத்தளனில் மாட்டுப்பட்டோம். ஷெல் தாக்குதலின் போது மகளை தவறவிட்டுவிட்டோம். அகதி முகாம் ஒன்றில் எமது மகள் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டதாக நேரில் கண்ட ஒருவர் இறுதியாக எம்மிடம் கூறினார்.”

லூசியா, தனது கணவரையும் சகோதரனையும் 2008ல் இருந்து தேடிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறியதாவது:வவுனியாவில் உள்ள கிடாச்சூரி அகதி முகாமில் நாம் இருந்தபோது, அங்கு வெள்ளை வான் ஒன்றில் வந்த ஒரு குழு எனது கணவரான ரூபகாந்தனை என் கண்முன்னாலேயே கடத்திச் சென்றது. எனது சகோதரன் மரியசீலன், நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றபோது கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு நகரில் வைத்து கடத்தப்பட்டார். அவர்கள் முகாமிலோ அல்லது வேறெங்கேயோ இன்னமும் தடுத்த வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். அவர்களுடைய விடுதலைக்காக நாம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் அழுதுபுலம்பி கெஞ்சிக் கேட்டோம், ஆனால் அவர்கள் எந்தவிதமான பதிலும் வழங்கவில்ல.”

சாள்ஸ் ஜோசப் 2008ல் தனது மகனை இழந்தார். அருகில் உள்ள நகரத்தில் வைத்து எனது மகனை இராணுவம் கைது செய்ததாக அயலவர் ஒருவர் கூறுகின்றார், ஆனால் பயம் காரணமாக அவர் சாட்சி சொல்ல முன்வரவில்லை.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், வட்டுவாகல் பிரதேசத்தில் வைத்து தனது இரண்டு மகன்களை இராணுவம் கைது செய்ததாக பி. முத்துக்கறுப்பன் கூறுகின்றார். தற்போது 35 வயதாகும் தனது மூத்த மகனான அன்டனி இன்னும் உயிர்வாழ்வதாக அவர் நம்புகின்றார். “அண்மையில் வெளியான ஒரு போட்டோவில் எனது மகனை நான் கண்டேன்.” என்றார். “இந்த விடயம் சம்பந்தமாக எங்கெல்லாம் போராட்டங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் நாங்கள் போகின்றோம். இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் என நான் எந்த வகையிலும் நம்பவில்லை. எவ்வாறாயினும் எமது உறவினர்களை அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என நாம் கேட்கின்றோம்.”

ஒரு 15 வயது இளைஞன், தனது தந்தையாரான ஆனந்தராஜா, வயது 47, மன்னார் பேசாலையில் வைத்து கடற்படையால் கடத்தப்பட்டார் எனக் கூறினார். “முன்னாள் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் காணாமல் போனோரை கண்டு பிடித்து தருவதாக உறுதியளித்திருந்த போதிலும் ஒன்றுமே நடக்கவில்லைஎன அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த இராஜேஸ்வரி, தனது கணவர் 2007ல் வெளிநாடு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி பெறுவதற்காக இராணுவத்தின் சிவில் அலுவலகத்திற்கு சென்றபோது காணாமல் போய்விட்டார் என்றும், கடந்த 8 வருடங்களாக தான் பாரிய கஸ்டங்களை அனுபவிப்பதாகவும் கூறினார்.

கவிதா என்பவரின் 39 வயது கணவர் மன்னார் பள்ளிமுனையில் 2006ம் ஆண்டு காணாமல் போனார். “நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தோம். எனது கணவர் சம்பவ தினம் நகருக்குப் போனவர் திரும்பவே இல்லை. எனது இரண்டு பிள்ளைகளுடன் நான் முகம் கொடுக்கும் கஸ்டத்தை வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாது,” என அவர் கூறினார்.

கவிதாவின் மாமி உதயசித்திரா, 2008ம் ஆண்டு மன்னார் பள்ளிமுனையில் தனது மகன் படுக்கையில் வைத்து சிவில் உடையில் வந்த சிப்பாய்களால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறினார். விசாரணையின் பின்னர் அவரை விடுவிப்பதாக அவர்கள் கூறினர். மகன் வெலிக்கடை சிறையில் இருப்பதாக ஒரு போட்டோவில் கண்ணுற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். “அந்தப் போட்டோவில் ஏழு பேர் இருந்தார்கள், அவர்களுடைய தாய்மார் இங்கே இருக்கின்றார்கள், அவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பதாகவே நாங்கள் நம்புகின்றோம்.” என்றார் அவர்.

சித்திரா தொடர்ந்தார்: “அரசாங்கம் சுயமாக செயற்பட முடியுமென்றால், பின்பு எதற்காக சட்டம் இருக்க வேண்டும்? எமது பிள்ளைகள் குற்றவாளிகள் என்றால், ஏன் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?.... நாம் உப்பு அல்லது பருப்பு கேட்கவில்லை. அரசாங்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட எமது பிள்ளைகளையே கேட்கின்றோம். அவர்கள் இளைமையானவர்கள். நாங்கள் கனவுகளுடன் எமது பிள்ளைகளை வளர்த்தது அவர்களை இவர்களின் (இராணுவத்தின்) கைகளில் கொடுப்பதற்காக அல்ல”.

உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை கண்டு பிடிப்பதிலும் மற்றும் நீதி கோருவதிலும் உறுதியாக இருக்கின்ற அதேவேளை. போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களோ இந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன பற்றிய பிரமைகளை முன்னிலைப்படுத்தினர். வீதிப் போராட்டம்என்ற ஒரு துண்டுப் பிரசுரத்தில், “112 சிவில் குழுக்களின் கூட்டு”, தமது உறுதியான முன்முயற்சியே 2015 ஜனவரி 8 தேர்தல் வெற்றி என பெருமையடித்துக் கொண்டனர். மறு வார்த்தையில் சொன்னால் அவர்கள் சிறிசேனவுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

துண்டுப் பிரசுரம், இந்தவெற்றியைமறுபக்கம் திருப்ப முயற்சி செய்ய வேண்டாம் எனஇனவாத சக்திகளுக்கும்எச்சரிக்கை விடுத்தது. மற்றும் அதன் வேலைத் திட்டத்தினை அமுல்படுத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் பொது மக்களுக்கும் ஒரு அழைப்பு விடுத்தது.

சிறிசேனவின் தேர்தல் வெற்றி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யூஎன்பி) தலமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டமையும் போரினால் பாதிக்கப்பட்டவர்களது அல்லது முழு உழைக்கும் மக்களினது வெற்றி கிடையாது. யுத்த முடிவின்போது சிறிசேன ஒரு பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார். அவர், யூன்.என்.பி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினதும் ஆதரவுடன் வாஷிங்டனின் தூண்டுதலின் பேரிலேயே ஆட்சி மாற்றத்தில் அதிகாரத்துக்கு வதந்தார்.

தமிழர்-விரோத யுத்தத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கிய அமெரிக்காவுக்கு, மனித உரிமை அல்லது ஜனநாயக உரிமை பற்றி எந்தக் கவலையும் கிடையாது. அது ராஜபக்ஷ சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்ததை மட்டுமே எதிர்த்தது.

சிறிசேன அல்லது ரணில் விக்ரமசிங்க இரண்டு பேருமே, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்கோ எந்தவிதமான நீதியையும் வழங்கப்போவதில்லை. யூன்.என்.பி, 1983ல் யுத்தத்தினை ஆரம்பித்தது. பின்னர் ராஜபக்ஷ அதனைத் தொடர்ந்தார். விக்ரமசிங்க, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை சம்பந்தமான ஐநா புள்ளி விபரங்களை பகிரங்கமாக எதிர்த்ததோடு, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என உறுதியளித்தார்.