World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan president postpones parliamentary election இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்கின்றார்
By K. Ratnayake ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதை மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கிறார். ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் போது அறிவித்த தனது "100 நாள்" நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, சிறிசேன ஏப்ரல் 23 பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதாக வாக்குறுதியளித்தார். கடந்த வாரம் ஊடக நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களுடனான ஒரு கூட்டத்தில், சிறிசேன, செப்டம்பரிலேயே அடுத்த அரசாங்கத்தை நிறுவ எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவந்து தேர்தலுக்கு திகதி குறிப்பது எப்போது என்பதை அவர் சொல்ல மறுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேன, அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (UNP) மற்றும் பல கட்சிகளின் ஆதரவுடன், ஜனவரி 8 தேர்தலில் இராஜபக்ஷவை தோற்கடித்தார். அவரது தேர்வுக்குப் பின்னால், சீனாவை எதிர்க்கும் தனது ஆக்கிரமிப்பு "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் ஒரு பகுதியாக பெய்ஜிங்குடனான இராஜபக்ஷவின் உறவுகளை கவிழ்க்க விரும்பிய ஒபாமா நிர்வாகத்தினால் தூண்டிவிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கை இருந்தது. சிறிசேன, ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள் மீதான மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக, தேர்தலின் போது 100-நாள் "வேலை திட்டத்தை" அறிவித்தார். சிறிசேனவின் திட்டத்தில், "சர்வாதிகார" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றி, சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியம், நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் மானியங்கள் உட்பட "நிவாரணங்களை" வழங்குவதும் அடங்கியிருந்தது. அவரது தேர்தல் வெற்றிக்குப் பின்னர், சிறிசேன, யூஎன்பீ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவி பிரதமராக யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தார். "சவால்களை" எதிர்கொள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னர் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் தேவைப்படும் என சிறிசேன அறிவித்தார். இது தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளவும் மற்றும் வாஷிங்டன் திசையில் வெளியுறவு கொள்கையில் ஒரு தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தவும், அரசியல் ஸ்தாபனத்தை ஒன்றுபடுத்தும் பிற்போக்கு நோக்கத்தை கொண்ட ஒரு வேண்டுகோளாகும். சிறிசேனவின் கணக்கீடுகள், ஆளும் யூஎன்பீ, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீலசுக) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (ஐமசுமு) உள்ள அதன் பங்காளிகள் இடையேயான கடும் கசப்பு மிகுந்த மோதலில் சிக்கிக்கொண்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சிங்கள பேரினவாத மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (தேசுமு), அதே போல் அவப்பேறுபெற்ற லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் அடங்கும். சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்வுசெய்யப்பட்ட தலைவரானாலும், கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு கோரும் அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை பிரிவானது அரசியலமைப்பில் 20 ஆம் திருத்தச் சட்டம் ஊடாக தேர்தல் முறை மாற்றங்கள் செய்யும் வரை, தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறது. மே 14, வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தினருடன் விக்கிரமசிங்க பேசுகையில், "சில சக்திகள் மசோதாக்களை குழப்புவதற்கு வேலை செய்கின்ற நிலையில்" பாராளுமன்றத்தில் மசோதாக்கள் முன்வைக்கப்பட மாட்டாது என்றார். அரசாங்கத்தை தாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களையே விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். யூஎன்பீ, ஜனநாயக உரிமைகள் மீதான கரிசனையினால் முன்கூட்டிய தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கவில்லை, மாறாக எந்தவொரு தாமதமும் அரசாங்கத்தை அவப்பேறுக்கு உள்ளாக்கி, பெரும்பான்மை இடங்களை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்புக்கு முடிவுகட்டிவிடும் என்று அஞ்சுகிறது. அரசாங்கம் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கொடுக்கவும் வாழ்க்கை செலவை குறைக்கவும் கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தின் மீது பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில், வருட இறுதிவரை தேர்தலை ஒத்தி வைக்க முயல்கிறது. தேர்தல் மாற்றங்கள் தொடர்பான அதன் வலியுறுத்தல், தாமதப்படுத்தும் ஒரு தந்திரோபாயமாகும். தேர்தல் திருத்த பிரேரணைகளில், தொகுதிவாரியாக 160 ஆசனங்களும், விகிதாசார அடிப்படையில் 65 ஆசனங்களும் மற்றும் தேசிய பட்டியலில் 29 ஆசனங்களும் அடங்கும். இந்த திட்டங்கள் ஜனநாயக ரீதியானதற்கும் அப்பால், திருத்தங்களை எதிர்க்கும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை ஓரங்கட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளன. இராஜபக்ஷ, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் எம்.ஈ.பி. போன்ற சுதந்திர முன்னணி பங்காளிகள் மற்றும் ஸ்ரீலசுகயில் ஒரு பிரிவினதும் ஆதரவுடன் மீண்டும் நுழைய முயற்சிக்கின்றார். இக்கூட்டணியானது இராஜபக்ஷவின் பெரு வர்த்தக கூட்டாளிகளின் நிதியளிப்பின் மூலம் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டணிகளின் ஆதரவைக் கொண்டு, இராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக தன்னை பெயரிட வேண்டும் என்று கோருகின்றார். இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தியை, சிங்கள பேரினவாத திசையில் திருப்பிவிடுவதன் மூலம் தங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற கடுமையாக முயன்று வருகின்றனர். அவர்கள், தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் "மீண்டும் தலைதூக்க" சிறிசேனவும் யூஎன்பீயும் அனுமதிப்பதாக விமர்சிக்கின்றனர். இராஜபக்ஷ மற்றும் அவரது முன்னாள் அதிகாரிகளின் வாயை அடைப்பற்காக, அரசாங்கமும் சிறிசேனவும் பொலிசின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) ஊடாக விசாரணைகளை தொடங்கியுள்ளனர். விசாரணைகள் முடியும் வரை, இராஜபக்ஷவின் இளைய சகோதரனும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் இராஜபக்ஷ, மற்றும் ஏனைய இரண்டு முன்னாள் அமைச்சர்களும் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் எதிரிகளை அடக்குவதன் பேரில், ஊழல்மிக்க அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்னொரு குழுவை பாசாங்குத்தனமாகவேனும் விசாரிப்பதானது, புழுக்கள் நிறைந்த ஒரு போத்தலை திறந்துவிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு டாலர்களில் வாழத் தள்ளப்பட்டுள்ள சாதாரண மக்கள், குறுக்கு வழியில் குவிக்கப்படும் மிகப் பெரும் செல்வத்தில் ஒரு அற்ப தொகையையே பெறுகின்றனர். வாஷிங்டன், சிறிசேனவையும் யூஎன்பீ அரசாங்கத்தையும் தூக்கி நிறுத்த தன்னால் முடிந்ததை செய்து வருகிறது. உறவுகள் வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாட இம்மாத முற்பகுதியில் கொழும்புக்கு பயணித்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியைத் தொடர்ந்து, ஊழல் விசாரணையை பெரிதாக்க அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்றும் இறங்கியது. உத்தியோகபூர்வமாக, அவர்கள் "இலங்கைக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க நிதி நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான ரூபாய்களை கண்டுபிடித்து மீட்க உதவுவதற்காக” வந்துள்ளனர். இராஜாங்கத் திணைக்களத்தின் வலைத் தளத்தின் தகவல் படி, இந்தக் குழுவில் மத்திய புலனாய்வு பணியகம் (எப்.பி.ஐ.), நீதி திணைக்களம், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் அடங்குவர். உட்பூசல், ஆளும் உயரடுக்கின் பிரிவுகளை விழிப்படையச் செய்துள்ளது. இதை ஒரு “நாய்ச் சண்டையாக” வகைப்படுத்திய அண்மைய சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "பகைமை மற்றும் விரோத நிலைப்பாடுகளுடனான கட்சிகளுடன் இலங்கை நிலைமை ஆட்சி செய்ய இயலாததாக தெரிகிறது என்றால், அதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்காது", என்றது. இந்த “நாய்ச் சண்டை” முழு ஸ்தாபனத்தினதும் பிற்போக்கு மற்றும் திவாலான தன்மையை அம்பலப்படுத்துவதையிட்டே அவர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆழமடைந்துவரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சமூக அதிருப்தியும் அரசியல் நெருக்கடியை குவிக்கின்றன. இலங்கை வெளிநாட்டு கடன், கடந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்து, இப்போது அரசாங்கத்தின் மொத்த வருவாயில் 95 சதவீதத்தை கடன் சேவை விழுங்கிக்கொள்கின்றது. அண்மைய உலக வங்கியின் அறிக்கையானது இந்த ஆண்டு இலங்கையின் வளர்ச்சி வீதம், ஐந்து வருட சராசரி அளவான 7.4 சதவிகிதத்தில் இருந்து, இந்த ஆண்டு 6.9 சதவிகிதத்துக்கு வீழச்சியடையும் என்று கணிப்பிட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய சந்தையான ஐரோப்பாவிலான பொருளாதார வீழ்ச்சி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியமானது கடந்தாண்டு 5.8 சதவீதமாக வெடித்த நிதிப் பற்றாக்குறையை இந்த ஆண்டு 4.4 சதவீதமாக குறைக்கும் இலக்கை அடைவது, ஒரு மிகப்பெரும் கடமை என்று சமீபத்தில் எச்சரித்துள்ளது. இந்த அழுத்தத்தின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள், நிலைமைகள் மீதான தாக்குதலை முடுக்கிவிடும் பொருட்டு, உட்பூசல்களுக்கு முடிவு கட்டி, புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஆளும் வட்டாரத்தில் பலர் விரும்புகின்றனர். ஜனாதிபதி தேர்தலின் போது, தொழிற்சங்கங்களும் நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி-இடதுகளும் அதிருப்தியை சிறிசேன பின்னால் திசை திருப்பிவிட உதவினர். எனினும், சிறிசேனவுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அளித்த வாக்குகள், உண்மையான ஆதரவின் அடையாளம் அல்ல, மாறாக, இராஜபக்ஷ ஆட்சி மீதான அவர்களின் எதிர்ப்பின் வெளிப்பாடாகும். கடந்த சில வாரங்களாக சமூக அமைதியின்மை வளர்ந்து வரும் அறிகுறிகள் நிலவுகின்றன. சுமார் 40,000 சுகாதார தொழிலாளர்கள் திங்களன்று ஒரு வாரம் நீடிக்கும் போராட்டத்தை தொடங்கினார். வேலை இழப்புகள் மற்றும் அதிக பணிச்சுமை அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெருந்தோட்டங்களில் வெவ்வேறு வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த வாரம், தீவின் வடக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு இளம் வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதே எதிர்ப்புக்கான உடனடி காரணமாகும். ஆனால் அந்த ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியிலான அதிருப்தியின் ஒரு அடையாளமாகும். |
|