World Socialist Web Site www.wsws.org |
“Jihadi John,” imperialism and ISIS “ஜிஹாதி ஜோன்,” ஏகாதிபத்தியம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்Bill Van Auken அமெரிக்க இதழாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் சோட்லோஃப், மற்றும் இரண்டு பிரிட்டிஷ் சேவை தொழிலாளர்களான டேவிட் ஹெனெஸ் மற்றும் ஆலன் ஹென்னிங் ஆகியோரை கழுத்தறுத்து கொல்வதைச் சித்தரிக்கும் படுகோரமான காணொளிகளில் தோன்றிய ISIS (ஈரான் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிக் அரசு) செயல்பாட்டாளர் "ஜிஹாதி ஜோனின்" விபரங்களை வாஷிங்டன் போஸ்ட் வியாழனன்று வெளியிட்டது. அந்த ISIS உறுப்பினர் குவைத்தில் பிறந்து, இலண்டனில் வளர்ந்த, 26 வயது நிரம்பிய மொஹம்மத் எம்வாஸி என்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. “மேற்கு இலண்டனின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், கல்லூரியில் கணினி நிரல்படுத்தல் (computer programming) பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்,” என்று CNN இன் செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இத்தகைய விபரங்களைக் குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களில், பெரிதும் பயங்கரவாதத்தின் உளவியல் சார்ந்த விவாதங்களாலும், மற்றும் இஸ்லாமிய சித்தாந்தம் வகிக்கும் பாத்திரம் குறித்த விவாதங்களாலும், அதனோடு சேர்ந்து அதுபோன்றவொரு பின்புலம் கொண்ட ஒருவர் ஏன் அத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபடுவதை தேர்ந்தெடுத்தார் என்பதன் மீதான ஊகங்களாலும் நிரம்பியுள்ளன. இத்தகைய எல்லா பிதற்றல்களும், திட்டமிட்டு குழப்பும் ஒரு பிரச்சாரத்தின் பாகமாக உள்ளன. “ஜிஹாத் ஜோன்" பற்றிய விபரங்களை உள்ளடங்கிய முக்கிய தகவல் வெளியீடுகளில் ஒன்று —அதாவது அவரை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு நன்கு தெரியும் என்ற உண்மை— வேண்டுமென்றே இருட்டுக்குள் விடப்படுகிறது. அவரது படமும் குரலும் முதன்முதலில் ISIS காணொளிகளில் ஒளிபரப்பப்பட்ட உடனேயே, சந்தேகத்திற்கிடமின்றி பிரிட்டிஷ் உளவுத்துறை அவரை அடையாளம் கண்டிருக்கும். பிரிட்டனின் பாதுகாப்பு சேவை MI5, உன்னிப்பாக அவரது நகர்வுகளை மட்டும் கண்காணிக்கவில்லை, அது அவரை தகவல் அளிப்பவராகவும், இரகசிய உளவாளியாகவும் நியமிக்க ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டது. அதை பிரிட்டன் நாளிதழ் Guardian வியாழனன்று அறிவித்ததைப் போல, எம்வாஸி உடன் அதன் தொடர்புகள் குறித்து MI5 “ஆழமான கேள்விகளுக்குப்" பதிலளிக்க வேண்டியுள்ளது. அந்த உளவுத்துறை முகமை அவரை நியமிக்கும் முயற்சிகளில் வெற்றி அடைந்ததா என்பதும் அத்தகைய கேள்விகளில் தலையாயதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், MI5 முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில், அதன் ஒப்புதலுடன்தான் எம்வாஸி சிரியாவிற்கு சென்றாரா? எம்வாஸி நியமிக்கப்பட்டாரா என்பதன் மீது அங்கே சந்தேகம் இருப்பதால், ஏனைய ISIS ஜிஹாதிஸ்டுகளும் அவ்வாறே செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. பிரிட்டிஷ் உளவுத்துறை "நடைமுறைக் காரணங்களுக்காக" எம்வாஸியைக் குறித்து பேச மறுத்துவிட்டதாக பிபிசி குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஜிஹாதிஸ்ட் அனுதாபிகளை உளவுத்துறை முகமைகளுக்காக வேலை செய்விக்க செய்வதில், அந்த முகமைகளின் நடைமுறை ஒருவேளை தொடர்ந்து கொண்டிருக்கலாம். இஸ்லாமிக் அரசு 'தலைநகரம்' ரக்காவிற்குள் அமெரிக்காவும் பிரிட்டனும் இரண்டுமே தகவல் வழங்குனர்களை கொண்டிருக்கின்றன என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது மொஹம்மத் எம்வாஸியின் நடவடிக்கைகளை நிறுத்துவதிலோ, அல்லது அவரை நீதியின் முன்னாள் கொண்டு வருவதிலோ மிகக் குறைவாகவே உதவி இருக்கக்கூடுமென தெரிகிறது,” என்று குறிப்பிட்டது. அதன் இதயதானத்தில், “ஜிஹாதி ஜோனின்" விடயம் முக்கியத்துவமானதாகும், ஏனெனில் அது மேற்கு ஏகாதிபத்தியத்திற்கும் ISISக்கும் இடையிலான நிஜமான உறவுகளைக் குறித்து பேசுகிறது. பகுப்பாய்வின் இறுதியாக, வாஷிங்டனினது மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளினது தலையீடுகளின் ஒரு விளைபொருளே ISIS ஆகும். ஈராக், சிரியா மற்றும் லிபியா ஆகிய மூன்று நாடுகளின் மதசார்பற்ற அரபு அரசாங்கங்களைக் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையீடு செய்வதற்கு முன்னர் வரையில், ஈராக்கிலோ அல்லது சிரியாவிலோ —அல்லது, அதே விடயத்தில், லிபியாவிலோ—ஆயுதமேந்திய இஸ்லாமிய இயக்கங்கள் இருந்திருக்கவில்லை. இந்த நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் வாழ்வையும் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூக சீரழிவுகளையும் விலையாக கொடுத்து, அமெரிக்க இராணுவம் மற்றும் CIA ஆல் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஸ்தம்பிப்பு, படுகொலைகள் மற்றும் பேரழிவிலிருந்தே இத்தகைய இயக்கங்கள் வெடித்தெழுந்தன என்பது மட்டுமல்ல. ISISக்கு முந்தைய அல் கொய்தா போலவே, இதுவும் தீர்க்கமான மூலோபாய நோக்கங்களைப் பின்பற்றுவதற்காக அப்பிராந்திய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஓர் உருவாக்கம் ஆகும். லிபியாவில், தற்போது ISIS உடன் இணைந்துள்ள இஸ்லாமிஸ்டுகள் தான், மௌம்மர் கடாபியை பதவியிலிருந்து இறக்க அமெரிக்க-நேட்டோ போருக்கு பிரதான தரைப்படைகளை வழங்கினர். சிரியாவில், வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் ISIS, அல் கொய்தாவுடன் இணைப்பு கொண்ட அல் நுஸ்ரா முன்னணி மற்றும் அதுபோன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் அதேபோன்ற பாத்திரத்தை வகித்துள்ளன. எல்லா விதத்திலும், “அன்னிய நாட்டு போராளிகள்" என்றழைக்கப்பட்டவர்களில் “கிளர்ச்சியாளர்களின்" மிகப்பெரிய உட்கூறும் உள்ளடக்கமாகும், அவர்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தை பதவியிலிருந்து இறக்க முனைந்துள்ளனர். ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா, மத்திய ஆசியா மற்றும் எங்கெங்கினும் இருந்தும் உள்ளெடுக்கப்பட்ட நியமனங்களுடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் கூடுதலாக இருக்குமென மதிப்பீடுகள் காட்டுகின்றன. சிரியாவிற்குள் நுழையும் இத்தகைய போராளிகளைக் குறித்து ஊடகங்களோ, ஏதோவிதத்தில் புரியாத புதிராக சித்தரிக்கின்றன, ஆனால் அவர்கள் அங்கே எவ்வாறு வந்தார்கள் என்ற கேள்விக்கு சுலபமாக பதிலளித்துவிட முடியும். சிஐஏ, MI5 மற்றும் ஏனைய மேற்கத்திய உளவு முகைமைகள் சிரிய போர்களத்திற்கு முறையே அவர்களின் நாடுகளிலிருந்து இஸ்லாமியவாதிகள் பயணித்திருப்பதைக் குறித்து வெறுமனே கண்மூடி இருக்கின்றன என்பது மட்டுமல்ல, அவை அவர்களை செயலூக்கத்தோடு ஊக்கப்படுத்தின. அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியான துருக்கி, இத்தகைய உட்கூறுகள் அதன் எல்லைகளைக் கடந்து சிரியாவிற்குள் நுழைய உதவியுள்ளது. மேற்கத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் சிரியாவில் உள்ள ISIS போன்ற சக்திகளை, ஒரு கொடுங்கோலருக்கு எதிரான ஒரு முற்போக்கான போராட்டத்தை நடத்தும் ஜனநாயக "புரட்சியாளர்களாக" சித்தரித்தன என்பதை மீண்டும் நினைவுகூர வேண்டும். ஆத்திரமூட்டல்களை முடுக்கி விட்டதன் மூலமாக தூண்டிவிடப்பட்ட அந்த போர், ஒரு “மனிதாபிமான" தலையீட்டிற்கான நியாயப்பாடாக எடுத்துக் காட்டப்பட்டது. வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் நேரடித் தலையீட்டின் அச்சுறுத்தலை தொடர்ந்து தீவிரப்படுத்தி இருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியவாத "கிளர்ச்சியாளர்களை" ஆதரிப்பதற்காக ஆயுதங்களும் நிதியுதவிகளும் பாய்ச்சப்பட்டன. ஒபாமா நிர்வாகம் செப்டம்பர் 2013இல் சிரியா மீது ஒரு பயங்கரமான குண்டுவீச்சை நடத்துவதன் விளிம்பிற்கு சென்றது, பின்னர் எதிர்பாராத எதிர்ப்பின் முன்னால் ஒரு தந்திரோபாய பின்னடைவை எடுக்க வேண்டியிருந்தது. சிரியாவின் மண்ணில் இருந்த இஸ்லாமியவாத சக்திகளே கூட அவர்கள் இரட்டை-வேட நடவடிக்கைக்கு பலியாவதாக உணர்ந்தார்கள். ஓர் அரை-நூற்றாண்டுக்கு முன்னர் பிக்ஸ் வளைகுடாவில் பெரிதும் சிஐஏ இன் கியூப எதிர்புரட்சியாளர்களுக்கு செய்யப்பட்டதைப் போலவே, அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட அமெரிக்க வான்வழி ஆதரவு கிடைக்காமல், பதில் நடவடிக்கையில் அழிந்து போனார்கள். இறுதியாக, அது மேற்கத்திய பிணையாளிகளின் தொடர்ச்சியான கழுத்தறுப்பின் வடிவத்தை மட்டும் எடுக்கவில்லை, ஆனால் அமெரிக்க பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு படைகள் மீது ஈராக்கில் தோல்வியையும் சுமத்தியது. மத்திய கிழக்கில் அதன் புதிய தலையீட்டிற்கான ஆதரவைப் பெறும் ஒரு முயற்சியில், வாஷிங்டன் அந்த கழுத்தறுப்பு நடவடிக்கைகளை சாக்காக பற்றிக் கொண்டுள்ளது. ஆனால் ISIS மற்றும் அதன் கூட்டிணைப்பு பிரிவுகளால் சிரிய அலாவைட், கிறிஸ்துவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட கட்டாய இராணுவ சேவை வீரர்களுக்கு எதிராக அதே போன்ற அட்டூழியங்கள் நடத்தப்படும் போது, ஒபாமா நிர்வாகம் பாராதது போல திரும்பி கொண்டது. “ஜிஹாதி ஜோன்" பற்றிய விபர வெளியீடுகளை அடுத்து, பிரிட்டனின் டோரி பிரதம மந்திரி டேவிட் கேமரூன் அந்நாட்டின் பாதுகாப்பு சேவையின் உறுப்பினர்களை "பெரும் திறமையாளர்களாகவும், கடின உழைப்பாளர்களாகவும், அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும், தைரியமானவர்களாகவும்" வர்ணித்து, அதற்கு பேராதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் "பெரும் சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதற்காக" அவரது அனுதாபங்களை அவர் அறிவித்தார். “அவர்களைப் பாராட்டித் தட்டிக்கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்,” என்று அவர் வலியுறுத்தினார். பிரிட்டன் ஒரு செயல்படும் ஜனநாயகமாக இருந்திருந்தால், மொஹம்மத் எம்வாஸி மற்றும் ISIS உடன் MI5 வகித்த பாத்திரம் மற்றும் அதன் தொடர்புகளைப் பற்றிய வெளியீடுகளை பொதுவாக ஒரு நாடாளுமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இருக்கும்; அது அரசாங்கத்தை கலைக்க வலியுறுத்தி இருக்கும். ஆனால் வாஷிங்டனைப் போலவே இலண்டனிலும், அரசாங்கம் பெரிதும் இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தால் கைப்பற்றப்பட்டு உள்ளது. அவற்றின் குற்றங்கள், உடந்தையாய் இருக்கும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்களின் உதவியுடன் முறையாக மூடி மறைக்கப்படுகின்றன. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்களை பொறுத்த வரையில், உள்நாட்டில் ஒடுக்குமுறை மற்றும் வெளிநாட்டில் போர் விரிவாக்கத்தை நியாயப்படுத்த —ஏகாதிபத்தியத்தால் தோற்றுவிக்கப்பட்ட பிரான்கென்ஸ்டீன் அரக்கன்—ISIS இன் குற்றங்களைச் சுரண்டுவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் ஒரு விட்டுகொடுப்பற்ற எதிர்ப்பையும், மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு நிஜமான போர் எதிர்ப்பு இயக்கத்தையும் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தை மட்டுமே இத்தகைய விபர வெளியீடுகள் அடிக்கோடிடுகின்றன. |
|