World Socialist Web Site www.wsws.org |
Greece and the dictatorship of finance capital கிரீஸூம் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரமும்Nick
Beams பொதுவாக குறிப்பிடப்படுவதைப் போல, ஒவ்வொரு நெருக்கடியின் பெறுமதியும் அவற்றின் இன்றியமையாத குணாம்சங்களை வெளிப்படுத்தும் வகையும், அரசியல் நிகழ்வுபோக்கின் புற வடிவங்களைத் தோலுரித்துக் காட்டுகின்றன. கிரேக்க கடன் நெருக்கடியும் மற்றும் கடன்களைத் திரும்ப செலுத்துவதற்கான நிபந்தனைகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்துடன் மறுபேரம் செய்ய சிரிசா தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சிகளும் இவ்விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை உருவாக்கியுள்ளது. சிரிசாவின் ஜனவரி 25 தேர்தல் வெற்றிக்குப் பிந்தைய சம்பவங்கள், முதலாளித்துவ ஜனநாயகம் என்றழைக்கப்படும் எல்லா பரிவாரங்களும், அதாவது நாடாளுமன்றங்கள், தேர்தல்கள், வாக்கெடுப்புகள் மற்றும் அரசியலமைப்புகள் என என்னவாக இருந்தாலும், முதலாளித்துவ அரசும் அதற்கு சேவை செய்கின்ற அரசாங்கங்களும் மூலதனத்தின் சர்வாதிகாரத்தையே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற மார்க்சிசத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இன்றியமையா உண்மையை, மீண்டுமொருமுறை வெளிப்படையாக காட்டியுள்ளன. அதேபோல, உலகெங்கிலும் உள்ள அனைத்து போலி-இடது அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்ட சிரிசா போன்ற குட்டி-முதலாளித்துவ அமைப்புகளின் போலித்தனங்களை, அதாவது தீவிர வீராவேச வார்த்தைஜாலங்களைக் கொண்டும் மற்றும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்குள் தந்திரோபாய சூழ்ச்சிகளைக் கொண்டும், அந்த சர்வாதிகாரத்தை எதிர்கொள்வதற்கு அங்கே ஏதோவொரு வித வழி இருக்கிறது என்ற அவற்றின் போலித்தனங்களையும், அந்த சம்பவங்கள் அம்பலப்படுத்தி உள்ளன. கடந்த ஞாயிறன்று, பெல்ஜிய நாளிதழ் De Tijd உடனான ஒரு நேர்காணலில், அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) நிர்வாக குழுவின் உறுப்பினரும் ஆன லுக் கோனெ (Luc Coene) கூறுகையில், நிதி மூலதனம் அதன் கோரிக்கைகளை எதிர்க்கும் எதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதை தெளிவுபடுத்தினார். முக்கூட்டால் (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால்) திணிக்கப்பட்ட ஐந்தாண்டு கால பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சீரழிவுகளுக்கு எதிராக மில்லியன் கணக்கான வாக்குகளை அளித்த கிரேக்க மக்களின் விருப்பம், எதுவும் கருத்திலெடுக்கப்படமாட்டாது. 2008க்கு முன்னர், 26 சதவீதத்திற்கு கீழே அதன் வெளியீட்டைக் கொண்டிருந்த அந்த பொருளாதாரத்தை, நாசகரமாக சீரழித்துள்ள சிக்கன கொள்கைகள் வாழ்வையும் மற்றும் நம்பிக்கைகளையும் அழித்து வருவதோடு, சற்றும் கடுமை குறையாமல் தொடர உள்ளது. ஒரு கண்டிப்பான பள்ளிக்கூட (stern school) தலைமை ஆசிரியரைப் போல, ஆனால் அவரது கைகளில் ஒரு பிரம்பை விட மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்துடன் அடிக்கும் பாணியில் கோனெ கூறுகையில், கிரேக்க மக்களிடம் "பொய் வாக்குறுதிகள்" விற்கப்பட்டுள்ளன, அங்கே "வேறு வழியே" இல்லை என்பதை அவர்கள் "விரைவில் புரிந்து கொள்வார்கள்" என்றார். அவர் அறிவித்தார், “சீர்திருத்தம் மட்டுமே ஒரே வழி. எனக்கு சொல்லுங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு கிரேக்கர்கள் கடனைத் திரும்ப செலுத்த விரும்பவில்லை என்றால், பணம் வேறு எங்கே இருந்து வரும்?” “பிணையெடுப்பு" திட்டங்களில் உள்ளடங்கி இருந்த அதே எல்லா பொய்களுமே இந்த அறிக்கையிலும் உள்ளடங்கி உள்ளன. கிரேக்க மக்களை ஏதோ உழைப்பை உறிஞ்சும் சோம்பேறிகளாக, ஐரோப்பிய அரசாங்கங்களின் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் கருணையில் வாழ்பவர்களாக மற்றும் அவர்களின் கடன்களைச் செலுத்த விருப்பமற்றவர்களாக சித்தரிக்க அங்கே ஒரு தொடர்ச்சியான பிரச்சார நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. பிணையெடுப்பு என்றழைக்கப்பட்டது, உண்மையில், ஒருபோதும் கிரேக்க மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அது ஐரோப்பிய வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்களை (hedge funds) பிணையெடுக்க பயன்படுத்தப்பட்டது. யூரோ மண்டலம் மற்றும் சர்வதேச நாணய நிதிய நாடுகளால் வழங்கப்பட்ட 226.7 பில்லியன் யூரோ கடன்களில், வெறும் 11 சதவீதமே கிரேக்க அரசு செலவினங்களுக்கு நேரடியாக நிதியாக சென்றது. எஞ்சிய பணம் வங்கிகளுக்கு வட்டி செலுத்தவதற்கோ அல்லது அவற்றின் வாரா கடன்கள் தள்ளுபடி ஆவதைத் தவிர்ப்பதற்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரீஸிற்குள் வந்த பணம் மீண்டும் நேராக ஐரோப்பிய வங்கிகளின் கஜானாங்களுக்குள் மட்டுமே செல்லும் வகையில், பணத்தில் பெருந்தொகை சுழற்சிமுறை செயல்பாட்டில் (round-robin operation) பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கவனமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம், கிரேக்க அரசாங்கத்தின் எவ்விதமான கடன் செலுத்தவியலா நிலைமையும் ஐரோப்பிய வங்கியியல் அமைப்புமுறையின் மீது ஒரு பாதகமான-தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தி வைப்பதாகும். அதன் விளைவாக, முக்கூட்டு இப்போது கிரேக்க மக்கள் மீது இன்னும் அதிகமாக அதன் பிடியை இறுக்க முடியும். கோனெ அதை எடுத்துரைப்பதைப் போல, “அவர்கள் யூரோவை விட்டு வெளியேறினால், அது அவர்களுக்கு பத்து மடங்கு மோசமானதாக இருக்கும். பத்து மடங்கு.” அந்த பிணையெடுப்பு நடவடிக்கையில் உள்ளடங்கி உள்ள மற்றொரு மிகப்பெரிய பொய் என்னவென்றால், அங்கே "பணம் இல்லை", ஆகவே கிரேக்க மக்களே அதை செலுத்த வேண்டும் என்ற வாதமாகும். அதுவும் அம்பலப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் "அதிக பணத்தை புழக்கத்தில்விடும்" திட்டம் திங்கட்கிழமை தொடங்குவதற்கு முந்தைய நாள் கோனெயின் நேர்காணல் வெளியானது. ஐரோப்பிய மத்திய வங்கி அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலமாக அடுத்த 18 மாதங்களில் 1 ட்ரில்லியன் யூரோவிற்கும் அதிகமாக ஐரோப்பிய நிதியியல் அமைப்புமுறைக்குள் பாய்ச்ச உள்ளது. அங்கே தாராளமாக பணம் உள்ளது. ஆனால் அதில் எதுவுமே பொருளாதார விரிவாக்கத்திற்கோ, புதிய தொழில்துறை அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கோ, அல்லது யூரோ மண்டலம் முழுவதுமாக 11 சதவீதத்திற்கு கூடுதலாக உள்ள வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கோ நிதி வழங்க போவதில்லை. பத்திரங்கள் வாங்க ஐரோப்பிய மத்திய வங்கியால் கொண்டு வரப்பட்ட நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள், வங்கிகளின் விற்க முடியா சொத்துக்களின் சுமையை இறக்கி வைக்க உதவியாக, நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சப்படும். அதேவேளையில் அவை பங்கு விலைகளையும் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சொத்து மதிப்புகளையும் மேலுயர்த்தும். இதற்கிடையே அதே அமைப்புகளே, வங்கிகள் சொந்தமாக்கி கொண்ட ஒவ்வொரு யூரோவையும் திரும்ப செலுத்துவது கிரேக்க மக்களின் கடமை என்று அவர்களுக்கு உபதேசம் செய்கின்றன. ஐரோப்பிய மத்திய வங்கியின் பங்குப்பத்திரங்கள்-வாங்கும் மற்றும் பணத்தை அச்சடிக்கும் நடவடிக்கை, பொருளாதார வரலாற்றில் மிகப்பெரிய பொன்ஸி திட்டத்திற்கு (Ponzi scheme) ஒப்பான ஒன்றுக்கு நிதி வழங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பா எங்கிலும், அரசு பத்திரங்களின் மதிப்பு வரலாற்றிலேயே குறைந்து போயிருப்பதுடன், எதிர்மறையான நஷ்டங்களுக்கும் கூட சென்றுள்ளன. இதன் அர்த்தம் என்னவென்றால், ஓர் அரசு பத்திரத்தை வாங்கிய எவரும் அதன் முதிர்வுகாலம் வரையில் வைத்திருந்தால், விற்கும் போது ஓர் ஒட்டுமொத்த இழப்பைச் சந்திப்பார் என்பதாகும். நிச்சயமாக பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அத்தகைய நோக்கம் இருக்காது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீடு அவர்கள் வாங்கிய பத்திரங்களின் விலைகளை உயர்த்தும், பின் அவற்றை விற்பதிலிருந்து அவர்களால் ஒரு மூலதன இலாபத்தைப் பெற முடியும் என்ற எதிர்ப்பார்ப்பில் தான், அவர்கள் பத்திரங்களை வாங்குகிறார்கள். அதன்மூலம் அவற்றின் விலை அதிகரிக்கிறது; அவற்றின் இழப்புகள் குறைகின்றன (இது இரண்டும் எதிரெதிர் தொடர்புகளில் இருக்கும்). எல்லா பொன்ஸி திட்டங்களைப் போலவே, ஐரோப்பிய மத்திய வங்கி நடவடிக்கை மற்றொரு நிதியியல் நெருக்கடிக்கு நிலைமைகளை உருவாக்கி வருகிறது. மேலும் இந்த முறை, மத்திய வங்கிகளே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளன என்பதால், கிரேக்க மற்றும் உலக பொருளாதாரத்தின் மீது பேரழிவுகரமான பாதிப்புகளுக்கு இட்டு சென்றதை விட, பாதிப்பு இன்னும் கூடுதல் தீவிரத்தோடு இருக்க சாத்தியமுள்ளது. சுருக்கமாக கூறுவதானால், 2008 நிதியியில் முறிவைக் கொண்டு வந்த நிதியியல் குற்றவாளிகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூட பதிவு செய்யப்படவில்லை என்ற நிலையில், அவர்கள் அவை அனைத்தையும் மீண்டும் செய்வதற்கு தயாரிப்பு செய்து வருகிறார்கள். நிதி மூலதனத்தின் சர்வாதிகாரம் வெளிப்படையாக காட்டப்படுகையில் சிரிசா போன்ற குட்டி-முதலாளித்துவ அமைப்புகளின் வர்க்க குணாம்சம் அம்பலமாவது இதைவிட தெளிவாக எடுத்துக்ககாட்டப்படமுடியாது. அதிகாரத்திற்கு வந்து வெறும் ஒரு மாதத்தில், சிரிசா முற்றிலுமாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் அடிபணிந்ததை, மற்றொரு நாளில் போராடுவதற்கு அவகாசம் பெறுவதற்கான ஒரு "தந்திரோபாய" உபாயமாக அல்லது புத்திசாலித்தனமான உபாயமாக எடுத்துக்காட்டி, கடந்து போகச் செய்யும் ஒரு சர்வதேச பிரச்சாரம் சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இது அவ்வாறான ஒன்றல்ல. சிரிசாவின் ஈனத்தனமான நிலை, அதன் வர்க்க குணாம்சத்திலிருந்து பெருக்கெடுக்கிறது, அது தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியதல்ல, மாறாக கிரேக்க முதலாளித்துவத்தின் பிரிவுகளிலும் மற்றும் செல்வாக்கு மிகுந்த மத்தியதர வர்க்க பிரிவுகளிலும் வேரூன்றியதாகும். அதைத்தான் அது தீவிர வீராவேச வார்த்தைஜாலங்களை கொண்டு மூடிமறைக்க முயன்றது. அரசியல்ரீதியில் முதிர்ச்சி பெறாத மற்றும் அனுபவமில்லாத மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தால், அவர்கள் இந்த அனுபவத்திலிருந்து படிப்பினைகளை பெற்று, சிரிசா தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னோக்கிய அடியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற நஞ்சூட்டும் கட்டுக்கதையை தொடர்ந்து ஊக்குவித்து வரும் போலி-இடது குழுக்களை அம்பலப்படுத்தும் ஓர் அரசியல் போராட்டத்தை எடுப்பதன் மூலமாக, தங்களின் தவறுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அதனால் உள்ளிளுத்துக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் யாரை மற்றும் எதை கையாண்டு வருகிறார்கள் என்பது தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு தெரியும் என்பதோடு, அவர்கள் அதற்கிணங்க தான் செயல்படுகிறார்கள். ஒரு விட்டுக்கொடுப்புக்கான சைகையைக் காட்ட கூட கடமைப்பட்டதாக அவர்கள் உணரவில்லை என்றளவிற்கு, சிரிசாவின் முதலாளித்துவ குணாம்சத்தைக் குறித்த அவர்களது மதிப்பீட்டில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்கள் முழு அடிபணிவை கோரினார்கள்; அடைந்தார்கள். கிரீஸிலும் சரி சர்வதேச அளவிலும் சரி தொழிலாள வர்க்கம் இந்த கசப்பான அனுபவத்திலிருந்து படிப்பினைகளப் பெற வேண்டும். நிதியியல் மூலதனத்தின் சர்வாதிகாரத்தை "இடது" வார்த்தைஜாலங்கள் மற்றும் அரைகுறை-நடவடிக்கைகளின் ஒரு திட்டத்தைக் கொண்டு சிறிதாவது தோற்கடிக்கலாம் என்பதல்ல, அதை எதிர்த்து நிற்க கூட முடியாது. வங்கிகள் மற்றும் நிதியியல் மூலதனத்தின் பறிமுதல் உடன் தொடங்கி, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டம் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவே அதை கவிழ்க்க வேண்டும். |
|