World Socialist Web Site www.wsws.org |
US backs Saudi airstrikes against Houthis in Yemen யெமனில் ஹௌதியருக்கு எதிரான சவூதி வான்வழி தாக்குதல்களை அமெரிக்கா ஆதரிக்கிறதுBy
Niles Williamson அமெரிக்காவிற்கான சவூதி தூதர், அப்தைர் அலி ஜூபெர் புதனன்று இரவு வாஷிங்டன் டி. சி. இல் இருந்து கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன் மற்றும் கட்டார் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, அவரது நாடு யெமனுக்குள் ஹௌதி கிளர்ச்சியாளர்களது நிலைகளின் மீது வான்வழி தாக்குதல்களைத் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். சவூதி அரேபியாவும் மற்றும் அந்த கூட்டணியில் உள்ள ஏனைய நாடுகளும் ஜனாதிபதி அத்ப் ரப்பு மன்சூர் ஹாதியின் "சட்டபூர்வ அரசாங்கத்தை பாதுகாக்கவும், காப்பாற்றவும்" தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். ஹாதியை அதிகாரத்தில் வைத்திருக்க "என்ன தேவைப்பட்டாலும்" சவூதி அரேபியா அதை செய்யுமென ஜூபெர் அறிவித்தார். சவூதி தாக்குதல்களுக்கு ஒபாமா நிர்வாகத்தால் ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றன. அமெரிக்கா "தளவாட மற்றும் உளவுச்செய்தி ஒத்துழைப்பை" வழங்கி வருவதாக குறிப்பிட்டு அது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 150,000 சவூதி துருப்புகள் அடங்கிய ஒரு தரைப்படை தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. சானா விமானநிலையம் மற்றும் அல் துலைமி இராணுவ தளங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் அறிவித்தன. ஹௌதியின் அன்சாருல்லாஹ் தலைமை குழுவின் ஓர் உறுப்பினர் மொஹம்மத் அல்-புஹைட்டி கூறுகையில், இந்த வான்வழி தாக்குதல்கள் அரேபிய தீபகற்பத்தில் ஒரு "பரந்த போரை" தூண்டிவிடுமென எச்சரித்தார். “ஏமன் மக்கள் சுதந்திர மக்கள். அவர்களே தாக்குபவர்களை எதிர்கொள்வார்கள். சவூதி அரசாங்கமும் வளைகுடா அரசாங்கங்களும் இந்த ஆக்ரோஷத்திற்காக வருத்தப்பட வேண்டியதிருக்கும் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்,” என்று Al Jazeera செய்திகளுக்கு புஹைட்டி தெரிவித்தார். அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, சவூதி அரேபியா யெமனுடன் அருகில் உள்ள அதன் எல்லையோரங்களில் கனரக பீரங்கிகளையும் ஏனைய இராணுவ தளவாடங்களையும் நிலைநிறுத்தி உள்ளது. வளைகுடா நாடுகளின் இளவரசர்கள் மற்றும் பாதுகாப்பு மந்திரிகளின் வாரயிறுதி கூட்டமொன்றில், சவூதி அதிகாரிகள் ஹௌதி இலக்குகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்துவதற்கான மற்றும் ஹௌதிக்குரிய வினியோக பாதைகளை கடல்வழியில் முற்றுகையிடுவதற்கான அவர்களது திட்டங்களை முன்வைத்தனர். சவூதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி இளவரசர் சயத் அல் பைசல் இந்த வார தொடக்கத்தில் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில், “அப்பிராந்தியத்தைக் காப்பாற்ற இந்த நெருக்கடிக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க" அவரது நாடு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சமீபத்திய அபிவிருத்திகளுடன், யெமனில் தீவிரமடைந்துவரும் உள்நாட்டு போர் பகிரங்கமாக, சவூதி அரேபியா மற்றும் ஈரான் இரண்டுமே சம்பந்தப்பட்ட, ஒரு பிராந்திய மோதலின் குணாம்சத்தை எடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் சுன்னி முடியாட்சி இப்போது ஹாதியை அந்நாட்டின் சட்டபூர்வ தலைவராக பகிரகங்கமாக ஆதரித்து வருகிறது, அதேவேளையில் ஷியைட்-மேலாதிக்கம் கொண்ட ஈரான், இஸ்லாமின் ஜாய்தி (Zaydi) ஷியைட் பிரிவைச் சேர்ந்த ஹௌதியருக்கு அதன் ஆதரவைத் தெரிவித்து, பதவியை விட்டுக்கொடுக்க இணங்குமாறு ஹாதிக்கு அழைப்புவிடுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து இராணுவ ஆதரவைப் பெறுகின்றன சவூதி அரேபியா, அண்டை நாடுகளில் செல்வாக்கு பெற்றிருந்த ஷியைட் மேலெழுச்சிகளை ஒடுக்க, சமீபத்திய ஆண்டுகளில், இராணுவ ஊடுருவல்களைச் செய்துள்ளது. 2009 இன் இறுதியில், சவூதி இராணுவம் முன்னாள் ஜனாதிபதியும் நீண்டகால சர்வாதிகாரியுமான அலி அப்துல்லாஹ் சலெஹ் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து யெமனில் ஹௌதி போராளிகள் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது. பஹ்ரைனில் சுன்னி அரசர் ஹமாத் பின் இஸா பின் சல்மான் அல் கலிஃபாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அந்நாட்டின் ஷியைட் பெரும்பான்மையினரது போராட்டங்களை ஒடுக்குவதற்கும் சவூதி முடியாட்சி மார்ச் 2011 இல் அந்நாட்டிற்கு துருப்புகளை அனுப்பி இருந்தது. செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு ஹாதி அனுப்பிய ஒரு கடிதத்தில், “தொடர்ந்து கொண்டிருக்கும் ஹௌதி ஆக்கிரமிப்பிலிருந்து யேமனையும் மற்றும் அதன் மக்களையும் காப்பாற்ற, இராணுவ தலையீடு உட்பட, அவசியமான அனைத்து வழிவகைகளையும்" ஆதரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார். முன்னாள் ஜனாதிபதி சலெஹிற்கு விசுவாசமான இராணுவ படைப்பிரிவுகளின் ஒத்துழைப்புடன் ஹௌதி கிளர்ச்சி போராளிகள் லாஹ்ஜ் மாகாணத்தில் உள்ள அல் அனாத் விமான நிலையத்தையும், அத்துடன் அதென் சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்திய வங்கி தலைமையகங்களைக் கைப்பற்றிய நிலையில், சுற்றி வளைக்கப்பட்ட ஹாதி யெமனில் இருந்து வெளியேறிவிட்டதாக புதனன்று செய்திகள் தெரிவித்தன. Wall Street Journal செய்தியின்படி, எக்கணமும் அச்சுறுத்தும் நிலையிலிருந்த ஹௌதி தாக்குதலில் இருந்து தப்பிக்க சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளது பரிவாரத்தின் உதவியுடன் ஹாதி ஒரு படகில் அதென் நகரிலிருந்து தப்பி வெளியேறினார். ஆனால் ஹாதி வெளியேறியது குறித்த செய்திகளை யெமனின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் தலைமை தளபதி அலி அல் அஹ்மாதி மறுத்தார். அவர் ராய்டர்ஸிற்கு கூறுகையில், “அவர் இங்கே தான், இங்கே தான், இங்கே தான் இருக்கிறார். நான் இப்போது அவரோடு தான் மாளிகையில் இருக்கிறேன். அவர் அதெனில் தான் இருக்கிறார்,” என்றார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிறப்பு படை சிப்பாய்கள் கடந்த வாரயிறுதியில் வெளியேறுவதற்கு முன்னர் வரையில், அவர்கள் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், தெற்கு மற்றும் கிழக்கு யெமனில் அரேபிய தீபகற்ப அல் கொய்தா உறுப்பினர்களுக்கு எதிராக டிரோன் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தவும் அல் அனாத் விமான தளத்தைத் தான் பயன்படுத்தி இருந்தனர். பெப்ரவரியில் சானாவில் வீட்டு காவலில் இருந்து ஹாதி தப்பியோடி வந்த துறைமுக ஏடென் நகரை நோக்கி, அவர்கள் தெற்கில் நகர்ந்ததும் ஹௌதியர் அந்த தளத்தைக் கைப்பற்றினர். ஜனவரியில் ஹௌதியர் ஜனாதிபதி மாளிகையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர், அந்த ஜனாதிபதி அவரது இராஜினாமாவை அறிவிக்கவும் மற்றும் அரசாங்கத்தைக் கலைக்கவும் நிர்பந்திக்கப்பட்டார். செப்டம்பர் 2014 இல் தலைநகர் சானாவின் கட்டுப்பாட்டை எடுத்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், சர்வதேச விமான நிலையத்தின் மீது சலெஹ் மற்றும் ஹாதிக்கு விசுவாசமான படைகளுக்கு இடையே ஏடெனில் சண்டை வெடித்ததும், கடந்த வாரம் தெற்கை நோக்கி முன்னேறத் தொடங்கினர். அந்நாட்டின் மீது மீண்டும் கட்டுப்பாட்டை பெறும் ஒரு முயற்சியில் இன்னமும் அவருக்கு விசுவாசமான இராணுவ படைகளால் காவல் காக்கப்பட்டு வருகின்ற ஹாதி இருக்கும் இடத்தச் சுற்றி தாக்கும் தூரத்திற்குள், ஹௌதியர்களின் புதன்கிழமை முன்னேற்றம் அவர்களைக் கொண்டு வந்தது. சலெஹை ஆதரிக்கும் யெமனிய விமானப்படை விமான ஓட்டிகளைக் கொண்ட போர் விமானங்கள் கடந்த சில நாட்களாக அந்த சுற்றுவட்டாரத்தைக் குறைந்த உயரத்திலிருந்து தாக்கி உள்ளன. ஹாதி தலைமையிலான அமெரிக்க கைப்பாவை ஆட்சியின் முழு பொறிவுக்கு இடையே அல் அனாத் விமானத்தளத்தை இழந்திருப்பது, ஈராக், சிரியா மற்றும் லிபியாவிற்கு அடுத்து, அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையின் சமீபத்திய தோல்வியாகும். பெரிதும் வறுமைப்பட்ட அந்த அரேபிய நாட்டை முற்றிலும் ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கி, யெமனில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான தலையீடானது, நீண்டகாலமாக கொதித்துக் கொண்டிருந்த வகுப்புவாத பதட்டங்களை வெடிக்கும் புள்ளிக்குக் கொண்டு வந்துள்ளது. யெமனுக்குள் டிரோன் தாக்குதல்களைத் தொடங்க அமெரிக்க இராணுவம் மற்றும் சிஐஏ ஆல் உபயோகிக்கப்பட்ட முக்கிய இடங்களில் அல் அனாத்தும் ஒன்றாக இருந்தது. Bureau of Investigative Journalism இன் மதிப்பீடுகளின்படி, 2009இல் அப்போதைய ஜனாதிபதி சலெஹின் ஏற்பிசைவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட டிரோன் போர், 1,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. மக்களால் பாரியளவில் வெறுக்கப்பட்ட அந்த டிரோன் தாக்குதல்கள், அதிகாரத்திற்கு வந்த ஹாதியாலும் ஆதரிக்கப்பட்டன. இவர் 2012 இல் பாரிய போராட்டங்களால் சலெஹ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்திருந்தார். ஜனவரியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சானாவின் கட்டுப்பாட்டை எடுத்ததும், அல் கொய்தா போராளிகள் என்று கருதப்படுபவர்களுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடருவதற்காக ஹௌதி கிளர்ச்சியாளர்களுடன் உறவுகளை ஸ்தாபிக்க பென்டகன் வேலை செய்தது. கடைசியாக மார்ச் 1 அன்று பேடா மாகாணத்தில் தாக்குதல் நடந்ததாகவும், அதில் அதிகபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிட்டன. அந்த பகுதியில் தான் ஹௌதி போராளிகளும் அரேபிய தீபகற்பத்தின் அல் கொய்தா உறுப்பினர்களும் சண்டையிட்டு வந்தனர். ஏமன் தோல்வியை அடிக்கோடிடும் வகையில், நடந்துவரும் சண்டைக்கு இடையே அது 500 மில்லியனுக்கும் கூடுதல் மதிப்பிலான ஆயுதங்களையும், தளவாடங்களையும் கண்டுபிடிக்க முடியாதளவிற்கு இழந்துள்ளதை பென்டகன் ஒப்புக் கொள்கிறது. அந்த தளவாடங்கள் ஹௌதி போராளிகள் கரங்களில் போய் சேர்ந்ததா அல்லது அல் கொய்தா போராளிகளிடம் போய் சேர்ந்ததா என்பது அவர்களுக்கு தெரியவில்லையென அமெரிக்க இராணுவ அதிகாரிகள் சமீபத்திய மூடிய-கதவுகளுக்குப் பின்னால் நடந்த காங்கிரஸ் விசாரணைகளில் சாட்சியளித்தனர். “அவை முற்றிலுமாக விட்டுக்கொடுக்கப்பட்டு கையைவிட்டு போய்விட்டன என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்,” என்று சட்டப்பேரவை உதவியாளர் ஒருவர் Washington Post க்கு தெரிவித்தார். 2007க்குப் பின்னர் யெமனி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட, தற்போது இழந்துள்ள, அந்த அமெரிக்க தளவாடங்களில் 200 M-4 ரக துப்பாக்கிகள், 1.25 மில்லியன் துப்பாக்கி தோட்டாகள், 160 ஹம்வீஸ் ஊர்திகள், மற்றும் 4 Huey II ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் உள்ளடங்கும். இரகசியமான திட்டங்கள் மூலமாக சிஐஏ மற்றும் பென்டகனால் வழங்கப்பட்ட, வெளியில் தெரியாத இன்னும் கூடுதல் எண்ணிக்கையிலான ஆயுதங்களும் மற்றும் தளவாடங்களும் காணாமல் போய் உள்ளன. |
|