World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Germany closes its borders to refugees ஜேர்மனி அகதிகளுக்கு அதன் எல்லைகளை மூடுகிறதுBy Peter
Schwarz அகதிகளை ஏற்க ஜேர்மனி தயாராக இருப்பதாக சான்சிலர் அங்கேலா மேர்கெல் அறிவித்து, அது சர்வதேச அளவில் "ஜேர்மனியின் வரவேற்கும் கலாச்சாரமாக (Willkommenskultur)” புகழப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அரசாங்கம் அகதிகளுக்கு அதன் எல்லைகளை மூடியுள்ளது. அவசரமாக கூட்டப்பட்ட, கேள்விகள் அனுமதிக்கப்படாத ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் ஞாயிறன்று இரவு அறிவிக்கையில், “அடுத்த நிமிடங்களிலிருந்து" ஜேர்மனி எல்லை கட்டுப்பாடுகளை மீண்டும் தொடங்குகிறது என்றார். இதுவரையில் அவர் ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்ற பாவரியா பகுதிக்கு நூற்றுக் கணக்கான எல்லையோர காவல்படையினரை அனுப்பியிருப்பதாக தெரிவித்தார். ஆஸ்திரிய அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவிற்கு இடையே இரயில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். “ஜேர்மனிக்குள் வரும் தற்போதைய உள்வரவை மட்டுப்படுத்துவதும் மற்றும் ஒழுங்குமுறையில் நுழைவு நிகழ்வுபோக்கிற்கு திரும்புவதுமே" இத்தகைய கடுமையான நடவடிக்கைகளின் நோக்கமென்று டு மஸியர் அறிவித்தார். அகதிகளது பாதுகாப்பிற்கான உரிய சர்வதேச தரமுறைகளை ஜேர்மனி மதிக்குமென அவர் சூளுரைத்திருந்த போதினும், “தஞ்சம் கோரும் பாரிய பெரும்பான்மையினருக்கு" அந்நாடு "பொறுப்பேற்க" முடியாதென்பதை அவர் சேர்த்துக் கொண்டார். அவர் வலியுறுத்துகையில், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் டுப்ளின் நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அந்த நெறிமுறைகள், ஓர் அகதி, ஆணோ அல்லது பெண்ணோ, அவர் முதலில் நுழையும் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்து தங்கியிருக்கலாமென வரையறுக்கின்றன. இந்த வரையறையின் அடிப்படையில் இம்மாத தொடக்கத்திலிருந்து ஜேர்மனிக்கு வந்துள்ள பத்து ஆயிரக் கணக்கான அகதிகளின் பாரிய பெரும்பான்மையினரை ஏற்றுக்கொள்ள அது மறுத்திருக்கலாம் என்றார். எல்லை கட்டுப்பாடுகளின் அறிமுகம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஜேர்மனிக்குள் வரும் நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசைகள் உருவாயின, ஞாயிறன்று சுமார் 7,100 பேர் வந்து சேர்ந்த முனிச் மத்திய நிலையத்தில் திங்களன்று எந்தவொரு அகதியும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஜேர்மனியின் எல்லைகள் மூடப்பட்டமை சங்கிலித்தொடர் போன்ற ஒரு சர்வதேச எதிர்வினையை தூண்டியது. ஆஸ்திரிய அரசாங்கமும் ஹங்கேரி ஒட்டிய அதன் எல்லைகளில் கட்டுப்பாடுகளை தொடங்குவதாக அறிவித்து, இதற்காக 2,200 சிப்பாய்களை நிறுத்தியது. செக் அரசாங்கம் ஆஸ்திரியாவை ஒட்டிய அதன் எல்லைக்கு 200 கூடுதல் பொலிஸ் அதிகாரிகளை அனுப்பியது, நெதர்லாந்து ஜேர்மனியிலிருந்து உள்ளே வரும் பயணியர்களை தற்போக்கில் சோதனை (random check) செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளது. அகதிகளைக் காட்டுமிராண்டித்தனமாக கையாள்வதற்காக சர்வதேச விமர்சனத்தை முகங்கொடுத்துள்ள ஹங்கேரிய அரசாங்கம், சேர்பிய எல்லையை ஒட்டிய அதன் 170 கிலோமீட்டர் தூர முள்வேலியில் இருக்கும் சிறிய இடைவெளிகளைக் கூட அடைத்து, கனரக ஆயுதமேந்திய சிப்பாய்களைக் கொண்டு அதை பாதுகாக்கவிருக்கிறது. இப்போது, அந்நாட்டின் உள்ளே அங்கே கடுமையான பொலிஸ் கட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. திங்களன்று புடாபெஸ்ட் வீரர் சதுக்கத்தில் (Budapest’s Heroes’ Square), பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் பின்வரும் வார்த்தைகளுடன் ஏறத்தாழ 900 புதிய எல்லை காவல்படையினரோடு சபதமேற்றார்: “ஹங்கேரியையே மாற்றும் அளவிற்கு இந்தளவிலான உலகளாவிய ஒரு மக்கள் நகர்வை நாங்கள் விரும்பவில்லை.” இன்று, செவ்வாயன்று, ஹங்கேரிய புலம்பெயர்வோர் அலுவலகத்தின் அதிகாரிகளால் சேர்பிய மண்ணிலேயே அகதிகள் பதிவு செய்யப்படுகிறார்கள், பின்னர் அவர்கள் முகாம்களில் அடைத்து வைக்கப்படுவார்கள், அவர்களது தஞ்சம் கோரும் கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும் வரையில் அங்கிருந்து அவர்கள் வெளியே செல்ல முடியாது. பதிவு செய்ய மறுப்பவர்கள் ஹங்கேரிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். திங்களன்று புருசெல்ஸில், ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிமார்கள் மத்தியத்தரைக்கடலில் இராணுவ செயல்திட்டத்தை விரிவுபடுத்த முடிவெடுத்தனர். முன்னதாக அகதி படகுகள் கண்காணிக்கப்பட்டன, சில படகுகள் திருப்பி அனுப்பப்பட்டன என்றநிலையில், இப்போது அவை நடுக்கடலிலேயே கூட பறிமுதல் செய்யப்படும், ஆள்கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் அழிக்கப்படும். மூன்றாம் கட்டத்தில், எல்லையோர கடல்பகுதிகளிலும், லிபியா மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகளின் பெருநிலங்களிலும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்படுகின்றன. சிரியா மற்றும் ஏனைய போர்-பாதித்த நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குத் தொடர்ந்து தப்பியோடிவரும் பத்தாயிரக் கணக்கான அகதிகள் இந்த எல்லைமூடல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை காலை 10 மணியளவிலேயே, ஜேர்மன் எல்லை மூடப்பட்ட நிலையில், ஹங்கேரியிலிருந்து 7,000 அகதிகள் ஆஸ்திரியா வந்திருந்தனர். ஞாயிறன்று, சேர்பியாவிலிருந்து 5,800 புதிய அகதிகள் ஹங்கேரிக்கு வந்தனர், இதுவொரு புதிய ஒருநாள் அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஒடுக்குமுறை மற்றும் மரணத்திலிருந்து மிகவும் சிரமத்தோடு தப்பியோடிவந்த பல வாரங்களுக்குப் பின்னர், இந்த அகதிகள் இப்போது ஐரோப்பாவில் நிராதரவான பகடைக்காய்களாக கையாளப்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு அனுப்பப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். சேர்பிய-ஹங்கேரிய எல்லையில் அகதிகளைக் கவனித்து உதவி வருகிற, முனீச்சின் ஒரு சுய ஆர்வலர் Annett Oertel அங்கே மேலோங்கிய நிலைமைகளைக் குறித்து Süddeutsche Zeitungக்கு விவரித்தார். “அங்கே குப்பைதொட்டிகளோ, குளியலறைகள், கழிவறைகளோ இல்லை. துயரகரமான அந்த மக்கள் அவர்களது அன்றாட கடமைகளை எங்கேனும் முடித்துக் கொள்கிறார்கள். 'அது துர்நாற்றம் வீசுகிறது, குப்பை மேடுகள் வெடித்து சிதறியதைப் போல அது காணப்படுகிறது,” என்று கூறிய Oertel, “இருந்தாலும், அந்த குப்பைகளை என்ன செய்வதென்றோ, உடல் உபாதைகளுக்கு என்ன வழிவகை செய்வதென்றோ யாரும் கவலைப்படவில்லை. இதற்கிடையே ஆபத்துண்டாக்கும் சுகாதார சுற்றுச்சூழல்களால் தொற்றுநோய் உண்டாகும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது,” என்றார். எல்லைகளை மூடும் ஜேர்மன் அரசாங்கத்தின் முடிவுக்கு முன்னதாக ஊடகங்களிலும் மற்றும் ஆளும் கட்சிகளிடமிருந்தும் ஒரு வெறுக்கத்தக்க பிரச்சாரம் நடந்து வந்தது. அனைத்திற்கும் மேலாக, பிரான்ங்க்பேர்ட் பங்குச்சந்தையின் பழமைவாத ஊதுகுழலான Frankfurter Allgemeine Zeitung (FAZ) அகதிகளுக்கு எதிராக சளைக்காமல் கோபமூட்டி வந்தது. இந்த பிரச்சாரத்தின் பொதுவான வேட்கையைப் புரிந்துகொள்ள ஒருசில சமீபத்திய தலையங்கங்களின் தலைப்புகளைக் குறிப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்: “ஜேர்மனியர்கள் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து தான் செய்கிறார்களா?” “ஆகவே படகுகள் கவிழாது", “எல்லை கட்டுப்பாடுகள். இன்றைய ஆணை,” “அகதிகள் மீதான தாக்குதல். இராணுவம் எங்கே?”, அல்லது "கிழக்கு ஐரோப்பா சரியாக செய்கிறது". கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் ஏறத்தாழ ஒருமனதாக அகதிகளை ஏற்க மறுத்துள்ளன. முன்னாள் பேர்லின் சமூக ஜனநாயக கட்சி மாநில நிதி மந்திரி திலோ சர்ராஜினை Die Zeit வெளியில் கொண்டு வந்தது. "ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக்கொள்கிறது" என்ற இனவாத துண்டறிக்கையின் ஆசிரியர், சடரீதியில் முன்னேறிய "நாகரீகங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கட்டுப்பாடில்லாத புலம்பெயர்வுக்கு எதிராக" பாதுகாக்க, “சுவர்கள் மற்றும் முள்வேலிகள்" பயன்படுத்தப்படுவதைப் புகழ்ந்தார். சான்றாக அவர் சீனப் பெருஞ்சுவர் மற்றும் லைம்ஸ் பெருஞ்சுவரை மேற்கோளிட்டார், லைம்ஸ் பெருஞ்சுவர் "400 ஆண்டுகளுக்கு முன்னர் பரந்துபட்ட பகுதிகளிலிருந்து டெய்டோன்கள் (Teutons) மற்றும் ஏனைய புலம்பெயர்வோருக்கு எதிராக" வெற்றிகரமாக ரோமன் சாம்ராஜ்ஜியத்தைப் பாதுகாத்தது. FAZ இல், ஹம்போல்ட் பேராசிரியர் ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கி சர்ராஜினை மிஞ்சினார். ஒரு விருந்தினர் பக்க கருத்துரையில், அவர் "வரவேற்கும் கலாச்சார பேச்சுக்கள்" குறித்து கோபத்தைக் கொட்டினார். “அறநெறி மற்றும் ஒழுக்கத்தை மட்டுமே ஆதாரங்களாக கொண்டால்… அரசியல் நடவடிக்கை அவற்றின் அடிப்படையில் வருகிறதென்றால்" உள்நாட்டு அமைதி "ஆபத்திற்குட்படும்.” அரசாங்கம் பண்டைய புலம்பெயர்வு நாடுகளின் வழிமுறைகள் என்னவோ அதை செய்ய வேண்டும்: அதாவது, “அவர்களுக்குத் தேவைப்படும் போது அவர்கள் மக்களைக் கூப்பிட்டுக் கொள்வார்கள், அவர்கள் ஒரு சுமையாக மட்டுமே இருப்பார்களெனும் போது அவர்களை நிராகரித்துவிடுவார்கள்”. கூட்டணி அரசாங்கத்திற்குள், குறிப்பாக பாவரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) அகதிகளை ஏற்பதற்கு எதிராக கடுமையாக பேசுகிறது. CSU தலைவரும், பாவரிய அரசு பிரதமருமான ஹோர்ஸ்ட் ஸீஹூபர், அகதிகளை நோக்கிய ஹங்கேரிய பிரதம மந்திரி ஓர்பனின் மூர்க்கமான மனோபாவத்துடன் ஐக்கியத்தை எடுத்துக்காட்டும் விதமாக அவரது கட்சி கூட்டம் ஒன்றிற்கு அவரை வரவேற்றிருந்தார். ஸீஹூபர் மற்றும் ஓர்பன் இருவருமே பின்னர் ஜேர்மன் எல்லைமூடல்களைப் பாராட்டினர். “ஜேர்மனியின் முடிவை நாங்கள் மிகவும் தெளிவாக புரிந்துகொள்கிறோம் என்பதுடன், எங்களது முழுமையான ஐக்கியத்தை நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று சிற்றிதழ் Bildக்கு ஓர்பன் தெரிவித்தார். “ஜேர்மன் மற்றும் ஐரோப்பாவின் முதிர்ந்த மதிப்புகளைப் பாதுகாப்பதற்கு, இந்த முடிவு அவசியமென நாங்கள் புரிந்து கொள்கிறோம்,” என்றார். ஆனால் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்திற்குள்ளே கூட, அங்கே ஆரம்பத்திலிருந்தே அகதிகளை ஏற்றுக் கொள்வதில் எதிர்ப்பு நிலவுகிறது. எவ்வாறிருப்பினும் CDU இன் தலைவராகவும் உள்ள சான்சிலர் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே, இந்த எதிர்ப்பு சற்றே மௌனமாக உள்ளது. மிகத்தெளிவாக இந்த எதிர்ப்பாளர்களில் உள்துறை மந்திரி டு மஸியர் மற்றும் நிதி மந்திரி வொல்ஃப்காங் முன்சௌவ் உள்ளடங்குவர். இப்போது அவர்கள் மேலோங்கியுள்ளனர். ஓர்பனுடன் மிக நெருக்கமாக வேலை செய்துவரும் மேர்க்கெலும் மற்றும் ஜேர்மன் அரசாங்கமும், அவருடன் கருத்துவேறுபடாத ஒரு போக்கையே கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் மூன்றாம் கட்சியான சமூக ஜனநாயக கட்சிக்கும் பொருந்துகிறது. அதன் கட்சி அங்கத்தவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், சமூக ஜனநாயக கட்சி தலைவர் சிங்மர் கேப்ரியல் வாய்விட்டு எல்லை கட்டுப்பாடுகளுக்குத் திரும்பியமையைப் பாதுகாத்தார். அகதிகளைக் குறித்த மேர்க்கெலின் பாசாங்குத்தனமான இரக்கவுணர்வு, அந்நேரத்திலேயே நாம் குறிப்பிட்டதைப் போல, பிரதானமாக மக்களிடையே நிலவும் அகதிகளுக்கான ஆதரவு அலைக்கு பிரதிபலிப்பாகும். அப்பெண்மணி இத்தகைய உணர்வுகளைக் கைப்பற்றி, அவற்றை ஒரு பிற்போக்குத்தனமான திசையில் திருப்ப முயன்றார். எல்லைகளை மூடுவதற்கான இந்த முடிவு, இப்பரந்துபட்ட உணர்விற்கு ஒரு சவாலாகும். இது சமூக தாக்குதல்கள், ஐரோப்பாவில் தேசிய மோதல்கள், சிரியா மற்றும் லிபியாவில் ஏகாதிபத்திய போர்களின் ஒரு புதிய கட்டத்தை முன்னறிவிக்கிறது. |
|