World Socialist Web Site www.wsws.org |
EU adopts plan to keep out refugees ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை உள்நுழைய விடாத திட்டத்தை நிறைவேற்றுகின்றது
By Martin
Kreickenbaum ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்களது ஒரு கூட்டம், அதன் மணிக்கணக்கில் நீண்ட விவாதங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்து பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித விபரங்களையும் வெளியிடாமல், வியாழனன்று காலை நிறைவடைந்தது. “நமது வெளி எல்லைகளில் நிலவும் பரிதாபகரமான நிலைமையை" முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மற்றும் "எல்லைக் கட்டுப்பாடுகளை பலப்படுத்துவதற்கும்" ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நீண்டகால வழிவகைகளை விவாதித்திருந்ததாக கூறும் வரைவு ஆவணம் ஒன்றை அசோசியேடெட் பிரஸ் மேற்கோளிட்டது. ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை மூடுவதற்கு அதிக இராணுவத்தினரை அனுப்புவது மற்றும் அகதிகளை சிரியா போன்ற மோதல் பிராந்தியங்களுக்கு அருகிலுள்ள முகாம்களிலேயே வைத்திருப்பதற்காக சர்வதேச மீட்புதவி அமைப்புகளுக்கு குறைந்தபட்சம் 1 பில்லியன் யூரோ வழங்குவது, அதேவேளையில் சிரியாவிலிருந்து வெளியேறி வந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்கியுள்ள லெபனான், துருக்கி மற்றும் ஜோர்டானுக்கு உதவிகளை அதிகரிப்பது உட்பட விவாதத்தின் கீழ் இருந்த முன்மொழிவுகளை அசோசியேடெட் பிரஸ் குறிப்பிட்டது. அரசாங்க தலைவர்களின் கூட்டம், செவ்வாயன்று நடந்த ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிமார்களது ஒரு கூட்டத்தை அடுத்து கூட்டப்பட்டிருந்தது, அதில், மந்திரிமார்கள் ஒவ்வொரு அங்கத்துவ நாடுகளுக்கும் அகதிகளைப் பகிர்ந்தளிக்கும் ஒரு புதிய ஒதுக்கீட்டு முறைக்கு உடன்பட்டிருந்தனர். அகதிகள் ஒதுக்கீட்டு முறை சூடான விவாதத்திற்குரிய ஒரு விடயமாகி உள்ளது. அதுபோன்ற கொள்கை விடயங்களுக்கு ஒருமனதான உடன்பாட்டைக் கோரும் மரபார்ந்த நடைமுறைகளுக்கு முரண்பட்டு, உள்துறை மந்திரிமார்கள் பெரும்பான்மை முடிவை ஏற்க முன்வந்தனர். உண்மையில் அகதிகள் ஒதுக்கீடு திட்டத்தை எதிர்த்திருந்த போலந்து அரசாங்கம், சில குறிப்பிட்ட விட்டுக்கொடுப்புகளுக்குப் பிரதியீடாக அக்கூட்டத்தின் போக்கில் அதை ஆதரிக்க உடன்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு முன்வைத்த ஆரம்ப பரிந்துரையிலிருந்து வேறுபட்டு, அங்கே எந்தவொரு நிலையான ஒதுக்கீடும் மக்கள்தொகை அடிப்படையிலோ, பொருளாதார சக்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை மட்டங்கள் அடிப்படையிலோ இருக்காது. அதற்கு மாறாக, ஒவ்வொரு அரசாங்கமும் சுயமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்படும். அதற்கும் கூடுதலாக, ஒவ்வொரு அரசும் எந்த அகதிகளை அது ஏற்றுக்கொள்ள விரும்புகிறதோ அவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றுவரும் நூறாயிரக்கணக்கானவர்களில் மொத்தம் 120,000 அகதிகளைப் பகிர்ந்து கொள்வதன் மீது அக்கூட்டம் கவனம் செலுத்தியது. தற்போது இத்தாலியிலுள்ள 15,600 அகதிகளும் மற்றும் கிரீஸில் தற்போதுள்ள 50,400 அகதிகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏனைய நாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. ஹங்கேரியில் பதிவுசெய்த பெரும்பாலான அகதிகள் ஏற்கனவே அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாலும் மற்றும் ஹங்கேரிய அரசாங்கம் மேற்கொண்டு அதிகமாக அகதிகளை ஏற்கவோ அல்லது ஒரு மறுபகிர்வு திட்டத்திற்குக் கீழ்படியவோ மறுப்பதாலும், உண்மையில் ஹங்கேரியில் மறுகுடியமர்வு செய்வதற்காக இருந்த சுமார் 54,000 அகதிகள், ஹங்கேரிக்குப் பதிலாக, இத்தாலி, கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளில் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இவ்வாண்டில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் குறைந்தபட்சம் 1 மில்லியன் அகதிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 120,000 பேர் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள் என்பது மிக சொற்ப எண்ணிக்கையே ஆகும். அன்றாடம் சராசரியாக 6,000 அகதிகள் வந்து கொண்டிருக்கையில், அவ்விரண்டாண்டில் அடையப்படுவதாக கூறப்படும் அதிகபட்ச எண்ணிக்கை என்பது வெறும் 20 நாட்களிலேயே எட்டப்பட்டுவிடும். உத்தியோகபூர்வ விவாதங்களுக்கு மாறாக, அகதிகள் ஒதுக்கீடு முறையின் நோக்கம் "வெறுமனே" சுமையை ஐரோப்பாவெங்கிலும் "பகிர்ந்து" கொள்வதல்ல. மாறாக அகதிகள் பெருக்கெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தவும், அவர்களைத் திரும்ப அனுப்புவதைத் துரிதப்படுத்தவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளி எல்லைகளை மூடுவதற்காக ஒரு புதிய இயங்குமுறையை நடைமுறையில் கொண்டு வருவதுமாகும். ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவின் உள்துறை மந்திரிமார்களோ அகதிகள் ஒதுக்கீடு முறையை பெரிதும் வலியுறுத்துகின்றனர். பேர்லினும் வியன்னாவும் மேலதிகமான அகதிகளை ஏற்க பொறுப்பேற்றுள்ளதால், இந்நெறிமுறைகள் வியத்தகுரீதியில் அகதிகள் எண்ணிக்கையைக் குறைக்க இட்டுச் செல்லுமென அவர்கள் நம்புகின்றனர். புதிய விதிமுறைகள் கடுமையான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதை ஆஸ்திரிய உள்துறை மந்திரி Johanna Mikl-Leitner அக்கூட்டம் முடிந்ததும் தெளிவுபடுத்தினார். “நாங்கள் ஏறத்தாழ முடிவிற்கு தொடக்கத்தைக் கொண்டு வந்துவிட்டோம் என்பதே இன்றைய மிகவும் தீர்மானகரமான விடயம்,” என்றவர் ORF தொலைக்காட்சி சேனலுக்குத் தெரிவித்தார். “ஏனென்றால் 120,000 பேர், 'விருப்பமற்ற நாடுகள்' என்றழைக்கப்படும் நாடுகள் உள்ளடங்கலாக சரிசமமாக பகிர்ந்து கொள்ளப்பட்டால், அதுவொரு இரட்டை தாக்குதலாக அமையும், இரண்டு விதத்தில் அதுவொரு சமிக்ஞை அளிக்கும். முதலாவது, அது பால்கன் பாதைகளில் சுமையைக் குறைத்து, ஆஸ்திரியா மீதான சுமையைக் குறைக்கும். இரண்டாவது, எங்கே தஞ்சம் கோருவது என்பதை இனிமேல் அகதிகள் முடிவெடுக்க முடியாதவாறு செய்யும்,” என்றார். இந்த அகதிகள் ஒதுக்கீடு முறையானது அகதிகளின் உள்வரவை நிறுத்துவதற்கான முதல் படி மட்டுமே என்பதை Mikl-Leitner சுட்டிக்காட்டினார். “வெளி எல்லைகள் மீதான கட்டுப்பாடு மற்றும் அகதிகளின் விபர ஆய்வுப்பகுதிகளை (hotspots) அமைப்பது ஆகியவை அகதிகள் வருவதைக் குறைப்பதில் மிகவும் தீர்மானகரமாக இருக்குமென" அப்பெண்மணி வலியுறுத்தினார். ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டி மஸியரும் அதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டார். “உள்வரவை முடிவுக்குக் கொண்டு வருவதே நமக்கு அவசியப்படுகிறது,” என்றார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளின் பாதுகாப்பு, பாதுகாப்பு அவசியமற்ற புலம்பெயர்வோரை தொடர்ச்சியாக திரும்ப அனுப்புதல், மற்றும் பொதுவான ஐரோப்பிய தஞ்சம்கோரும் முறையின் விதிகளை அனைத்து அங்கத்துவ நாடுகளும் பயன்படுத்தல், கவனத்தில் கொள்ளுதல்" ஆகியவையே அந்நடவடிக்கைகளின் நோக்கம் என்பதையும் அவர் ஒரு பத்திரிகை வெளியீட்டில் சேர்த்துக் கொண்டார். பல்வேறு அகதி அமைப்புகளது முறையீடுகளுக்கு முரண்பட்ட விதத்தில், அந்த அகதிகள் ஒதுக்கீடு விதிமுறைகள் டப்ளின் உடன்படிக்கையைச் செல்லுபடியற்றதாக ஆக்கவில்லை. அந்த உடன்படிக்கையின்படி, ஓர் அகதி முதலில் எந்த ஐரோப்பிய நாட்டில் நுழைகிறாரோ அந்நாடே அந்த அகதியை ஏற்றுக்கொள்ளவும் மற்றும் தஞ்சம்கோரும் நடைமுறைகளை தொடங்கவும் பொறுப்பாகிறது. டப்ளின் விதிகளுக்கேற்ப அகதிகளைப் பகிர்ந்துகொள்ளும் இயங்குமுறை பிரதியீடு செய்யப்படவில்லை, மாறாக அவசரகாலத்தின் போது கையாள்வதற்காக அது வெறுமனே விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதே ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்திலிருந்து மிகவும் தெளிவாக தெரிகிறது. இதற்கும் மேல், அந்த 42 பக்க ஐரோப்பிய ஒன்றிய ஆவணம் அகதிகள் முகங்கொடுக்க உள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அப்பட்டமாகவும் மற்றும் நிமிடநேர விளக்கத்துடனும் பட்டியலிடுகிறது. அகதிகள் எங்கே அனுப்பப்பட வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்காது. அனைத்திற்கும் மேலாக, சராசரியாக 75 சதவீதம் அங்கீகரிப்பு விகிதம் கொண்ட நாடுகளிலிருந்து வரும் அகதிகள் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படுவார்கள். இப்போதைக்கு, பிரதானமாக சிரியா மற்றும் எரித்திரியாவிலிருந்து வரும் அகதிகள் மட்டுமே இந்த தகுதிவகையின் கீழ் வருகிறார்கள். இதற்கும் மேலதிகமாக, பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு சர்வதேச அளவில் மதிப்புடைய எந்தவித பயண ஆவணங்களும் வழங்கப்படாது. நடைமுறையில் இதன் அர்த்தம், ஜேர்மனியில் குடியிருக்க அவசியமான அவ்ஆவணத்தின் ஒரு நீடிப்பில்லாமல் ஐரோப்பாவில் வேறிடத்தில் குடியேற முடியாது. இதன் விளைவாக, அகதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடுகளிலேயே சிக்கி இருக்க வேண்டும். அவர்கள் வழமையாக அவர்களைக் கணக்கில் காட்ட வேண்டும் என்பதுடன், அவர்களுக்குப் பணமில்லா உதவிகள் மட்டுமே கிடைக்கும். ஐரோப்பிய ஒன்றிய எல்லையோர நாடுகளில் "அகதிகளின் எல்லைப்புற முகாம்கள்" என்றழைக்கப்படுவதை துரிதமாக ஸ்தாபிப்பதே அந்த உடன்படிக்கையின் மைய கூறுபாடாக உள்ளது. இது சித்திரவதை முகாம்களுக்கு ஒத்திருக்கிறது, அங்கே வரும் அகதிகள் ஒரு தீவிரப்பட்ட நடைமுறையில் பதிவு செய்யப்படுவார்கள் மற்றும் அவர்களது தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் ஒரு முதல் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அகதிகளைப் பதிவு செய்யும் பணி, எல்லை பாதுகாப்பு முகமையான Frontex, ஐரோப்பிய தஞ்சம் கோருவோர் உதவி அலுவலகம் (EASO) மற்றும் ஐரோப்பிய பொலிஸ் ஆணையம் யூரோபோல் (Europol) ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும். ஒரு மருத்துவ பரிசோதனைக்குக் கூடுதலாக, இத்தகைய நடைமுறைகளின் பிரதான நோக்கம், தஞ்சம் கோருவோரின் தாய்நாட்டை, தப்பித்துவரும் வழிகளை மற்றும் அகதிகள் தப்பிக்க உதவியவர்களின் அடையாளங்களைத் தீர்மானிப்பதற்காக ஆகும். எல்லா அகதிகளிடமிருந்தும் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும். இந்த "அகதிகளின் எல்லைப்புற முகாம்கள்" இடுக்கிப்பிடியில் யாரேனும் சிக்கினால் அவர்கள் திரும்ப அனுப்பப்படுவார். Frontex இன் அதிகாரம் விரிவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதுவும் இப்பணிக்கு பொறுப்பேற்கிறது. Frontex க்கான வரவு-செலவுத் திட்டம் 54 சதவீதமாக, 176 மில்லியன் யூரோவிற்கு உயர்த்தப்படுவதுடன், திருப்பி அனுப்புவதற்காக 500 மில்லியன் கூடுதல் யூரோ ஏற்பாடு செய்யவும் ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. முதல் முகாம் தற்போது சிசிலி இன் கடானியாவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. கிரேக்க நகரமான பிரேயஸில் இரண்டாம் முகாமிற்கான திட்டம் பெரிதும் முன்னேறியுள்ளது. கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு வரும் அகதிகளின் தஞ்சம்கோரும் நடைமுறைகளுக்கு அந்நாடுகளையே பொறுப்பாக்குகின்ற டப்ளின் விதி, அகதிகளின் மலைப்பூட்டும் அதிகரிப்பால் நடைமுறையளவில் தோல்வியடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணைக்குழுவின் தகவல்படி, இந்தாண்டு மட்டும், 442,000 அகதிகள் ஏற்கனவே மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணித்துள்ளனர், இதில் கிரீஸ் வழியாக வந்த 319,000 பேரும் உள்ளடங்குவர். ஆகஸ்டிலிருந்து மட்டும், கிரேக்க அதிகாரிகள் 192,000 அகதிகளைப் பதிவு செய்துள்ளனர். கிரேக்க மற்றும் இத்தாலிய அதிகாரிகளால் தஞ்சம்கோரும் நடைமுறைகளை அவர்களின் தரப்பிலிருந்து செயல்படுத்த முடியவும் இல்லை, அவர்களுக்கு விருப்பமும் இல்லை, ஆகவே அவர்கள் அகதிகளைத் தற்காலிக பயண ஆவணங்களுடன் அவர்களது வழியில் செல்ல அனுமதிக்கின்றனர். இதுதான் பால்கன்கள் வழியாக அகதிகளின் நடைபயணத்தை தொடங்கி வைத்தது, அது ஜேர்மனியை எட்டியது, இப்போது அங்கே அரசாங்கம் சுமார் 800,000 அகதிகளை இவ்வாண்டு எதிர்நோக்குகிறது. அகதிகள் ஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் "அகதிகளின் விபர ஆய்வுமையங்களை" நிறுவுதல் ஆகியவை அகதிகள் வருகை மீது கட்டுப்பாட்டை மீளப்பெறுவதையும் மற்றும் டப்ளின் விதியை முழுமையாக நடைமுறைப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. டப்ளின் விதியின் பிரதான நோக்கமே, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பெனிலக்ஸ் நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லுக்சம்பேர்க் போன்ற செல்வசெழிப்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து அகதிகளைத் தூர விலக்கி வைப்பதாகும். ஒதுக்கீடு அடிப்படையில் பகிர்ந்துகொள்வதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் எதிர்ப்பானது, பகுதியாக, டப்ளின் விதியின்படி எதிர்காலத்தில் மேற்கிலுள்ள பணக்கார நாடுகளிலிருந்து பெருந்திரளான அகதிகள் கிழக்கு ஐரோப்பாவிற்குள் அனுப்பப்படுவார்களோ என்ற அவற்றின் அச்சத்தை அடித்தளத்தில் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய எல்லையோர நாடுகளிலேயே அகதிகளை நிறுத்திவைக்கும் முயற்சியோடு சேர்ந்து, வெளி எல்லைகளில் இராணுவ மீள்பலப்படுத்தலை நிறுவவும் ஐரோப்பிய ஒன்றியம் முனைந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய அரசாங்க தலைவர்களின் புதன்கிழமை கூட்டத்திற்கான ஒரு வரவேற்பு கடிதத்தில், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டஸ்க் அறிவிக்கையில், அகதிகளை வெளியிலேயே நிறுத்தி வைப்பது தான் மிகவும் அவசரப்பணி என்று அறிவித்தார். “ஐரோப்பியர்களாகிய நம்மால் தற்போது நமது பொதுவான வெளி எல்லைகளை நிர்வகிக்க முடியாதுள்ளது,” என்று எழுதிய டுஸ்க், “இருப்பினும் சில நாடுகள் தங்களைத்தாங்களே பாதுகாக்க அவற்றின் தேசிய எல்லைகளை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகத்தின் பாதுகாப்பே நமது முதல் கடமையும், கடமைப்பாடுமாகும். இதில் நாம் தோல்வியடைந்துள்ளோம்,” என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பல்கேரியா, கிரீஸ் மற்றும் ஹங்கேரியில் முறுக்கிய கம்பிவேலிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு சேர்ந்து, எல்லை பாதுகாப்பு பொலிஸ் Frontex உதவியுடன் பாரியளவில் ஆயுதமேந்த செய்யப்படும், மற்றும் அகதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதிலிருந்து தடுப்பதற்காக வெளி எல்லைகளில் இராணுவம் நிறுத்தப்படும். ஹங்கேரிய அரசாங்கத்தை முன்மாதிரியாக கொண்டு, பல்கேரிய அரசாங்கமும் இப்போது துருக்கியை ஒட்டிய அதன் எல்லையில் 1,000 சிப்பாய்களை நிலைநிறுத்த அறிவித்துள்ளது. ஹங்கேரிய ஜனாதிபதி விக்டொர் ஓர்பன் குறிப்பாக மோதலுக்குரிய விதத்தில் நடந்து வருகிறார், அகதிகள் வருகையை அவர் ஒரு "பயங்கர ஆபத்தென" குறிப்பிட்டதோடு, “அவர்கள் நம்மை ஆக்கிரமித்துவிடுவார்கள். அவர்கள் வெறுமனே கதவைத் தட்டவில்லை, அவர்கள் அதை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அறிவித்தார். எவ்விதத்திலும் இந்த கண்ணோட்டத்தை ஓர்பன் மட்டுமே கொண்டிருக்கவில்லை. ஜேர்மன் மத்திய கூட்டணி அரசாங்கத்தின் பாகமாக உள்ள பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த ஒரு கூட்டத்திற்கு ஓர்பனை அழைத்திருந்தது. அங்கே அவர் அந்த கருத்துக்களை மீண்டும் கூற அனுமதிக்கப்பட்டார், உற்சாகமான கைதட்டல்களைப் பெற்றார். மொத்தத்தில் இது, ஓர்பன் மட்டுமே தனியாளாக இல்லை என்பதையே தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இது மக்களின் பரந்த அடுக்குகளினது மனோபாவத்துடன் கூர்மையாக முரண்படுகிறது, அவர்களோ அகதிகள் நெருக்கடிகளுக்கு அகதிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடாத்தி நிராதரவான புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதையும் மற்றும் நல்லிணக்கத்தையும் காட்டியுள்ளனர். |
|