World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

US insists on resumption of talks between India and Kashmir separatists

இந்தியாவுக்கும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமெரிக்கா நெருக்குவாரம்

By Deepal Jayasekera
14 August 2000

Back to screen version

கடந்த ஒரு வருடகாலமாக காஷ்மீர் நெருக்கடி தொடர்பான தனது தலையீட்டை தொடரும் விதத்தில் அமெரிக்க நிர்வாகம் இந்திய அரசாங்கத்துக்கும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையே முதல் தடவையாக இடம் பெற்ற உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வாரம் யுத்த நிறுத்தம் தோல்வி கண்ட நிலையிலும் ஜம்மு-காஷ்மீர் இந்திய மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில் இடம் பெற்ற ஒரு மோசமான கார் குண்டு வெடிப்புக்கிடையிலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் புதுடில்லி அரசாங்கத்துக்கும் இடையேயான இடைக்கால யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகள், ஆகஸ்ட 8ம் திகதி ஒரு பெரும் பாகிஸ்தானிய ஆதரவு பிரிவினைவாதக் குழுவான ஹிஸ்புல் முஜாஹிதீன் 15 நாள் யுத்த நிறுத்தத்தை ஒரு முடிவுக்கு கொணர்ந்ததைத் தொடர்ந்து முறிந்து போயிற்று.

இந்த ஹிஸ்புல் குழு இந்திய ஆட்சியாளர்களுடனான பேச்சுவார்த்தையை ஆகஸ்ட் 3ம் திகதி ஆரம்பித்தது. ஆனால் இதன் முக்கிய தலைவரான சலாஹுதீன் இந்தக் கலந்துரையாடல்களில் பாகிஸ்தானையும் சேர்த்துக்கொள்ளும்படி விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்ததைத் தொடர்ந்து யுத்த நிறுத்தத்தை இரத்துச் செய்தது. ஆகஸ்ட் 7ம் திகதி பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், பாகிஸ்தான் எந்த விதத்திலும் சம்பந்தப்படுவதை அடியோடு நிராகரித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் இரத்துச் செய்யப்பட்ட இரண்டு நாட்களின் பின்னர் ஸ்ரீநகரில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்கும் கடந்த சனிக்கிழமை நகரில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உரிமை கோரியது. இச்சம்பவங்கள் வாஜ்பாய் அரசாங்கத்துக்கும் ஜெனரால் முஷாராப் தலைமையிலான பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இடையேயான பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை திணிப்பதை தூண்டிவிட்டது. இருதரப்பினரும் சமாதான ஆரம்பிப்புக்களை நாசமாக்கி விட்டதாக ஆளுக்காள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பு, இரண்டு நாட்களில் வாஷிங்டன் வெளியிட்ட இரண்டாவது அறிக்கையாகும். ஹிஸ்புல் குழுவினர் வாபஸ் பெற்றுக் கொண்ட ஆகஸ்ட் 8ம் திகதி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒரு அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி பின்வருமாறு குறிப்பிட்டார்: "காஷ்மீரில் சமாதான வழிகளை போஷித்து தொடருமாறு நாம் சகல தரப்பினரையும் தூண்டுகின்றோம்... நாம் இந்தியாவுக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்றதோடு அது மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் ஊக்குவிக்கின்றோம்." ஆனால் அமெரிக்கப் பேச்சாளர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை கலந்துகொள்ள ஹிஸ்புல் வலியுறுத்துவது தொடர்பாக கருத்து வெளியிடுவதில் அவதானமாக இருந்து கொண்டார். "இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த விதத்தில் அமையவேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் தீர்மானிக்க வேண்டும்" என அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 11ம் திகதி நியூயோக் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியத் தலையங்கம், கிளின்டன் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஆளும் நிறுவனங்களின் முக்கிய புள்ளிகளின் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளதை பிரதிபலித்தது. "வாஷிங்டன் இரு தரப்பினரையும் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நெருக்க வேண்டும்" என்றது. "ஒரு புதிய காஷ்மீர் யுத்தம் இடம் பெறுவதைத் தடுக்க சகல விதமான நியாயமான முயற்சிகளும் இடம் பெற்றாக வேண்டும்" எனவும் அது குறிப்பிட்டது. இந்த ஆசிரியத் தலையங்கம் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கம் இப்பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானை பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை கைவிடச் செய்ய வெள்ளை மாளிகை நெருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான ஆகஸ்ட் 3ம் திகதி கிளின்டன் வாஜ்பாயை பாராட்டவும் கடந்த இரண்டு தினங்களாக காஷ்மீரின் தென் பாகத்தில் இருந்து பக்தர்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் உட்பட சுமார் 100 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டனம் செய்யவும் வாஜ்பாயுடன் தொலை பேசியில் கதைத்தார். இந்தக் கொலைகளுக்கு ஹிஸ்புல் இயக்கத்தின் யுத்த நிறுத்தத்தை எதிர்க்கும் ஒரு போட்டி பிரிவினைவாத குழுவே பொறுப்பு என நம்பப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக வாஜ்பாய் குற்றம் சாட்டிய போது கிளின்டன் அந்த விவகாரத்தை பாகிஸ்தானிய தலைவர்களுடன் எழுப்புவதாக வாக்குறுதி அளித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

ஆகஸ்ட் 8ம் திகதி பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சரவை கமிட்டியின் ஒரு சிறப்பு கூட்டத்தின் பின்னர் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான வாஜ்பாய் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதில் தனது ஆர்வத்தை பிரகடனம் செய்து கொண்டது. ஒரு அறிக்கை யுத்த நிறுத்தத்தை ஹிஸ்புல் கைவிட்டதையிட்டு கவலை தெரிவித்ததோடு பாகிஸ்தான் இக்குழுவின் மீது நெருக்குவாரம் கொணர்வதாக குற்றம் சாட்டியது. அது ஹிஸ்புல்லையும் ஏனைய பிரிவினைவாத குழுக்களையும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தது.

ஆகஸ்ட் 3ல் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள், ஜூலை 24ம் திகதி ஹிஸ்புல் குழு அறிவித்த ஒரு தன்னிச்சையான மூன்று மாத கால யுத்த நிறுத்தத்துக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னைய வரையறுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளிற்கான அழைப்புக்கு முரணாக அரசாங்கம் இக்குழுவை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்ததோடு அதற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் இடை நிறுத்தியது. வாஜ்பாய் அரசாங்கம் அனைத்து கட்சி ஹுறியாட் மாநாடு (All Party Hurriyat Group) குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவும் யோசனை தெரிவித்தது. இந்த அழைப்பு ஒரு தொகை பிரிவினைவாத குழுக்களை பிரதிநிதித்துவம் செய்ததோடு, அவை ஒரு சுயாதீனமான காஷ்மீருக்கு அல்லது அயலில் உள்ள பாகிஸ்தானுடனான ஒரு இணைப்புக்காக போராடி வருகின்றன.

எவ்வாறெனினும் இதைத் தொடர்ந்து வாஜ்பாய், முஷாராப் ஆட்சியாளர்கள் "எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதத்துக்கு" ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் சாத்தியம் இல்லை எனத் தெரிவித்தார். இது பாகிஸ்தானில் இருந்து தொழிற்பட்டு வரும் காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களுக்கு இஸ்லாமாபாத் ஆதரவு வழங்குவது தொடர்பான ஒரு கருத்தாகும். ஹிஸ்புல் குழுவினருடனான பேச்சுவார்த்தைகள் நிபந்தனையற்றதாக இருக்கும் அதே சமயம் எந்த தீர்வு இந்திய அரசியலமைப்புக்குள் அமைய வேண்டும் எனவும் வாஜ்பாய் பிரகடனம் செய்தார்.

ஒரு வருடம்- நீண்ட தொடர்

அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு யுத்த முஸ்தீபுகளில் ஈடுபட்டு வந்த சமயத்தில், இந்திய காஷ்மீரின் கார்கில் மலைக் குன்றுகளில் இருந்து ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரர்களை விலக்கிக் கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பிடம் இருந்து ஒரு இணக்கத்தை பெற்றுக் கொண்டார். இதில் இருந்தே கடந்த (1999) ஜூலையில் இருந்து பேச்சுக்கள் பக்கமான திருப்பம் ஏற்பட்டது.

இந்த தலையீடு அமெரிக்காவின் ஆதரவு இந்தியாவுக்கு சார்பாக திரும்பியுள்ளதை எடுத்துக் காட்டியது. இது பாகிஸ்தானை ஆதரிக்கும் குளிர் யுத்தகால கொள்கையில் இருந்து மாறியதை குறித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் திகதி கார்கில் ஊடுருவலின் மூல சிருஷ்டிக் கர்த்தாவான இராணுவ தளபதி முஷாராப் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்ததில் இருந்து பாகிஸ்தான் மீதான அமெரிக்க நெருக்குவாரம் உச்சக் கட்டத்தை அடைந்தது. அமெரிக்கா பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் பல்வேறு முஸ்லீம் அடிப்படைவாத ஆயுதக் குழுக்களை (காஷ்மீர் பிரிவினைவாதிகள் உட்பட) கட்டுப்படுத்துமாறும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் முஷராப் ஆட்சியாளர்களைத் தூண்டியது.

கிளின்டன் இந்தியத் துணைக்கண்ட விஜயத்தில் ஈடுபடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட ஒரு காஷ்மீர் ஆய்வு குழு (KSG- Kashmir Study Group) ஒரு அறிக்கையை வெளியிட்டது. பாரூக், கத்வாரி போன்ற செல்வாக்கான அமெரிக்க, காஷ்மீர் வர்த்தகர்களின் தலைமையிலான இந்த கா.ஆ.கு. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளையும் மாஜி இராஜதந்திரிகளையும் கொண்டிருந்தது. இது இந்தியன் காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியும் இரண்டு இறைமை கொண்ட பகுதிகளை அல்லது தமது பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்களில் சொந்த கட்டுப்பாட்டினைக் கொண்ட ஒரு தனி அரசாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என பிரேரித்தது.

இந்த அமெரிக்க ஆரம்ப நடவடிக்கைகளை இடம் பெற்று வந்த அதே வேளையில் சிரேஷ்ட ஹிஸ்புல் தளபதிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காஷ்மீர் காரர்களை, இந்திய அரசாங்கத்திடம் யுத்த நிறுத்தத்தை உணர்ந்து அறிபவர்களாக அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது. இதற்கான பிரதிபலிப்பாக இந்திய பிரதமர் அலுவலகம் ஒரு இரகசிய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொருட்டு ஹிஸ்புல் தலைவர்களை தளமாகக் கொண்டுள்ள பாகிஸ்தானுக்கு ஒரு மத்தியஸ்தரை அனுப்பி வைத்தது. ஏப்பிரலில் ஹிஸ்புல் தளபதி அப்துல் மஜித்தார் தனது கனிஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக இராணுவ பிரிவுகளின் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீருக்கு திரும்ப இந்தியா அனுமதித்தது.

வாஜ்பாய் அரசாங்கம் அனைத்துக் கட்சி மகாநாடு (APHC) அமைப்பின் பல தலைவர்களை ஏப்பிரலிலும் மேயிலும் சிறையில் இருந்து விடுதலை செய்ததோடு அரசியலமைப்புக்கு அமைவான பேச்சுவார்த்தைகளை நடாத்தவும் அழைப்பு விடுத்தது. இந்திய அரசாங்கத்தின் முன் நிபந்தனைகளை நிராகரித்த அதே சமயம் ஹூரியட் (Hurriyat) தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் ஆயத்தத்தைக் காட்டிக் கொண்டனர். உத்தியோக பற்றற்ற பேச்சுக்களும் தொடர்புகளும் இடம் பெற்று வந்தன.

இதே காலப்பகுதியில் ஒரு கோஷ்டி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்- இந்தியன் காஷ்மீர் மாநில தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒரு கிளர்ச்சியாளர் உட்பட- மாஜி அமைச்சர் சைபுதீன் சோஸ், காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்திய உள்நாட்டு அமைச்சின் ஒரு மாஜி அதிகாரியும் வாஷிங்டன் சென்றனர். அவர்கள் புறப்படுவதற்கு முன்னதாக காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுடனும் சில தனியாட்களுடனும் ஒரு தொகை கலந்துரையாடல்களை நடாத்தியதாகச் சொல்லப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் காஷ்மீர் மாநில தேசிய காங்கிரஸ் அரசாங்கத்தின் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவிடம் இருந்து ஒரு பிரதிபலிப்பை வெடிக்கச் செய்தது. ஜூலை 26ம் திகதி இது ஒரு சுயாட்சி மசோதாவை இயற்றியது. மாநிலத்துக்கு பரந்தளவிலான சுயாட்சியை கோரியதோடு மத்திய அரசாங்கத்தின் கரங்களில் பாதுகாப்பும், வெளிநாட்டு விவாகாரமும் போக்குவரத்து தொடர்புகளும் மட்டுமே விட்டு வைக்கப்படும் என்றது. ஆனால் தேசிய காங்கிரஸ் கட்சியையும் ஒரு பங்காளியாகக் கொண்ட புது டில்லி அரசாங்கம் இந்தத் திட்டத்தை ஒரேயடியாக நிராகரித்தது.

காஷ்மீர் அரசாங்கம் மத்திய அரசாங்கத்துக்கும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான எந்த ஒரு தீர்விலும் தவிர்க்கப்படுவதை விரும்பப் போவதில்லை எனத் தெரிகின்றது. ஆளும் கூட்டணியில் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. பாரதீய ஜனதா கட்சிக்கும் தேசிய காங்கிரசுக்கும் இடையே பதட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. இரு தரப்பினரும் இன்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதோடு, முன்னைய அறிக்கையின் தொனியையும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவினதும் அனைத்துலகத்தினதும் கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்குவாரங்களின் கீழ் இந்திய, பாகிஸ்தானிய அரசாங்கங்கள் அமெரிக்காவின் ஆதரவை வெற்றி கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன. வாஜ்பாய் முஷாராப் இருவரும் செப்டம்பர் நடுப்பகுதியில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இரு தலைவர்களும் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சந்திப்பர் என பாகிஸ்தானிய தகவல் அமைச்சர் ஜாவ்ட் ஜபார் ஆகஸ்ட் 12ம் திகதி தெரிவித்தார். முஷாராப் அரசாங்கம் ஹிஸ்புல்லின் இடைக்கால யுத்த நிறுத்தத்துக்கு தமக்கு எதுவித பங்கும் கிடையாது என உத்தியோகபூர்வமாக மறுப்புத் தெரிவித்தது. ஹிஸ்புல் அமைப்புக்கு பாகிஸ்தானின் பலமான ஆதரவு கிடைத்து வருவதோடு அங்கிருந்தே தொழிற்பட்டு வரும் ஒரு நிலையில் இக்குழு பாகிஸ்தானின் இணக்கம் இல்லாது செயற்பட்டு இருக்கும் ஏன்பது சாத்தியம் இல்லை. காஷ்மீர் தொடர்பாக ஏதேனும் கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெறுமிடத்து பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அதன் ஒரு பாகமாக வேண்டும் எனக் கோருகின்றனர்.

1947ல் இந்து, முஸ்லீம் முதலாளித்துவங்களின் ஒத்துழைப்போடு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியா இந்தியாவை கூறுபோட்டு இவ்விரு அரசுகளையும் உருவாக்கியதில் இருந்து காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதுதலின் முக்கிய விடயமாக விளங்குகின்றது. காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவால் ஆட்சி செய்யப்படும் அதே வேளையில் எஞ்சிய மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் மாகாணமாக உள்ளது. பாகிஸ்தான் காஷ்மீரை ஒரு "தகாராறுக்குரிய பிராந்தியமாக" அழைக்கும் அதே வேளை இந்தியா காஷ்மீரை இந்தியாவின் இணைந்த பாகமாக கருதுகின்றது.

கடந்த காலத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்துலக தலையீட்டை கடுமையாக எதிர்த்து வந்த இந்திய அரசாங்கம் இன்று அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றது. அமெரிக்கா குளிர் யுத்த காலத்தின் பெரும் பகுதியில் பாகிஸ்தானை ஆதரித்து வந்தது. பாகிஸ்தான் இப்பிராந்தியத்தில் திட்டவட்டமான பொருளாதார, புவிசார், அரசியல், மூலோபாய நலன்களையும் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளது.

ஒரு காலத்தில் சோவியத் ஸ்ராலினிச ஆட்சியாளர்களின் கூட்டாளியாக விளங்கிய இந்தியாவை இன்று அமெரிக்கா அந்தப் பிராந்தியத்திலான தனது பெரும் பங்காளியாகக் காண்கின்றது. மூலோபாய முக்கியத்துவம், பெரும் சந்தை மூலவள செல்வங்களை கணக்கில் கொண்டே இங்ஙனம் செய்துள்ளது. அதே சமயம் அமெரிக்கா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சீரழிவையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கும் ஒரு யுத்தத்தையும் விரும்பவில்லை. தீர்வின் ஒரு பாகமாக அமெரிக்கா காஷ்மீரில் காலூன்றிக் கொள்ள முடியுமானால் தோண்டி எடுக்கப்படாத எண்ணெய், எரிவாயு வளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள அருகில் உள்ள மத்திய ஆசியா அமெரிக்காவின் ஒரு ஸ்பிரிங் போட்டாகும்.

இந்த நிலைமையில் ஐரோப்பிய, ஜப்பானிய வல்லரசுகளும் கண் வைத்துக் கொண்டுள்ளன. இந்த ஜூலை ஜப்பானில் இடம் பெற்ற வருடாந்த ஜீ-8 உச்சிமாநாடு "பிராந்தியத்தில் ஒரு நின்று பிடிக்கக் கூடிய சமாதானத்தை எட்டும் விதத்தில் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையில் முடிந்த மட்டும் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்" என இந்தியாவையும் பாகிஸ்தானையும் கோரும் ஒரு அறிக்கையை வேண்டியுள்ளது. இந்தப் பிரேரணை மேலும் கூறியதாவது: "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதட்டத்தின் மட்டம் அனைத்துலக அக்கறைக்குரிய ஒரு காரணமாக இருந்து கொண்டுள்ளது" என்றது. வாஜ்பாயினாலும் நவாஸ் ஷெரீப்பினாலும் கையொப்பமிடப்பட்ட இந்த லாகூர் பிரகடனம், இரு நாடுகளுக்கும் இடையேயான தகராறுகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை வலியுறுத்தியது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved