World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

 

The end of the "Ice Age" in Germany

ஜேர்மனியின் "பனிக்காலகட்டத்தின்" முடிவு!

By Peter schwarz
13 May 2000

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஜேர்மன் பிரிவான சமூக சமத்துவ கட்சியின் வெளியீடான சமத்துவம் (Gleichheit) இன் வைகாசி/ஆனி மாத இதழ் வெளிவந்துள்ளது அதன் ஆசிரியத்தலையங்கத்தை கீழே தருகின்றோம்.

பாரிய சமூக மாற்றத்திற்குரிய காலகட்டங்களின் அளவும் வேகமும் அநேகமாக அக்காலகட்டத்திற்கு உரியவர்களால் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போதே உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இக்காலகட்டங்கள் உருவாக்கும் நெருக்கடிகளும் குழப்பங்களும் அவர்களுக்கு பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சனைகளாகவும் நெருக்கடிகளாகவுமே தோற்றமளிக்கும். இது அவர்களது கவனங்களை தனிப்பட்ட பிரச்சனைகளை நோக்கித் திரும்பச் செய்வதுடன் இந்நெருக்கடிகள் பாரிய அதிர்ச்சிகளூடாக வெளிப்படும் வரை அவற்றிற்கான பரந்த சமூக உள்ளடக்கத்தின் தொடர்பை அவர்களின் கண்களிலிருந்து மறைக்கின்றது.

ஜேர்மனியும், ஐரோப்பாவும் தற்போது இப்படியான ஒரு அடிப்படையான சமூக மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தற்போது இது ஆரம்பத்தில் பொருளாதார துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இதுவரையில் ஐரோப்பிய சமூகத்தின் கட்டமைப்பினுள் படிப்படியாக நுழைந்துகொண்டிருந்த பூகோளமயமாக்கலின் விளைவு தற்போது சகல பலத்துடன் தனக்கான பாதையை திறந்துகொண்டு செல்கின்றது.

இணையத்தினதும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களினது தாக்கமும், பங்குச்சந்தையினது ஆழுமையின் அதிகரிப்பும் அதனுடன் இணைந்த பொருளாதார கட்டமைப்பிலும் தொழில் நிலைமைகளிலும் ஏற்பட்ட பாரிய மாற்றமும் அரசாங்கங்களை சகலவித சமூக பொறுப்புக்களில் இருந்தும் பின்வாங்க செய்துள்ளது. இது இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

பலராலும், பெருமூலதனத்தின் நலன்களை பாதுகாத்த மோசமான அரசியலை பிரநிதித்துவப்படுத்திய கோலின்(Helmut Kohl) 16 வருட பழைமைவாத அரசாங்கம் எனக்கூறப்பட்டது தற்போது வசதியான வாழ்க்கைக்குரியதாக தெரிகின்றது. Die Zeit என்ற வாராந்த பத்திரிகையில் Josef Joffe என்ற பழைமைவாத பத்திரிகையாளர் Kohl இன் காலகட்டத்தை "பனிக்காலகட்ட" மெனவும் இது எல்லாவித மாற்றங்களையும் தடுத்ததென எழுதுகின்றார்.

அவர் மேலும் "எதிர்கால வரலாற்றாசிரியர்கள், நிதிதிரட்டிய ஊழலில் முன்னைய பிரதமரின் பங்கு குறித்து கூடுதலாக விமர்சிக்கமாட்டார்கள் எனவும், அவரின் 16 வருட ஆட்சிக்காலத்தில் ஜேர்மன் சமூகத்தில் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியதற்கே கூடுதலாக குறைகூறுவர் எனவும், ஆனால் தற்போது இறுதியாக பனிக்கட்டி உடைவதை காணக்கூடியதாக இருக்கின்றது என மகிழ்ச்சியடைந்து இது ஒரு பாரியபனிக்கட்டி உடைந்தால் எவ்வாறு அது ஒன்றுடன்ஒன்று மோதி, ஒன்றிலிருந்து ஒன்று விலகி, ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொள்ளுமோ அதேபோல் இன்று நிலமைகளை காணக்கூடியதாக இருக்கின்றது" என குறிப்பிடுகின்றார்.

ஆனால் இவ்வுடைவு அரசியல் பலத்தின் உறவுகளில் காணமுடியாதுள்ளது. பாராளுமன்றத்தை மாற்றிக் கொள்ளும் விளையாட்டு வழமைபோல் ஒரு தடவை ஒரு கட்சியும் மறு தடவை மறு கட்சியும் பதவிக்குவருவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல் தொடர்பான ஆர்வம் பொதுமக்களிடையே குறைந்தே காணப்படுகின்றது. பேர்லினின் அரசியல் வாழ்க்கை எப்போதோ பெரும்பான்மை மக்களின் பிரச்னைகளை அணுகுவதிலிருந்து விடுபட்டுச் சென்றுவிட்டது.

அதற்கு மாறாக, யார் பெருமூலதன நலன்களுக்கு பொருளாதாரத்தை அடிபணிய செய்வது என்ற போட்டி பாரம்பரிய கட்சிகளிடையே நடைபெறுகின்றது. அவர்கள் சமூக ஜனநாயக கட்சியினராகவோ, பசுமை கட்சியினராகவோ, கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினராகவோ, தாராளவாத கட்சியனராகவோ அல்லது சோசலிச ஜனநாயக கட்சியினராகவோ இருந்தாலும் பொருளாதார நலன்களுக்கு எதிராக இருப்பது என்ற குற்றச்சாட்டு அவர்களை மரியாதைக் குறைவாக பார்ப்பது போலிருக்கின்றது. இதற்கும் மேலாக முன்னைய சமூக நலன்களை யாராவது பாதுகாக்க முயன்றால் அவர் "பழையகாலத்திற்குரியவர்" என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகின்றார்.

இவர்களுள் பசுமைக் கட்சியினரே ஆகக்கூடிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்கட்சியினர் மட்டுமே கடந்த 20 வருட காலத்தில் பணவசதி கொண்டவர்களின் அல்லது பலம் வாய்ந்த கட்சி அமைப்பு இல்லாமல் பாராளுமன்றத்தினுள் நுழைந்தவர்களாவர். அவர்களது கோரிக்கைகளான சுற்றாடலை பாதுகாத்தல், அமைதிவாதம், சமூக சமநிலை, மூன்றாம் உலகநாடுகளுக்கான நீதி போன்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் ஆதரவினை பெற்றன. பாராளுமன்றத்தினுள் புகுந்த பின்னர் இவற்றில் ஒன்றுகூட எஞ்சியிருக்கவில்லை. அணுஆலைகளை உடனடியாக மூடுவதற்கு பதிலாக அவை இயங்குவதற்கான 30 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அமைதிவாதத்திற்கு பதிலாக 2ம் உலகயுத்தத்தின் பின்னர் ஜேர்மன் இராணுவத்தின் முதலாவது யுத்தத்தலையீடும், சமூக சமநிலைக்கு பதிலாக சுகாதாரசேவைகள் பசுமைக்கட்சியின் அமைச்சரால் அழிக்கப்படுவதுடன், மூன்றாம் உலகநாடுகளுக்கு உதவுவதற்கு பதிலாக அபிவிருத்தி நிதியில் வெட்டுதலும்........ இவ்வாறு இப்பட்டியல் நீண்டு செல்கின்றது.

சமூக ஜனநாயக கட்சியினர் மத்தியிலும் சகலதையும் முடிவிற்கு கொண்டுவருவது மோசமான வடிவத்தை எடுக்கின்றது. கடந்த தேர்தல் தோல்விகள் சமூக ஜனநாயக கட்சியின் வாக்காளர்கள் சமூக நீதியை இழப்பதற்கும், சமூக நீதியை வெறும் orwellien வழக்கத்திற்கு ஏற்ப புதுவிளக்கம் அளிக்கவிட தயாராக இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. சமூக ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான Wolfgang Clement சமூக நீதியை நிலைநாட்டுவதற்க்கு எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சமத்துவமின்மை தேவையாக உள்ளது எனவும், அண்மையில் நடந்த கட்சி முன்னோக்கு தொடர்பான மாநாடொன்றில், ஜேர்மனியின் முக்கியமான மாநிலமான North Rhine Westphalias இன் முதலமைச்சர் நீதியையும் சமத்துவத்தையும் பகட்டான முறையில் ஒப்பிடுவதற்கு எதிராக கூச்சலிட்டு சமத்துவமின்மை என்பது வருவாயிலும்,செல்வத்திலும் சமமற்றபங்கீடே என்ற பழைய நம்பிக்கை தற்போது செல்லுபடியற்றதாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நெருக்கடியும் இத்தோடு தொடர்புடையதே. நிதிசேகரிப்பு ஊழல் கட்சியின் அடித்தளம் வரை உலுப்பியதற்க்கான காரணம் அதன் அடித்தளம் ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்னரே இல்லாமல் போய்விட்டதாலாகும். Kohl இன் உடன்பாட்டுக் கொள்கையானது மத்தியதர வர்க்க வாக்காளர் அடித்தளத்தை சமாதானப்படுத்தும் நோக்கை கொண்டிருந்தது. இது உலகச்சந்தையின் நலன்களுக்கு பொருத்தமில்லாததாகிவிட்டது.

தற்போது சமூக ஜனநாயக கட்சியிலிருந்து அதிருப்தியடைந்த வாக்காளர்களை துரத்திப்பிடிக்கும் அரசியல்வாதிகளுக்கும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜேர்மனியின் பிரதமருமான Geehard Schröder இன் "சமுதாயத்தின் புதிய மத்தியதட்டினர்" எனக் கூறப்பட்ட கொள்கையினால் அவரை திருப்பித் தாக்கி பெருமூலதனத்தின் நலன்களுக்கு முற்றாக அடிபணியும் பிரிவினருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளால் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி பிளவடைகின்றது. Angela Merkel கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டது இந்நெருக்கடியை மூடிமறைக்கின்றதே தவிர தீர்க்கவில்லை. இவை மீண்டும் எழுவது தவிர்க்கமுடியாது.

தற்போது மக்களில் இருந்து அரசியல் கட்சிகள் விலகிச்செல்வது சமுதாயத்தின் கீழ்க்கட்டுமானத்திலுள்ள நெருக்கடிகளை தற்காலிகமாக மறைத்து வைத்துள்ளது. இது தன்னை அரசியல்ரீதியாக வெளிப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதுள்ளது. மேல்மட்டத்தில் அனைத்தும் அமைதியாக தோற்றமளிக்கின்றது. ஆனால் இது போலியானது.

சமுதாயம், சமூகசமத்துவமின்மையை ஒரு குறிப்பிட்ட அளவே ஏற்றுக்கொள்ளும். பாரிய வேலையின்மை, வறுமையின் அதிகரிப்பு, வாழ்க்கை நெருக்கடி போன்றவற்றின் விளைவு சமுதாயத்தின் ஒரு முனையிலும் அளவிடமுடியாத செல்வத்தின் அதிகரிப்பு மறுமுனையிலும் இந்நிலையிலிருந்து வெளியேற ஒரு அரசியல் வழியைத் தேடும் பாரிய அழுத்தத்தை உருவாக்கும்.எவ்வளவிற்கு இவ்வழி மூடப்பட்டு இருக்கின்றதோ அவ்வளவிற்கு அது வெடித்தெழும் வடிவத்தை எடுக்கும்.

சிறிது காலமாக வலதுசாரி வாய்வீச்சாளர்கள் பூகோளமயமாக்கலால் ஏற்பட்ட பயத்தினை வெளிநாட்டவர்களுக்கு எதிராகவும், இனவாத திசையிலும் திருப்பமுயல்கின்றனர். இவ்வழியில் ஆஸ்திரியாவில் கைடர் வெற்றிபெற்றுமுள்ளார்.

தொழிற்சங்கங்களும் பூகோளமயமாக்கலுக்கான பதிலாக தேசிய அரசை நோக்கித் திரும்பும்படி ஆலோசனை கூறுகின்றனர். ஐரோப்பாவில் இதுவரை வலதுசாரி அரசியல்வாதிகளிலிருந்து அவை விலகியிருந்தாலும் அமெரிக்காவில் சில தொழிற்சங்க தலைவர்கள் மிகத்தீவிர வலதுசாரி அரசியல்வாதிகளுடன் ஏற்கனவே பொதுமேடைகளில் தோன்றியுள்ளனர். இப்படியான அரசியல்வாதிகளின் பிரதிநிதி ஒருவரான பற்றிக் புக்கானன் வாஷிங்டனில் ஏப்ரல் மாதம் 12ம் திகதி சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரான தொழிற்சங்கங்கத்தின் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் பேச்சாளராக கலந்து கொண்டார். தொழிற்சங்கங்க அதிகாரத்துவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புக்கானனின் செய்தி என்னவெனில் "சீனாவுடன் வர்த்தக உடன்பாடு வேண்டாம்" என்பதாகும்.

புதிய வர்த்தக கட்டுப்பாடுகளையும், தேசிய அரசை பலப்படுத்தவும் என்ற கோரிக்கைகளையும் யார் முன்வைக்கின்றார்கள் அல்லது அதை எவ்வாறு நியாயப்படுத்துகின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாவிட்டாலும் இக்கோரிக்கைக்கு என சொந்தத் தர்க்கம் இருப்பதுடன் அது மிகவும் பிற்போக்கானதும் கூட. பூகோளமயமாக்கல் மனித உற்பத்தி சக்தியின் வளர்ச்சியினை அடித்தளமாக கொண்ட மிகவும் முற்போக்கான அபிவிருத்தியாகும். இது உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையையும் துன்பங்களையும் இல்லாது செய்யவும், சமூகத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும்,மனித சமுதாயத்தின் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்குமான முன்னிபந்தனையாகும்.

19ம் நூற்றாண்டில் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கான தேசிய அரசுகள் உருவாக்கப்பட்டன. 20ம் நூற்றாண்டில் இவ் உற்பத்தி சக்திகள் தேசிய அரசுகளின் எல்லைகளைக் கடந்து அதற்கு அப்பாலும் வளர்ச்சியடைந்துவிட்டன. புதிய தொழில்நுட்பத்திற்கு சர்வதேச தொழிற்பங்கீடு தேவையாக உள்ளதுடன், தேசிய எல்லைகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் உடன்பாடற்றதாக இருக்கின்றது. உலகப் பொருளாதாரத்தை தேசிய அரசுகளின் கட்டமைப்பினுள் மீண்டும் கொண்டுசெல்ல முயல்வது தவிர்க்க முடியாதபடி அழிவிலேயே முடிவடையும். 70 வருடங்களுக்கு முன்னர் இப்படியான முயற்சி பாசிசத்தில் முடிவடைந்தது. அக்காலகட்டம் தொடர்பாக ட்ரொட்ஸ்கி பின்வருமாறு புத்திசாதுரியமாக குறிப்பிட்டிருந்தார்."பொருளாதார வாழ்க்கையை பாதுகாக்க முயற்சித்து தேசியவாதம் என்ற பிரேதத்திலிருந்து வைரசை எடுத்து தடுப்பூசி ஏற்றுவது பாசிசம் என்ற பெயரைக் கொண்ட இரத்த நஞ்சூட்டலிலேயே முடிவடையும்" என்றாா்.

இதற்கு மாறாக சர்வதேச நிதிச்சந்தைகளினதும் பலம்வாய்ந்த எல்லை கடந்த நிறுவனங்களினது கட்டுப்பாட்டின் கீழ் லாபத்தை அதி உச்சமாக்கும் தேவைகளுக்கு பாவிக்கப்படும் வரை பூகோளமயமாக்கல் மோசமான சமூக விளைவுகளையே உருவாக்கும். சம்பளமும், சமூகநலக் கொடுப்பனவுகளும் முடிவற்று கீழ்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கண்டங்கள் முற்றாக அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டுள்ளன. உலகச் சந்தைக்கான தொடர்ச்சியான போட்டி சர்வதேச ரீதியான போட்டிகளுக்கும் யுத்தங்களுக்கும் இட்டுச்செல்கின்றது.

இம்முட்டுச்சந்தியிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவையாக உள்ளது. நவீன உற்பத்தி சக்திகள் மூலதனத்தின் அழுங்குப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழு மனித சமுதாயத்தின் தேவைகளுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் முன்னைய சமத்துவத்தின் வெளியீட்டில் எழுதியபடி "உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது யார்?. பாரிய தொழில்நுட்ப, கலாச்சாரத்திற்கான சாத்தியப்பாடுகளை எங்கு பிரயோகிப்பது என்பது குறித்து யாருடைய நலன்கள் தீர்மானிக்கின்றன?" எதிர்வரப்போகும் அரசியல் வெடிப்பின் விளைவு இப்படியான ஒரு முன்னோக்கு எந்தளவிற்கு ஆதரவைப் பெறுகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது.

இம் முன்னோக்கு சாத்தியப்படுவதற்கான முன்நிபந்தனைகள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரளலும் ஒன்றிணைப்பும் ஆகும். பொருளாதாரத்தின் பூகோளரீதியான ஒன்றிணைப்பு தொழிலாள வர்க்கத்தின் அளவில் பெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் கைத்தொழில் மயமாக்கப்பட்டிராத பின்தங்கிய நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் தற்போது வேலை செய்கின்றார்கள். அபிவிருத்தியடைந்த நாடுகளில் வேலையின் வடிவம் மாற்றமடைந்துள்ளதே தவிர நிச்சயமற்ற நிலைமையின் கீழ் வாழவேண்டிய மக்களின் தொகை அதிகரித்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதற்கு 20ம் நூற்றாண்டின் அரசியல் பாடங்களை உள்ளீா்த்துக் கொள்வது முக்கியமானதென நான்காம் அகிலம் நீண்ட காலத்திற்கு முன்னரே முடிவிற்கு வந்துவிட்டது. ஸ்ராலினிசத்தினதும், சமூக ஜனநாயகத்தினதும் பங்கு என்னவென்பதை விளங்கிக்கொள்ளாது தொழிலாளர் இயக்கம் சோசலிச முன்னோக்கை நோக்கி மீண்டும் திரும்ப முடியாது. இவ்விரு அதிகாரத்துவத்திற்கும் பொதுவானது என்னவெனில் அவர்கள் தமது ஆதிமூலமான மார்க்சிச இயக்கத்தின் சர்வதேச முன்னோக்கை தேசியவாத அடிபணிவிற்காக கைவிட்டதாகும்.

இந்த சமத்துவம் இதழில் மீண்டும் உலக சோசலிச வலைத் தளத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்த முக்கிய கட்டுரைகளுடன், Alex Steiner ஆல் Martin Heidegger தொடர்பாகவும், Heidegger இன் தத்துவார்த்தத்திற்கும் கிட்லரின் நாசிக்கட்சி அங்கத்தவராக அவரது பங்கிற்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதப்பட்டுள்ளது.

இக் கேள்வி தனியே வரலாறு தொடர்பானது மட்டுமல்ல. Heidegger, பலரால் இந்நூற்றாண்டின் மிகமுக்கியமாக தத்துவாசிரியர் என கருதப்படுவதோடு, தற்காலகட்டத்திற்குரிய தத்துவாசிரியர் என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஆழுமையை செலுத்துகின்றார். Alex Steiner இன் கட்டுரை 20ம் நூற்றாண்டின் தத்துவார்த்த போக்குகள் தொடர்பாக உள்ளார்ந்த பார்வையை செலுத்த உதவுவதோடு, அந்நூற்றாண்டின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆழ்ந்த விளக்கத்தை பெற்றுக் கொள்ளவும் உதவுகின்றது.

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.



Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved