World Socialist Web Site www.wsws.org


பப்லோவாத திரித்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஹீலியின் பங்கு

Back to screen version

ஹாஸ்டனுக்கு எதிரான போராட்டம், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைவராக ஹீலியை உருவாக்கிவிட்ட போதிலும், பப்லோவாதத்திற்கு எதிரான அவருடைய போராட்டம்தான் நான்காம் அகிலத்தில் ஒரு முக்கியத் தலைவராக ஹீலி எழுச்சியுற உதவியது. நான்காம் அகிலம், மற்றும் அதன் பிரிட்டிஷ் பகுதி இவற்றின் தலைவிதி ஆட்டம் கண்டிருந்த நிலையில், "மரபு வழி ட்ரொட்ஸ்கிசத்திற்கு" ஹீலி தன்னுடைய ஆதரவை வழங்குவதில் தீர்மானகரமாக இருந்ததோடு, கனனுடன் சேர்ந்துகொண்டு, மிசேல் பப்லோ மற்றும் (அப்பொழுது கட்சிப்பெயரில் ஜெர்மைன் என்று அழைக்கப்பட்ட) ஏர்னஸ்ட் மண்டேல் இவர்களின் திரித்தலுக்கு எதிராகவும் கடுமையான போராட்டம் நடத்தினார்.

1953ல் நடந்த போராட்டத்தில் அவர் கொண்டிருந்த பங்கு, ஹீலி, 1940 களின் படிப்பினைகளை நன்கு உள்ளிளுத்துக்கொண்டுள்ளார் என்பதையும், ஒரு சர்வதேச மற்றும் புரட்சிகரமான தலைவராக உயர்ந்துவிட்டார் என்பதையும் தெளிவுபடுத்தியது என்பதில் சந்தேகமில்லை. பிரிட்டனில் ஜோன் லோரென்ஸ் தலைமையிலான, பப்லோவாத பிரிவின் கோட்பாடற்ற நிலைக்கு எதிராக அவர் நடந்துகொண்டமுறை, தன்னுடைய அரசியல் வாழ்வின் சிறந்த கட்டத்தில், பெறுவதற்கு அரிய குணங்களிலிருந்து அவர் ஊக்கம் கொள்ளமுடிந்தது பற்றித் தெளிவாக்கியது: ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளில் அவர் கொண்டிருந்த தைரியமும் அசைக்கமுடியாத பற்றும், கட்சியைப் பற்றிய அவருடைய மிகப்பரந்த அறிவும், புரட்சிகரத் காரியாளர்களின் வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்தமான வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கும் இடையேயான உறவு பற்றிய மிக நுட்பமான தெளிவு, கிட்டத்தட்ட முடிவில்லாத ஆற்றல், உறுதி நிறைந்த தன்மை ஆகியவையேயாகும்.

ஆனால், ரோரன்ஸ் இப்பொழுது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இரங்கற்குறிப்பில் கூறுவதுபோல், பப்லோவாதத்தை எதிர்த்த அரசியல் தலைவர் என்றும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவியதும் ஹீலிதான் என்பது வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் ஆகும். அந்தப் பங்கைச் செய்தவர் கனன் ஆவார். கனனுடைய பங்கைக் குறைக்கும் முயற்சியும், ஹீலிதான், பப்லோவாதத்திற்கெதிரான "போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார்" என்று முதன்முதலில் Problems of the Fourth International என்ற நூலில், 1960ன் பிற்பகுதிகளில் ஹீலியே கூறத்தலைப்பட்டதும் தவறானவை என்ற குறிப்பை புறநிலை உண்மையின் நலன்கள் கருதி மட்டும் அல்லாமல், உண்மையில் இந்த ஒரு காரணமே குறிப்பை வலியுறுத்தப் போதுமானது என்றாலும்கூட, பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை வளர்ச்சியுற செய்வதற்கு சர்வதேச இயக்கத்தின் பங்கின் முக்கியத்துவத்தைக் குறைப்பதினாலும் வலியுறுத்துவது இன்றியமையாதது ஆகும். கனனுடைய வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பப்லோவாதத்திலிருந்து முறித்துக்கொள்ள எழுதப்பட்ட, பிரிட்டனில் பப்லோவாதப் போக்கை தோற்கடிக்க முக்கிய பங்கைக் கொண்டிருந்த "பகிரங்கக் கடிதம்", ஒரு "கட்டுக்கதை" என்று கண்டனம் செய்யக் கூடிய அளவிற்கு வருந்தத்தக்கதான அந்தச் சிறுநூலில் ஹீலி எழுதிவிட்டார். ஹீலி எழுதியதாவது: "இது ஒரு பொய்; இங்கிலாந்தின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்... தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் சக்தி பெற்றிருந்தனர்" (Problems, பக்கம்.17). இத்தகைய அறிக்கைகள் ஹீலியின் அமைப்பிற்குள் இருந்த தேசியப் போக்குகளுக்கு இரைபோட நன்கு உதவின.

பப்லோவாத திரிபுவாதத்தின் வளர்ச்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் அதிகாரத்துவத்திற்கும் இடையில் போருக்குப்பிந்தைய உடன்படிக்கையின் அடிப்படையில் சர்வதேச ரீதியாக நிறுவப்பட்டிருந்த புதிய அரசியல் உறவுகள் பற்றி, நான்காம் அகிலத்திற்குள்ளே ஏற்பட்ட பிரதிபலிப்பாகத்தான் இருந்தது. "ஏகாதிபத்திய ஆட்சி", "ஸ்ராலினிச உலகம்" இரண்டிற்கும் இடையே உள்ள முரண்பாடுகள்தான் புறநிலை யதார்த்தம் கொண்டிருக்கிறது என்ற அதன் தத்துவத்துடன், பப்லோவாதமானது குளிர்யுத்தத்தின் மேலெழுந்தவாரியான தோற்றத்திற்கு அதன் தத்துவார்த்த சரணாகதியைப் பிரதிபலித்தது. இதிலிருந்து, வரலாற்றின் உந்துதலுக்கு வர்க்கப் போராட்டம்தான் காரணம் என்பதும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரம் என்பதும் நிராகரிக்கப்பட்டன. முதலாளித்துவ சொத்துக்களை, தொழிலாளர்களின் நனவுபூர்வமான புரட்சிகர நடவடிக்கை மூலம் அல்லாமல், அதிகாரத்துவத்தின் ஆணையின் மூலம் அபகரித்தமை நடைபெற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்" (Deformed workers states) எனக் குறிப்பிட்டது, நான்காம் அகிலத்தினுடைய வேலைத்திட்டம், மார்க்சிச வரலாற்றின் முழு கருத்துரு, ஆகியவற்றின் அடிப்படையையே திரிபுபடுத்துதலுக்கு உட்படுத்துவதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது.

"ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்" என்று கூறப்படுவது போருக்குப்பின் நிலவிய அசாதாரண சூழ்நிலையில் விளைந்த கலப்பான, தனித்தன்மையான நாடுகளுக்கு எப்படிப் பொருத்தமாக இருந்தாலும், பப்லோவும், மண்டேலும் இந்தத் தெளிவற்ற சூத்திரப்படுத்தலை ஒட்டி ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்த எதிர்ப்புரட்சிகரமான ஸ்ராலினிசத்திற்கு ஆழ்ந்த, முன்னேற்றகரமான வரலாற்றுப் பணியைக் கொடுக்கும் வாய்ப்பாகப் பற்றிக் கொண்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருந்த ஸ்ராலினிச ஆட்சிகளை, இரண்டாம் உலகப் போருக்குப்பின் கிழக்கு, மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி கிரெம்ளின் அதிகாரத்துவத்தினால் மேலிருந்து கொண்டுவரப்பட்ட முறையற்ற விளைவு என்று விளக்காமல், பப்லோ இந்த "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்", சில நூற்றாண்டுகளுக்கூடாக உலகம் முழுவதும் இத்தகைய வடிவமைப்பு வழியில் சோசலிசம் படிப்படியாக அடையப்படும் ஒரு அத்தியாவசியமான வடிவம் என்று எடுத்துரைத்தார்! மேலும், ஏகாதிபத்திய மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு இடையே ஓர் அணுவாயுதப் போர் தவிர்க்கமுடியாமல் ஏற்படும் என்றும் வலியுறுத்தினார்; இந்தப்போர், கிரெம்ளின் தலைமையில், ஒரு புரட்சிகரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். மார்ச் 1953ல் நிகழ்ந்த ஸ்ராலினின் மரணம், அதிகாரத்துவத்தின் சுயசீர்திருத்தத்திற்கு ஒரு பாதையை அமைத்துவிட்டது என்ற வாதத்தையும் பப்லோவும் மண்டேலும் தமது நோக்கத்திற்கு தலைப்பாகையாக வைத்தனர்.

பப்லோவாத கலைப்புவாதம்

இந்த அரசியல் நடைமுறையில், நான்காம் அகிலத்திற்கு சுயாதீனமான பங்கு ஏதும் கிடையாது. லெனின் அமைத்திருந்தது போன்ற வெகுஜன புரட்சிகர கட்சியை நிறுவுவதற்குப் போதிய கால அவகாசம் இல்லை என்று வலியுறுத்தி, எப்படியும் புறநிலைத் தேவையின் பரிமாணத்துடைய அழுத்தத்தினால், ஸ்ராலினிஸ்டுகள் புரட்சிகரப் பங்கை ஏற்றே தீரவேண்டும் என்பதால், பப்லோ நான்காம் அகிலத்தை அழித்துவிட்டு அதன் காரியாளர்கள் ஸ்ராலினிசக் கட்சிகளுக்குள் கரைந்துவிடவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பாரிய அழுத்தத்தை ஸ்ராலினிசத் தலைவர்கள்மீது கொண்டுவருவதற்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கு அளித்திருந்த புரட்சிப் பங்கைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தமுடியும் என்றும் பப்லோ கருதினார்.

உலக அளவில் இந்த கலைப்புவாத வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தும் முறையில், நான்காம் அகிலத்தின் பகுதிகள், அரசியல் வேலைசெய்த இடங்களில் தொழிலாளர் இயக்கத்தை என்னென்ன வெகுஜன அமைப்புக்கள் மேலாதிக்கம் செய்கின்றனவோ அவற்றுள் தன்னைக் கரைத்துக்கொள்வதுதான் நான்காம் அகிலத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என பப்லோ தெரிவித்தார். "ஒவ்வொரு நாட்டிலும் எங்கு மக்கள் இயக்கம் வெளிப்பட்டுள்ளதோ, அதனுடன் உண்மையான ஒன்றிணைப்பில் அல்லது அதற்கு வகைசெய்யக்கூடிய முக்கிய நீரோட்டமும், செல்வாக்கையும் கொண்ட அமைப்பில் இணைந்து, அனைத்து அமைப்புமுறை கருத்துக்களையும், பெயரளவான சுதந்திரமாயினும் அல்லது வேறு எந்த விதமாயினும் சரி அவற்றைத் தள்ளிவிட்டு, அவற்றிற்கு அடிபணிந்து நிற்கவேண்டிய தேவையை" அவர் வலியுறுத்தினார். இந்த "உண்மையான பரந்த மக்கள் இயக்கத்துடன் இணைதல்" திட்டம் ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அமைப்புக்களுக்கு மட்டுமின்றி, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் பொருந்தும்... என்றும் பப்லோ கூறினார்.

இன்று வியப்பூட்டும் வகையில் காணப்படுகிறவாறு, வரலாற்றளவில் கணிசமான அனுபவத்தின் நன்மையை நாம் கொண்டிருக்கும்பொழுது, 1951ல் நான்காம் அகிலத்தினுடைய மூன்றாம் காங்கிரசில், பப்லோவின் நிலைப்பாடு அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது வெகுசிலரே திரித்தல்வாதப்போக்கு மற்றும் அழிவுதரக்கூடிய அதன் அரசியல் உட்குறிப்புக்களை கண்டுபிடித்தனர். கனன், ஹீலி இருவரும் கூட இத்தீர்மானங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த கலைப்புவாத நிலைப்பாட்டின் அரசியல் விளைவுகள் தங்கள் நாட்டில் கடுமையாக இருக்கும் என்று இதற்கு எதிர்ப்புத்தெரிவித்த பிரெஞ்சுப் பகுதியை, பப்லோ அதிகாரத்துவமுறையில் வெளியேற்றியதும்கூட கனனாலும் ஹீலியாலும் ஒப்புதல் கொடுக்கப்பட்டது. ஆனால், கொக்கிரான்-கிளார்க் போக்கு அமெரிக்காவில் எழுச்சியுற்றதால், அது சோசலிசத் தொழிலாளர் கட்சியையே அழிக்கும்வகையில் கொடுத்த அச்சுறுத்தல் கனனை பப்லோவாதத்தின் உட்குறிப்புக்களை உணரவைக்கும் அதிர்ச்சியை கொடுத்து, நான்காம் அகிலத்திற்குள் கடுமையான போராட்டத்திற்கான அரங்கத்தை வடிவமைத்தது.

1953ம் ஆண்டு வசந்தகாலத்தையொட்டி, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியோடு தமது பகுதியைக் கரைந்துவிடவேண்டும் என்று ஒரு பகுதியினர் கோரத்தொடங்கியதை எதிர்கொள்ளும்போதுதான், ஹீலி, பப்லோயிசத் திரிபுவாதத்தின் பேரழிவு நிறைந்த உட்குறிப்புக்களின் தன்மையை அறியத்தலைப்பட்டார். ஹீலி தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்த கணத்திலிருந்தே, பப்லோ, லோரென்ஸ் குழுவைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் தலைமையை அழிக்கும் நோக்கத்துடன் கடுமையான, காட்டுமிராண்டித்தனமான கோஷ்டிமோதலை தொடங்கிவைத்தார். அனைத்துலக செயலகத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஹீலியைக் கொண்டுவந்துவிடும் நோக்கத்துடன், இக்குழுவின் கொள்கையுடனான அவரது வேறுபாடுகளைப் பற்றி பிரிட்டிஷ் பகுதியுடன் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். உண்மையான சர்வதேசிய ஜனநாயக மத்தியத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கிய இந்த அதிகாரத்துவ ஆணையை ஹீலி ஒதுக்கிவைத்தார். இந்தக் காலகட்டத்தில்தான், ஹீலியும் கனனும் மேற்கொண்டிருந்த ஒத்துழைப்பு நான்காம் அகிலம் தப்பிப் பிழைப்பதற்கு இன்றியமையாத முக்கியத்துவத்தைப் பெற்றது.

ஹீலி, கனனுடன் கொண்டிருந்த கடிதத்தொடர்பு --பல உட்சுற்று அறிக்கைகளில் இதன் பகுதி வெளியிடப்பட்டிருந்தது-- (அதில் ஒரு சிறிய, மிகப்போதாத பகுதி WRP யால் பின்னர் கிளீவ் சுலோட்டரை ஆசிரியராகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டது), பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஹீலியின் பங்களிப்பு ஆகியவற்றுக்கு முக்கிய சான்று ஆவணம் ஆகும். பப்லோவின் கோட்பாடான, ஸ்ராலினிசம் முற்போக்கான பாத்திரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஹீலி தெளிவுபட நிராகரித்து, நான்காம் அகிலத்தினுடைய காரியாளர்களிடையே இந்த நிலைப்பாட்டின் திசைவிலகச்செய்யும் பாதிப்பு பற்றி எச்சரிக்கையையும் விடுத்தார்.

"நாளாந்த கடினமான உழைப்பினால் தவிர வேறுவழியால் கட்சியை கட்டிவளர்க்க முடியாது" என்று ஹீலி, கனனுக்கு 1953 மே 27ம் தேதி எழுதினார். "புரட்சி, ஸ்ராலினிசத்தை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது என்பது உண்மையானாலும்கூட, இன்னும் அது சக்திவாய்ந்த பிற்போக்கு சக்தியாகத்தான் உள்ளது. அது மிகப்பெரிய வளங்களையும், பரந்த அமைப்பையும் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையில் அதன் 'சூரியன் அஸ்தமித்துவிட்டது' என்றாலும்கூட, புரட்சிக்கு எதிராகக் கடுமையான காட்டுமிராண்டித்தனத் தாக்குதல்களைக் கொடுக்கக் கூடிய திறனை அது இப்பொழுதும் பெற்றுள்ளது. எமது பகுதிகள்தான் புரட்சியின் முன்னணிப்படை ஏனென்றால் அவை மட்டும்தான் புரட்சிக்காக அணிதிரட்டப்பட்ட உலகளவிலான நனவான சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இவைதாம் நமக்கு விலைமதிப்பற்ற மூலதனமாகும். ஸ்ராலினிசத்தை நெருக்கடி எந்த விதத்தில் நிலைகுலைவித்தாலும், நம்முடைய பகுதியினர் அங்கு இல்லையென்றால், நிலைமையில் ஒழுங்கான மாறுதல் ஏற்படப் போவதில்லை. புரட்சி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம், யூகோஸ்லாவியாவில் அவ்வாறு அது செய்தது, ஆனால் ஸ்ராலினிஸ்டுகளையும், மத்தியவாதிகளையும் நான்காம் அகிலத்தினுடைய காரியாளர்களாக அது தானே மாற்ற இயலாது. அதுதான் நம்முடைய இயக்கத்தின் வரலாற்றுப் பணி மற்றும் விரைவில், பொய்த்தோற்றமுடைய, ஏமாற்றுதல்கள் நிறைந்த, சந்தர்ப்பவாதத் திரிபுவாதத்தை நாம் கிழித்து எறிந்தால்தான் அது நமக்கு நன்மையைத் தரும்.

"உங்களுடைய 'யதார்த்தவாத' சிறுபான்மையின் கொள்கைகள்(1) நடைமுறையில் கற்பனை செய்யக்கூடிய மிகவும் உண்மையற்ற போக்கைத்தான் உள்ளது. உலகம் முழுவதும், எங்கு புரட்சி செய்யமுடியும் என்று சலித்துத்தேடி வருகிறது; முதலில் தன்னையே, பொதுவாக ஸ்ராலினிச கைப்பாவைகள் இப்பெரிய நிகழ்வுகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைக்கழிகின்றனரோ, அதேபோன்ற மதிமயக்கத்தை தானும் கொண்டுள்ளது; பின்னர், 'புதிய சிந்தனையின்' மதுமயக்கத்தினால், நம்முடைய சிறிய இயக்கங்கள்மீது சீற்றத்துடன் பாய்ந்து "குறுங்குழுவாதம்" என்று கூச்சலிடுகின்றன; அதேநேரத்தில், அவர்கள் நம்முடைய நனவான பங்கைத் தூக்கி எறிந்துவிட்டு, வெட்டவெளியில் பாரசூட்டில் சுற்றியபின்னர், இறுதியில், ஸ்ராலினிசம் அல்லது ஏகாதிபத்தியம் என்னும் விரோதிகளுடைய முகாமில் இறங்கி விடுகின்றனர்." (Trotskyism Versus Revisionism, vol. 1[London: New Park Publications, 1974], pp.113-14.

பின்னர் ஒருகாலத்தில் இதே பயங்கர விளைவால்தான் ஹீலியும் துன்பப்பட இருந்தார். ஆனால் அதற்கு, பப்லோவாத திரிபுவாதத்திற்கெதிராகப் போராட்டத்தை ஏற்கனவே அவர் கைவிட்டு நீண்டகாலத்திற்குப் பின்னர், பல ஆண்டுகள் எடுத்தது. ஆயினும், இந்தக்காலக்கட்டத்தில், பப்லோவை அவருடைய திரிபுவாத அரசியல்போக்கிலிருந்து மீண்டும் இழுத்துக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை ஹீலிக்கு இருந்தபோதிலும்கூட, சற்றும் விட்டுக்கொடுக்காமல்தான் அவர் பப்லோ ஸ்ராலினிசத்தை ஏற்றுக்கொள்வதை எதிர்த்து நின்றார். ஆனால் உட்கட்சி போராட்டம் தீவிரமடைந்த பின்னர், நான்காம் அகிலம் ஒரு முடிவுகட்டவேண்டிய போராட்டத்தை எதிர்நோக்குவதை உணர்ந்துகொண்டார். 1953, செப்டம்பர் 7 அன்று, கனனுக்கு எழுதினார்:

"நாம் நம்முடைய இயக்கத்தின் வரலாற்றிலேயே, நம்முடைய அடிப்படைக் கோட்பாடுகளைக் பாதுகாப்பதற்கான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரே முக்கியமான முடிவு ஆகும். அது ஒரு கடினமான, தீமைகளுக்கெதிரான போராட்டாமாகும். நம்முடைய விரோதிகள் எவ்விதமான செயல்களையும் புரியத் துணிந்தவர்கள். நாம்தான் ஒன்றாக இணைந்து இதை எதிர்த்துப் போராடி, வெற்றி பெற வேண்டும், இறுதியில் அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதில் எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது.

"உங்களுடைய சர்வதேசக் கருத்துக்களை பப்லோ, மிகுந்த காழ்ப்புணர்வுடன் எதிர்த்தார். இந்த மனிதர், பழைய அகிலத்தினுடைய அனைத்துத் தீமைகளோடும் செயற்படுகிறார். இவருடைய வழிவகைகள், என்னைக் கடுமையாகப் பாதித்து, கிட்டத்தட்ட நான் உடலளவில் நோய்வாய்ப்பட்டுவிட்டேன். நாங்கள் பேசும்பொழுது பல விஷயங்கள் என்னுடைய உள்ளத்தில் பளிச்சிட்டன. நம்முடைய இயக்கத்தின் பழைய காரியாளர்களை அவர்கள் வெறுக்கின்றனர். அவர்கள் சர்வதேச அளவில் ஸ்ராலினிசத்திற்கு இடது மறைப்பு போல் இருக்கக் கூடிய அளவிற்குச் செல்லும் திரித்தல்வாதத்தை ஏற்கும், முதுகெலும்பில்லா ஜீவன்களை கொண்ட ஒரு அகிலத்தைதான் விரும்புகிறார்கள். இச்சொற்கள் கடினமானவை, ஆனால் நான் கடந்து மீண்டுவந்ததை நீங்கள் பார்த்து வந்தால், நான் சொல்வதற்கு உடன்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும்." (ibid., pp.266-67).

கனனும் ஹீலியும்

ஹீலியோடு இணைந்து செயல்படுவதில், கனன் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருந்ததோடு, நான்காம் அகிலத்தில் திரிபுவாதப் போக்கிற்கு எதிரான தங்கள் பொதுப்போராட்டத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார். "உங்கள் வாழ்க்கையில் முழுமையான புரட்சிகரச் செயல்களில் ஈடுபடுத்திக்கொள்ள, முடிவெடுக்கும் திருப்புமுனையில் இப்பொழுது நீங்கள் இருக்கிறீர்கள்" என்று கனன் 1953ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஹீலிக்கு எழுதினார். ஆனால் ஆவணச் சான்றுகளோ, பப்லோவாத திரிபுவாதத்துக்கு எதிரான மறுதாக்குதலின் அரசியல்நிலைப்பாடு சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமையால் முழுமையாக அபிவிருத்திசெய்யப்பட்டதாகத்தான் தெளிவு படுத்தியிருக்கிறது; சர்வதேச இடது எதிர்ப்பின் தொடக்கத்திலிருந்தே செயல்படும் நீண்டகால பரந்த, அரசியல் அனுபவத்தை கொண்ட அதன் இயல்பான தன்மையால் அது தன்னிடத்தே அத்தன்மையை பொதிந்து கொண்டிருந்தது என்பதும் தெரிய வரும். இந்த உண்மை, ஹீலியின் பங்குபற்றிய முக்கியத்துவத்தைக் குறைத்து விடவில்லை; அவருடைய உறுதியான நிலையும், தளராத் தன்மையும், இல்லாவிட்டால், பிரிட்டிஷ் பகுதி பப்லோவின் தாக்குதலுக்கு தப்பியிருந்திருக்க முடியாததுடன், திரிபுவாதத்துக்கு எதிரான போராட்டம் பாரியளவில் வலுவிழந்திருக்கும்.

பேர்ன்ஸ் (Burns) என்ற கட்சிப் பெயரைப் பயன்படுத்திய ஹீலி, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மீதான, பப்லோவாத அனைத்துலக செயலகத்தின் திரிபுகளை எதிர்த்துப் போரிடவும், அதன் காரியாளர்களை தாக்கும் திட்டத்தையும் எதிர்ப்பதற்காக, அதிகாரபூர்வமாக அனைத்துலகக் குழுவை அமைக்க 1953 நவம்பர் 23ல் கொண்டுவந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருந்தார். இத்தீர்மானம் கனனுடைய "பகிரங்கக் கடிதத்துடன்" முழு ஒற்றுமையைக் கொண்டு, நடைமுறை அடிப்படைகளைத் தெளிவாக விவரித்திருந்த "மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிசம்" பற்றிய அதன் பகுதிகளை மேற்கோள் காட்டியது:

"(1) முதலாளித்துவம் மரணப் பிடியிலிருக்கும்போது, உலக நாகரீகத்தை, மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப்போர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தின் வெளிப்பாடுகளால் ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு இந்த ஆபத்தின் தன்மையின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

"(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகுப் புரி வடிவிலான முன்னேற்றத்தைத் தொடருதலை அது புதுப்பிக்கும்.

"(3) இத்தகைய பணி சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையினால் தான் சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.

"(4) சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய பாணியிலான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். இவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போராடக்கூடிய கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

"(5) இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்தான். 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையைச் சிதைக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

"(6) நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், கட்சிகளும், அதற்கு ஆதரவான குழுக்களும் தங்களது தந்திரோபாய செயல்பாட்டில் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ கைக்கூலிகளையும் (தேசியவாத குழுக்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம்) எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமாக இருந்ததுடன், அதேநேரத்தில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்துவிடாமலும், ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ கைக்கூலியான ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவதென்பதைத் தெரிந்திருக்கவேண்டியிருந்தது.

"ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படைக் கோட்பாடுகள் அதிகரித்துவரும் சிக்கலான மற்றும் எளிதில் மாறுபடுகின்ற இன்றைய உலகின் அரசியலின் மத்தியில் தனது செல்தகைமையை இன்னும் கொண்டிருக்கின்றன. உண்மையில் ட்ரொட்ஸ்கி முன்கூட்டிப் பார்த்தவாறு எல்லா வகையிலும் புரட்சிகர சூழ்நிலைகளுக்கான சந்தர்ப்பங்கள் உருவாவதுடன், அந்த நேரத்தின் வாழும் யதார்த்தத்துடன் தொடர்பற்றதாகவும், ஏதோ தொலைதூரத்துக்கு உரியதாக ஒரு நேரத்தில் தோற்றமளித்தவை இப்பொழுதுதான் முற்றும் சரியானதாக வந்திருக்கின்றது. உண்மை என்னவெனில் அரசியல் ஆய்விலும், அரசியல் நடைமுறை செயல்பாட்டின் போக்கைத் தீர்மானிப்பதிலும் இந்தக் கோட்பாடுகள் அதிகரிக்கும் பலத்துடன் இப்பொழுது முக்கியமானதாகின்றன. (ibid., pp.314-15).

"பகிரங்கக் கடிதம்"

கிழக்கு ஐரோப்பா முழுவதும், ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், இன்று இந்தப்பத்திகளை மேற்கோளிடும் பொழுது, "பகிரங்கக் கடிதத்தில்" கொடுக்கப்பட்டுள்ள ஆய்வு, அதன் வெளியீடு வந்து 36 ஆண்டுகளுக்குப் பின்னரும் எவ்வளவு ஆழமான பொருத்தத்துடன் உள்ளது என்பது வியப்பையே அளிக்கிறது.

"பகிரங்கக் கடிதம்" வெளியிடப்பட்டதற்கு, அனைத்துலகக் குழுவை ஆதரிப்பவர்கள் அனைவரையும் கட்சியைவிட்டு வெளியேற்றிவிட்டதாகப் பிரகடனப்படுத்தியதின் மூலம் பப்லோ, தன் விடையைக் கொடுத்தார். பிரிட்டனில் பப்லோவின் உத்தரவுகளின்படி, லோரன்சின் தலைமையிலான சிறுபான்மை, தான்தான் அதிகாரபூர்வமான பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியதோடு ஹீலியையும் அவர் ஆதரவாளர்களையும் வெளியேற்றிவிட்டது. இந்த பப்லோ, லோரன்சால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரத்துவக் கூத்தை, எத்தகைய சீற்றம் காட்டவேண்டுமோ, அதைக் காட்டி ஹீலி இழிவுபடுத்தினார். "அவர்கள் கூச்சலிடுகின்றனர், தனிப்பட்ட முறையில் திட்டுகின்றனர், பின்னர் முறையாகப் பெரும்பான்மைத் தோழர்கள் பற்றி இரங்கல்உரையுடன் நிகழ்ச்சியை முடிக்கின்றனர்.", என்று டிசம்பர் 15, 1953 அன்று உண்மையான பிரிட்டிஷ் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஹீலி குறிப்பிடுகிறார். "இது யாரை நம்பவைப்பதற்குச் செய்யப்படுகிறது? உறுதியாக இந்த நாட்டில் ஒருவரையும் நம்பவைக்க அல்ல. இது சர்வதேச அளவில் ஏற்கப்படவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிறது, இங்கிலாந்தில் என்ன நடந்தது என்பது தெரியாதவர்களுக்குத் தவறான தகவல் செல்லவேண்டும் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது." (Trotskyism Versus Revisionism, vol. 2, p.72).

உறுதியான பெரும்பான்மையை ஹீலி கொண்டிருந்ததால் விரக்தியுற்ற பப்லோவும், (ஏற்கனவே பிரிட்டிஷ் ஸ்ராலினிஸ்டுகளுடன் நெருங்கிப் பணியாற்றி வந்திருந்த) லோரென்சும், பிரிட்டிஷ் பகுதியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற் கட்சிக்குள் பணியாற்றிவந்திருந்ததால், ஹீலியை எதிர்நோக்கிய தந்திரோபாயச் சிக்கல்கலான பிரிட்டிஷ் பகுதியின் செயல்முறைச் சுதந்திரம் தடுக்கப்பட்டிருந்ததை அவர்கள் சுரண்டக் கருதினர். அந்த நேரத்தில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள், மத்தியவாதிகள் குழு ஒன்றின் ஒத்துழைப்புடன் Socialist Outlook ஐ வெளியிட்டனர். பிரிட்டிஷ் பகுதியிலிருந்து, பிளவுக்குப்பின்பும் இதன் ஆசிரியர்குழுவிலிருந்த லோரென்ஸ், இந்தச் செய்தித்தாளை ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக அகற்றிவிடவேண்டும் என்ற நோக்கத்துடனும் அதை ஸ்ராலினிச வழியில் திருப்பிவிடவேண்டும் என்றும் முயற்சித்தார். ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும், ஸ்ராலின்-சார்பு உடைய பப்லோ பிரிவினர்களுக்கும் நிகழ்ந்த போரின் கடுமையான தன்மை, இலங்கை சம சமாஜக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான லெஸ்லி குணவர்த்தனாக்கு, ஹீலி 1954 ஏப்ரல் 21ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆறு ஆண்டு காலம் தொழிற் கட்சியில் நுழைவு வேலையினால் பெற்ற நன்மைகள் முழுவதையும் அழிப்பதற்கும் Socialist Outlook ஆசிரியர் குழுவில் அனைத்து ட்ரொட்ஸ்கிச செல்வாக்கையும் தகர்ப்பதற்கும் பப்லோவும், லோரென்சும் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், அக்கடிதத்தில் விளக்கியிருக்கிறார்:

"இப்பொழுது, கடந்த சிலமாதங்களாக, ஆசிரியர் குழுவில் ஓர் உறுப்பினர் சிறுபான்மையாக நான் இருந்து, ஸ்ராலினிசத்தை நோக்கி செய்தித்தாளைத் தள்ளுவதற்கான முயற்சிகளை எதிர்த்து இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன். இந்நாட்களில், நானும் என்னுடைய தோழர்களும், ஹெமன் லெவி (லைசெங்கோவிற்காகவும் மாஸ்கோ வழக்குகளுக்காகவும் வாதிடுபவர்) போன்ற ஸ்ராலினிச முகவர்கள் நம்முடைய செய்தித்தாளை ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதை, வெளியே நின்று பார்க்கவேண்டியிருக்கிறது; அதுமட்டும் இல்லாமல், லோரென்சின் நெருங்கிய நண்பரான திருமதி.கோபே, திரு.லெவியைக் குறிப்பாகப் பாராட்டி நம்முடைய ஏட்டில் எழுதியுள்ளதையும் காணவேண்டியிருக்கிறது. இத்தகைய விஷயங்களுக்கு மூத்த மனிதனின்(Old Man's)) எதிர்விளைவு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். (2) மாஸ்கோ விசாரணைகளுக்கு அடிபணிந்து ஆதரவு தந்த அறிவுஜீவிகளைப்பற்றிய அவருடைய மதிப்பீடு உங்களுக்குத் தெரியும்; பல ஆண்டுகள் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் (London School of Economics) தலைவராக லெவி இருந்தவர்; இப்பொழுது பப்லோவினால் "தேர்ந்து எடுக்கப்பட்ட" நபர்கள், எங்கள் தோழர்களாலும் உங்கள் தோழர்களாலும் (மைக், டோனி), பெரும் தியாகத்தினால் கட்டி எழுப்பப்பட்ட செய்தித்தாளில் பக்கங்களை இட்டுநிரப்பி, ஸ்ராலினிஸ்டுகளால் நாம் மாசுபடுத்தப்படும் நிலை உள்ளது...(3)

"இத்தகைய விஷயங்கள் செய்தித்தாளுடன் நின்றுவிடவில்லை. இது அச்சகத்திற்குள்ளும் நுழைந்து விட்டது. இங்கு, லோரென்ஸும், (மத்தியவாதியான) பிராட்டக்கும் நானும் இயக்குனர்களாக இருந்து, நாங்கள் மீண்டும் ஒருமுறை சிறுபான்மையினராக விளங்கினோம். மத்தியவாதிகளுடன் இணைந்துவிட்ட நிலையில், பப்லோவாதிகள் அச்சகத்தைத் திவால் நிலைக்குத் தள்ளினர். தங்களுடைய ஆட்கள் மூன்று பேருக்கு பத்திரிக்கையில் முழுநேர வேலை கொடுத்தனர்; எங்களோடு சண்டைபோடுவதைத் தவிர வேறெதையும் அவர்கள் செய்யவில்லை. இதன் விளைவாக அச்சகத்தில் 900 பவுண்கள் கடன் குவிந்து, நாங்கள் திவாலாகும் பாதையில் திட்டவட்டமாகப் போய்க் கொண்டிருந்தோம். நம்முடைய தோழர்களின் பணத்தில் அச்சு இயந்திரமும் மற்ற கருவிகளும் வாங்கப்பட்டிருந்ததால், இதைப்பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை.

"எனவே, தொடக்கத்திலிருந்தே, பிரிட்டனில் பப்லோவாதம் புறநிலைரீதியாக ஸ்ராலினிசத்திற்கு உதவிசெய்யும் ஒரு நாசவேலை செய்யும் அலகாகத்தான் வெளிப்பட்டிருந்தது. நம்முடைய செய்தித்தாளின் விற்பனையோ 6000த்திலிருந்து வாரம் 4500 ஆகக் குறைந்து விட்டது. என்னைத் தற்காலிகமாக ஆசிரியர் குழுவிலிருந்தும், அச்சகத்திலிருந்தும் ஒதுக்கிவைப்பதன் மூலம், மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிசத்தை உடைத்து சுக்குநூறாக்கிவிடலாம் என்று அவர்கள் நினைத்தனர். அவர்களது முழு மூலோபாயமும் மிகக்கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த அவர்களுடைய திட்டத்தின் பகுதியாக இருந்தது. குழுவின் பெரும்பான்மையோரால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், மத்தியவாதிகளிடம் நாம் தொடர்பு கொண்டிருந்த இடங்களில், அவர்கள் நம்முடைய பணியின் முக்கியபகுதிகளைத் தாக்கும் வகையை மேற்கொண்டனர்; இந்தத் தொடர்புகள்தாம் தொழிற்கட்சியின் இடதுசாரிப்பகுதிக்குள், ஸ்ராலினிச வேலையை அவர்கள் கொள்ளுவதற்கு பெருந்தடையாக இருந்தவை ஆகும்.

"பிரிட்டிஷ் பப்லோவாதிகள், உண்மையில் நம்முடைய குழுவிற்குள் இருக்கும் சண்டைகள் பற்றிக் கவலைப்படவில்லை. இது சில வாரங்களுக்குத் தொடர்ந்தது. முதலிலிருந்தே, நாம் தொழிற்கட்சியில் செய்துவந்திருந்த பணியைத் தகர்த்துத் தூளாக்குவதில்தான் அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பதோடு, பப்லோ, கிளார்க் மற்றும் அவர்களுடைய ஜெர்மைன் போலிகளும் இதை முற்றிலும் ஆதரித்து வந்திருந்தனர்". (ibid.,pp.8081)

பிரிட்டிஷ் பகுதியின் மீதான இந்தத் தீமைநிறைந்த பப்லோவாதிகளின் தாக்குதல், ஹீலியால் கூறப்படுவது போல், ஒரு துயரம் நிறைந்த விளைவைக்கூட ஏற்படுத்தியிருக்கமுடியும்:

"கடந்த புதன்கிழமையன்று, காலை எட்டு மணிக்கு அவர் (லோரென்ஸ்) தன்னுடைய ஆதரவாளர் ஒருவருடன் இயந்திரம் பழுதுபார்ப்பவர் என்று சொல்லிக்கொண்டு, அச்சு அலுவலகத்திற்குள் வந்தார். ஆசிரியர் குழுவின் முடிவுகளை அவர் செயல்படுத்துவதில்லை என்று அவர் கவனத்திற்கு நான் கொண்டுசென்றபோது, எந்த எச்சரிக்கையும் இல்லாமல் என்னுடைய முகத்தில் ஓர் அறை விட என்னுடைய முகத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அவருடைய அடியாள் குறுக்கிட முன்வந்தபோது, மைக் அவ்விடத்திற்கு ஓடி வந்து லோரென்சின் புறம் சிறுகத்தியொன்றை ஓங்கினார். நான் உடனே அவரிடமிருந்து, அதைப் பறித்தபோது, லோரென்சை மற்ற அச்சுத்தொழிலாளர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர். இந்தப் பயங்கர நிகழ்ச்சி மோசமாகப் போயிருக்கக் கூடும்; ஆனால் என்னுடைய மூக்கில் இரத்தம் கொட்டியது, லோரென்சின் அடியாளுக்கு கறுப்புக் கண் கிடைத்ததுடன் நின்றுவிட்டது. குழுவிலில்லாத தொழிலாளர்களிடம் மேற்கூறிய நிகழ்ச்சியை விளக்கி நாங்கள் உறுதிமொழி கையெழுத்திட்ட ஆவணம் ஒன்றை வாங்கியிருக்கமுடியும்.

"அதற்குள் லோரென்ஸ், அவருடைய ஆளை அவர் உறுப்பினராகவுள்ள அச்சுத்தொழில் சங்கத்திற்கு அனுப்பி, அந்நபர் மைக் தன்னை கத்தியால் தாக்கமுன்வந்ததாகக் கண்டனத்திற்குட்படுத்தினார். இவையனைத்துமே, மைக்கிடமிருந்து உறுப்பினர் அட்டையை எடுத்துவிடுவதற்கான முயற்சியோடு சேர்ந்தது ஆகும். இப்பொழுது இது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது, மைக் தொழிற்சங்கக் குழு முன் ஆஜராக இருக்கிறார்....

"எங்கள் குழுவில் நாங்கள் ஒருவரும் பயந்தாங்கொள்ளிகள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நாங்கள் எத்தனையோ உட்பூசல்களைக் கொண்டிருந்தாலும், உடலளவில் தாக்கும் அளவிற்கான செயல்களில் ஈடுபட்டதில்லை. அத்தகைய செயல்களில் நாங்கள் ஈடுபட்டிருந்த ஒரே குழுவினர் ஸ்ராலினிஸ்டுகளைதவிர வேறு ஒருவருமில்லை. பப்லோவாதிகள், தங்கள் குண இயல்பிற்கேற்றவாறு நடந்து கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல. வன்முறையைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் குழுவிலும் சில கடின உள்ளம் பெற்றவர்கள் இருக்கின்றனர் - ஒரு சொல் கூறினால் போதும், பலவற்றைச் செய்துவிடலாம். ஆனால், நாங்கள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளாதலால் அவ்வாறு செய்யமாட்டோம். ஆயினும் கூட, வருங்காலத்தில் நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம், அதற்கானமுறையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். பப்லோவாத-ஸ்ராலினிச இழிபிறவிகள் இனி தங்கள் விரல்களை மடக்கிக்கொண்டு வலதுசாரி தொழிற்சங்க தலைவர்களைத்தாக்க ஓடி வர முடியாது.

"இந்த 'உள்நாட்டு யுத்தத்துக்கு' இடையே ஜெர்மைனுடைய எங்களைப் பற்றியெல்லாம் விசாரிப்பதற்கு நாங்கள் எல்லாம் "உண்மையானவர்கள்தானா" என்று அறிய ஒரு 'ஆணைக்குழு' அமைக்கும் முன்மொழிவு வந்திருக்கிறது. தோழர் லெஸ்லி அவர்களே, சற்று கூடுதலான உணர்ச்சியுடன் இந்த அரசியல் தந்திரம், பொய்மை இவற்றைப் பற்றி நான் எழுதியிருந்தால் என்னைப் பொறுத்துக் கொள்ளவும். ஒரு குழு நியமித்தால், எங்களுக்கும் சில எண்ணங்கள் உள்ளன. நாமும் பப்லோ, லோரென்ஸ் பற்றி விசாரணை செய்வதற்கு ஒரு குழுவை நியமிப்போம். எங்கள் பங்கிற்கு, நான் குறிப்பட்ட முறையில் நிகழ்ச்சி நடந்ததற்கு முழுமையான சாட்சியங்கள் இருக்கின்றன.

"எங்கள் பிரிவிலுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும், பப்லோவாதம், அதன் தர்க்கரீதியான முடிவான ஸ்ராலினிசம் பற்றி முழுமையாகத் தெரியும், நாங்கள் பப்லோ குழுவின் பொறிகளுக்குள் எத்தொடர்பையும் கொள்ள மாட்டோம். பிரிட்டனில் பப்லோவாதத்திற்கு நாங்கள் ஒரு விடைதான் தரவேண்டும், அது அவர்களை அரசியல் அளவிலும், அமைப்புமுறையிலும் அடித்து நொருக்குதல் என்பதுதான், அது கூடாதென்று எங்களை யாரும் கேட்டுப் பயனில்லை." (Ibid.,pp.83-84).

இந்த பெரிய அரசியல் வேறுபாடுகள் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை எதிர்நோக்கினாலும்கூட, ஹீலியும் மற்ற முன்னணி உறுப்பினர்களும் வாழ்ந்திருந்த கொடிய வறுமை இதன் கஷ்டங்களை அதிகப்படுத்தினாலும் கூட, இந்தப் பப்லோவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட ஆத்திரமூட்டல்களை எல்லாம் கடந்து அவர்கள் வெற்றியுடன் வெளிப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் ஹீலியுடைய சர்வதேச ட்ரொட்ஸ்கிசத் தலைவர் என்ற உயர்ந்த தோற்றம் மாபெரும் அளவிற்கு வளர்ந்தது; இந்த வாழ்வா- சாவா போராட்ட காலத்தில் கற்ற படிப்பினைகள், பிரிட்டனில் வரவிருந்த ஆண்டுகளில் அனைத்துலகக் குழுவால் பெரும் முன்னேற்றங்கள் செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் பாதைகளை அமைத்தன.


1. ஹீலி இங்கு, ஷிகீறி யிலிருந்த கொக்கிரான்ன், கிளார்க் தலைமையிலான சிறுபான்மையினரைக் குறிப்பிடுகிறார்.

2. ஹீலியால் "மூத்தமனிதன்" என்று குறிக்கப்படுபவர் லியோன் ட்ரொட்ஸ்கி ஆவார்.

3. மைக் மற்றும் டோனி வான்டெர் பூர்ட்டன் சகோதரர்கள், கட்சிக்குள் மைக் மற்றும் டோனி பண்டா என அறியப்பட்டவர்கள்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved