World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The historical significance of the gathering world slump

குவிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரச் சரிவின் வரலாற்று முக்கியத்துவம்

By Nick Beams
4 December 2012

Back to screen version

34 உறுப்பினரைக் கொண்ட பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (Organisation for Economic Cooperation and Development -OECD) பொருளாதார முற்கணிப்பில் உள்ள கணிசமான குறைப்பு, ஒரு உலகச் சரிவு குறித்து முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புக்களில் இருந்து வரும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளில் சமீபத்தியதாகும்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தானே கொடுத்த வளர்ச்சி முற்கணிப்பில் இருந்து OECD 2013க்கு 2.2%ல் இருந்து 1.4% இற்கு 0.8 சதவிகிதப் புள்ளிகளைக் குறைத்து "ஆழ்ந்த மந்த நிலையும், பணப்புளக்க தகர்வும் மற்றும் வேலையின்மையில் கூடுதலான அதிக உயர்வும்" வரக்கூடிய வாய்ப்பு குறித்து எச்சரித்துள்ளது.

"உலகப்பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள்" யூரோப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருகின்றன எனக் குறிப்பிடும் இக்கணிப்பு சில நாடுகளில் நிதிய நிலைமைகள் "தொடர்ந்து சங்கிலி போன்ற நிகழ்வுகளைத் தூண்டும் ஆபத்தைக் கொண்டுள்ளன, அவை நிதிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளை கணிசமாகத் தீமைக்கு உட்படுத்தி உலகப் பொருளாதாரத்தை மந்த நிலையில் தள்ளக்கூடும்" என்று கூறி உள்ளது. உலகப் பொருளாதாரத்தைத் தாக்கியுள்ள பிரச்சனைகளின் தவிர்க்க முடியாத தன்மையின் ஒரு தெளிவான அடையாளமாக, "நெருக்கடியில் இருந்து வெளிப்பட்டுள்ள அடையாளங்கள் புதுப்பிக்கப்படும் சரிவு அல்லது சில நாடுகளில் ஒரு இரட்டை இறக்கம் கூட ஏற்படலாம் என்பதைக் காட்டுகின்றன" என்றும், "புதிய பெரிய சுருக்கம் என்ற ஆபத்து தவிர்க்கப்பட்டுவிட்டது எனக் கூறமுடியாது" என்றும் தெரிவிக்கிறது.

உலகப் பொருளாதாரத்திற்கான தன் கணிப்பில் சர்வதேச நாணய நிதியம் செய்துள்ள கீழ்நோக்கிய திருத்தங்களைத் தொடர்ந்து OECD தகவலின் முக்கியத்துவம், இவை ஒருகாலத்தில் உலக விரிவாக்கத்தின் இயந்திரமாக இருந்த முக்கிய முதலாளித்துவ நாடுகளை பற்றிய கவலையாக உள்ளது என்பது ஆகும்.

OECD யின் கணிப்பு யூரோப்பகுதி 2013 ல் 0.1% சுருக்கம் அடையும், இது இந்த ஆண்டின் 0.4%ஐத் தொடரும் என்று உள்ளது. அமெரிக்காவில் வளர்ச்சி வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தேவையானதைவிட குறைவான தரமான முந்தைய கணிப்பான 2.6% என்பதில் இருந்து 2%தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வளர்ச்சி 1.5% என்பதில் இருந்து 0.7% எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கடைசி இரு காலாண்டுகளில் ஜப்பானியப் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியைக் கொள்ளலாம் என்று இருக்கையில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையக்கூடும்.

உலகப் பொருளாதாரம் முழுவதற்குமான புள்ளிவிவரங்களைத் தவிர, தனி நாடுகள், பிராந்தியங்கள் குறித்த நிறையத் தகவல்களும் இதே திசையைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

கடந்த வெள்ளியன்று யூரோப்பகுதி முழுவதும் வேலையின்மை ஓராண்டிற்கு முன் இருந்த 10.4% என்பதில் இருந்து 11.7% என உயர்ந்து விட்டது அறிவிக்கப்பட்டது. ஸ்பெயினும் கிரேக்கமும் ஏற்கனவே மந்த நிலை வேலையின்மைத் தரமான 25% மற்றும் அதையும் விட அதிகம் என்பதைக் கொண்டுள்ளன. இப்பொழுது வலுவான நாடுகளும் பாதிப்பிற்கு உட்படுகின்றன. பிரான்சில் நுகர்வோர் செலவு அக்டோபர் மாதம் குறைந்துவிட்டது. ஜேர்மனியில் சில்லறை விற்பனை எதிர்பாராமல் அதே மாதம் குறைந்தது.

எழுச்சி பெறும் பொருளாதாரங்கள் என அழைக்கப்படுபவற்றின் அதிக வளர்ச்சி உலகப் பொருளாதாரம் முழுவதற்கும் ஒரு ஏற்றம் கொடுக்கும் என்பது ஏற்கனவே சீனப் பொருளாதாரத்தின் சரிவினால் வினாவிற்கு உட்பட்டுவிட்டது. அதற்கு இப்பொழுது பிரேசில் மற்றும் இந்தியாவில் இருந்து வந்துள்ள புதிய தகவல்கள் மூலம் இன்னுமொரு அடி விழுந்துள்ளது.

பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 0.6% விகிதம்தான் வளர்ச்சியுற்றது. இது அதன் பொருளாதாரம் ஒரு தசாப்தத்தில் மிகவும் குறைவான ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்ய உள்ளது என்பதைத்தான் குறிப்பிடுகிறது. இதேபோல் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் செப்டம்பர் முடிந்த காலாண்டில் 5.5% என்பதில் இருந்து 5.3% எனக் குறைந்து, ஒரு தசாப்தத்தில் இது மிகவும் குறைவான வளர்ச்சியை பதிவு செய்யும் என்ற கணிப்புக்களும் வந்துள்ளன.

இப்புள்ளி விவரங்கள் பொருளாதார மீட்பு என்பதற்கு முற்றிலும் மாறாக " மூலையையே சுற்றிவருவதாக" இருப்பதையும் உலகப் பொருளாதாரம் இன்னும் ஆழ்ந்த மந்தநிலைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கின்றன.

மேலும் இவை ஆழ்ந்த வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. உலக சோசலிச வலைத் தளம் 2008ம் ஆண்டு வெடித்த நிதிய நெருக்கடி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியதல்ல, உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சரிவைக் குறிக்கிறது, இதனால் பொருளாதாரம், சமூக மற்றும் அரசியலில் நீண்டகால பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறிய பகுப்பாய்வை இவை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றன.

முதலாளித்துவ வளர்ச்சியின் வளைகோடு என்று லியோன் ட்ரொட்ஸ்கி குறித்த வகையில் இது ஒரு திருப்பு முனையாகும். முதலாளித்துவப் பொருளாதாரம் இரண்டு அடிப்படை நிகழ்வுப்போக்குகளால் குணாதிசயப்படுத்தப்படுகின்றது என்று அவர் விளக்கினார்: வர்த்தக வட்டத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள், முதலாளித்துவத்தின் பிறப்பில் இருந்து அதன் இறப்பு வரை தொடருவது மற்றும் முழுவரலாற்றுக் காலங்களின் தன்மையையும் நிர்ணயிக்கும் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படும் நீண்டகால மாற்றங்களுமே அவை.

1920 களின் முந்தைய ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி தன் ஆய்வை அபிவிருத்தி செய்தார்: 1914ல் வெடித்த முதல் உலகப் போருக்கு முன் ஏற்பட்ட நிலைமுறிவின் முக்கியத்துவத்தை ஆராய்ந்ததின் மூலம் அவர் இதைக் கூறினார். வர்த்தகச் சுற்றுக்கள் தொடரும்போது, முதலாளித்துவம் அதன் போருக்கு முந்தைய சமபலநிலையை மீட்க இயலாது என்று அவர் விளக்கினார்.

பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் இப்பகுப்பாய்வை சரியென நிரூபித்தன. போர் வெடித்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, உலக முதலாளித்துவம் பாரிய வேலையின்மை, பெருமந்த நிலை, மில்லியன் கணக்கானவர்கள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டது, பாசிசத்தின் வளர்ச்சி, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான மோதல்களின் வளர்ச்சி, இறுதியில் இவை முதல் உலகப் போரைவிட மற்றொரு உலகப் போரை வெடிக்க வகை செய்த கூறுபாடுகளால் குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது.

முதலாளித்துவ சமபலநிலை இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்கள் அதன் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பினால்தான் மீட்கப்பட்டது. ட்ரொட்ஸ்கி முற்கூட்டியே கணித்திருந்தபடி, நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் எலும்புகளினதும், குருதியினதும் மீதுதான் அவை நடந்தேறி.

இப்பொழுது ஒரு புதிய சரிவு வந்துகொண்டிருக்கையில், 1914ன் முக்கியத்துவத்தைத்தான் இதுவும் கொண்டுள்ளது. இம்முறை இது ஓர் உலகப் போருடன் தொடங்கவில்லை; ஆனால் முழு உலக நிதியமுறையின் கிட்டத்தட்ட கரைப்புடன் தொடங்கியது. இலாபமுறை தூக்கிவீசப்படாவிட்டால், விளைவுகள் முன்பு இருந்தவற்றைப் போல்தான் இருக்கும்.

2008ம் ஆண்டுச் சரிவு, பெருகிய முறையில் பரபரப்பு நிறைந்த நிதிய ஊகத்தால் தயாரிக்கப்பட்டது; அது செல்வத்தைச் சேகரிப்பதில் முக்கிய வகையாக ஒட்டுண்ணித்தனத்தின் வெளிப்பாடு மற்றும் அப்பட்டமான குற்றத்தன்மை ஆகியவற்றைக் கண்டது. ஆனால் நிதிய சீட்டுக்கட்டு போன்ற நிலையங்கள் சரிந்தது, முந்தைய "இயல்பான"நிலைமைகளுக்கு திரும்பியது என்பதைக் குறிப்பிடவில்லை. மாறாக, இது ஒரு புதிய வரலாற்றுக் காலகட்டத்தின் ஆரம்பத்தை குறித்தது. ட்ரொட்ஸ்கியின் சொற்களில் கூறுவதானால், "வர்க்கங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் மிகப் பெரிய குமுறல்களுடன்" ஆரம்பமாகும்.

சர்வதேச உறவுகள் 1930 களின் நாஜிக்களின் நடவடிக்கைளுக்குப்பின் காணப்படாத அளவிலான அப்பட்டமான காலிக்கும்பலின் செயற்பாடுகளினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. அமெரிக்கா அதன் போட்டியாளர்களின் அழுத்தங்களில் இருந்து மீட்டுக் கொள்ள முற்படுகையில் இவை நடைபெறுகின்றன.

சரிவு ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும்கூட, சமீபத்திய தகவல்கள் முதலாளித்துவத்திடம் தன் வரலாற்றுத்தன்மை நிறைந்த நெருக்கடியை கடப்பதற்கு எவ்விதப் பொருளாதாரக் கொள்கைகளும் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இதற்கு அதனிடம் ஒரு விடைதான் உள்ளது. அது புதிய செல்வங்களை ஏராளமாக இற்றுப்போன இலாபமுறையின் இரத்த நாளங்களுக்குள் செலுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் போருக்குப் பிந்தைய காலத்தில் பெற்ற அனைத்து சமூக நலன்களையும் அழித்து அதை 1930கள் அதற்கும் முன்பிருந்த நிலைக்கு தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளால் தள்ளுவதாகும். அதுதான் இப்பொழுது உலகெங்கும் செயல்படுத்தப்படுகிறது..

இந்த சமூக எதிர்ப்புரட்சிக்கு தொழிலாள வர்க்கத்தின் பதில் தனது சொந்த சுயாதீன மூலோபாயத்தை வளர்த்து அதற்காகப் போராடுவதாகும். உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தினால் பிற்போக்குத்தன இலாபநோக்கு அமைப்பு முறையை தூக்கிவீசி அதனை ஒரு திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் பிரதியீடு செய்வதாகும்.

உலகில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இத்தகைய முன்னோக்கிற்காகப் போராடுகிறது.