இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள்: உடமைகளைப் பறித்து இனச் சுத்திகரிப்பு செய்து உருவாக்கப்பட்ட நாடு - பகுதி இரண்டு

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இரண்டு பகுதிகளைக் கொண்ட கட்டுரையில் இது இரண்டாவது பகுதியாகும். முதல் பகுதி 14 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது.

பெரிய இஸ்ரேல் கொள்கை

கைப்பற்றப்பட்ட நிலத்தை நிரந்தரமாக இணைக்கும் பெரிய இஸ்ரேல் கொள்கையின் வளர்ச்சியில், 1967 போர் ஒரு திருப்புமுனையாக இருந்தது.

1967 ஜூனில் நடைபெற்ற ஆறு நாள் போரின் போது கோலன் குன்றுகளில், இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேறுகின்றன. [Photo by Government Press Office (Israel) / CC BY-SA 4.0]

போரானது இஸ்ரேலின் நடைமுறையில் இருந்த எல்லைகளை விரிவுபடுத்தியதுடன் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் புதிய அலைகளை உருவாக்கியது. தொழிற்கட்சிப் பிரதமர் லெவி எஷ்கோல் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம், சர்வதேச தீர்மானங்களை மீறி புதிதாக கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் காலனித்துவ பாணியிலான குடியேற்றங்களை நிறுவியது. இந்தக் குடியேற்றங்கள், இஸ்ரேலின் விரிவாக்கக் கொள்கையில் தங்கள் நலன்களைக் கொண்ட ஒரு சமூக அடுக்கை உருவாக்கி, மிகவும் பிற்போக்கு சக்திகளுக்கு ஈர்ப்பு துருவமொன்றை வழங்கியது. இந்த சக்திகளில் சில இன்று சர்வாதிகார கொள்கையுடன் பாசிச வாரிசுகளாக அரசாங்கத்தில் இருக்கின்றன. இந்த சக்திகள் 1970களில் இஸ்ரேலிய அரசியலை வேகமாக வலது பக்கம் நகர்த்தி, சமூக ஸ்திரத்தன்மையை அதிகரித்து, அரசாங்கத்தின் மீதான தொழிற்கட்சியின் பிடியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இடமிருந்து, ஜெனரல் உசி நர்கிஸ், பாதுகாப்பு அமைச்சர் மோஷே தயான், மற்றும் பிரதம தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யிட்சாக் ராபின் -பின்னர் இஸ்ரேலிய தொழிற் கட்சி பிரதமராக இருந்தவர்- ஆறு நாள் போரில் இஸ்ரேலியப் படைகளிடம் ஜெருசலேம் வீழ்ந்த பிறகு பழைய ஜெருசலேம் நகரத்தில். [Photo by National Photo Collection of Israel, Photography dept / CC BY-SA 3.0]

மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலஸ்தீனிய நில ஆக்கிரமிப்பைச் செயல்படுத்துவதற்காக, அடக்குமுறை இராணுவ ஆட்சி, கூட்டுத் தண்டனை, வீடு இடிப்பு, கட்டாய நாடுகடத்தல் மற்றும் விசாரணையின்றி காவலில் வைப்பதன் மூலம் முடுக்கிவிடப்பட்டது, அதே நேரத்தில் இஸ்ரேலிய முதலாளிகளால் கொடூரமாக சுரண்டப்படும் மலிவு கூலிப் பட்டாளமாக பாலஸ்தீனியர்கள் மாற்றப்பட்டார்கள். பாலஸ்தீனியத் தலைமை முதலில் ஜோர்டானுக்குச் சென்றது. அது, 1970 இல் ஜோர்டானால் நடத்தப்பட்ட ஒரு மிலேச்சத்தனமான போர் மூலம் விரட்டப்படும் வரை அங்கிருந்தது. பின்னர் லெபனானுக்கு சென்றது.

1977 தேர்தலில், லிகுட் தலைவர் மெனசெம் பெகின் வெற்றியைத் தொடர்ந்து, நடந்த 15 வருட கால சிவில் யுத்த காலத்தில் இஸ்ரேலானது, பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராகவும் லெபனானின் பாசிச சக்திகளுடன் இணைந்து, தொடச்சியான தேடுதல்கள், ஊடுருவல்கள் மற்றும் இரகசியத் தாக்குதல்கள் என, ஒரு கொலைகார விரிவாக்கக் கொள்கையை லெபனானில் முன்னெடுத்தது. இந்த யுத்தங்கள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் 30 வருடங்கள் தொடர்ச்சியாக நடந்தன.

இஸ்ரேலிய அமைச்சரவையினதும் பாதுகாப்புப் படைகளினதும் மூத்த உறுப்பினர்களின் உடந்தையுடன் லெபனான் படைகளால் இயக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலையின் பின்விளைவாக, சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள் முகாம்களுக்குள் கிறிஸ்தவ ஃபலாங்கிஸ்டுகள் மற்றும் தெற்கு லெபனானில் உள்ள இராணுவத்தின் உறுப்பினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. [Photo: Robin Moyer, USA, Black Star for Time. Beirut, Lebanon, 18 September 1982. ]

1982 செப்டம்பரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் பாதுகாப்புடன் இஸ்ரேலின் பாலங்கிஸ்ட்டு கூட்டாளிகளால், பெய்ரூட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம்களான சப்ரா மற்றும் ஷட்டிலாவில் 3,000ம் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமை உட்பட நடவடிக்கைகளின் போது, சுமார் 1,500 இஸ்ரேலிய உயிர்களை பலிகொடுத்து 32,000 பாலஸ்தீனியர்களும் மற்றும் எண்ணிக்கை கூறப்படாத லெபனானியர்களும் கொல்லப்பட்டனர்.

ஒஸ்லோவின் மோசடி

லெபனானில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வரும் அதன் மனித உரிமை மீறல்கள், பாலஸ்தீன விடுலை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே வெடித்த 1987-93 தன்னிச்சையான பாலஸ்தீனிய எழுச்சியான முதல் இன்டிபாடாவிற்கு வழிவகுத்தது. இது 1,000 பாலஸ்தீனியர்களின் உயிர்களைக் காவு கொண்டு இஸ்ரேலால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது, இந்த எண்ணிக்கை கொல்லப்பட்ட யூத இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகமாகும்.

இஸ்ரேலிய பிரதமர்ஞ இட்சாக் ரபின், அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், செப்டம்பர் 13, 1993

இது 1993 இல், இஸ்ரேலின் தொழிற்கட்சிப் பிரதமர் இட்சாக் ரபின் மற்றும் அரபாத்தும் வெள்ளை மாளிகையின் புல்வெளிகளில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட வழிவகுத்தது. அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலை அங்கீகரித்து பயங்கரவாதத்தை கைவிட ஒப்புக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தங்களின் கீழ் கிழக்கு ஜெருசலேமில் உள்ள புறநகர்ப் பகுதியான அபு டிஸ் தலைநகராக்கப்பட்டு பாலஸ்தீன அரசு உருவாக்கப்படுவதாக, அதாவது இரு-நாடுகள் தீர்வு என்று அழைக்கப்படுவது உருவாக்கப்படுவதாக இருந்தது. அரபாத்தும் பாலஸ்தீனிய அதிகாரமும் இந்த பிரிக்கப்பட்ட அரசில் பாலஸ்தீனிய மக்களைக் கட்டுப்படுத்துவதில் இஸ்ரேலின் பங்கை எடுத்துக்கொள்ளவிருந்தனர். இந்த அரசு பான்டுஸ்தான்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய, பிரிக்கப்பட்ட ஆனால் இஸ்ரேலால் சூழப்பட்டதாக இருக்கும். இது பாலஸ்தீனியர்களுக்கு ஜனநாயகத்திற்கான எந்தவொரு சாத்தியத்தையும் தடுப்பதாகும்.

லிக்குட்டில் உள்ள, இஸ்ரேலின் அதிதீவிர தேசியவாதிகளும் பிற தீவிர வலதுசாரிகளும், மதக் கட்சிகளில் உள்ள அவர்களது அரசியல் பிரதிநிதிகளும் தாங்கள் விரும்பும் நிலத்தில் உள்ள இந்த கேலிக்கூத்து பாலஸ்தீனிய அரசை கூட நிராகரித்தனர். வெறும் இரண்டே ஆண்டுகளுக்குப் பிறகு, 1995 அக்டோபரில், வலதுசாரி மத தேசியவாதிகள், போர் வெறி கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களான ஏரியல் ஷரோன், பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரால் தூண்டிவிடப்பட்டு, ஜெருசலேமில் நடந்த ஒரு ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டத்தில் ரபினை ஒரு துரோகி என்று கண்டனம் செய்தனர். ஒரு மாதம் கழித்து, ஒரு மத வெறியர் ரபினை படுகொலை செய்தார்.

மேற்குக் கரையில் குடியேற்றங்களை முன்னெப்போதையும் விட வேகமாக விரிவுபடுத்தவும், நீர் மற்றும் பிற வளங்களைக் கட்டுப்படுத்தவும், சாலைகளைக் கட்டவும், அதன் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பிராந்தியம் பூராவும் இயக்கத்தை கட்டுப்படுத்த 600க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கும் இஸ்ரேல் ஒஸ்லோ உடன்படிக்கையைப் பயன்படுத்திக்கொண்டது. குறைந்த பட்சம் 500,000 இஸ்ரேலியர்கள் அல்லது கிட்டத்தட்ட 20 சதவீத மக்கள் வசிக்கும் குடியிருப்புகள், மிகவும் வளமான மற்றும் உற்பத்தித் திறன் உள்ள நிலத்தின் மிக அதிகமான சதவீதத்தை கட்டுப்படுத்துகின்றன.

சர்வதேச சட்டத்தை மீறி மேற்குக் கரையின் ஒரு பகுதியான கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தனது பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களுடன் இணைத்துக்கொண்ட போது, அவர்கள் சுமார் 200,000 குடியேற்ற வீடுகளைக் கட்டியதைத் தொடர்ந்து பெரும்பான்மையாக இருந்தனர். சமீபத்திய ஆண்டுகளில், பென்-க்விர் தலைமையிலான அதிதீவிர வலதுசாரி மற்றும் மதக் குழுக்களின் உத்தரவின் பேரில், ஷேக் ஜார்ரா மற்றும் சில்வான் சுற்றுப்புறங்களில் இருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்ற அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் பொலிசுக்கும் இடையே மீண்டும் மீண்டும் மோதல்கள் நடந்துள்ளன.

பாரிஸ் ஒடே என்ற 14 வயது சிறுவன், 2000 ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் இரண்டாம் எழுச்சியின் போது காஸா பகுதியில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் யுத்த டாங்கியின் மீது கல் எறிந்தபோது கொல்லப்பட்டான். இந்த புகைப்படம் 29 அக்டோபர் 2000 அன்று எடுக்கப்பட்டது [Photo: Associated Press/Laurent Rebours)]

இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலத்தின் மீது இஸ்ரேலின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியது இராணுவப் பாதுகாப்புடன் அல் அக்ஸா மசூதி வளாகத்தின் வழியாக ஏரியல் ஷரோனின் ஆத்திரமூட்டும் அணிவகுப்புக்குப் பின்னர் இந்த நிலைமைகள் 2000 செப்டம்பரில் இரண்டாவது எழுச்சிக்கு வழிவகுத்தன. பேரழிவு தரும் ஒஸ்லோ உடன்படிக்கையை அனுமதித்த பாலஸ்தீன விடுதலை இயக்க தலைமைக்கு எதிரான ஒரு எழுச்சியாக இந்த எழுச்சி இருந்தது. 2000 மற்றும் 2008க்கு இடையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கிட்டத்தட்ட 5,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றன. இது பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

பிரிவினைச் சுவர் மற்றும் காஸா முற்றுகை

பின்னர், ஷரோன் இழிவான ஒரு பிரிவினைத் தடையைக் கட்டுவதற்கு உத்தரவிட்டார். அது, பாலஸ்தீனியர்களிடமிருந்து, இஸ்ரேல் சுவருக்காக பாலஸ்தீனிய நிலத்தில் இருந்து 10 சதவீதத்தை மேலும் அபகரித்தது. இதனால், ஆயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் வேலைத் தளங்களில் இருந்து துண்டிக்கப்பட்டார்கள். தீவிர வலதுசாரி கோரிக்கைகளான “மக்கள்தொகை இடமாற்றம்” என்பதற்கு மத்தியில், இனச் சுத்திகரிப்பு விளைவுகளை ஏற்படுத்துவதை இலக்காக கொண்ட “மக்கள்தொகை நேரக்கணிப்பு வெடிகுண்டு” நடவடிக்கைகளை எதிர்த்த பாலஸ்தீன தலைவர்களை இலக்கு வைத்து படுகொலை செய்வது வழமையாக ஆகியது. இப்போது, இஸ்ரேலின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் உள்ள யூதர்களின் எண்ணிக்கையை விட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மேற்குக்கரை தடையின் ஆரம்பகால இஸ்ரேலிய கட்டுமானம், 2003 [Photo by joeskillet/Flickr / CC BY 2.0]

2005 இல், ஷரோன் 14 இஸ்ரேலிய குடியேற்றங்களை மூடிவிட்டு காஸா பகுதியிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெற்ற அதே நேரத்தில் தரை, கடல் மற்றும் வான்வழியாக நுழைவதைக் கட்டுப்படுத்தினார். இது புஷ் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மேற்குக் கரையில் மிகவும் குறிப்பிடத்தக்க நில அபகரிப்பை மூடிமறைத்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அல்பட்டா படைகளின் சதி முயற்சியை ஹமாஸ் தோற்கடித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஒரு மூச்சுத் திணறல் முற்றுகையை காஸா மீது விதித்தது. அது காஸாவை வறிய பிரதேசமாக மாற்றி, அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையை அழித்தது. அது, மிக குறைந்த அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் மின்சாரத்தை தவிர, காஸாவிற்கு சுதந்திரத்தை தடைசெய்தது. அதன் அதிகளவான பொது உள்கட்டமைப்பு மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை அழித்த பின்பு, சுற்றி வளைக்கப்பட்டிருந்த பிரதேசத்தின் மீது “தரைமட்டமாக்கல்” என பண்புமயப்படுத்தப்பட்ட கொலைகாரத் தாக்குதலை நடத்தியது. இதில் ஆபரேஷன் காஸ்ட் லீட் (2008-09), ஆபரேஷன் பில்லர் ஒஃப் டிஃபென்ஸ் (நவம்பர் 2012) மற்றும் ஆபரேஷன் ப்ரொடெக்டிவ் எட்ஜ் (2014) ஆகியவை அடங்கும். மத்திய கிழக்கின் வலிமைமிக்க விமானப் படையால் காஸா மீது நடத்தப்பட்ட ஏழுக்கும் மேற்பட்ட பெரிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் மொத்த எண்ணிக்கை ஆகக்குறைந்தது 4,164 ஆக இருந்த அதேவேளை வெறும் 102 இஸ்ரேலியர்களே உயிரிழந்திருந்தனர்.

இஸ்ரேலிய விமானப்படை, டிசம்பர் 2008/ஜனவரி 2009, “காஸ்ட் லீட்” நடவடிக்கையின் போது காசாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு வெள்ளை பொஸ்பரஸ் கொத்தணி குண்டை வீசியது. [Photo by Al Jazeera Creative Commons Repository / CC BY 3.0]

தற்போதைய தாக்குதல்களுக்கு முன்னரே எந்தவொரு புனரமைப்பும் செய்ய முடியாத நிலையில், காஸாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. சுமார் முக்கால்வாசி காஸா குடும்பங்கள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிறுவனங்களின் சில வகையான உதவிகளிலேயே தங்கியிருந்தன. அதுவும் “பரிசீலனையின் கீழ்” உள்ளதாக, இப்போது ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. 2012 இல் முற்றுகையிடப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட பிரதேசம் வாழத் தகுதியற்றதாக இருக்கின்றது என 2020 இல் கணித்த ஐ.நா., முன் கணித்ததைவிட, “அபிவிருத்தியில் வீழ்ச்சி” ஏற்பட்டுள்ளதாக, 2017ல் மீள் பரிசீலனைக்காக மட்டுமே எச்சரித்திருந்தது.

ஜனத்தொகையில் 20 சதவீதமான பாலஸ்தீனிய பிரஜைகளுக்கு இஸ்ரேலுக்குள் நிலைமை ஆபத்தானது. நாட்டில் உள்ள சில ஏழ்மையான மக்களின் இருப்பிடமான அவர்களின் சமூகங்கள் உத்தியோகபூர்வ புறக்கணிப்பு மற்றும் பொருளாதார பாகுபாடுகளை எதிர்கொள்கின்றன. குற்றவியல் பகைமை கும்பல்களால் அரபு நகரங்கள் மற்றும் கிராமங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுமளவுக்கு இத்தகைய வறுமை மற்றும் வேலையின்மையின் மட்டங்கள் உள்ளன. இது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 180க்கும் மேற்பட்ட கொலைகளுக்கு வழிவகுத்துள்ளது.

2021 மே மாதம், கிழக்கு ஜெருசலேமில், நடந்த கொடூரமான இனச் சுத்திகரிப்பு மற்றும் அல் அக்ஷா மசூதி மீதான பொலிசாரின் சுற்றி வளைப்பு வன்முறை போன்றவற்றினால் தூண்டப்பட்டு, இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியர்கள் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள் மற்றும் கலவரங்களுடன் தெருக்களில் இறங்கினர். காஸா மீதான தாக்குதலை எதிர்த்தும் இஸ்ரேலின் நிறவெறி பாணி அரசியலமைப்பிற்கு எதிராகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனியர்களுடன் பொது வேலைநிறுத்தத்தில் அவர்கள் இணைந்தது இதுவே முதல் முறையாகும். நெதன்யாகுவின் அதி வலதுசாரி கூட்டணி, பாலஸ்தீனிய பாராளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பணியாற்றுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும், அவர்களின் கட்சிகள் தேர்தலில் நிற்பதை தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

ஒடுக்கப்பட்டவர்களின் கிளர்ச்சி

இந்த எண்ணிலடங்கா துன்பங்களே ஒக்டோபர் 7-9 ஆம் திகதிகளில் பாலஸ்தீனியர்களின் நடவடிக்கைக்கு வழிவகுத்தது. ஒரு பாரிய தற்கொலை நடவடிக்கைக்கு சமமான இது, அனைத்து பெரும் வல்லரசுகளதும் ஆதரவுடன் இஸ்ரேல், அவர்களை அடைத்து வைத்திருந்த வதை முகாமில் இருந்து தப்பிக்கத் தீர்மானித்த ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியாகும்.

7 அக்டோபர் 2023 சனிக்கிழமை, காஸா நகரில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனிய அடுக்குமாடி கோபுரத்தில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து தீ மற்றும் புகை எழுகிறது [AP Photo/Adel Hana]

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விளக்கியது போல், “பாலஸ்தீனியர்கள் மீதான நடைமுறையில் உள்ள அடக்குமுறையின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு அரசு, எப்போதும் உண்மையான ஜனநாயக சமுதாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலாயக்கற்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான காவல் அரசாக இஸ்ரேலின் பரிணாமம், மீண்டும் மீண்டும் அதன் அரேபிய அண்டை நாடுகளுடன் போர் மற்றும் பாலஸ்தீனியர்களுடன் நிரந்தரப் போரில் ஈடுபடச் செய்கிறது; ‘பெரிய இஸ்ரேல்’ விரிவாக்கவாத கொள்கையை பின்பற்றச் செய்கிறது; உலகின் மிக உயர்ந்த மட்டத்திலான சமூக சமத்துவமின்மையின் சீர்குலைக்கும் தாக்கத்தை சமாளிப்பதன் பேரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள வலதுசாரித்தனமான குடியேற்ற மக்கள் மீதும் அமெரிக்க இராணுவ உதவிகள் மீதும் இன்னும் உறுதியாக தங்கியிருக்கத் தள்ளப்பட்டுள்ளமை, நெதன்யாகு அரசாங்கத்தின் ஃபிராங்கண்ஸ்டைன் (அழிவைக் கொண்டுவரும் அரக்கன், அதன் படைப்பாளரையே அழிப்பவன்) அரக்கத்தனத்துக்கு வழி வகுத்தது.”

காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர், சியோனிசத்தின் பிற்போக்கு சாரத்தின் இறுதி நிரூபணமாகும். யூதர்களுக்குப் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாகக் கூறப்படும் ஒரு முதலாளித்துவ அரசு, அதற்கு மாறாக, பல தசாப்தங்களாக அங்கு வாழும் பாலஸ்தீனியர்களின் மரணம், இனச் சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றத்தை உருவாக்கி, இஸ்ரேலிய யூதர்களை அவர்களின் அரபு அண்டை நாடுகளுடன் நிரந்தர மோதலுக்கு ஆளாக்கியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அக்டோபர் 9 அன்று வாதிட்டதாவது:

பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் ஒரு பிரத்தியேக யூத அரசைப் பாதுகாப்பதற்கான பிற்போக்கு முன்னோக்கானது வெகுஜனக் கொலைகள் மற்றும் இனச் சுத்திகரிப்பு மூலம் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டிய கட்டத்தில் இஸ்ரேல் ஆளும் வர்க்கம் இப்போது உள்ளது. ஒரு பாசிச குற்றவாளிகளின் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் இந்தப் போரை முன்னெடுக்குமாறு யூத தொழிலாளர்களுக்கு கூறப்படுகின்றது. உக்ரேன் மற்றும் ஈரானில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா/நேட்டோ தலைமையிலான போர் மற்றும் சிரியாவில் அதன் நட்பு நாடுகளுக்கும், லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கும் எதிரான அமெரிக்க/நேட்டோ தலைமையிலான போருக்கு இணையாக, கற்பனை செய்ய முடியாத அளவில் மரணங்களுக்கு அச்சுறுத்தும் ஒரு போருக்கு இது ஒரு முன்னோடியாகும்.

இஸ்ரேலின் இழிந்த யுத்தமானது தங்கள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது கட்சிகளின் தேசியவாத இனவெறிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தயாராக இருக்கும் இஸ்ரேலிய தொழிலாளர்கள் உட்பட மத்திய கிழக்கில் உள்ள மற்றும் உலகம் முழுதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கையின் மூலம் மட்டுமே முடிவுக்கு கொண்டுவரப்பட முடியும்.

நெத்தன்யாஹுவின் நீதித்துறை சதி மற்றும் சர்வாதிகார அதிகாரங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை எதிர்த்த ஒன்பது மாத நீண்ட இயக்கம் முழுவதும், போராட்டங்களின் தலைவர்கள் அனைவரும் பாலஸ்தீனியர்களின் இழப்பில் நெத்தன்யாகுவின் விரிவாக்கக் கொள்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர் என WSWS எச்சரித்தது. போரைத் தொடர்வதற்காக அவரது பாசிச அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு தேசிய ஐக்கியம் எனப்படுவதன் தலைவர்களின், முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின தலைவர்களான பென்னி காண்ட்ஸ், காடி ஐசென்கோட் ஆகியோர் விரும்பியுள்ள நிலையில், WSWS இன் எச்சரிக்கை இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. நெத்தன்யாகு, பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோருக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர், இப்போது இந்த ஆர்ப்பாட்டத் தலைவர்கள் இலட்சக் கணக்கான துணைப்படைகளை அப்பாவி பொதுமக்களைக் கொல்லவும் அவர்களுக்காக மரணிக்கவும் அழைப்பு விடுக்கின்றனர். உலகின் பார்வையில் 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் குற்றங்களில் ஒன்றாக இவை என்றென்றும் கருதப்படும்.

இஸ்ரேலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிரி பாலஸ்தீனியர்கள் அல்ல, மாறாக நெதன்யாகு அரசாங்கமும் இஸ்ரேலிய ஆளும் வர்க்கமும் தான் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது:

“தற்போதைய சூழ்நிலையின் பெரும் வரலாற்று மற்றும் அரசியல் முரண்பாடு இதுதான்: சியோனிச ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடாமல் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் தனது சொந்த ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்துடன் ஒரு போராட்டக் கூட்டணியை உருவாக்காமல், பாலஸ்தீனியர்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கான தங்கள் அபிலாஷைகளை அடைய முடியாது. ஒரே சாத்தியமான முன்னோக்கு ஒரு புராண ‘இரு-அரசு தீர்வு’ அல்ல, மாறாக யூத மற்றும் அரபு தொழிலாளர்களின் ஐக்கிய சோசலிச அரசே ஆகும்...

“பாலஸ்தீனத்தின் எழுச்சியானது, உலகம் முழுவதும் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் வடிவில் வளர்ந்து வரும் கோபம் மற்றும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகும். ஏகாதிபத்திய போர், சமத்துவமின்மை மற்றும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் முடிவுகட்ட இந்த சமூக இயக்கத்தையே அணிதிரட்டி நனவான சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கால் வழிநடத்த வேண்டும். இதுவே அனைத்துலகக் குழுவின் தலைமையிலான ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டமாகும்.”

மேலும் படிக்க

Loading