World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel-Palestine: Barak and Arafat face mounting political opposition

இஸ்ரேல்-பாலஸ்தீனம்: பராக்கும் அரபாத்தும் உக்கிரம் காணும் அரசியல் எதிர்ப்புக்கு முகம் கொடுக்கின்றனர்

By Jean Shaoul
19 August 2000

Back to screen version

காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையை திணிக்கும் முயற்சி தோல்வி கண்டமை மத்திய கிழக்கு பூராவும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற உச்சி மகாநாடு சரிந்து போனமையானது இஸ்ரேலின் தொழிற் கட்சி பிரதமர் இகூட் பராக்குக்கும் (Ehud Barak) பாலஸ்தீன ஆட்சியாளர்களின் தலைவர் யசீர் அரபாத்துக்கும் எதிரான அரசியல் எதிர்ப்புகளை பலப்படுத்தியுள்ளது. 52 வருடகால அரபு- இஸ்ரேல் மோதுதலுக்கு முடிவு கட்டும் தனது முயற்சியில் அமெரிக்கா இவ்விரு தலைவர்களிலும் சாய்ந்து கொண்டுள்ளது. ஒரு ஆட்டங்கண்ட அரசியல் நிலைமை உருவாகியுள்ளதோடு அது இஸ்ரேலியர்களையும் பாலஸ்தீனியர்களையும் ஒரு மோதுதலில் ஈடுபடத் தள்ளுவதோடு ஏனைய அராபிய ஆட்சியாளர்களையும் ஈடாட்டம் காணச் செய்யும்.

பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் இஸ்ரேலிய வலதுசாரி லிகுட் (Likud Party) கட்சிக்கும் ஹமாசின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எதிராக கிளின்டன் பராக்கையும் (தொழிற்கட்சி) அரபாத்தையும் ஆதரித்துக் கொண்டுள்ளார். ஆனால் பராக்கினதும் அரபாத்தினதும் அரசியல் உயிர்வாழ்க்கை பிரச்சினைக்கு இடமாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் முறிந்து போனதில் இருந்து சகல தரப்பினரும் தமது நிலைப்பாட்டுக்கு ஆதரவான அனைத்துலக ஆதரவுகளை திரட்டும் இராஜதந்திர நடவடிக்கைகளை உக்கிரம் ஆக்கினர்.

மத்திய கிழக்கிற்கான அமெரிக்கத் தூதுவர் டெனிஸ் றோஸ், ஜெருசலத்தில் உள்ள புனித தலங்களான மவுண்ட் டெம்பிள் (Mount temple), ஹராம் அல்-ஷரிப் (Haram al-Sharif) சம்பந்தமாக ஒரு இணக்கத்தை ஏற்படுத்த ஜெருசலம் திரும்பியுள்ளார். இவரைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க அமைச்சரான மடலின் ஆல்பிரைட்டும் அங்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஸ்ரேலின் புதிய வெளிநாட்டு அமைச்சரான ஸ்லோமோ பென் அமி பாலஸ்தீன அதிகாரிகளுடன் இவ்வாரத் தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடாத்தினார். வன்முறை தவிர்க்கப்பட வேண்டுமானால் இந்த முத்தரப்பு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து அடுத்த சில வாரங்களுள் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் ஒரு அரசியல் அவசரத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

1993ம் ஆண்டின் ஒஸ்லோ (நோர்வே) உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டபடி ஒரு பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிதம் செய்வது நீண்ட காலம் கடந்து சென்றுவிட்டது. இந்நிலையில் அரபாத் தாம் செப்டம்பர் 13ம் திகதி பாலஸ்தீனிய அரசை ஒரு உடன்பாட்டுடனோ அல்லது உடன்பாடு இல்லாமலோ பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்தார். இஸ்ரேல் இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தாம் சியோனிச குடியேற்றத் திட்டங்களை இணைத்துக் கொள்ளப் போவதாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கான பாதையை மூடிவிடப் போவதாகவும் கூறியது. இது கடந்த ஏழு ஆண்டுகளாக இடம் பெற்ற சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை இழுத்து மூடுவதாகும்.

ஆரம்பத்தில் இருந்தே ஜனாதிபதி கிளின்டன் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தையும் தனது இஸ்ரேலிய வாடிக்கையாளர் அரசின் நலன்களையும் கட்டிக் காக்கும் பொருட்டே "சமாதானத்துக்கான நிலம்" என்ற போக்கினை பயன்படுத்த முயன்றார். பிரான்சு போன்ற ஐரோப்பிய வல்லரசுகள் இஸ்ரேலுக்கு எதிராக தனது அந்தஸ்த்தை தூக்கிப் பிடிக்கும் பொருட்டு பாலஸ்தீன அரசை பிரகடனம் செய்யும் அரபாத்தின் உத்தேச திட்டத்துக்கு வெளிவெளியாக ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்காவை எதிர்க்க முயன்றன.

கிளின்டன் சமீபத்தில் இடம்பெற்ற காம்ப் டேவிட் உச்சி மகாநாட்டை கூட்டியது, அரபாத்தின் தன்னிச்சையான (பாலஸ்தீனிய அரச) பிரகடனடத்தை தடை செய்வதற்காகவேயாகும். பேச்சுவார்த்தைகள் ஒரு பாலஸ்தீன அரசின் இறுதியான சுதந்திரத்துக்கு முன்னதாக இழுபட்டுவரும் சகல பிரச்சினைகளுக்கும் -எல்லைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 200 சியோனிச குடியேற்றங்களின் தலைவிதி, இஸ்ரேலின் பாதுகாப்பு ஏற்பாடுகள், 3.6 மில்லியன் பாலஸ்தீனிய அகதிகள் நாடு திரும்பும் உரிமை, ஜெருசலம் அந்தஸ்து- தீர்வுகாண முயன்றது.

அரபாத் மேற்கு கரையிலும் காஸாவிலும் -பெரிதும் இஸ்ரேலின் பாதுகாப்பைக் கொண்ட பெருந் தெருக்கள் சியோனிச குடியேற்றங்களை இணைக்கும் விதத்தில் குறுக்காக கடந்து செல்லுவதை உள்ளடக்கிய- தொடர்ச்சியற்ற நிலத்துண்டுகளை கொண்ட ஒரு பாலஸ்தீனிய அரசை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார். மேற்கு கரையும் (West Bank) காஸாவும் (Gaza) இரண்டு வீதிகளால் இணைக்கப்படுவதோடு அவை எந்த ஒரு கணத்திலும் இஸ்ரேலினால் இழுத்து மூடப்பட முடியும். இந்தப் புதிய அரசு 1967ம் ஆண்டு ஜூனில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட பிராந்தியத்தில் 90 வீதத்துக்கும் குறைவான பகுதியையும் 1947ல் பாலஸ்தீன அரசுக்குரியதாக இருந்த நிலப் பிராந்தியத்தில் 22 சதவீதத்தையுமே கொண்டிருக்கும்.
பாலஸ்தீனியர்கள் தமது நாட்டுக்குத் திரும்பும் உரிமையை கைவிட அரபாத் முன்வந்துள்ளமையானது

பாலஸ்தீனிய முதலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களுடன் ஒப்பிடும் போது வெகுஜனங்களின் தலைவிதி கணக்கில் எடுக்கப்படாது போய்விட்டதை ஊர்ஜிதம் செய்கின்றது. இந்தப் புதிய அரசு பாலஸ்தீனிய சனத் தொகையில் அரைவாசிக்கும் குறைந்த அளவானோருக்கே வதிவிடம் வழங்கும். 100,000 அகதிகளுக்கும் குறைந்த அளவிலானோர் இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் உள்ள தமது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எஞ்சியோர் இன்னமும் ஸ்தாபிதம் செய்யப்படாத ஒரு அனைத்துலக நிதியத்தின் மூலம் நஷ்ஈடு வழங்கப்பட்டு ஏனைய அரபுநாடுகளுக்கு கலைந்து செல்வர்.

பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலும் பாலஸ்தீனியர்களும் தமது தலைநகராக உரிமை கொண்டாடும் ஜெருசலத்தின் விடயத்தில் அடியோடு தோல்வி கண்டுவிட்டன. இஸ்ரேலிய பிரதமர் பராக், 1967ல் கைப்பற்றப்பட்ட கிழக்கு அரபு ஜெருசலத்தை பாலஸ்தீனிய ஆட்சியாளர்களிடம் திருப்பி வழங்க மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக அவர் அடுத்துள்ள சில அரபு அயல்பகுதிகளில் கட்டுப்பாட்டை வழங்கவும், சுரங்கப் பாதைகளூடாக முஸ்லீம் புனித தலங்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கும் வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் உரிமைகளையும் (Custodial rights) வழங்க முன்வந்தார்.

அரபாத்தினால் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலம் மீதான கட்டுப்பாட்டை கைவிடுவதற்கு இணங்க முடியாது போய்விட்டது. அது இஸ்ரேலுக்கு அவர் அதிக அளவிலான சலுகைகளை வழங்கி விட்டார் என்ற அதிகரித்த அளவிலான எதிர்ப்பை தூண்டிவிடுவதாக இருந்திருக்கும். இஸ்ரேல் லெபனானில் அவமானத்துக்கிடமான தோல்வியை தழுவி அங்கிருந்து வெளியேறத் தள்ளப்பட்டபோது அரபு மக்களிடையே போர்க்குணம் மிக்க இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு வளர்ச்சி கண்டது. இது எண்ணற்ற எதிர்ப்புகள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்பட்டது. சமீபத்தில் நடாத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பாலஸ்தீனியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் -பலர் 6வயதினர்- இஸ்ரேலுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கின்றதை காட்டியது. ஹமாஸ் இயக்கத் தலைவரான ஷெக் அஹமத் யசீன் ஒரு புதிய 'இன்ரிபாடா'வுக்கு (Intifada- புனித போர்) அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு ஜெருசலம் சம்பந்தமாக இஸ்ரேலிடம் இருந்து சலுகைகள் கிடைக்காது போகும் பட்சத்தில் அரபாத் ஏற்கனவே தளர்ச்சி கண்ட பாலஸ்தீன தலைமையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அரபாத்தின் முக்கிய ஆதரவாளரான எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் உத்தேச குடியேற்றத் திட்டங்களை நிராகரிக்கும்படி நெருக்கியுள்ளார். கிழக்கு ஜெருசலத்தை இழக்க நேரிட்டால் அது மத்திய கிழக்கு பூராவும் சமூக, அரசியல் பதட்ட நிலைமையை கொழுந்து விட்டு எரியச் செய்யும் என அவர் அஞ்சுகின்றார்.

இருந்த போதிலும் அரபாத் இறுக்கி கட்டிய அரசியல் கயிற்றின் மீது நடக்கத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு தலைவர் என்ற முறையில் பாலஸ்தீனியர்களின் சமூக, பொருளாதார கஷ்டங்களை தீர்த்து வைக்கும் அமெரிக்க டாலர்களின் ஆதரவோடு இஸ்ரேலுடன் ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதன் ஊடாக சுதந்திரத்தை ஈட்டிக்கொள்வதையே அவரின் வாக்குறுதி அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் அத்தகைய ஒரு உடன்பாட்டை எட்டும் அவரது முயற்சிகள் முக்கியமான விவகாரங்களில் சலுகைகளை கோரி நிற்கின்றது. இது அவரின் தலைமையை பெரிதும் பாதிக்கும். அத்தோடு அரபாத்தின் இரண்டும் கெட்ட நிலையானது அமெரிக்காவின் பெரும் திருகுதாளங்களால் மோசம் கண்டுள்ளது. காம்ப் டேவிட் மாநாட்டின் பின்னர் கிளின்டன், பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டமைக்கு அரபாத்தை குற்றம் சாட்டினர். அத்தோடு அவர் தாம் அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவியூவில் இருந்து ஜெருசலத்துக்கு இடம் மாற்ற ஆலோசித்து வருவதாகக் கூட கூறியிருந்தார்.

இறுதியில் உச்சிக்கு ஏறுவதை விட வேறு எந்த ஒரு தெரிவும் இல்லாத நிலையில் அரபாத் தன்னிச்சையான முறையில் ஒரு அரசினை பிரகடனம் செய்யும் அச்சுறுத்தலின் பேரில் பல வாரங்களாகக் கடுமையாகப் பேசிவந்தார். புதன்கிழமை அவர் அரசினை பிரகடனம் செய்வதை ஒத்திவைக்கப் போவதாகவும் வெகுவிரைவில் அமெரிக்காவில் மற்றொரு உச்சிமகாநாடு இடம்பெரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரபாத் ஆதரவு தேடி ரஷ்ய, சீன, ஐரோப்பிய விஜயத்தை மேற்கொண்டார். அவர்கள் அரபாத்தை ஒரு பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வை தொடருமாறு நெருக்கினர்.
அரபு நாடுகளின் தலைவர்களிடமிருந்து அரபாத்தினால் ஆதரவைத் திரட்டிக் கொள்ள முடியாது போய்விட்டது. ஒரு பாலஸ்தீனிய அதிகாரியின் கூற்றுப்படி அரபாத் "ஒரு அரபு உச்சி மகாநாட்டையோ அல்லது ஒரு இஸ்லாமிய உச்சி மகாநாட்டையோ அல்லது ஒரு உறுதியான அரபு, இஸ்லாமிய ஆதரவைத் தன்னும் பெற்றுக் கொள்ள முடியாது போய்விட்டது". எகிப்திய ஜனாதிபதி ஹூஸ்னி முபாரக் கூறியதாவது: "தாமதம் இடம்பெறலாம் என நான் நம்புகின்றேன். இரு தரப்புக்கும் இடையில் எந்த ஒரு மோதுதலும் இடம் பெறுவதை நாம் விரும்பவில்லை. ஈரான் ஹமாஸ் இயக்கத்துக்கும் இஸ்லாமிய ஜிஹாத்துக்கும் வழங்கும் ஆதரவை கட்டுப்படுத்த அரபாத் எடுத்த முயற்சியும் தோல்வி கண்டது. அரபாத்தை விமான நிலையத்தில் வரவேற்க ஒரு கீழ்மட்ட அதிகாரியே அங்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார்.

ஒரு இராணுவப் பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு கொண்டாட்டத்தில் பேசிய பராக், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடனான மோதுதலை வழக்காறான முறையில் நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு சுதந்திதிரமான அரசை வழங்குவதாக தெரிவித்தார். இது அரபாத்தின் சங்கடங்களை பிரதிபலிப்பதாக விளங்கியது. சுதந்திரம் பற்றிய பிரச்சினையை கூர்ந்து அவதானித்து "பாலஸ்தீனிய தலைவர்கள் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவும் சவாலை எதிர்கொள்ளவும் அதன் மக்களின் துயரங்களை தீர்க்கவும் தயாரானால் அதற்கான நிலைமை இஸ்ரேலுடனான மோதுதல்களுக்கு முடிவுகட்டுவதேயாகும் என்பதை அது புரிந்து கொள்ளவேண்டும்" என அவர் வாக்குறுதி அளித்தார். இந்த கரட்டுடன் சேர்ந்த அவரது தடி, தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் "முதலும் முக்கியமுமாக பாலஸ்தீனியர்களையே தாக்கும்" என்ற எச்சரிக்கையையும் கொண்டு இருந்தது. அவர் இஸ்ரேல் என்ன எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதை மட்டுமே தெரிவிக்காது விட்டார்.

எதையும் போலவே பராக்கின் சொந்த நிலைப்பாடானது அரபாத்தைக் காட்டிலும் ஆபத்துக்கிடமானது. பாலஸ்தீனியர்களுடன் ஒரு உடன்பாட்டினை எட்டும் ஒரு பொதுஜன ஆணையின் கீழ் 1999 மேயில் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவர் தனது கூட்டரசாங்கம் சின்னாபின்னமாகிப் போனதைக் கண்டுள்ளார். காம்ப் டேவிட்டுக்கு செல்வதற்கு முன்னர் அவரது அரசாங்கத்தில் இருந்து பல சிறிய கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன. அவரின் வெளிநாட்டு அமைச்சர் பேச்சுவார்த்தைகளில் சேர்ந்து கொள்ள மறுத்ததோடு அதைத் தொடர்ந்து இராஜினாமாவும் செய்தார். அவர் பராக்கை லீக்குட் கட்சியுடன் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும்படி நெருக்கினார். காம்ப் டேவிட்டில் இருந்து லீக்குட் கட்சி பாராளுமன்றத்தைக் கலைக்கவும் புதிய தேர்தல்களை நடாத்துவதற்குமான வன்முறைகளை ஆரம்பித்தது. முதலாவது மசோதாவுக்கு 120 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 61 வாக்குகள் கிடைத்தன. பாரளுமன்றம் அக்டோபர் முடிவு வரை மட்டுமே நின்று பிடிக்க உள்ளதால் இந்த எஞ்சியுள்ள 3 மாத கலத்தினுள் அவர் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும்.

பொதுஜன அபிப்பிராய வாக்குகளின்படி இஸ்ரேலிய மக்களில் 56 வீதத்தினர் பராக் நம்பிக்கைக்குரியவர் அல்ல என நம்புகின்றனர். சுமார் 43 வீதத்தினர் தேர்தலில் இவருக்கு ஆதரவு வழங்குவர். இதை 1982ல் சப்ரா, ஷட்டில்லா, பேரூட் அகதிகள் முகாம்களில் பாலஸ்தீனிய அகதிகளின் படுகொலைக்கு நேரடிப் பொறுப்பாளியான லிகுட் கட்சியின் தலைவர் எரியல் ஷரொனுக்கு கிடைத்த 39 சதவீதத்துடன் இதை ஒப்பிடலாம். கடந்த ஆண்டு தேர்தல்களில் இவர் தோற்கடித்த நெட்டான்யாகுவுடனான போட்டியில் இவர் படு தோல்வி அடைவார். ஜூலை 31ம் திகதி பாராளுமன்றம் லிகுட் கட்சியின் பிரதி தலைவர் மொஷெ கட்ஷாவை இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்தது. மாஜி தொழிற் கட்சி பிரதமர் ஷைமன் பிரோஷை தொழிற்கட்சி வேட்பாளராக தோல்வி காணச் செய்தார்.

டெல் அவியூ பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானியான யொஹனான் பேரஸ் கூறியதாவது: "எந்த ஒரு இஸ்ரேலிய அரசாங்கமும் இத்தகைய ஒரு தீர்க்கமான தெரிவுகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் இத்தகைய ஒரு பலவீனமான நிலையில் இருந்தது கிடையாது. இதன் பெறுபேறாக ஜனநாயக அமைப்பு நிஜமாகவே பாரிசவாதத்தினால் பீடிக்கப்படும்".

பராக்குடனான அவநம்பிக்கைகள் வளர்ச்சிகண்டதற்கான முக்கிய காரணம் 10 வீத வேலையின்மை. இஸ்ரேல் தனது அரபு அயலவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொண்ட சமயத்தில் பல இஸ்ரேலியர்கள் வேலைகளை இழந்துள்ளனர். மலிவான உழைப்பையும் குறைந்த வரிகளையும் நிறுவனங்கள் நாடுவதன் விளைவாக அவர்கள் பாலஸ்தீனியர்களையும், ஜோர்தானியர்களையும் எகிப்தியர்களையும் அவ்விடங்களுக்கு நியமனம் செய்கின்றனர். அரசாங்கம் தனியார்மயத்தை தொடர்ந்து முன்னெடுப்பதனாலும் சம்பளத்தைக் குறைப்பதனாலும் பொதுச் செலவினங்களை வெட்டுவதாலும் இன்னும் பலர் தொழில்களை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது வலதுசாரிகள் ஒரு இறுதி இஸ்ரேல்- பாலஸ்தீனிய உடன்படிக்கையை செய்து கொள்வதற்கு எதிராக தேசியவாத எதிர்ப்பை தூண்டச் செய்வதை சாதகமாக்கியுள்ளது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம் (WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved