World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

The bin Laden videotape: the reactionary politics of terrorism

பின் லேடனினது ஒளிப்பதிவுநாடா: பயங்கரவாதத்தின் பிற்போக்கு அரசியல்

By the Editorial Board
18 December 2001

Back to screen version

உலக வர்த்தக மையத்தின் மீதான கொடுமையை பின் லேடன் புகழ்ந்து உரைப்பதையும் அதற்கான பொறுப்பை ஒத்துக்கொண்ட அண்மையில் வெளிவந்த ஒளிப்பதிவு நாடாவானது பயங்கரவாதத்தினது அரசியல் பிற்போக்குத்தனத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மத்தியில் உள்ள பின் லேடனினது ஆதரவாளர்களும், குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ளவர்களும் இந்நாடாவினது உண்மைத்தன்மை குறித்து மறுப்பதுடன், இது அமெரிக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அல்லது உருமாற்றப்பட்டது என கூறமுயற்சிக்கின்றனர். ஆனால் இந்நாடாவின் உண்மைத்தன்மை தொடர்பாக சிறிதளவு சந்தேகமேயுள்ளது. ஆனால் இவ்விடயம் பின் லேடனினது அரசியலையும் அவரின் முறைகளையும் பற்றிய அரசியல் மதிப்பீடு ஒன்றினை செய்வதனை தீர்மானிக்கும் விடயமல்ல. அவர் வெளிப்படுத்தும் மனநிலைமைகள் அவரது அமைப்பால் அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாடாக்களில் உள்ளவற்றுடனும், பாகிஸ்தானிய பத்திரிகையாளருக்கு காபூலில் வழங்கப்பட்ட நேர்முகப்பேட்டியில் உள்ள பின் லேடனின் குரலுடனும் ஒத்துள்ளது.

அண்மையில் வெளிவிடப்பட்ட இந்நாடா செப்டம்பர் 11தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனுபவித்த துன்பங்கள் தொடர்பாக அவரது முற்றுமுழுதான உணர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. அவர் உலக வர்த்தக மையத்திலும், பென்டகனிலும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மட்டுமல்லாது, கூடுதலாக சவுதி அரேபியாவிலிருந்து வந்த அவரது ஆதரவாளர்களான 19 கடத்தல் தாக்குதல்காரர்கள் தொடர்பாகவும் கூட கவலையற்றவராக இருக்கின்றார். அதில் நியூயோர்க் நகரத்திலும், வாஷிங்டனிலும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அலுவலக உத்தியோகத்தர்கள் ''எதிரிகளாக'' காட்டப்படுகின்றனர். விமானக் கடத்தல்காரர்கள் தொடர்பாக கவனமின்மை பற்றி பின் லேடன் சிரத்தை எடுக்காதிருக்கையில், அவர்களில் அநேகமானோருக்கு தாம் ஒரு தற்கொலைத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் அவர்களுக்கு தமது நடவடிக்கை தொடர்பாக செப்டம்பர் 11ம் திகதி விமானத்தில் ஏற்றப்படும்வரை எந்த விபரங்களும் தெரிந்திருக்கவில்லை.

பின் லேடனினது கருத்துக்கள் பயங்கரவாதமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடுவதற்கான ஒரு சாத்தியமான பாதை அல்ல என்பதையும், அது ஒரு நம்பிக்கையற்ற ஒரு முட்டுச்சந்தி என்பதையும், அமெரிக்க ஆளும்தட்டினரது கைகளை பலப்படுத்துவதாகவே இருக்கும் என்பதையும் மேலும் எடுத்துக்காட்டியுள்ளது. ஏகாதிபத்தியத்தியம் ஒரு உலக அமைப்பு என்ற உண்மையான அதனது தன்மை பற்றியும் அதனை எப்படி தோற்கடிப்பது என்பது தொடர்பாகவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் விளங்கிக்கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. செப்டம்பர் 11ம் திகதியின் விமானக் கடத்தல் தாக்குதல் போன்றவை அமெரிக்க ஆளும்தட்டினரை அச்சுறுத்தும் என்றோ அல்லது மத்திய கிழக்கில் அதனது கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படும் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.

பின் லேடனிற்கும் அவரினது முறைகளையும் அரசியல் நோக்கத்தையும் ஆதரிப்பவர்களுக்கும் அரசியல் கல்வியறிவூட்டலும், தொழிலாள வர்க்கத்தினை சுயாதீனமாக அணிதிரட்டுவது என்பதும் முற்றுமுழுதாக அந்நியப்பட்ட விடயமாகும். செப்டம்பர் 11ம் திகயினது போன்ற கொடுமையான தாக்குதல்கள் பொதுவான உலக நிகழ்வுகளின் வரலாற்று அரசியல் பின்னணியை உழைக்கும் மக்கள் விளங்கிக்கொள்ளவதை அபிவிருத்தி செய்வதன் மீதும், மத்திய கிழக்கையும் சிறப்பாக மத்திய ஆசியாவையும் உடைக்கும் நெருக்கடிக்கான அமெரிக்காவினதும் உலக ஏகாதிபத்தியத்தினதும் பொறுப்பை விளங்கிக்கொள்ளவதன் மீதும் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தும். அது குழப்பத்தையும், திசை தடுமாற்றத்தையும் விதைப்பதுடன், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கான ஒரேயொரு சமூக, அரசியல் அடித்தளமான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டதிற்கு குழிபறிக்கின்றது.

கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்க ஆளும்வர்க்கம் கிரோசிமாவிலிருந்தும், நாகஸாகியிலிருந்தும், கொரியா, வியட்னாம், பாரசீகவளைகுடா யுத்தத்திலிருந்து இன்று ஆப்கானிஸ்தான் வரை இலட்சக்கணக்கானோரை கொலைசெய்துள்ளது. அது பல இராணுவ சதிகளையும், கொலைப்படை சர்வாதிகாரிகளை பல டசின் நாடுகளிலும் ஒழுங்கமைத்துள்ளது. குளிர் யுத்த காலப்பகுதியில் சோவியத் யூனியனின் மீது ஒரு அணுவாயுத யுத்தத்தை நடத்துவதை தடுத்தது அவ்வாறான ஒன்று தற்கொலைக்கு ஒப்பானது என்பதாலாகும்.

நியூயோர்கிலும்,வாஷிங்கனிலும் இறந்த பல்லாயிரக்கணக்கானோர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில் எண்ணைவளத்தை பார்க்கையில் உலகின் முக்கிய இயற்கை வளங்கள் உள்ள பிரதேசமான மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் தனது பிடியை இற்குகிக்கொள்ளவதற்கான ஒரு சிறிய விலையாகும். உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் மூலம் பின் லேடன் 1980களில் CIA இன் கையாளாக ஆப்கானிஸ்தானில் இயங்கியதைப்போல் நிச்சயமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு சேவைசெய்துள்ளார்.

அரசியலும் தத்துவமும்

அந்நாடாவின் ஒரு கட்டத்தில் செப்டம்பர் 11ம் திகதியின் தாக்குதலின் அழிவுகள் தனது எதிர்பார்ப்புக்கு அப்பால் சென்றுவிட்டதாக பின்வருமாறு குறிப்பிடுகின்றார் ''இத்துறையில் உள்ள எனது அனுபவத்தின்படி, விமானத்தில் உள்ள எரிவாயுவால் உருவாகும் தீ கட்டிடத்தின் இரும்புக் கட்டுமானத்தை உருக்கி விமானம் தாக்கிய இடத்திற்கு மேலே உள்ள மாடிப்பிரதேசத்தை மட்டுமே உடைக்கும் என்பதாகும். இது தான் நாங்கள் எதிர்பார்த்ததாகும்''.

ஒரு எஞ்சினியர் என்ற வகையில் எரிபொருள் நிரம்பிய ஒரு விமானம் உலக வர்த்தக மையத்தை தாக்குவதால் ஏற்படும் எந்திரரீதியான விளைவுகளை முன்கூட்டி கூறக்கூடியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவரது செயலின் அரசியல் விளைவுகளையோ அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்க தலையீட்டுக்கு அடித்தளமான சமூக, பொருளாதார சக்திகள் தொடர்பாகவோ சிறிதளவேனும் ஒரு விளக்கத்தைகூட கொண்டிருக்கவில்லை.

ஒரு அடிமட்டத்திலான சிந்தனைகள் என்று கருதக்கூடிய அவரது அரசியல் சீரழிவும் சந்தர்ப்பவாதமும் இணைந்த ஒரு கூட்டாகும். உலக ரீதியான எதிர்ப்பை உருவாக்கியதும் மத்திய ஆசியாவில் தலையிடுவதற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு சுதந்திரமான கைகளை வழங்கிய செப்டம்பர் 11ம் திகதியின் அழிவுகளை, நெதர்லாந்தில் [ஒல்லாந்தில்] இஸ்லாத்திற்கு ஒரு சில புதிய ஆதரவாளர்களை வெற்றி கொள்வதற்காக காரணமாக இருந்தது என நியாயப்படுத்துகின்றார். அவர் சவுதி அரேபியாவில் இருந்து வந்து முல்லா ஒருவரிடம் அங்குள்ள அடிப்படைவாதிகள் மத்தியில் இத்தாக்குதல் எவ்வாறு வரவேற்கப்பட்டது என கேட்பதன் மூலம் அவரது அரசியல் பரந்ததன்மை உண்மையில் எவ்வாறு ஒரு குறுகிய வட்டத்தினுள் இருக்கின்றது என்பதை காட்டுகின்றது.

அவரது பேட்டியில் பாலஸ்தீனியர்களினது பரிதாபம் தொடர்பானதோ அல்லது ஈராக்கை சேர்ந்த அல்லது தற்போது அமெரிக்க தாக்குதலின் இலக்காகவுள்ள ஏனைய நாடுகளின் மக்கள் தொடர்பாகவோ, மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலுக்குள்ளாகி இறந்த மக்களின் உயிர் தொடர்பாகவோ அல்லது அதனாலான அழிவுகள் தொடர்பாகவோ குறிப்பிடப்படவில்லை.

பின் லேடனின் தத்துவார்த்தமானது பின்நோக்கிச்செல்லும் மதவாத நோக்கத்தையும், இஸ்லாம் தொடர்பான அவரது பார்வையினை அடித்தளமாக்கொண்ட ஒரு மத்திய காலத்திற்குரிய மதவாத அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதாகும். அப்பதிவு செய்யப்பட்ட நாடாவில் தொடர்ச்சியாக அல்லா தொடர்பாக குறிப்பிடப்படுவதுடன், கடவுளின் செய்தியென குறிப்பிடும் உண்மையான கட்டுக்கதை மாதிரியான அவரது கனவு தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது.

இவ்வுண்மையில் இருந்்து அமெரிக்காவின் தொலைத்தொடர்பு சாதனங்கள் இந்நாடாவை புஷ் நிர்வாகத்தின் ஆப்கானிஸ்தான் மீதான யுத்தபிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சிகளுக்கும், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்களை பாதுகாக்கவும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன. ஆனால் அவர்கள் அந்நாடாவில் கலந்துரையாடல் முழுவதிலும் பரந்து உள்ளடங்கியிருக்கும் மதவாத பின்னணி தொடர்பாக மிகக்குறைந்தளவே குறிப்பிட்டனர்.

புஷ்ஷும் அவரது குழுவினரும் பின் லேடனை தொடர்ச்சியாக ''பேய்'' என குறிப்பிட்டுவருகின்றனர். ஆனால் அவர்கள் பின் லேடனின் கொலைகார பயங்கரவாதத்தின் அடித்தளமாக இருக்கும் மதவாத தீவிரவாதம் தொடர்பாக மிகவும் மெதுவாகவே கூறுகின்றனர். குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினர் இப்படியான சக்திகளினால் ஆளுமை செலுத்துவதிலிருந்து அது பின் லேடனினது கொள்கைகளை வேறுவகையான முறையில் ஒத்திருந்தது. இது உள்நாட்டு அரசியலுக்கு மிகவும் நெருக்கமாக வரக்கூடும். ''அல்லாவை புகழுவதை'', ''கடவுளை புகழ்'' என்பதால் மாற்றீடு செய்து தாடியையும், தலைப்பாகைகளையும் இல்லாது செய்துவிட்டால் அந்நாடாவானது கருக்கலைப்பு செய்யும் வைத்தியர்களை கொலை செய்வதை வரவேற்கும் அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு திட்ட நிலையங்களுக்கு குண்டுவீசும் கிறிஸ்தவ அடிப்படை வாதிகளினது தலைமறைவான மாநாடு ஒன்றினை படம்பிடித்தது போல தோற்றமளிக்கலாம்.

புஷ் நிர்வாகத்தின் நோக்கம்

உலகத்தின் பரந்தளவாலான மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடியவாறு இந்நாடாவினால் கிளர்ச்சியடைந்துள்ளனர். நிச்சயமாக, அமெரிக்க தொலைத்தொடர்பு சாதனங்களினதும் வெள்ளை மாளிகையினதும் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் பின்னர் புஷ் நிர்வாகம் இந்நாடாவை வெளிவிட்டதற்கான காரணம் இதுதான்.

அமெரிக்க அரசாங்கம் இந்த பரந்த மக்களின் எதிர்ப்பை அமெரிக்க இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தவும், எதிர்வரும் நாட்களின் சிலவேளைகளில் கைதுசெய்யப்படக்கூடிய பின் லேடனுக்கும், தலிபான் தலைவரான முகமது ஓமாருக்கும், ஏனைய அல் கொய்தா மற்றும் தலிபான் தலைவர்களுக்கும் எதிரான கூட்டு நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பையும் அடித்துடைக்கவும் பயன்படுத்துகின்றது.

இந்தப் பிரச்சாரம் மனிதத்தன்மையற்றதும், போலியானதுமாகும். இது மனிதத்தன்மையற்றது ஏனெனில் ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா செப்டம்பர் 11ம் திகதிக்கு பலநாட்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்ததற்கான ஒரு தொகை ஆதாரங்கள் இருக்கின்றதுடன், இத் தற்கொலை தாக்குதலை தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான ஒரு முன்னிபந்தனையாக பயன்படுத்திக்கொண்டது. (செப்டம்பர் 11க்கு நீண்டகாலம் முன்னரே ஆப்கானிஸ்தானில் போருக்கு அமெரிக்கா திட்டமிருந்தது). இது போலியானது ஏனெனில்,

பின் லேடன் அமெரிக்க அரசாங்கத்தினது முன்னாள் கூட்டாளியாவார்.

ஆப்கானிஸ்தானில் CIA ஒரு தசாப்தமாக திட்டமிட்டு இஸ்லாமிய அடிப்படை வாதிகளை ஊக்குவித்து வந்ததுடன், ஒரு தொடர் அமெரிக்க நிர்வாகங்கள் முஜைகிதீனை, அவர்களது நடவடிக்கைகள் தமக்கு எதிராக இல்லாது சோவியத் யூனியனுக்கு எதிராக இருக்கும்வரை ''சுதந்திரப் போராளிகள்'' என புகழ்ந்து வந்தனர். இந்நடவடிக்கைகளில் கெரில்லா போராளிகளுக்கு அரண்களையும், முகாம்களையும் அமைப்பதிலும் உலகம் முழுவதிலிருந்தும் தமது நோக்கத்திற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அணிதிரட்டுவதில் பின் லேடன் மிகவும் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரது அல் கொய்தா அமைப்பானது உண்மையான உள்ளடக்கத்தில் அமெரிக்க நிதியுதவியாலும், ஆயுதத்தாலும் உருவாக்கப்பட்ட பிறங்கன்ஸ்டைன் வகைப்பட்ட பேயாகும் [Frankenstein monster].

செப்டம்பர் 11ம் திகதி தற்கொலை தாக்குதலில் பின் லேடனினது பங்கு எதுவாக இருந்தபோதிலும், உலகத்தின் வளமானதும் மிகவும் பலமானதுமான நாடான அமெரிக்காவானது உலகத்தின் ஏழ்மையானதும் பலவீனமானதுமான ஒரு நாடான ஆப்கானிஸ்தானின் மீதான யுத்தத்தில் அழிப்பதை ஒருவிதத்திலும் நியாயப்படுத்தமுடியாது. நியூயோர்க் நகரத்தினதும், வாஷிங்கடன் மீதானதுமான தாக்குதலுக்கு ஒருவித தொடர்புமற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மண் குடிசைகளில் உறங்கிக்கொண்டிருந்த வயோதிபர்களும், குழந்தைகளும் அமெரிக்க யுத்த விமானங்களால் தாக்கப்பட்டனர். பலாத்காரமாக இராணுவத்திற்கு சேர்க்கப்பட்ட கீழ் மட்ட தலிபான் போர்வீரர்கள் அவர்களது பதுங்குகுழிகளில் saturation குண்டுகளால் கொலைசெய்யப்பட்டனர். யுத்தக் கைதிகள் ஜெனோவா உடன்படிக்கையை மீறும் வகையில் குண்டுவீச்சினால், மூச்சுத்திணறி அல்லது சரணடைந்த பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

டொனால்ட் ரும்ஸ்வெல்டின் தொலைத் தொடர்பு சாதன வழிபாடு

இவ் உள்ளடக்கத்தில் தற்போது தொலைத்தொடர்பு சாதனங்களால் பாதுகாப்பு செயலாளரான டொனால்ட் ரும்ஸ்வெல்டினை புகழ்ந்துபாடும் பிரச்சாரம் தொடர்பாக கவனத்திற்கு எடுப்பது முக்கியமானதாக இருக்கும். ஒசாமா பின் லேடனினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதைபோல் இந்த தனிமனிதன் ஒரு உள்ளூர் தரத்தில் உள்ளவரைப்போல் மனிதத் தன்மையற்றவரும் பின் லேடனை விட வித்தியாசமற்றவருமாகும். ஆப்கானிஸ்தானின் அப்பாவிகள் கொல்லப்படுவது தொடர்பாக தொலைத்தொடர்பு சாதனங்களினதும், பென்டகன் அதிகாரிகளாலும் வழமையாக கவலையற்றமுறையில் பரிமாறப்படும் ரும்ஸ்வெல்டின் செய்தி அறிக்கைகள், பின் லேடனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலுடன் முன்னெதிர்பார்திராதவாறு ஒற்றுமையை கொண்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரும் பல பென்டகன் அதிகாரிகளும் 15,000 இறாத்தல் எடையுள்ள "daisy cutter" குண்டுகளை தொலைவில் இருந்து இயக்கும் ஏவுகளைகளால் தனிப்பட்ட கொலைகளின் மூலம் தலிபானையும் அல் கொய்தாவையும் வெளியை கொண்டுவருவது தொடர்பாக பேசும்போது பத்திரிகையாளர்களால் எதிரொலிக்கப்படும் மாபியா என்னும் வார்த்தையை வழமையாக பாவிக்கின்றனர்.

தொலைத்தொடர்பு சாதனங்கள் இப்படியான பத்திரிகையாளர் மாநாடுகளை பாதுகாப்பு செயலாளரின் புனைபெயரினை பாவித்து "Rummy Show" என மறுபெயரிட்டுள்ளனர். அண்மைய Washington Post பத்திரிகையின்அறிக்கை பாதுகாப்பு செயலாளரை அமெரிக்காவின் புதிய "Rock Star" [Rock இசையில் பிரபல்யமான] என அழைத்ததுடன், ''பென்டகனின் சக்திவாய்ந்த வீட்டின் முன்னே ஒவ்வொருவரும் மண்டியிட்டுள்ளனர்'' எனவும் குறிப்பிட்டிருந்தது.

Washington Post மாதிரியான பிரிவானது, ஒரு நீண்ட இழிவான தோற்றமாகும். இது ஏன் தொலைத்தொடர்பு சாதனங்கள் ரும்ஸ்வெல்டின் முன் மயங்கியுள்ளனர் என்பதை விளங்கப்படுத்துகின்றது. எழுத்தாளரான David Montgomery ''ரும்ஸ்வெல்ட் 'கொல்' எனப்படும் வார்த்தையுடன் மிகவும் பரீட்சயமானவர்'' என அவதானித்துள்ளதுடன், அவர் இதனை ''பென்டகனின் முன்னைய குழப்பமும், மறைத்து பேசுவதிலிருந்தும் விடுபட்டுள்ளதாகும்'' என குறிப்பிடுகின்றார்.

இவ் எழுத்தாளர் இதற்கு ஆதாரமாக ஒரு செய்தியாளர் மாநாடு தொடர்பாக'' 35 நிமிட அறிக்கையில் ரும்ஸ்வெல்டின் 9 தடவை 'கொல்' என்னும் பதத்தை வேறுகாலங்களிலும், விதங்களிலும் பிரயோகிப்பார் எனவும், அவருக்கு அண்மையில் இருந்த அதிகாரி கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஒருபோதும் 'கொல்' என்ற பதத்தை பாவிக்கமாட்டார் எனவும் நாங்கள் அவர்களது கட்டளையையும், கட்டுப்பாட்டையும் கட்டுப்படுத்தியுள்ளோம் என குறிப்பிடுவார்'' எனவும் குறிப்பிட்டார்.

ரும்ஸ்வெல்ட், தலிபான் கைதிகளை கைதுசெய்வதிலும் பார்க்க கொலை செய்வதையே விரும்புவதாக திரும்ப திரும்ப குறிப்பிட்டார். வியட்னாம் யுத்தத்தின் மோசமான கொலைகளையும் அல்லது 19ம் நூற்றாண்டின் அமெரிக்க இந்தியர்களுக்கு மேல் செய்யப்பட்ட கொலைகளையும் ஞாபகப்படுத்தும் ஆப்கானிஸ்தானின் யுத்தக் கைதிகளின் மீது செய்யப்பட்ட கொடுமைகளுக்கான முக்கிய ஆக்கதாரியாக இவர் வந்துள்ளார்.

ஒரு அதிகாரி பின் லேடனின் நாடாவைப் பற்றி விபரிக்க பின்வரும் வார்த்தைகளை பிரயோகித்தார். ''அவர்கள் மிகமகிழ்ச்சியடைந்திருந்தனர். இவ் அழிவு தொடர்பாக அவர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டனர். அவர்கள் மோசமானவர்களாகவும், மனித உயிர் தொடர்பாக அற்பமாகவும் கருதினர்''. இப்படியான வார்த்தைகளை ரும்ஸ்வெல்டின் செய்தியாளர் மாநாட்டிற்கு ஒரே மாதிரியாக பிரயோகிக்கலாம்.

பதிலளிக்கப்படாத கேள்விகள்

பின் லேடனினது நாடாவானது இன்னுமொரு பிரச்சனையை எழுப்பியுள்ளது. அது அமெரிக்க தொலைத்தொடர்பு சாதனங்களின் அமைதியாகும். இந்நாடாவினது இருப்பும் பின் லேடன் அவரது சவுதி அரேபிய விருந்தினருடன் உரையாடும் விதமும் புஷ் நிர்வாகத்தால் அல் கொய்தா ஊடுருவ முடியாததாகவும் பின் லேடனை ஒரு குற்றத்தின் மூலதாரியாகவும் காட்டமுனைவதையும் கேள்விக்குரியதாக்கியுள்ளது.

ஏன் ஒரு பேய்த்தனமான மதிநுட்பமானவர் ஒரு நாடாவை உருவாக்கி அதனை அவரது எதிரிகளால் ஆக்கிரமிக்கப்படும் நகரத்தில் விட்டுச்செல்லவேண்டும்? ஒளிவுமறைவான யுத்தத்தின் சூத்திரதாரியாக இருப்பதற்கும் மேலாக, இரகசியத்தை பாதுகாக்க முடியாததும், அவரால் நன்கு அறியப்படாத விருந்தினரிடம் முக்கிய தகவல்களை சாதாரணமாக வெளிப்படுத்துவது பின் லேடன் பாதுகாப்பு தொடர்பாக கவனமற்றிருப்பதாக தெரிகின்றது.

CIA இற்கு நாடாவை வழங்கியது ஒரு தொடர் கேள்விகளை ஆய்வுக்கு முன்வைக்கின்றது. பின் லேடனின் அண்மையில் உள்ளவர்கள் யாராவது அமெரிக்க உளவுத்துறையுடன் இணைந்து இயங்குகின்றார்களா? அப்படியானால் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்ததா?

பின் லேடன் நம்பக்கூடியவரானால் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல் குறித்து 4 நாட்களுக்கு முன்னரே அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அப்படியான தொடர்புகள் எவ்வாறு அமெரிக்காவின் கண்காணிப்பிலிருந்து தப்பியது? இவையும் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலை சுற்றிய ஏனைய வித்தியாமான நிகழ்வுகளும் மேலதிக விசாரணையை வேண்டியுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved