World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா

European declarations of solidarity mask tensions with the US

ஐக்கியத்திற்கான ஐரோப்பிய பிரகடனங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடனான பதட்டங்களை முகமூடியிட்டு மறைக்கின்றன

By Peter Schwarz
19 September 2001

Back to screen version

நேட்டோவின் 52 ஆண்டு கால வரலாற்றில் முதல் தடவையாக, நேசநாடுகளின் உரிமைப் பத்திரத்தில் பரஸ்பர உதவிகளுக்கான தனிச்சிறப்பாக வழிவகை செய்யும் சட்டப்பிரிவை நடைமுறைப்படுத்துதற்கு அட்லாண்டிக்சபை செப்டம்பர் 12 அன்று தீர்மானித்தது. இந்த நடவடிக்கையானது, உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதலுக்குப் பின்னர் 48 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து எந்த விவரங்களும் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னரே வந்தது. நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) கூட்டணி நாடுகளின்19 உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை தமது சொந்த நாடுகள் மீதான அத்து மீறலாகக் கருதுவதற்கு உறுதி கொண்டது முக்கியத்துவம் உடையது.

இம்முடிவானது ஐக்கிய அமெரிக்க அரசுகளால் செய்யப்படும் யுத்த தயாரிப்புக்களுக்கு, முன்னரே கையொப்பமிட்ட வெற்றுத்தாளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பகைவனின் அடையாளத்தை தெரிந்து கொள்ளாமல்கூட, நேட்டோ செயல்முறை அளவில் யுத்தப் பிரகடனத்தை வழங்கியது மற்றும் இதன் மூலம் அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்படும் இராணுவத் தாக்குதல்களுக்கான முன்னேற்பாடான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், நடைமுறை அர்த்தத்தில் இம்முடிவானது, உடனடி விளைபயன்களை எய்தப் பெறுவதற்கான நிலையில் மிகச் சிறிதளவே ஆகும். ஒவ்வொரு நாட்டின் இராணுவப் படைகளின் பாத்திரம் உட்பட, ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எந்த வகையிலான ஆதரவு அளிக்கப்பட இருக்கின்றன என்பது சம்பந்தமான முடிவுகள், அவற்றுக்குரிய அரசாங்கங்களால் தீர்க்கப்பட இருக்கின்றன.

கடந்தவார நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இவ்வரசாங்கங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடனான தங்களின் ஐக்கியத்தை தொடர்ச்சியாக வெளிப்படையாக அறிவித்து வந்துள்ளன. ஜேர்மன் சான்செலர் ஹெகார்ட் சுரோடர் (Gerhard Schröder) அவரது "மட்டற்ற, நான் திரும்பக் கூறுகிறேன், மட்டற்ற ஐக்கியம்" என்பதைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார் மற்றும் அமெரிக்க பழிவாங்கும் எதிர் நடவடிக்கைகளுக்கு ஜேர்மன் இராணுவ பங்களிப்பு சம்பந்தமாக அது சாத்தியமாகக் கூடியதே என்று வலியுறுத்தினார்.

சுரோடரின் நிலைப்பாடு அவரது சொந்தக் கட்சியால் மட்டுமல்லாமல், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அவரது கூட்டணி பங்காளரான பசுமைக் கட்சி, எதிர்க்கட்சிகளாலும் கூட ஆதரிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சரின் நடத்தை சம்பந்தமாக காரசாரமான விவாதங்கள் கடந்த வாரத்தில் கொந்தளித்தன-- புதிய குடிவரவு அகல்வு சட்டம் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியன --ஒரு புறம் ஒதுக்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் உள்ள பழமைவாத கிறித்தவ ஜனநாயக யூனியன் எதிரணித் தலைவர் பிரடெரிக் மெர்ஜ், அரசாங்கத்திற்கு "தீர்மானம் செய்தலின் தேசியக் கூட்டணி" யை வழங்கினார். மற்றும் ச்ரோடருக்கு அவரது பிரிவின் "மட்டற்ற ஆதரவை" உத்தரவாதப்படுத்தினார். கிறித்தவ சமூக யூனியன் கட்சித் தலைவர் எட்மண்ட் சோய்பர் தனது கட்சி "அரசியல் பொறுப்பை ஏற்கத் தயாராக" இருப்பதாக அறிவித்தார். கிறித்தவ ஜனநாயக யூனியன் கட்சித் துணைத் தலைவர் வோல்க்கர் ருஹெ "மாபெரும் மக்கள்' கட்சிகள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் யூனியன்" இவற்றுக்கிடையிலான பொதுவான நிலைக்கு வலியுறுத்தினார். CDU பிரிவின் துணைத்தலைவர் வொல்ப்காங் போஸ்பாக்,--CDU எதிர்ப்பு அரசாங்கத்துக்குள் வாங்கப்படலாம் என்ற ஊகத்தை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டு, "நியாயத்தின் பரந்த கூட்டணி" பற்றிக் கூட பேசினார்.

ஜேர்மன் பாராளுமன்றத்தில் நேட்டோ முடிவை எதிர்த்த ஒரே கட்சியான, (முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஆளும் ஸ்ராலினிசக் கட்சியின் வாரிசான, ஜனநாயக சோசலிசக் கட்சி) PDS- ன் முன்னணி உறுப்பினர் கிரிகோர் கேசி, தான் "மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை" ஆதரிக்கத் தயாரானதாக திங்கட்கிழமை பேர்லினர் சைட்டுங்கில் பிரகடனம் செய்தார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட CNN செய்தி வலைப்பின்னலுடனான பேட்டி ஒன்றில் சுரோடரை ஒத்தவகையில், பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கும் கூட தனது நாட்டின் "ஒட்டுமொத்த ஐக்கியத்தை"ப் பற்றி வலியுறுத்திக் கூறினார்.

ஐக்கியம் பற்றிய தெவிட்டுகிற இப்பிரகடனங்கள் பற்றி ஒருவர் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும்?

முதலாவதாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஐரோப்பிய அரசாங்கங்கள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக உணர்கின்றன என்ற உண்மையை அவை பிரதிபலிக்கின்றன. பிற்போக்கானதாக மற்றும் வெறுக்கத்தக்கதாக இருக்கும் இத்தாக்குதல்களின் வேர்கள் தசாப்தகால காலனிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கைச் சூறையாடலில் ஆகியவற்றில் இருந்து எழுகின்றன. முதலாவது உலக யுத்தத்துக்குப் பின்னர் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் ஒட்டோமான் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கிற்கு எதிரான யுத்தம் வரை, அமெரிக்காவை விடவும் நீண்ட காலமாக, ஐரோப்பிய அரசுகள் இச்சூறையாடலில் ஆழமாய் சிக்குண்டிருக்கின்றன.

அதன்படி, பல பத்திரிகை கருத்துரைகள் அமெரிக்க இராணுவத் தாக்குதலுக்கு நிபந்தனையற்ற ஆதரவுக்காக தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றன.

திங்கட்கிழமை சுட்டொச்சன் சைட்டுங் கில் பீட்டர் முன்ச் என்பவர், அடிப்படைவாதிகளின் பயங்கரம் "ஒட்டு மொத்த மேற்கத்திய நாகரிகத்தை" இலக்கு வைத்திருந்தது என்று எழுதினார் மற்றும், "இந்த அச்சுறுத்தல் தீர்க்கமான ஒரு எதிர்ச்செயலுக்கு அழைப்பு விடுக்கின்றது மற்றும் அதை நியாயப்படுத்துகின்றது. ஆற்றுதல் இனியும் ஒரு பதில் தேர்வுக்குரியதாக இல்லை. எவ்வளவுதான் அது இராணுவ ரீதியாக தொனித்தாலும் அதனைப் பலமாக்கும் என்பது கவலை இல்லை, எம் மீது திணிக்கப்பட்ட சண்டையை முன்னெடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது" என்று முடித்தார்.

அதே செய்திப் பத்திரிகையில் முர்ட் கிஸ்டர், "சட்ட அளவு கோல் கொண்டு சர்வதேச அரசியலை முடிவெடுக்கும்", "வந்தபின் காப்போருக்கு எதிராக வசைபாடினார்." சிறப்புப் படைகளை செயலுக்கு இறக்குமுன் ஐக்கிய நாடுகள் அவையிடமிருந்து ஜனாதிபதி முதலில் தேடுதல் வேட்டைக்கான முன் இசைவைப் பெற்றிருக்கக்கூடாதா என்றெல்லாம், யுத்தம் உண்மையிலேயே ஒரு யுத்தமாக இருக்கும் பொழுது அவர்கள் முடிவில்லாது வாதிக்க முடியும். துரதிர்ஷ்டமாக, உலகமானது பொதுவில் பொருந்தக் கூடிய விதிமுறைகளால் அல்லது பூகோள சட்டப் புத்தகத்தால் ஆளப்படவில்லை. இதற்கு வெறும் காரணம் என்னவென்றால் எந்த ஒரு நாடும் அத்தகைய சட்ட முறையினை தனது சொந்த நலன்களிலிருந்து சுதந்திரமாக திணிக்கமுடியாது. பெரும்பாலான தூய சட்டவாதிகள் எப்பொழுதும் என்ன செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிந்து கொள்வர். அவர்களுக்கு என்ன தெரியாது என்றால், எடுத்துக்காட்டாக, மன்ஹாட்டன் இரத்தக் குளியலுக்குப் பின்னர், என்ன செய்தாகவேண்டும் என்பதைப் பற்றியதுதான்."

ஈராக்கிற்கு எதிரான 1991 தாக்குதல், சதாம் ஹூசைன் சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிராக நடந்தார் என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது. இருப்பினும், இன்றோ, பத்திரிகையின் பெரும்பாலான கனவான்கள் அத்தகைய சட்டரீதியான சாக்குகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.

இருப்பினும், இராணுவ எதிர்த்தாக்குதலின் விளைவுகள் பற்றி வளர்ந்து வரும் எண்ணிக்கையில் எச்சரிக்கும் பல குரல்கள் அங்கே இருக்கின்றன. கடந்த வெள்ளி அன்று ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹான்னஸ் ரா (Johannes Rau), பேர்லினின் பிராண்டன்பேர்க் வாயிலின் முன் ஐக்கியத்தைக் காட்டுதற்கு கூடியிருந்த இரண்டு லட்சம் மக்களுக்கு முன்னே பேசினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஒவ்வொருவரையும் முதலாவதாக "ஆழ்ந்த மூச்சை" எடுத்துக் கொள்ளும்படி வேண்டுகின்றது என்றார் அவர். அரசியல் நடவடிக்கை முறைகளால் மூலம் மட்டுமே "வன்முறையின் போதகர்களுக்கான" ஆதரவைக் கீழறுப்பது சாத்தியம் என்று அவர் தொடர்ந்தார். மக்களை ஆற்றொணா நிலைக்கு விரட்டி, சிலரை வன்முறைக்கும் பயங்கரத்திற்கும் இட்டுச்செல்லும் வறுமை, சுரண்டல், ஈன நிலை மற்றும் சட்டமின்மை ஆகிய சூழ்நிலைமைகள் பற்றி ஒருவர் அணுகவேண்டும் என்றார்.

இரண்டு நாட்கள் கழித்து அவர் ஒரு வானொலிப் பேட்டியில், "பேச்சைக் கேட்டு இப்பொழுது யுத்தத்துக்குள் நாம் போய்விடக் கூடாது" என்று எச்சரித்தார். குற்றவாளிகள் இராணுவ நடவடிக்கைகளால் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக, தேடிப்பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றார். சுரோடருக்கு மாறுபாடாக, அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் இராணுவ யுத்தத்தில் ஜேர்மன் இராணுவம் பங்கேற்காது எனத் தான் எதிர்பார்ப்பதாக ரா கூறினார்.

அதே பாணியில், பிரெஞ்சு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விமர்சனக் குறிப்புக்களைச் செய்துள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்தில் பிரெஞ்சு பிரதமர் லியோனல் ஜோஸ்பன் ஐக்கிய அமெரிக்கா உடனான ஐக்கியம் என்பது பிரான்சின் சொந்த இறையாண்மையை அல்லது தீர்ப்பை விட்டுக் கொடுப்பதாக அர்த்தப்படுத்தவில்லை என்று வலியுறுத்தினார். "எமது மனிதாபிமான, அரசியல் மற்றும் செயற்பாட்டு ஐக்கியம் என்பது எங்களது இறையாண்மையை, எங்கள் சொந்தக் கருத்துக்களைக் கூறுவதற்கான எங்களது சுதந்திரத்தை எம்மிடமிருந்து இல்லாமற் செய்வது அல்ல" என்று பிரகடனம் செய்தார். "மேற்கத்திய உலகு இஸ்லாமிய உலகு என்ற தனி அலகுகளின் அடிப்படையில் இவற்றுக்கு இடையிலான மோதல் என்றவாறாக நாம் சிந்திக்கத் தொடங்கி விடக்கூடாது. அங்கு நமக்கு நண்பர்களும் பங்காளிகளும் இருக்கின்றனர். நாம் தடுமாறா நிலையைப்பேண வேண்டும்" என்றார்.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் உபேர்ட் வெட்ரன் (Hubert Védrine) பாராளுமன்றத்தில் கூறினார்: "எமது ஐக்கியம் இராணுவ நடவடிக்கை உட்பட, என்னவிதமான நடவடிக்கை அவசியமானது என்பதை ஒவ்வொரு தரப்பும் முடிவெடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. "பாதுகாப்பு அமைச்சர் அலன் ரிச்சர்ட் (Alain Richard), நேட்டோ கூட்டணி கட்டமைப்புக்குள் செய்த முடிவுகள் தேசிய முடிவுகளாக இருந்தன என்றுவலியுறுத்திக் கூறினார்.

"எல்லைகள் அற்ற மருத்துவர்கள்" (Doctors Without Borders) அமைப்பின் முன்னாள் தலைவரும் சுகாதார அமைச்சருமான பெர்னார்ட் கோஷ்னர், தாக்குதல்களுக்கு அமெரிக்காவால் ஆன "தொடர்ச்சியான தவறுகள்தான்" காரணம் என்றார். "அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் உண்மையான தப்பைச் செய்துவிட்டது, அது தலிபானுக்கு பயிற்சி...... அளித்ததாகும். 'கெட்ட' பயங்கரவாதிகளுக்கு எதிராக சிலவகை 'கெளரவமான' தேசங்களின் கருத்தொற்றுமை இருக்கின்றன என இப்பொழுது எண்ணிப் பார்ப்பது வெறுமனே உண்மை அல்ல" என்றார்.

அத்தகைய விமர்சனங்களுக்குப் பின்னே அமெரிக்க இராணுவத் தாக்குதல் முழு மத்திய கிழக்கையும் சீர்குலைக்கக் கூடிய, ஐரோப்பாவுக்கு ஆழமான விளைபயன்களை ஏற்படுத்தும் பேரழிவில் முடியக் கூடும் என்ற அச்சம் இருக்கின்றது.

ஈராக் போன்ற மத்தியகிழக்கில் உள்ள அரசுகளுக்கு எதிரான பெரும் இராணுவ நடவடிக்கையானது, ஐக்கிய அமெரிக்காவில் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பயங்கரவாத குழுக்களைவிட இன்னும் பரந்த அளவில் சமூக சக்திகளை அணிதிரட்டும். இந்த அச்சம் ஐரோப்பிய அரசாங்கங்களை மட்டும் வட்டமிடவில்லை மாறாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் நம்பியுள்ள சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளையும் முற்றிலும் ஸ்திரமற்ற ஆட்சிகளையும் வட்டமிடுகின்றது. மேலும் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியிலான பரந்த எழுச்சி மற்றும், ஐரோப்பாவில் வாழும் அகதிகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கை ஆகியன ஐரோப்பிய அரசாங்கங்களைப் பொறுத்த அளவில் கணக்கிட முடியாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கப் போகின்றன.

வேறுவிதமான நோக்கங்களும் வேலைசெய்கின்றன. அவற்றின் எண்ணெய் வள இருப்புடன் மத்திய கிழக்கும் மத்திய ஆசியாவும், சிலகாலங்களாக பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான புவிசார்ந்த அரசியல் மற்றும் பொருளாதாரப் போட்டிக்கான குவிமையமாக இருந்து வருகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்களின் மூலோபாய ரீதியான நோக்குநிலை கொண்ட உறுப்பினர்கள், அமெரிக்காவானது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற சாக்கின் கீழே இந்தப் பிராந்தியத்தில் தனது சொந்த மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கு நாடுகின்றது என்று உணர்கின்றன. ஆகையால், அமெரிக்காவுடனான ஐக்கியம் பற்றிய பொதுப் பிரகடனங்களுக்குப் பின்னே தந்திரோபாய கையாளுதல்களின் பெரும் கூறுகள் அங்கே இருக்கின்றன. சிந்தனை என்னவென்றால், தற்போதைய சூழ்நிலைகளில் வெளிப்படையான மோதல் ஐக்கிய அமெரிக்க நாடுகளை திசை திருப்பவும் அதன்மீது செல்வாக்கு செலுத்தவுமான சாத்தியத்தை ஐரோப்பியர்களுக்கு இல்லாமற் செய்வதுடன் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் ஐரோப்பிய நலன்களுக்கும் நேட்டோ கூட்டணி ஒட்டுமொத்தமானதன் இருப்புக்கும் கூட இடருண்டாக்கப் போகின்றது.

தற்போதைய நெருக்கடியின் நேட்டோவுக்கான விளைவுகள் பற்றி திங்கட் கிழமை பிராங்க்போர்ட்டர் அல்கமைன சைட்டுங் கில் எழுதுகையில், லோதர் ருல் குறிப்பிட்டதாவது: இருப்பினும், ஐரோப்பிய நட்பு நாடுகள் பின்னுக்கு இழுத்தால் அல்லது நெருக்கடி-நடவடிக்கையைத் தாமதப்படுத்தும் கூறினை அறிமுகப்படுத்தினால், ஐரோப்பிய-அட்லாண்டிக் கூட்டணி முதல் தடவையாக அட்லாண்டிக் கடந்த உறவுகளை இழப்பதற்கான அபாயத்தை எதிர்கொள்ளும். "அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதலின் விளைவான சர்வதேச நெருக்கடியானது, கிழக்கு-மேற்கு மோதலில் இருந்து எழுந்த சர்வதேச அரசியலுக்கான காலத்திற்கு ஒவ்வாமற்போன அமைப்புக்களை கரைத்துவிடுவதை வேகப்படுத்துகின்றது" என்ற கருத்தை ருல் கொண்டிருக்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, ஐரோப்பா, மற்றும் குறிப்பாக ஜேர்மனியும் பிரான்சும் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலன்களை கூடிய வலுவுடன் தொடர்வதற்கு, அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அக்கறை கொண்டுவந்துள்ளன. கொசோவாவில் கொசோவா விடுதலைப் படை மற்றும் மசடோனியாவில் தேசிய விடுதலை இராணுவம் பற்றிய நிலைப்பாடுமீது, திட்டமிடப்பட்ட அணு ஆயுத ஏவுகணைப் பாதுகாப்பு மீது மற்றும் ஏனைய பல பிரச்சினைகள் மீது கடும் பதட்டங்கள் தோன்றி உள்ளன. ஆனால், ஐரோப்பா போதுமான அளவு தயாரிப்பு செய்து கொள்ளுவதற்கு முன்னரே நேட்டோ தனித்தனியாக உடையக்கூடும் என்று இப்பொழுது ஐரோப்பியத் தலைவர்கள் அஞ்சுகிறார்கள். "ஐரோப்பிய ஒன்றியமானது வாஷிங்டனுடனான கூட்டில் 'மூலோபாய சுயாட்சியை' உணருவதற்கு போதுமான அளவு பலமாகவும் இல்லை தயாரிக்கப்படவும் இல்லை" என ருல் குறிப்பிட்டார்.

அதேசமயம், அமெரிக்காவுடன் மேலும் ஒத்துழைப்பது எதிர் விளைவைக் கொண்டுவர இருக்கிறது என்பது சம்பந்தமான குரல்கள் நேட்டோ கட்டமைப்புக்குள் ஏற்கனவே வெளிப்பட்டு வருகின்றன.

டேர் ஸ்பிகல் இதழில் வந்த ஒரு கட்டுரை, பரஸ்பர உதவிக்கு வேண்டிக் கொள்ளும் முடிவிற்குப் பின்னர், நேட்டோ தன்னை "இராணுவ அளவில் அதிகரித்தல் மற்றும் ஐக்கிய பொறிக்குள்" மாட்டி இருப்பதாகப் பார்க்கின்றது எனக் குறிப்பிடுகிறது. "அமெரிக்காவானது அதன் சொந்த நலனைப் பாதுகாத்துக்கொள்ள வரும்பொழுது கூட்டு நலன்களைப் பற்றி சிறிதே அக்கறை கொள்கிறது. யுத்த நடவடிக்கையாகக் கருதப்பட்டிருக்கும் பயங்கரத்தின் புதிய பரிமாணம், நேட்டோ பங்காளிகளை, சரியாக, அமெரிக்கர்களுடன் பக்கமெடுக்க நிர்ப்பந்திக்கிறது. ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், அவர்கள் தங்களின் சொந்த அளவு கோலின்படி செயல்படுகின்றார்கள் என்பது தெளிவாக இருக்கின்றது" என்று அது தொடர்கின்றது.

தற்போதைய நெருக்கடி ஐரோப்பா ஒட்டு மொத்தமாக, குறிப்பாக ஜேர்மனியில் இராணுவ வாதத்தின் அபிவிருத்தியை பேரளவில் முடுக்கி விட்டுள்ளது. இராணுவத்திற்கு அதிகமாக செலவிடுவதற்காக ஜேர்மன் அரசாங்கமானது, அதன் தற்போதைய வரவு-செலவுதிட்ட வெட்டுக்களின் போக்கை தளர்த்துவது தொடர்பாக ஏற்கனவே விவாதித்து வருகிறது. அமெரிக்க போர்த் தயாரிப்பு பற்றி விமர்சிக்கும் பலர் அதே சமயம் ஐரோப்பாவை மறு ஆயுதமயம் ஆக்குதலை உக்கிரப்படுத்துவதற்காக அழைப்பு விடுக்கின்றனர்.

See Also:

21 September 2001

புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?

14 September 2001

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved