World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்திய உபகண்டம்

As US prepares for war in Iraq

India and Pakistan begin to demobilise troops

அமெரிக்கா ஈராக்கில் போரைத் தயாரிப்பதால்

இந்தியாவும் பாக்கிஸ்தானும் துருப்புக்களை எல்லையிலிருந்து பழைய நிலைக்கு திருப்பி அனுப்ப ஆரம்பிக்கின்றன

By Sarath Kumara
29 October 2002

Back to screen version

பத்து மாதங்களாக பதட்டம் நிறைந்த முறுகல் நிலைக்குப் பின்னர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்கள் எல்லை நெடுகிலும் முன்னணி நிலைகளில் இருந்து இலட்சக் கணக்கான துருப்புக்களை, கனரக ஆயுதங்களை, பீரங்கி வண்டிகளை மற்றும் ஏவுகணைகளை பகுதி அளவில் வாபஸ் பெறுவதை ஆரம்பித்திருக்கின்றன. பத்துலட்சக் கணக்கான படைவீரர்களுக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்ட, இந்த இராணுவப் படைக்குவிப்பு, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப் பெரிய இராணுவ அணிதிரட்டலாக இருந்தது.

இருப்பினும், இருநாடுகளையும் போரின் விளிம்புக்குக் கொண்டு வந்த பிரச்சினைகளில் ஒன்று கூட தீர்க்கப்பட்டிருக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் மையமாக இருக்கும், இந்தியா மற்றும் காஷ்மீர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பிரிக்கும் கட்டுப்பாட்டுக்கோடு நெடுகிலும் இருந்து ஒரு பகுதியும் துருப்புக்களை விலக்கிக் கொள்ளவில்லை. மேலும், பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியின் அரசாங்கம் எந்த விதமான பேச்சுவார்த்தைகளையும் வெளிப்படையாக நிராகரித்திருந்ததுடன், படைகளை விலக்கிக் கொள்வது பாக்கிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரை அல்ல என்று அறிவித்தது.

இராணுவப் படைவிலக்கத்திற்கான ஒரு பிரதான தூண்டுவிசை வாஷிங்டனிலிருந்து வந்தது, அது அமெரிக்கா ஈராக்கில் ஆக்கிரமிக்க தயாரிப்பு செய்வதால் இரு அணு ஆயுத அரசுகளுக்கு இடையில் ஒரு மோதல் வெடிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் ஆர்வம் மிக்கதாக இருக்கிறது. அமெரிக்க அரசு செயலாளர் கொலின்பாவெல் அவரது இந்திய எதிரிடைப் பதவி வகுக்கும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தொலைபேசி செய்து இம்முடிவை "சாதகமான அபிவிருத்தி" என்று புகழ்ந்தார். இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான "ஒரு பிரதான மரபுவழி மோதல்" வருவதற்கான நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு "கணிசமான படை விலக்க நடவடிக்கை" க்காக வாஷிங்டன் பல மாதங்களாக நம்பிக்கை கொண்டு வந்திருந்தது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் றொபர்ட் பிளாக்வில் இந்தியப் பத்திரிகைகளிடம் கூறினார்.

வாஜ்பாயியால் தலைமை தாங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அட்டோபர் 16 அன்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் பின்னுக்கு விலக்கிக் கொள்வதை அறிவித்தார். தொடர்ந்து கொண்டிருக்கும் பதட்டத்தைக் கோடிட்டு, "எந்தவிதமான அவசரநிலைக்கும் தீர்க்கமாகப் பதிலளிக்கும் தங்களின் திறனை ஆற்றல் குறைக்காமல்" அல்லது "ஜம்மு மற்றும் காஷ்மீரில் (இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள) விழிப்பு நிலையை தாழ்த்தாமல்" திரும்ப துருப்புக்கள் அனுப்பப்பட முடியும் என்று அவர் அறிவித்தார். கண்ணிவெடிகளை அகற்றல் மற்றும் இராணுவ சாதனங்களை அகற்றல் உட்பட, அந்த நிகழ்ச்சிப்போக்கு முற்றுப்பெற இரு மாதங்கள் பிடிக்கும் என அவர் கடந்தவாரம் கூறினார்.

காஷ்மீரில் இந்திய ஆட்சியை எதிர்க்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் புதுதில்லியில் இந்தியப் பாராளுமன்ற கட்டிடத்தைத் தாக்கிய பின்னர், கடந்த டிசம்பரில் இந்தியா பெரும் அணிதிரட்டலை முன்னெடுத்தது. புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" பற்றியதை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள நம்பிக்கை கொண்டு, வாஜ்பாயி "எல்லை கடந்த பயங்கரவாதத்தை" ஊக்குவிப்பதாக பாக்கிஸ்தான் மீது குற்றம் சாட்டிக்கொண்டு, இராணுவக் கட்டி எழுப்பலுக்கான உத்தரவை இடுவதற்கு இச்சந்தர்ப்பத்தை உடனடியாக பற்றிக் கொண்டார். மே14 அன்று இந்திய இராணுவ தளம் அருகே காஷ்மீரி பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஒரேயடியான போர் வெடிப்பதற்கு பதட்டங்கள் அச்சுறுத்தின.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான போர் இந்தப் பிராந்தியத்தில் --குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில்-- அதன் நலன்களை சமரசம் செய்யும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்நெருக்கடியை பதட்டம் தணிக்க அமெரிக்கா தலையிட்டது. வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ், பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர், ஜெனரல் பெர்வெஸ் முஷாரப், பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் குடிப்படையை நசுக்குதற்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் அவர்களின் நடவடிக்கைகளை "நிரந்தரமாய்" தடுத்து நிறுத்தவும் உறுதிபூண்டார். அரபிக்கடலில் பாக்கிஸ்தானிய துறைமுகங்களின் அருகே உள்ள நிலைகளில் இருந்து அதன் போர்க் கப்பல்களை திரும்ப இழுத்துக் கொண்டதன் மூலம் இந்தியா பதிலிறுத்தது மற்றும் இந்திய எல்லைப்பகுதியில் பாக்கிஸ்தானிய வணிக விமானங்கள் பறத்தலுக்கு விதித்திருந்த தடையை அகற்றியது.

இருப்பினும், புஷ் நிர்வாகம், போருக்கான சாத்தியம் பற்றி அக்கறை கொண்டிருந்தது தொடர்ந்தது, குறிப்பாக அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க தயாரிக்கின்றமையால் அரசு துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ் அண்மையில் பின்வருமாறு விளக்கினார், "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும்" அதேவேளை, ஐக்கிய அமெரிக்க அரசுகள் உலகில் அமெரிக்க நலன்கள் பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற இடமெல்லாம் --இஸ்ரேலிருந்து பாலஸ்தீனம் வரை, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் வரை மற்றும் வடகொரியாவிலிருந்து கொலம்பியா வரை கொசோவா வரை--பதட்டமிக்க இடங்களைத் தனிமைப்படுத்துவதிலும் கூட ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஈடுபட்டிருக்கின்றன."

இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேருரையில், அமெரிக்க தூதர் பிளாக்வில் இரு அரசாங்கங்களின் மீதான வாஷிங்டனின் நம்பிக்கையை கோடிட்டுக் காட்டினார். "பாக்கிஸ்தானுடனான எமது உறவு தொடர்பானதில் இந்திய--அமெரிக்க உறவில் மாற்றத்தில், அதேபோல ஆப்கானிஸ்தான், அல்கொய்தாவுக்கு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்தானின் உதவியில் நாங்கள் பிரதான பங்கை வகித்திருக்கிறோம், மற்றும் அவை போய்விடப்போவதில்லை" என்றார்.

அமெரிக்க அழுத்தமானது, காஷ்மீரில் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானிலும் கூட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அவர்களை இழுத்துப் பிடிப்பதற்கு பாக்கிஸ்தானை நிர்ப்பந்திப்பதில் பிரதானமாய் குவிமையப்படுத்துவதாக இருக்கிறது. இதற்கு பிரதியுபகாரமாக பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்படுவதைவிடவும் சிறிது அதிகமாக செய்வதற்கு வாஷிங்டன் இந்தியாவை அழைக்கிறது. பிளாக்வில் விளக்கியவாறு, அமெரிக்காவும் ஏனைய மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளும் "பாக்கிஸ்தானிலிருந்தும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப் பகுதியிலிருந்தும் பயங்கரவாதம் இனிமேலும் வெளிப்படாத குறிக்கோளை முன்னேற்றுவிக்க இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து கடுமையாய் வேலை செய்யும், எனவே இரு நாடுகளும் "தங்களின் வேறுபாடுகளைப்பற்றி ஒரு அக்கறை கொண்ட கலந்துரையாடலை" புதுப்பிக்கக் கூடும்.

வாஜ்பாயியின் பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) மற்றும் அதன் இந்து தீவிரவாதக் கூட்டாளிகள் இனவாத உணர்வைத் தட்டி எழுப்புதற்கும் அவர்களின் ஊக்கம் குன்றி இருக்கும் சொந்த தேர்தல் தொகுதி ஆதரவை அழியாது காப்பாற்றவும் இப்பதட்டங்களைப் பயன்படுத்த நாடி இருக்கின்றனர். இதன் விளைவாக, பிஜேபி-ன் பகுதிகள் துருப்புக்களைப் பின்னுக்கு இழுப்பதை அறிவித்தலில் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தலைசாய்த்து விட்டது என்று குற்றம் சாட்டி இருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சர் பெர்ணான்டஸ் இக்குற்றச்சாட்டை கஷ்டப்பட்டு மறுத்து, பின்வருமாறு அறிவித்த்தார்: "நமது முடிவுகளை எடுப்பதில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரு காரணியாக ஒருபோதும் இருக்கவில்லை."

இம்முடிவுக்கு பின்னால் உள்ள இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த காரணியை --பாக்கிஸ்தானின் எல்லை நெடுகிலும் இராணுவ உயர்நிலை விழிப்பில் சுமார்700,000 துருப்புக்களைப் பராமரிப்பதன் அதிகரிக்கும் செலவீனத்தை-- விவாதிப்பதற்கு பெர்ணான்டஸ் தயங்கினார். இந்திய பத்திரிகைகளின்படி, ஓய்வு பெற்ற இராணுவ தலைமைத் தளபதி வி.பி.மாலிக் "ஒரு செலவு குறைப்பு ஆய்வு" சம்பந்தப்பட்ட "ஒரு பிரதான முன்வைப்பினை" அமைச்சரவை பாதுகாப்புக் குழுவிற்கு வைத்தார்.

இடைப்பட்ட பதட்டநிலை பாக்கிஸ்தான் மீது பொருளாதார அழுத்தத்தையும் அதேபோல இராணுவ அழுத்தத்தையும் வைக்கும் என வாஜ்பாயி அரசாங்கம் கணக்குப்போட்ட போதும், இந்தியப் பொருளாதாரத்திற்கு வரும் செலவு கணிசமானதாக இருக்கின்றன. புள்ளி விவரங்கள் இன்னும் கணக்கிடப்பட்டு வருகின்றன என கூறிக்கொண்டு, பெர்ணான்டஸ் கருத்துக்கூற மறுக்கும் அதேவேளை, மதிப்பீடுகள் செலவை 20 பில்லியன் ரூபாய்களுக்கும் 50 பில்லியன் ரூபாய்களுக்கும் (400--1000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இடையிலானதாக வைக்கின்றன.

மாலிக்கின்படி, துருப்புக்களை அதன் போராடும் திறன் குறையாது இருக்கிறவாறு வைத்திருத்தல் பற்றியதில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. "இராணுவம் (வாபஸ் வாங்குதற்கு) ஆதரவாக இருந்தது," என்று ஜேன்ஸ் பாதுகாப்பு வார இதழின் ராகுல் பேடி பிபிசி- இடம் கூறினார். "அது படைவீரர்கள் மீதும் எந்திரங்கள் மீதும் கடும் பாதிப்புக்கு வழிவகுத்தது." தங்களின் குடும்பங்களை விட்டு நீண்டகாலம் பிரிந்திருப்பது தொடர்பாக படைவீரர்கள் மத்தியில் கடும் தளர்வு பற்றிய நிலைகள் அதிகரித்த எண்ணிக்கையில் அங்கு இருந்திருந்ததாக இந்தியா டுடே அறிவித்தது.

இராணுவ உயர் மட்டத்தில் உள்ள உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாய், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் ஜே. என்.தீக்ஷித், அரசாங்கம் பெரும் செலவுக்கும் எமது படைவீரர்கள் மீது பெரும் அழுத்தத்திற்கும் வழிவகுக்கும் இந்த பரந்த அளவிலான துருப்புக்களை நிறுத்தலை செய்திருக்கக் கூடாது" மற்றும் "ஒன்றையும் சாதிக்கவில்லை" என்றார். ஆயினும், விமர்சனம் காலம் தாழ்த்திய ஒன்றுதான். பாக்கிஸ்தான் விரோத பேரினவாதத்தை தூண்டிவிடுவதில் பிஜேபியுடன் போட்டியிட்டுக் கொண்டு, பத்துமாதங்களாக காங்கிரஸ் கட்சியானது, பாக்கிஸ்தானுடனான முறுகல் நிலைக்கு முழு ஆதரவை அளித்தது.

துருப்புக்கள் பின்னுக்கு இழுத்துக்கொள்ளல் இருப்பினும், காஷ்மீரில் பதட்டம் அதிகமாகவே இருக்கிறது. கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்திய பாக்கிஸ்தானிய துருப்புக்கள் பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை பரஸ்பரம் தொடர்ந்து நடத்துகின்றனர். இந்திய மோட்டார் தாக்குதல் மற்றும் குண்டு தாக்குதல்களால் குடிமக்களுள் ஒருவர் கொல்லப்பட்டதாக பாக்கிஸ்தான் போலீஸ் அறிவித்தது. இந்திய எல்லைக்குள் இஸ்லாமிய போராளிகள் ஊடுருவுவதை மூடிமறைக்க பாக்கிஸ்தான் தொடர்ந்து மோட்டார் குண்டு மழை பொழிவதைப் பயன்படுத்துவதாக பாக்கிஸ்தான் மீது குற்றம் சுமத்துவதன் மூலம் இந்தியா பதிலிறுத்தது. பாதுகாப்புப் படைகள் மூன்று கொரில்லாக்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் பின்னால் இருக்கும் மோதல்கள் அப்படியே இருப்பதையும் மீண்டும் அவை வெடிக்கக் கூடும் என்பதையும் விளக்கிக் காட்டுகின்றன. அதிகரித்துவரும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் வேலையின்மை மற்றும் சமூக துருவ முனைப்படலின் வளர்ந்து வரும் மட்டங்களால் உள்நாட்டில் உண்டு பண்ணப்பட்ட அரசியல் பதட்டங்களிலிருந்து திசை திருப்புவதற்காக, இருநாடுகளிலும் உள்ள ஆட்சிகள் வகுப்புவாத மற்றும் தேசியவாத உணர்வைப் பற்றி எரியச் செய்வதன் மீது சார்ந்து இருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved