World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Afghan puppet government shaken by twin attacks

ஆப்கானிஸ்தான் பொம்மை அரசாங்கம் இரட்டை தாக்குதல்களால் நடுக்èம் கண்டுள்ளது

By Patrick Martin
7 September 2002

Back to screen version

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட அரசாங்கம் மூன்று மணித்தியாலங்களுக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற உக்கிரமான தாக்குதல்களால் தள்ளாடுகிறது. செப்டம்பர் 5 வியாழக்கிழமை பி.ப 3 மணியளவில் காபுலில் சன நெருக்கடியான வீதியொன்றில் வெடித்த சக்திமிக்க கார் குண்டில் டசின் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேதினம் பி.ப. 6 மணிக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் பிரதான நகரமான கந்தஹாரில் இடைக்கால ஜனாதிபதி ஹமிட் கர்சாய் படுகொலை செய்யப்படுவதில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

காபுல் குண்டுத் தாக்குதலானது, அப்பாவி பொதுமக்கள் மத்தியில் ஆகக் கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கவனமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் புனித நாளான வெளிக்கிழமைக்கு பாவனையாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கும்போது, வீதிகளில் சன நெருக்கடியான வேளையில் ஒரு சிறிய வெடி சைக்கிள் ஒன்றை நிர்மூலமாக்கியது. இந்த வெடிச் சத்தம் பெருந்தொகையான கூட்டத்தை கவர்ந்ததோடு அவர்கள் அடுத்த மூன்று நிமிடத்தில் வெடித்த பெரிய கார் குண்டுக்குப் பலியானார்கள்.

150 இறாத்தல் மதிக்கத் தக்க வெடிமருந்துகள் அந்த வாகனத்தை முறிகிப் போன உலோகமாக மாற்றியதோடு, நகர வீதிகளில் நின்ற மக்களை துண்டுகளாக்கியது அல்லது எரித்ததுடன், 150 யார்களுக்கு அப்பால் இருந்த ஜன்னல்களை கூட தவிடுபொடியாக்கியது. பெருந்தொகையான உடல் உறுப்புக்களாலும் இந்தக் குண்டு வெடிப்பால் ஏற்படுத்தப்பட்ட பீதியாலும் மரண எண்ணிக்கையை மிகச் சரியாக பெற்றுக்கொள்ள முடியவில்லை -அண்ணளவாக 25 முதல் 36 வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 150 ஆக இருக்கும். பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவர்.

ஆப்கான் அரச தலைவர் தனது சொந்த நகரான கந்தஹாருக்கு தனது இளைய சகோதரரின் திருமணத்திற்கு சென்றுகொண்டிருக்கையிலேயே கர்சாய்க்கு எதிரான குறி தவறிய படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கர்சாயின் பரிவாரம் தமது பயணத்தை நகர மத்தியினூடாக கார் ஒன்றில் மேற்கொண்டதோடு அவர் வீதியில் பார்வையாளர்களுக்கு கை அசைத்து கை குலுக்கிக்கொண்டிருந்த அதேவேளை கூட்டத்துக்கு மத்தியில் இருந்து தோன்றிய ஒரு ஆயுதபாணி தானியங்கித் துப்பாக்கியை பகிரங்கமாகப் பிரயோகித்தான்.

கர்சாயின் மெய் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டிருந்த அமெரிக்க விஷேட நடவடிக்கை படை வீரர்கள் திருப்பிச் சுட்டதில் அந்த துப்பாக்கிதாரி உயிரிழந்தான். பின்னர் அவன் தலிபான்களின் கோட்டையான ஹெல்மன்ட் மாகாணத்தின் கஜகியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டான். அப்துல் ரஹ்மான், கந்தஹார் கவர்ணர் கல் அகா ஷிர்சாயின் பாதுகாப்பு இராணுவ படையணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மூன்று வாரங்களுக்கு முன்னரேயாகும்.

தாக்குதல் தொடுத்தவர்களின் எண்ணிக்கை உட்பட படுகொலை முயற்சி தொடர்பாகவும் முரண்பட்ட கணிப்பீடுகள் இருந்தன. அமெரிக்க மெய்பாதுகாவலர்கள் அப்துல் ரஹ்மான் மீது துப்பாக்கப் பிரயோகம் செய்தபோது மேலும் இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் வீதியில் நின்றவர்கள், தாக்குதலாளியுடன் வந்தவர்கள் இல்லையேல் கர்சாய் அல்லது ஷிர்சாய்க்காக சேவை செய்யும் ஆப்கான் மெய்பாதுகாவலர்கள் என பல்வேறு விதமாக வர்ணிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சமரின்போது ஒரு அமெரிக்க மெய்பாதுகாவலாளி சிறு காயங்களுக்கு உள்ளானார்.

கர்சாய் பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவர் பயணம் செய்த காரில் அவர் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின்பகுதியும் காரின் ஜன்னலும் குண்டுகளால் துழைக்கப்பட்டிருந்தன. கர்சாய்க்கு அருகில் அமர்ந்திருந்த ஷிர்சாய்க்கு சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அது அவரது கழுத்தில் ஏற்பட்டிருந்தது. ஆரம்பத்தில், இடைக்கால ஜனாதிபதியை விட ஆளுனரே துப்பாக்கிதாரியின் இலக்காக இருந்தார் என ஊடகங்கள் அபிப்பிராயம் தெரிவித்திருந்த போதிலும், பின்னர் ஆப்கான் அதிகாரிகள் கர்சாயே நிச்சயமான இலக்கு எனப் பிரகடனப்படுத்தினர்.

காபுலில் ஜூலை 6ம் திகதி உதவி ஜனாதிபதி அப்துல் குவாதிர் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்க படைகள் கர்சாயின் மெய்பாதுகாவலர்களாக ஈடுபடுத்தப்பட்டனர். நம்பிக்கை குறைந்தவர்களாகக் கருதப்படும், வடக்குக் கூட்டணியில் கர்சாய் விரோதிகளால் கட்டுப்படுத்தப்படும் முகவர்களான ஆப்கான் பாதுகாப்பு அமைச்சினாலும் மற்றும் இரகசிய பொலிசினாலும் வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அமெரிக்கப் படையினர் பிரதியீடு செய்வார்கள்.

வடக்கு முன்னணி சிறிதளவு ஆதிக்கம் கொண்டுள்ள பஸ்துன்கள் வாழும் கந்தஹாரில், பஸ்துன் துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்ட புதிய படுகொலை முயற்சியின் சூழ்நிலைகளின்படி, தாக்குதலானது சாத்தியமான விதத்தில், விரட்டியடிக்கப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் அல்லது அல் கொய்தாவின் ஆதரவாளர்களான உள்ளூர் சக்திகளால் முன்னெடுக்கப்பட்டதாக தோன்றுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் குறைந்தது அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னர் ஷிர்சாயின் வாசஸ்தலத்திற்கு வெளியில் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் ஆயுதபாணிகளாக இருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஷிர்சாயின் பாதுகாப்புத் தலைவர்களில் ஒருவரான செய்ட் ரசூலும் ஒருவர் என ஷிர்சாயின் பேச்சாளர் தெரிவித்தார். இது இந்த படுகொலை முயற்சியின் பின்னணியில் உயர் மட்ட அரசியல் தலையீடு உள்ளதை உறுதி செய்தது.

வடக்கு முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆப்கான் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா, காபூல் மற்றும் கந்தஹார் தாக்குதல்களுக்கு அல் கொய்தா மீது குற்றம் சாட்டினார். வடக்கு முன்னணியின் தளபதி அகமட் ஷா மசூட் இன் (செப்டம்பர் 9, 2001) படுகொலையினதும், செப்டம்பர் 11 தற்கொலைக் கடத்தலினதும் ஞாபகார்த்தத்தை சுட்டிக் காட்டிய அகமட்: "செப்டம்பர் 9 மற்றும் 11 வரை, பயங்கரவாதக் குழுக்கள் தாங்கள் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டதோடு பயங்கரவாதிகளுக்கு எதிரான பிரச்சாரம் வெற்றியளிக்கவில்லை," என தெரிவித்தார்.

அமெரிக்க ஆதரவில் இயங்கிய இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் முன்னைய தலைவரும் ஒரு காலத்தில் பிரதமராக இருந்தவருமான கல்புடீன் ஹெக்மார்டயர் காபூல் அழிவிற்கு பொறுப்பாளியாக இருக்கலாம் என ஏனைய அதிகாரிகள் தெரிவித்தனர். தலிபான்களால் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பஸ்துன் இனத்தை சேர்ந்த ஹேக்மார்டயர் மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பி அந்நிய படைகளுக்கு எதிரான "புனித யுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 5ம் திகதி தாக்குதலுக்கு முந்திய தினம் ஒரு பதிவு நாடாவினூடாக வெளியிட்ட செய்தியில் அமெரிக்காவுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக "தூய முஸ்லிம் ஆப்கானியர்கள்" கிளர்ந்து எழ வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் சமாதானத்தில் பாரிய முன்னேற்றம், என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்றுக்கு பின்வருவதில் எந்த சம்பவ கூற்று மோசமானது என கூறுவது கடினமானதாகும். அல் கொய்தா, அந்நியப் படைகள் இருக்கும் இரண்டு பிரதான இடங்களில் 300 மைல்களுக்கு அப்பால் சமகாலத்தில் தாக்குதல் நடத்துவதற்கான அரசியல் ஆதரவையும் போதிய அளவு அமைப்பு சக்தியையும் கொண்டுள்ளது; அல்லது ஒரே நாளில் சுயாதீனமான அவ்வாறான இரண்டு நிகழ்வுகள் நிகழக் கூடிய அளவுக்கு கர்சாய் அரசாங்கத்துக்கு பரந்த எதிர்ப்பு உள்ளது.

ஆகஸ்ட் 15ல் இருந்து எல்லாமாக 8 சிறிய குண்டு வெடிப்புகள் தலைநகரில் நிகழ்ந்ததைத் தொடர்ந்து காபுல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. செப்டம்பர் 1 அன்று முன்னாள் சோவியத் தூதரகம் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானதோடு ஜேர்மன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கத் தூரகங்களுக்கான குண்டு அச்சுறுத்தல்கள் அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உடனடியாக வழியமைத்தன. கர்சாய் அரசை பாதுகாப்பதற்காக காபுலில் நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு உதவி படையின் ஒரு பகுதியான பிரித்தானிய இராணுவ வீரர்களின் ரோந்து வண்டியை ஒரு குண்டு இலக்கு வைத்தது.

தலைநகருக்குத் திரும்பிய பின்னர், கர்சாய் சர்வதேச பதுகாப்பு உதவி படையை காபுலில் இருந்து கந்தஹர், மசார்-இ-ஷரீப், ஹேர்ட் மற்றும் ஜலலாபாத் உட்பட பல்வேறு பிரதான நகரங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளை புதுப்பித்தார். காபூலைச் சுற்றி 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 5000 இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் புஷ் நிர்வாகம் தலிபான்களுக்கும் அல் கொய்தாவுக்கும் எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு நாட்டின் ஏனைய பகுதிகளை ஒதுக்கிக் கொண்டு, மற்றைய நகரங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு உதவிப்படை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரனையை நிராகரித்தது.

காபூல், கந்தஹார் தாக்குதல்களுக்கு மணித்தியாலங்களுக்கு முன்னர், புஷ் நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய நிலைகளை மாற்றி சர்வதேச பாதுகாப்பு உதவி படையை விஸ்த்தரிக்க கருதுவதாக குறிப்பிட்டனர். பிரதி பாதுகாப்பு செயலாளர் போல் வுல்போவிட்ஸ் வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்க நிறுவனத்தில் பேசும்போது, சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை ஆப்கானிஸ்தானை சீர்ப்படுத்துவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றக்கூடும் என குறிப்பிட்டார். உள்நாட்டு இராணுவத் தலைவர்களுக்கு மத்தியில் ஆயுத முரண்பாடுகளை அடக்குவதில் ஈடுபட்டுள்ள விசேட படை துருப்புக்களுடன் செயல்படுவதற்காக, பல்வேறு பிராந்திய நிலையங்களுக்கு ஏற்கனவே அரச திணைக்கள வெளிநாட்டு சேவை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வொல்ஃபோவிட்ஸ் (Wolfowitz) வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் இந்தக் கொள்கை மாற்றமானது கர்சாயிடம் ஆதரவு தேடும் படலத்தின் பிரதிபலிப்பல்ல, மாறாக ஈராக்கிற்கு எதிரான எதிர்கால இராணுவ நடவடிக்கைக்கு தயார் செய்வதன் பேரில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிப்பாக விசேட படைகளையும் மற்றைய சிறப்பு அணிகளையும் முடிந்தளவு இயக்கமின்றி வைத்திருக்கும் அவசியத்தைக் கொண்டுள்ள பென்டகனின் நெருக்குவாரத்தின் விளைவேயாகும். கடந்த வாரம் அமெரிக்க மத்திய கட்டளை தலைவரான ஜெனரல் டொம்மி பிராங்ஸ், காபூல் நகருக்கு வெளியில் பெக்ராம் வான் தளத்தில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டின் போது "சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் விஸ்த்தரிப்புக்கான விருப்பம்" தொடர்பாக கலந்துரையாடினார்.

புஷ் நிர்வாகத்தின் தடுமாற்றமானது, அமெரிக்காவிற்கு முழுமையாக அனுகூலமாக அல்லது கீழ்படிவாக உள்ள ஒரு அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் ஒரு படைக்கு அதிக மனித வளமும் நிதியும் வழங்குவதற்கு வேறு எந்த வல்லரசுகளும் விரும்பாமையேயாகும். துருக்கி தனது ஆறாவது மாதத்தை நிறைவேற்றும் அதேவேளை, டிசம்பரில் சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைக்கு கட்டளை வழங்குவதற்காக ஒரு நாட்டைத் தெரிவு செய்வதே அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும், என வொல்ஃபோவிட்ஸ் குறிப்பிட்டார்.

உலகம் பூராவுமான அமெரிக்க இராணுவ வாதத்திற்கு பக்க பலமாக நிற்பது, என்ற பிளேயர் அரசின் கொள்கையின் அடிப்படையில், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைக்கு டிசம்பரில் இருந்து ஜூன் வரை பிரிட்டன் தலைமை வழங்கியது. ஜூனில் கட்டளை வழங்குவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் கடன் மற்றும் அமெரிக்க இராணுவ உதவியுடன் துருக்கி அரசாங்கத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டது.

எவ்வாறெனினும் 20 நாடுகளிலும் பெரும்பான்மையானவை விரல் விட்டு எண்ணக்கூடிய துருப்புக்களையே வழங்கியுள்ளமையால் அடுத்ததாக அந்த பாத்திரத்தை ஏற்கப்போவது யார் என்பது வெளிப்டையாகத் தெரியவில்லை. ஈராக் மீதான ஒருதலைப்பட்சமான அமெரிக்க தாக்குதலுக்கு ஜேர்மன் அதிபர் ஷுரோடரின் (Schroder) எதிர்ப்பு காரணமாக, பெரிய படையை கொண்டுள்ள ஜேர்மனி பொருத்தமற்றதாகக் கருதப்படக்கூடும்.



Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved