World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Nigerian factory fire kills 45 workers

நைஜீரியன் தொழிற்சாலை தீ விபத்தில் 45 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

By our correspondent
25 September 2002

Back to screen version

லாகோஸிலிருந்து 40 கிலோ மீட்டர் வடக்கிலிருக்கும் இக்கோரோடு (Ikorodu) ஒடுகுணி தொழிற்துறை எஸ்ரேற்றிலுள்ள நைஜீரியன் பிளாஸ்ரிக் தொழிற்சாலையில் -மேற்கு ஆபிரிக்கா இறப்பர் உற்பத்தி நிறுவனம்- செப்டம்பர் 15 இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தது 45 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இத் தீயானது தொழிற்சாலையின் உட்பகுதியை அழித்ததோடு அருகிலுள்ள Super Engineering Limited க்கும் பரவியது. இவ்விரு நிறுவனங்களும் ஷங்காய் மற்றும் கொங்கொங்கை அடித்தளமாகக் கொண்ட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானவைகளாகும்.

அதிகமான தொழிலாளர்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் ஊகங்கள் எழுந்துள்ளன. நைஜீரியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையின்படி தீப்பிடித்த அன்றிரவு போலிசார் 7 உடல்களையும் மறுநாள் காலையில் 37 உடல்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ராய்ட்டர் செய்தி அறிக்கையில், இரவுநேரம் வேலை செய்த தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பதாகவும், இறப்புக்கள் நூற்றுக்கணக்காக இருக்கலாம் எனவும் நைஜீரியன் உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

போலிசாரினால் இறப்புக்கள் எவ்வளவு என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சேதங்களை அகற்றும்போது மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்படலாம் என செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் போலிசாரினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கோரோடுவிலுள்ள நோவா வைத்தியசாலையில் 11 தொழிலாளர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர்கள் மோசமான எரிகாயங்களுக்கும் 4 பேர்கள் துப்பாக்கி சூட்டுக் காயங்களுக்கும் உள்ளாகியிருந்ததாக The Vanguard (Lagos) என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

BBC செய்தியறிக்கையின்படி, இத் தொழிற்சாலையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது எனவும் தீச்சுவாலைக்குள் அகப்பட்டு முண்டியடித்தவர்கள் மீது தொழிற்சாலை உரிமையாளர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தை போலிசார் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது. உரிமையாளர்களினால் சாவுக்கு தள்ளப்பட்டவர்களை மீட்க தொழிற்சாலைக்குள் உள்ளூர் குடியிருப்பாளர்களின் தலையீட்டுக்குப் பின்னரே போலிசார் தலையிட்டனர். அங்கு உரிமையாளரை கொல்ல முயற்சித்ததாகவும், அதனாலேயே தொழிற்சாலை பூட்டப்பட்டு அங்குள்ளவர்களின் மரணம் சம்பவித்தது என BBC தெரிவித்தது.

ஜெனரல் மனேஜரான M.Lai, கதவுகளைப் பூட்டியது தொடர்பாக எந்தவொரு கொள்கையும் இல்லையென நிராகரித்தார். ஆனால் பாதுகாவலர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொழிற்சாலை குடியிருப்புப் பகுதிமீது மக்கள், கற்களை வீசி கதவுகளை அடித்து நொருக்க முயற்சித்த வேளையிலேயே அவர்களை கிலி கொண்டு ஓடச் செய்ய ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ''அவர்களிடம் இரும்புக் கம்பிகளும் மற்றும் அங்கு கிடைத்த ஆயுதங்களையும் கையில் வைத்திருந்தார்கள்'' எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தபோது கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாக கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய தொழிலாளர்கள் AFP செய்தியாளரிடம் தெரிவித்தனர். ''புகை மண்டலம் சகல இடங்களிலும் பரவியிருந்ததினால் தப்பிச் செல்லுவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது எமக்கு கடினமாக இருந்தது'' என காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் 22 வயதுடைய சாயிட் அடெசினா என்ற தொழிலாளி குறிப்பிட்டார். ''நான் வளைவான படிகளினால் கீழ்ப் பகுதிக்கு இறங்கினேன். கீழே வந்தபோது அங்கிருந்த மூன்று வாசல் கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததினால் நான் வந்தவழியே போய் உயிர் தப்புவதற்காக வேறு பாதைகளைத் தேடினேன்.'' என தெரிவித்தார். அவரது பகுதியில் வேலை செய்த 40 பேர்களில் 3 பேர்களே உயிர் தப்பியவர்களாவர் என AFP செய்தியாளரிடம் மேலும் அவர் கூறினார்.

உயிர் தப்பிய இன்னொருவரான அசுக்கோ உமனா கூறுகையில், ''நான் சுத்திகரிப்பு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தேன். தீ முழு இடங்களிலும் பரவியபோது பிரதான வாயில் கதவு பூட்டப்பட்டிருந்தது. நான் மாடியிலிருந்து கீழே பாய்ந்து பிரதான வாயிற் கதவுப் பக்கம் ஓடியபோது இரும்புக் கம்பிகளாலான வாயிற் கதவு பூட்டப்பட்டிருந்து'' என்றார். ஒரு சீன குடியிருப்பாளர் தனது வீட்டிலிருந்து வந்து பலாத்காரமாக கதவைத் திறப்பதற்கு அவருக்கு உதவி செய்தார்.

கலகம் அடக்கும் போலிசார் செப்டம்பர் 18 வரை அவ்விடத்தில் தங்கியிருந்தனர். இத் துன்பகரமான சம்பவம் நிகழ்ந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் தொழிற்சாலையில் அகப்பட்டுள்ள மிகுதியான காயப்பட்டவர்கள் கிடைக்காததால் இடிபாடுகளை அகற்றும் வேலை திரும்பப் பெறப்பட்டது. ஜெனரல் மனேஜர் லீ, "சம்பவம் தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே அரசாங்கத்தின் வித்தியாசமான முகவர்கள், முரண்பாடான குற்றச்சாட்டுகளோடு அணுகினர்" என அதிகாரத்துவ சிக்கல்களை குற்றம்சாட்டினார்.

பல்வேறு வகைப்பட்ட நரகத்தனமான காரணங்கள் பிரேரிக்கப்பட்டிருந்த போதிலும், இப்போது நிழ்ந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அத்தாட்சியும் வழங்கப்படவில்லை. ''துன்பம் விளைவிக்கின்ற தொழிலாளர்களால்'' தான் தீயை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என சிடுமூஞ்சித்தனமான முறையில் கம்பெனியின் ஒரு மூத்த அதிகாரி This Day பத்திரிகைக்கு குறிப்பிட்டார்.

அப்பகுதியில் சோக உணர்வுகள் அதிகமாக காணப்படுகின்றது. போலிஸ் கமிஷனர் பொதுமக்களை அமைதிப்படுத்த மன்றாடிக் கேட்டுக் கொண்டதுடன், தொழிற்சாலையில் எப்படி தொழிலாளர்கள் அகப்பட்டுக்கொண்டார்கள் என்பது பற்றியும் மற்றும் தீப்பிடித்த சம்பவம் பற்றியும் ஒரு முழுமையான விசாரணை நடாத்தப்படும் எனக் கூறினார்.

ஐனநாயகத்துக்கு பிரச்சாரம் செய்யும் வைத்தியரான ஜோ ஒக்கை ஒடுமக்கின் என்பவர் ''இந்த அவலமான சம்பவமானது மனித உயிர்களின் மதிப்புப்பற்றி நைஜீரியா அரசாங்கத்தின் மீது அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றது. வேலைத்தளங்களில் அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் உத்தரவாதத்துக்கு உறுதிப்படுத்தப்படவில்லை'' எனக் கூறினார்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved