World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

A political strategy to oppose war against Iraq

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

Statement of the World Socialist Web Site Editorial Board
25 October 2002

Back to screen version

உலக சோசலிச வலைத் தளத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பின்வரும் அறிக்கை, அக்டோபர் 26 சனிக்கிழமை அன்று வாஷிங்டன் மாவட்டத்திலும் மற்றைய அமெரிக்க மாநகர்களிலும் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் விநியோகிக்கப்படும்.

அறிக்கையானது உலக சோசலிச வலைத் தளத்தில் PDF file ஆக துண்டறிக்கை வடிவில் கூட இருக்கிறது. இத் துண்டறிக்கையை கீழிறக்கம் செய்யுமாறும் அதனை வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஏனைய மாநகர்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் விநியோகிக்குமாறும், அதேபோல வேலைசெய்யும் இடங்களிலும், பள்ளிகள், கல்லூரிகளிலும் மற்றும் ஏனைய பொது நிகழ்ச்சிகளிலும் விநியோகிக்குமாறு நாம் எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் வேண்டுகிறோம்.

வாஷிங்டனிலும் மற்றைய மாநகரங்களிலும் அக்டோபர் 26 ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்கள், ஈராக் மீதான தூண்டப்படாத ஒரு ஆக்கிரமிப்புக்கான புஷ் நிர்வாகத்தின் திட்டங்களால் திடுக்கிட வைக்கப்பட்டுள்ள, அரசியல்வாதிகளாலும் செய்தி ஊடகங்களாலும் அலட்சியம் செய்யப்பட்டுள்ள, பத்துலட்சக் கணக்கான அமெரிக்கர்களுக்காகப் பேசுகின்றனர்.

"பரந்த மக்களை அழிக்கும் ஆயுதங்கள்" மற்றும் செப்டம்பர் 11, 2001 சோகத்தின் வேண்டுதல்கள் பற்றிய பேச்சுடன், அரசாங்கமானது போரை நியாயப்படுத்தும் பொழுது அது பொய் பேசுகின்றது என அவர்கள் அறிவார்கள். ஈராக்கிற்கு எதிராக இப்பொழுது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தாக்குதல் காலனித்துவத்தை அதன் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வடிவத்தில் புதுப்பிப்பதாகும். மிகப் பல ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள், எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதையும் பூகோள பயங்கரத்தின் அடிப்படையில் அமெரிக்க ஏகாதிபத்திய பேரரசை நிறுவுதலையும் நோக்கங்கொண்ட, ஆக்கிரமிப்புப் போரில் துடைத்து அழிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மனிதசமுதாயத்துக்கு எதிரான பயங்கரமான குற்றத்தை செய்வதிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்த விரும்புகிறார்கள். அச்சுறுத்தும் உருவில் பருத்து விரிந்து தெளிவின்றித் தோன்றுகின்ற போரில், உலகின் மிகப் பலம்படைத்த தொழில்துறை நாடு, 1991ல் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட மற்றும் அதன் பின்னர் இருந்து கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர்களின் இறப்பை விளைவித்திருக்கும் ,தொடர்ச்சியான குண்டு வீச்சுக்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ,ஆதரவற்ற நாட்டிற்கு எதிராக அதன் இராணுவ பலத்தை கட்டவிழ்த்து விடுகின்றது.

புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் ஏற்கனவே வாஷிங்டன் ஈராக்கை ஒரு அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக மாற்ற உளங்கொண்டிருக்கிறது என தெரிய வைத்திருக்கின்றனர். மேலும் அண்மைய பத்திரிக்கை அறிக்கைகள், இந்த நோக்கம் பரந்த மக்களின் படுகொலை மூலம் அடையப்படும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றன. அக்டோபர் 22 அன்று நியூயோர்க் டைம்ஸ், படைத் ளபதிகளின் இணைத் தலைமை தளபதியால், ஈராக் மாநகர்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கு, அபரிமிதமான சுடுதிறனைப் பயன்படுத்துவதற்காக அழைப்பு விடுக்கும், நகர்ப்புற யுத்தம் பற்றிய அண்மைய பத்திரத்தினை சான்றாகக் காட்டியது.

அறிக்கையானது, பெல்கிராட் மீதான அமெரிக்க வான்தாக்குதல், குரோஸ்னி (Grozny- சேச்சனிய தலைநகர்) ä ரஷ்யர்கள் வெளியேற்றல் மற்றும் ஜெனினை இஸ்ரேலியர்கள் அழித்தல் போன்ற குடிமக்கள் மீதான அத்தகைய கடந்தகால இராணுவத் தாக்குதல்களிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை ஒருங்கு திரட்டியுள்ளது. ஈராக்கிய நகர்களின் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பினை சீர்குலைக்கும் அத்தகைய "வேகமான, சுடுதிறன் மற்றும் அதிர்ச்சியுடன்" இலக்குகளை அழிக்க அல்லது கைப்பற்ற, "அபரிமிதமான பொருதும் திறனை" பயன்படுத்த வேண்டும் என்று அது அறிவிக்கிறது.

புஷ் நிர்வாகத்தின் போர் நாட்டம் மற்றும் செய்தி ஊடகத்தின் தேசிய வெறிப்பிரச்சாரம் இருப்பினும் ஈராக்கிற்கு எதிரான போருக்கு மக்கள் மத்தியில் ஆழமான மற்றும் ஆழ்ந்த எதிர்ப்பு இருக்கிறது. இருப்பினும், அக்டோபர் 26 அன்று ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்போர் முரண்கொள்ளும் மாபெரும் பணி, போருக்கு பரந்து பட்ட மற்றும் குழப்பமான எதிர்ப்பை ஒரு சக்திமிக்க சமூக ரீதியாய் நனவுள்ள அரசியல் இயக்கமாய் மாற்றுவதாகும். அமெரிக்க அரசாங்கத்தின் கொள்ளை அடிக்கும் கொள்கைக்கு அமெரிக்க மக்கள் ஆதரவளிக்கவில்லை என்று உலகுக்கு காட்டுவதற்கு, எதிர்ப்புக்கள் முக்கியமானவை மற்றும் அவசியமானவை. ஆனால் அவை போதுமானவை அல்ல.

போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒழுக்க ரீதியான திடுக்கிடலை விடவும் மற்றும் தனிப்பட்ட துணிவை விடவும் மேலும் தேவைப்படுகிறது. போரை எதிர்ப்பவர்கள் எல்லாவற்றுக்கும் முதலில் அதன் அடிப்படையாய் அமைந்திருக்கும் காரணங்களைக் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும், அந்த புரிதலின் அடிப்படையில், ஒரு வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும், அதன் மீது போருக்கு எதிரான வெகுஜன இயக்கம் தளப்படுத்தப்பட முடியும்.

ஈராக் மீதான திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்பு ஒரு ஏகாதிபத்தியப் போராகும். இறுதி ஆய்வில், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உள்ளே மேற்கொள்ளப்படும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதே கார்ப்பொரேட் பொருளாதார நலன்கள்தான் அயல்நாடுகளில் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னே நிற்கின்றன.

ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே முதலாளித்துவ வர்க்கத்தின் மிக சக்திமிக்க பகுதிகளால் பின்பற்றப்படும் வர்க்க நலன்களின் பூகோள வெளிப்பாடாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது. முழு சமுதாயமும் செல்வர்கள் குழு ஆட்சியால் ஆளப்படும் நிலையை வர்க்க சலுகையானது அடைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, மிக அண்மைய புள்ளிவிவரங்களின் படி, அமெரிக்காவில் உள்ள 13,000 செல்வந்த குடும்பங்கள் கிட்டத்தட்ட மிக ஏழ்மை மிக்க 20 மில்லியன் பேர் கொண்டிருக்கும் வருமானத்தைப் போன்ற வருமானத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த 13,000 குடும்பங்கள் சராசரி குடும்பங்களை விடவும் 300 மடங்கு வருமானங்களைக் கொண்டிருக்கின்றன. மேலும் கடந்த முப்பது வருடங்களாக, உயர் மட்ட 100 தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) சராசரி உண்மையான ஆண்டு இழப்பீட்டுத் (Annual compensation) தொகை 1.3 மில்லியன் டாலர்களில் இருந்து --ஒரு சராசரி தொழிலாளியின் சம்பளத்தைப் போல 39 மடங்கு-- 37.5 மில்லியன் டாலர்களாக ஆகியிருக்கிறது, இது சாதாரண தொழிலாளியின் சம்பளத்தை விடவும் 1000 மடங்குகளாகும்.

செல்வத் திரட்சியுடன் சேர்ந்து அமெரிக்க ஜனநாயகத்தின் பாரம்பரிய வடிவங்கள் மற்றும் ஸ்தாபனங்களில் ஆழ்ந்த சீரழிவு வந்திருக்கிறது. முடிவில், பொருளாதார வழிகளில் அந்த அளவு தெளிவாக பிளவுண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஜனநாயகமானது உயிர் பிழைத்திருக்க முடியாது. மாபெரும் பரந்த மக்கள் --தொழிலாள வர்க்கம்-- அரசியல் வாழ்க்கையில் எந்த வகையிலும் உண்மையாகப் பங்குகொள்வதிலிருந்து படிமுறை ரீதியாய் விலக்கப்பட்டிருக்கிறது, இருந்தபோதிலும் இரு கட்சிகள் செல்வந்தர்கள் மற்றும் அதிஉயர் பணக்காரர்களின் பாதுகாவலர்களாக, என்றும் இல்லா அளவில் மிகவெளிப்படையாக வெளிப்பட்டிருக்கின்றனர்.

கார்ப்பொரேட் செல்வத் தட்டினரின் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டிற்கும் இடையிலான சீரிய அரசியல் வேறுபாடுகள் இல்லாமைக்கான விவரம் இதுதான். "தேசிய நலன்களின்" அனைத்து முக்கிய பிரச்சினைகள் பற்றியதில், அதாவது, முதலாளித்துவ வர்க்கத்தின் பூகோள நலன்களில், இரு கட்சிகளும் பொது வாத ஆதாரத்தைக் கொண்டிருக்கின்றன.

அரசியல் மோசடி மூலம் ஜனாதிபதி ஆன ஜோர்ஜ். டபிள்யு. புஷ்-க்கு ஜனநாயகக் கட்சியானது முன்னர் என்றுமிருந்திரா போர் தொடுக்கும் அதிகாரங்களை வழங்குதற்கு வாக்களித்திருக்கிறது. டாஷ்லே (Daschle), ஜெபார்ட் (Gephardt) மற்றும் அவர்களது காங்கிரஸ் குழுவினரின் கரங்கள், புஷ், செனி மற்றும் ரம்ஸ் பீல்ட் ஆகியோரின் கரங்களைப் போல இரத்தக் கறைபடிந்து இருக்கின்றன.

உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, குடியரசுக் கட்சியினருக்கு ஒரு மாற்றீடு ஜனநாயகக் கட்சி என்ற நம்பிக்கையை விட மாபெரும் தவறு வேறு இருக்கமுடியாது. இது முந்தைய போர் எதிர்ப்பு இயக்கங்களின் தீர்க்கமான அரசியல் படிப்பினை ஆகும். வியட்நாம் போருக்கு எதிரான வெகுஜன இயக்கம் இறுதியில் மற்றும் துன்பகரமாக அமெரிக்க இராணுவ வாதத்தை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது ஏனென்றால் அதற்கு உருப்படியான ஒரு அரசியல் முன்னோக்கு பற்றாக்குறையாக இருந்தது. ஜனநாயகக் கட்சி மீதான பிரமைகள் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை பாதுகாப்பாக முதலாளித்துவ அரசியலின் மற்றும் இரு கட்சி முறையின் வாய்க்கால் வழிக்குள் வைக்கிறது.

வியட்நாம் போர் முடிந்த சில ஆண்டுகளுக்குள்ளே, கார்ப்பொரேட் செல்வத் தட்டுக்களும் அதன் இரு கட்சிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தன, அது ஒரு புறம் தொழிற்சங்க உடைப்பு, சம்பள வெட்டு மற்றும் சமூக வேலைத் திட்டங்களில் பழுதாக்கும் குறைப்புக்கள் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது, மற்றும் மறுபுறம் பெரு முதலாளிகள் மற்றும் செல்வந்தர்களுக்கான பெரும் வரி முறிவுகளால் குறிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சமூக சமத்துவமின்மை 1920 களின் பின்னர் காணப்படாத மட்டங்களுக்கு திரும்பியது.

இதற்கிடையில், அன்றாட வாழ்வின் மட்டத்திற்குக் கீழே, வெகுஜனங்களின் கோபம் மற்றும் உள்ளக் கொதிப்பு அரசியல் மேற்கட்டுமானத்தில் எதிரொலிப்பைக் காணாதிருப்பினும், என்றுமில்லா அளவு அதிகமாய் உக்கிரத்துடன் வளர்கிறது.

ஏகாதிபத்தியப் போர் மற்றும் இராணுவவாதத்தின் எதிர்ப்பாளர்கள், இந்த மாபெரும் சமூக சக்தி -- அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம்-- முதலாளித்துவ ஆளும் தட்டினை விடவும் அதிக பலமுள்ளதாக இருக்கிற ஒரு சக்தி பக்கம் கட்டாயம் திரும்பவேண்டும்.

தொழிற்சாலைகளில், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பத்துலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களின் உயிர் வாழ்க்கைக்காக தங்களின் சம்பளம் மற்றும் சம்பளக் காசோலைகளில் தங்கி இருக்கின்றனர் --இந்த பெரும்சக்தியானது உத்தியோக ரீதியான சமுதாயம் மற்றும் இருகட்சி அமைப்புமுறையால் விலக்கப்பட்டு இருப்பதன் காரணமாக, அதன் குரல் அறியப்படாதிருக்கிறது. ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் எதிராக அர்களிடமிருந்து சுதந்திரமாக, மற்றும் வர்க்க சலுகையின் முழு அமைப்பு முறைக்குமான எதிர்ப்பில் --தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டல், ஏகாதிபத்திய போருக்கும் இராணுவ வாதத்திற்கும் எதிரான சர்வதேச இயக்கத்தின் அபிவிருத்திக்கான அடித்தளமாக கட்டாயம் ஆகும்.

போருக்கு எதிரான போராட்டம் எரியும் பிரச்சினைகளான வேலைகள், வாழ்க்கைத் தரங்கள், கல்வி, சுகாதார சேவை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்கின்ற சோசலிச வேலைத்திட்டத்துடனும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தல் மற்றும் பாதுகாத்தல் இவற்றுக்கான போராட்டத்துடனும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அதன் மைய அர்ப்பணிப்பு சமூக சமத்துவத்திற்கான போராட்டமாக கட்டாயம் இருக்க வேண்டும்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எமது சக சிந்தனையாளர்கள் அத்தகைய இயக்கத்தைக் கட்டுவதற்கான அரசியல் மற்றும் புத்திஜீவித கருவியாக உலக சோசலிச வலைதளத்தை அபிவிருத்தி செய்திருக்கின்றனர். ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த இயக்கத்தைக் கட்டி எழுப்புதற்காக நாம் பின்வரும் கோட்பாடுகளை வழங்குகிறோம்:

1) தொழிலாள வர்க்கத்தை பிரதான மற்றும் தலைமை சக்தியாக அணிதிரட்டல். ஆர்ப்பாட்டத்திற்காக வாஷிங்டனுக்கும் ஏனைய நகரங்களுக்கும் வந்திருக்கிறவர்கள் சக்திமிக்க போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்புதற்கு கட்டாயம் திரும்ப வேண்டியது இவர்கள் பக்கம்தான். ஜனநாயகக் கட்சியினர் பக்கம் அல்ல, ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் பக்கம் அல்ல, அல்லது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள துரோகத்தனமான தேசியமுதலாளித்துவ வர்க்க தலைவர்கள் பக்கம் அல்ல.

2) அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வழிகாட்டும் கோட்பாடாக சர்வதேசியம். ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் பொது எதிரிக்கு எதிராக அனைத்து நாடுகள், மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாக கட்டாயம் நடத்தப்பட வேண்டும் மற்றும் கருக்கொண்டாக வேண்டும். அது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் எதிர்க்க வேண்டும்.

3) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினருக்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். ஏகாதிபத்தியப் போருக்கு, இராணுவ வாதத்துக்கு மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துதற்கு ஒரு புதிய அரசியல் இயக்கத்தை --அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியையும் உலகம் முழுவதிலும் நான்காம் அகிலத்தையும்-- கட்டி எழுப்புதல் அவசியமானதாகும்.

இந்த இயக்கத்தைக் கட்டி எழுப்புதற்கான பிரதான ஆயுதம் உலக சோசலிச வலைத் தளம் ஆகும். ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறு நாம் வேண்டிக் கொள்கிறோம். கட்டுரைகளை வழங்குங்கள், எமது அறிக்கைகளை கீழிறக்கம் செய்து விநியோகியுங்கள், எமது வாசகர்களை விரிவாக்குதற்கு உதவுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியில் சேருங்கள் மற்றும் அதனை தொழிலாள வர்க்கத்தின் புதிய தலைமையாக ஆக்க உதவுங்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved