World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

CIA death squads operating in Iraq

ஈராக்கில் செயல்படும் சிஐஏ-கொலைப்படைகள்

By Henry Michaels
8 April 2003

Back to screen version

ஈராக் போர் நீடித்துக்கொண்டே போகுமானால், புஷ் நிர்வாகமும், அதன் கூட்டாளிகளும், ஓர்வலியன் (Orwellian) பாணியில் தலைகீழ் புரட்டுக்களைச் சொல்லுவார்கள், மிக மோசமான இரகசியமான முறைகளை கையாளுவார்கள். அமெரிக்கா தலைமையில் நடைபெற்றுவரும் படையெடுப்பை எதிர்த்து நிற்கின்ற ஈராக்கியர்களை ஜனாதிபதி புஷ் மற்றும் அவரது அதிகாரிகள் அவர்களை "பயங்கரவாதிகள்" என்றும், "கொலைப் படைகள்" என்றும் சித்தரித்துக்காட்டுகிறார்கள். அதே நேரத்தில் ஈராக் தலைவர்களையும் மற்றும் அமெரிக்கா அந்த நாட்டை பிடித்துக்கொள்வதையும் எதிர்ப்பவர்களை கொலை செய்வதற்கு சிஐஏ-மற்றும் சிறப்புப் படைகளின் கொலைக்காரக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

வெள்ளை மாளிகையும், மற்றும் பென்டகனும், குறிப்பிடுகின்ற மொழியில் சொல்வதென்றால் சீருடை அணியாத பல்லாயிரக்கணக்கான ஈராக் குடிமக்கள் அவர்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், பகுதி இராணுவ உறுப்பினர்களாக இருந்தாலும், அல்லது போர் வீரராக இருந்தாலும் ஆக்கிரமிப்புப் படைகளை ஏதாவதொரு வகையில் எதிர்த்து நின்றால், அவர்கள் "போர் குற்றவாளிகள்" ஆவர். ஆனால், இரகசியமாக ஈராக் முழுவதிலும் சீருடையணியாமல் சுற்றிக்கொண்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டு திரிகின்ற அமெரிக்காவின் தாக்குதல் படைகள் மற்றும் இதர இராணுவ - புலனாய்வு அதிகாரிகள் ஜனநாயகத்திற்கும் விடுதலைக்கும் போராடும் "நாயகர்கள்".

அமெரிக்க கொலைகாரர்களது நடவடிக்கைகளை பெரும்பாலும் மேலை நாட்டு செய்தி ஊடகங்கள், இருட்டடிப்பு செய்துவிடுகின்ற அதேவேளை, சென்ற வாரம் கனடாவின் நேஷனல் போஸ்ட் பத்திரிகையில், சிறிய அளவில், செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க கடற்படைப் பிரிவு, தெற்கு பாக்தாத்தை அடைந்த நேரத்தில், சீருடையணியாத சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவுகள் நடமாடியதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ``சிறப்பு படைகள் ஏராளமாக, தங்களது தனித்தன்மை கொண்ட ஆயுதங்களுடன், பேஸ் போல் தொப்பிகளுடன், ஜீன்சுடன் விலை உயர்ந்த கண் கண்ணாடிகளுடன், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன்`` - நடமாடியதாக அந்தப் பத்திரிகை எழுதியிருக்கின்றது.

தங்களது நாட்டைப் பாதுகாக்கும் ஈராக்கியர்களுக்கும் பெரும்பாலும் சீருடை இல்லா உடைகளில் இரகசியமாக இயங்கும் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலிய சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவுகளுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடு ஒன்று உள்ளது. பதுங்கித் தாக்குவதற்கு தொலைவிலிருந்து சுடுவதற்கு மற்றும் திடீர் குண்டு வீச்சுக்களுக்காக நேச இராணுவத்தினரை முறைமையாக ஈராக்கியர்கள் குறிஇலக்காக வைக்கின்ற அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான படைகள் சட்ட விரோதமாக குடிமக்களையும் அரசாங்க நபர்களையும் வேட்டையாடுகின்றனர், குடிமக்களது வாய்ப்பு வசதிகளை அழிக்கின்றனர் மற்றும் கிளர்ச்சிகளை நிறைவேற்றுதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் குண்டர்களை ஆயுதபாணியாக்குகிறார்கள், போர் தொடர்பான சர்வதேச சட்டங்களை அவமதிக்கின்றனர்.

பரவலாக, ஈராக் மக்களிடையே எதிர்ப்பு உருவாகி வருவதால், இந்த "மரபுவழி அல்லாத போர்" நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், பல மாதங்களாக அவை நடைபெற்று வந்திருக்கின்றன. ஈராக் மீது புஷ் போர் பிரகடனத்தை வெளியிடும் முன்னர், அமெரிக்க புலனாய்வு மற்றும் இராணுவ செயல் இயக்கிகள், சதாம் ஹூசேனையும் மற்ற தலைவர்களையும் கண்டுபிடித்து கொலை செய்யும் நோக்கத்தில் பாக்தாத்திலும் ஈராக் முழுவதிலும் நடமாடிக் கொண்டிருந்தனர். ஈராக்கின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், பிரிட்டனின் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறப்பு விமான சேவைகளைச் சார்ந்த அதிரடிப்படை வீரர்கள் (SAS) நடமாடிக் கொண்டிருந்தனர்.

புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ``யுனைடட் பிரஸ் இண்டர்நேஷனல்`` (UPI)-செய்தி நிறுவனம் சென்ற வாரம், வெளியிட்டிருந்த ஒரு தகவலில், மார்ச்-20-அன்று, சதாம் ஹூசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை குண்டு வீசி கொலை செய்வதற்கான முயற்சி தோல்விக்கு, சிஐஏ- முகவர்கள் பாக்தாத்திற்குள் தீவிரமாக ஊடுருவி ஈராக்கில் ஒற்றர்களை பணியில் சேர்த்தது மற்றும் சிறப்பு நடவடிக்கை துருப்புக்களை ஈராக் தலைநகருக்குள் ஊடுருவச் செய்தது ஆகியன முந்திய நிகழ்வாய் இருந்தன.

``UPI-வெளியிட்டுள்ள தகவலின்படி மார்ச்-20-ந் தேதி நடவடிக்கையில், 300-க்கு மேற்பட்ட சிறப்பு படைகள், டெல்டா துருப்புக்கள் மற்றும் சிஐஏ துணைநிலை இராணுவத்தோடு சேர்ந்துகொண்டதாக இந்த புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன. நீண்ட காலமாக, சிஐஏ-யில் பணியாற்றி வந்த ஒரு முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ள தகவலின்படி, டெல்டா துருப்புக்கள் ஏற்கனவே ஈராக்கில் இருந்தன. முக்கியமான பாக்தாத் தொலை தகவல் மையத்தில் ஊடுருவி, பைபர் ஆப்ஃடிக் தொலைபேசி தொடர்பை ஒட்டுக்கேட்டு, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கு வழி அமைத்துக் கொடுத்தது இந்த டெல்டா துருப்புக்கள் தான்`` என்று அந்த முன்னாள் சிஐஏ-அதிகாரி தெரிவித்தார்.

ஒரு முன்னாள் மூத்த சிஐஏ-அதிகாரியின்படி, "அமெரிக்க இரகசிய குழு சதாம் ஹூசேனையும், மற்ற முன்னணித் தலைவர்களையும், டோரா பண்ணையில் கண்டுபிடிக்கவும் ஈராக்கின் இராணுவ தலைமை மற்றும் கட்டுப்பாட்டு வளாகத்தை கண்டுபிடிக்கவும் மற்றும் சட்டபூர்வமான போர் இலக்கை கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது இந்தத் தகவல்தான்" சிஐஏ-நியமித்த இந்த ஈராக்கின் ``சொத்துக்கள்`` (உளவாளிகள்), தொலைபேசி இயக்கமுறை மற்றும் டோரா-பண்ணை விபரங்கள்`` பற்றி 'விலை மதிக்க முடியாத' ஒரு தகவலை தந்ததன் மூலம் முக்கிய பங்குவகித்தனர்."

``ஈராக் அரசாங்கத்தை "செயல் இழக்க செய்வதில்" தவறியதைத் தொடர்ந்து வாஷிங்டனின் உயர் நோக்கங்களில் ஒன்றாக அதுபோன்ற நடவடிக்கைகள் நீடிக்கவே செய்கின்றன. சிஐஏ-துணை இராணுவ குழுக்கள், டெல்டா படைகளுடன் இன்னமும் ஈராக்கிற்குள் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள், ஈராக் பெதாயின்களை ஆணையிட்டுக் கொண்டிருக்கும் சதாம் ஹூசேனின் மற்றொரு மகனான உதய் உட்பட 30-முன்னணி ஈராக் தலைவர்களை, கொலை செய்வதற்கு முயன்று வருகின்றன என்று பல அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன. முப்பது இலக்குகளின் தொலைபேசி எண்கள், செல் தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் பெயர்கள் அமெரிக்க புலனாய்வு துறைக்கு கிடைத்திருப்பதாக ஒரு நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தினார்.``

சென்ற புதன் கிழமையன்று சிஐஏ-தகவலின் அடிப்படையில், ஹெலிகாப்டர் பிரிவு ஒன்று, தார்தார் அரண்மனையில் (Tharthar Palace) திடீர் தாக்குதல் நடத்தியது. பாக்தாத்திற்கு வெளியில் 55-மைல் தொலைவில் உள்ள, அந்த அரண்மனை சதாம் ஹூசேனும் அவரது புதல்வர்களும் பயன்படுத்தும் பல வீடுகளில் ஒன்று என கூறப்படுகின்றது.

சிஐஏ-துணை இராணுவம் மற்றும் சிறப்பு படையினர் நடத்திவரும் ரகசிய வெளியில் தெரியாத போர் பற்றி, கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர், வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ஓய்வுபெற்ற அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல், ஜோன் ரெப்பேர்ட் (John Reppert) கருத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டிருக்கிறது: ``தற்போது, அதுதான் நிச்சயமாக மூலோபாயம். தலையைத் துண்டித்து வேறாக்கல் (Decapitation) ஒரு மூலோபாயம் என்ற வகையில் சதாம் ஹூசேனுக்கு பின்னாலும் நன்கு செயல்படும். அந்த மூலோபாயத்தினால், அவரது புரட்சி குழு, அவரது பாத் கட்சி தலைவர்கள் மற்றும் அதற்கு கீழே பணியாற்றிக் கொண்டுள்ள நான்கு டிவிசன்கள், குடியரசுக் காவற்படை மற்றும் ஒரு சிறப்பு குடியரசு காவற் பிரிவு ஆகியவை முடமாக்கப்பட வேண்டும்`` என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

இந்த விமர்சனங்கள் கருத்துரைப்பது போல, ஈராக் தலைமைக்கு அப்பாலும் இலக்குகளின் எல்லைகள் விரிந்துகொண்டே செல்வதாக தெரிகிறது. நஜாப் நகரத்திலிருந்து நேரடி செய்தி ஒன்றை ``லண்டன் பைனான்சியல் டைம்ஸ்`` - ஏப்ரல் ஐந்தாம் தேதி வெளியிட்டிருந்தது. அந்த செய்தி நகரப் பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றிய மங்கலான விளக்கத்தை கொடுத்திருக்கிறது. ``நஜாப் மக்கள் இந்த வாரம் அவர்களது புதிய அரசாங்கத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர் - இதுவரை யாரும் அறியாத, எதிர்க்கட்சிக்குழு ஒன்று அனைத்து ஈராக்கியர்களின் பிரதிநிதி என்று தன்னை சொல்லிக்கொண்டு, அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் வாகனங்களில் தெருக்களை சுற்றி வந்துகொண்டு இருக்கிறது. ஈராக் ஆட்சிக்கு எதிராக தன்னிச்சையாக கிளர்ந்து எழுந்த 'இண்டிபாடா' என்று தன்னை காட்டிக்கொள்ள பெரும் முயற்சி செய்து வருகிறது."

``இந்தக் குழு ஈராக் தேசீய ஒற்றுமை கூட்டணி (ICNU)- என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் தங்களது அமெரிக்க வாகனங்களில் இருந்தும், மற்றும் சிறப்புப் படை வாகனங்களிலிருந்தும் கீழே இறங்குவதில்லை. மிக அபூர்வமாகத்தான் கீழே இறங்குகிறார்கள். ஆயுத வாகனங்கள் உச்சியிலிருந்து கேமராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள், தங்களது ஆயுதங்களை மேலே உயர்த்தி வெற்றிக்கு அடையாளம் என்று காட்டுகிறார்கள். ICNU-விற்கும் அமெரிக்க தரைப்படைகளுக்கும் இடையே நஜாப் நகரில் ஒருங்கிணைப்பு இறுக்கமாக உள்ளது. இந்த ஒருங்கிணைப்பை சிறப்புப் படைகள் மற்றும் சிஐஏ-இயக்கிகள் நடத்தி வருகிறார்கள்.``

அப்படியிருந்தும் அந்தப் பத்திரிகை ICNU-வும் அதனை ஊக்குவிப்பவர்களும், நஜாப் நகரை கீழ்ப்படுத்துவதற்கு தவறிவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. நஜாப் நகரில் ஷியா முஸ்லீம்களின் புனித ஸ்தலங்கள் நிறைந்துள்ளன. அமெரிக்கப் படைகள் பகல் நேரத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றன, இரவு நேரத்தில் விலகிக்கொள்கின்றன. பசியுடன் திரியும் கூட்டங்கள் பொருட்களை சூறையாடுவது சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கப் படைகளை ஆக்கிரமிப்புப் படைகள் என்று கருதுவதால் ஷியா மதத் தலைவர்கள் அமெரிக்க தளபதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டனர்.

வேறு பகுதிகளில், வடக்கு குர்து பகுதிகள் உட்பட கூட்டணி படைகளைச் சார்ந்த சிறப்பு படை வீரர்கள், மலை ஜாதி மக்களது தலைவர்களுக்கு, இனங்கள் அடிப்படையில் அமைந்த குடிப்படைகளுக்கு மற்றும் உள்ளூர் முரடர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள், ஆயுதங்களையும் தருகிறார்கள். ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சிக்கு எதிராக போரிடுவதற்கு இலட்சக்கணக்கான டொலர்களை சிஐஏ ஆனது பிராந்திய யுத்தப் பிரபுக்களுக்கு வழங்கியதைப் போன்ற அதே நடைமுறையை, தற்போது ஈராக்கிலும் கடைபிடித்து வருகிறார்கள். "எண்பது இறாத்தல் கோணிப்பையில், 100-டொலர் நோட்டுக்களை நிரப்பி சிலரை நாம் விலைக்கு வாங்கினோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்". "நிச்சயமாய் இப்போதும் அப்படி சிலரை விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறோம்" என்று முன்னாள் சிஐஏ-தலைமை அதிகாரி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

போர் தொடங்குவதற்கு முன்னர், சிஐஏ-மற்றும் எம்-16-என்ற பிரிட்டனின் உளவு அமைப்பு, ஆகியவற்றின் வலைப்பின்னல்கள் மூலம் ஈராக்கில் பணம் கொடுக்கப்பட்டது. ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகளை உருவாக்குவதற்காக, பெருமளவில் பணம் வழங்கப்பட்டது. இதுவரை அத்தகைய முயற்சிகளுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.

பென்டகன் பேட்டியில் மூடி மறைக்கும் முயற்சி அம்பலம்

ஏப்ரல்-4-ந் தேதி பென்டகன் செய்தி ஊடக அறிவிப்பில், இராணுவ மேஜர் ஜெனரல், ஸ்ரான்லி மேக்கிறிஸ்டால் (Stanley McChrystal), அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் சிறப்புப் படைகளின் பங்கு வரலாறு காணாதது என்று பெருமையடித்துக் கொண்டார். மற்றொரு மூத்த அதிகாரி தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் தெரிவித்த தகவலின்படி, ஈராக்கில் 10,000-த்திற்கு மேற்பட்ட சிறப்பு நடவடிக்கை வீரர்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். வியட்நாம் போருக்குப் பின்னர் இதுதான் அத்தகைய சிறப்பு நடவடிக்கை வீரர்கள் அதிக அளவில் கலந்துகொள்ளும் போர்.

ஒரு பத்திரிகையாளர் கீழ்கண்ட கேள்வியை எழுப்பியபோது, உண்மைகளை அம்பலப்படுத்தும் கருத்து பரிவர்த்தனை ஒன்று நடைபெற்றது:

``ஒரு அம்சத்தை நாங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் உதவ முடியுமா? -'போர்க் குற்றவாளிகள்' என்ற அடையாளச் சின்னத்தை, குத்துவதற்கு நிர்வாகம் கூறிவருகின்ற வாதங்களில் ஒன்று? ஈராக்கியர்கள், பல்வேறு முறைகேடான நடைமுறைகளை கடைபிடிப்பதை நிர்வாகம் பார்த்திருக்கும் என்பது தெளிவாகிறது. அவற்றில் ஒன்று குறிப்பாக எனக்கு புதிராக உள்ளது. அவர்கள் தங்களது சீருடைகளை கழற்றி எறிந்துவிட்டு, சாதாரண உடுப்பில் சிவிலியன் உடைகளில் சண்டையிடும்போது, அது ஏன் போர்க் குற்றமாகிறது? அமெரிக்க சிறப்புப் படைகள் அதை செய்கின்றதினாலா, மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்ததினாலா. அவர்கள் அதேவழியில் செயல்படவில்லையா? ஆனால், சீருடையில்லாமல் போர் புரிவது ஏன் போர்க் குற்றமாக கருதப்படுகிறது?``

மேக் கிறிஸ்டால் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அவர் குழப்பம் அடைந்தார். அமெரிக்க வீரர்களுக்கும், ஈராக்கிய குடிமக்களுக்கும் இடையே வேறுபடுத்தி காட்ட அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சர், டொனால்ட் ரம்ஸ்பீல்டின் பிரதிநிதி விக்டோரியா கிளார்க் (Victoria Clarke), சட்டென்று குறுக்கிட்டு அந்த வகையான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

``இந்த கேள்வியை, உண்மையில் நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதைப் பற்றி சரியாக கேட்கவில்லை`` -என்று அவர் அந்தப் பத்திரிகையாளருக்கு பதிலளித்தார். சிறிது நேரம் மெளனம் நிலவியது. பென்டகன் பின்னர் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் என்று கிளார்க் குறிப்பிட்டார்.

சதாம் ஹூசேனையோ அல்லது மற்ற மூத்த ஈராக் தலைவரையோ கண்டுபிடித்தால், என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அமெரிக்கப் படைகளுக்கு "சிறப்பு கட்டளைகள்" எதுவும், பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, என்று மற்றொரு பத்திரிகையாளர் கேட்டார். கிளார்க் உடனடியாக தலையிட்டு, ``நீங்கள் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை`` -என்று மேக்கிறிஸ்டாலுக்கு தெரிவித்தார்.

செய்தியாளர்கள் பேட்டி முந்ததும், அதிகாரிகள் சில விபரங்களை தந்தனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க சிறப்பு படைகள் "சீருடை அணிந்திருப்பதாக", அவர்கள் கூறினர். ஆனால், அவை முழு சீருடையா, அல்லது திருத்தப்பட்டதா என்ற விபரத்தை சொல்ல மறுத்துவிட்டனர். தங்களது, அதிகாரிகளும், மற்றும் இராணுவத் தலைவர்களும்தான், ஈராக்கில் போர் குற்றங்களை புரிந்துகொண்டு வருகிறார்கள் என்ற கூர்த்த விழிப்புணர்வு நிர்வாகத்தில் உள்ளது என்பதை, கிளார்க் திடீர் என்று செய்தியாளர்கள் பேட்டியில் குறுக்கிட்டது காட்டுகிறது.

ஈராக்கில் சிஐஏ-பயன்படுத்தும் நடைமுறைகள், ஈரானில் மன்னர் ஷா-வின் கொடுங்கோன்மை ஆட்சியை, 1953-ம் ஆண்டு, நிறுவுவதற்கு சிஐஏ-ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை, வியட்நாமில் நடத்தப்பட்ட படுகொலைத்திட்டம் -"ஆபரேஷன் போனிக்ஸ்" ("Operation Phoenix"), மற்றும் சிலி நாட்டில், 1973-ம் ஆண்டு, அலன்டே ஆட்சி கவிழ்க்கப்பட்டது போன்று எவ்வளவு பயங்கரமானது என்பது விரைவில் அம்பலத்திற்கு வரும். இவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களில் ஒரு சிலவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved