World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Quetta massacre: sectarian violence on the rise in Pakistan

குயெட்டா படுகொலை: பாகிஸ்தானில் குழு வன்முறை அதிகரிக்கின்றது

By Deepal Jayasekera
2 August 2003

Back to screen version

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள பலூச்சிஸ்தான் மாகாண தலைநகரான குயெட்டாவில் ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற குழுப் படுகொலைகள் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பாகிஸ்தானின் மோசமான குழுப் படுகொலைகளில் ஒன்றாக இருக்கின்றது.

ஜூலை 4-ந்தேதி வெள்ளிக்கிழமை நண்பகலில் 2000-க்கு மேற்பட்ட பக்தர்கள் அஸ்னா-அல்-அஷாரியா மசூதியில் தொழுகைக்காக திரண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய மூன்று பேர் அந்த மசூதிக்குள் புகுந்து வெடிகுண்களை வீசி துப்பாக்கி பிரயேகம் செய்தனர். இதில் குறைந்தது 53-பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கி ஏந்திய ஒருவர் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்ற இருவரும் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டனர். குயெட்டா நகரில், ஷியா (Shiite) பிரிவினர்கள் வழிபாடு நடத்துகின்ற பிரதான மசூதிகளில் அது ஒன்றாகும்.

பாகிஸ்தான் பிரதமர் ஜபருல்லாகான் ஜமாலி உடனடியாக இந்தியா மீது தனது குற்றச்சாட்டை தெரிவித்தார். "வெளிநாட்டவர் சம்மந்தப்பட்டிருப்பதாக" கிடைத்திருக்கும் சான்றுகள் கோடிட்டு காட்டுவதாகக் குறிப்பிட்டார். ஏனையோர் பாகிஸ்தான் இராணுவம் அல்லது இராணுவ புலனாய்வு அமைப்பின் மீது பழிபோட முயன்றனர்.

முன்னணி ஷியா மதபோதகர் அல்லாமா சஜித் நக்வி இந்த வாரம் ஒரு பேட்டியில் இராணுவ நிர்வாகம் மாகாணத்தில் அராஜகத்தையும் குழப்பத்தையும் உருவாக்குவதற்காக இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பலூச்சிஸ்தானில் இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் முக்தாஹிதா மஜிலிசே அமல் (MMA) என்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாத கூட்டணியில் நக்வி ஒரு பகுதியாக இருக்கிறார்.

ஆனால் இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் லஷ்கார்-இ-ஜாங்வி (LEJ) என்கிற தீவிரவாத சுன்னி (Sunni) பிரிவினரின் தீவிரவாத அமைப்பு என கருதப்படுகிறது. LEJ, ஷியா இனத்தவர்கள் மீது பல்வேறு குழுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பொறுப்பாகும். இந்த அமைப்பு 1996-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் சிப்பாயி சஹாபா (SSP) அமைப்பின் ஒரு இராணுவ பிரிவாக இது உருவாக்கப்பட்டது. இந்த SSP பாகிஸ்தானை சுன்னி பிரிவு தத்துவ சாயல் உள்ள நாடாக மாற்றுவதற்கு முயலுகின்றது.

ஜூலை 15-அன்று குயெட்டாவில் உள்ள பிபிசி நிருபர்களுக்கு கிடைத்த வீடியோ டேப்பும் கடிதமும் அந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை அடையாளம் காட்டுகின்றது. மூவரும் LEJ உறுப்பினர்கள் என அடையாளம் காட்டுகின்றது. அவர்களில் ஒருவர் ஷியா பிரிவினருக்கு எதிரான கண்டனங்களை பொழிந்தார். அந்தக் கடிதத்தில் LEJ பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. அஸ்னா-அல்-அஷாரியா மசூதியில் தாக்குதல் நடத்தியது மற்றும் குயெட்டாவில் போலீஸ் பயிற்சி பெற்றவந்த 12-ஷியாக்களை ஜூன் 8-ந்தேதி சுட்டுக்கொன்றது உட்பட வரிசையாய் குழுத்தாக்குதல்களை LEJ நடத்தியதாக அந்தக் கடிதம் கூறுகின்றது. ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கின்ற வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த கடிதம் தெரிவிக்கின்றது.

பிபிசி-தந்திருக்கும் தகவல்களின்படி வீடியோ டேப்பில் இடம்பெற்றுள்ளவர்கள் மசூதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது புகைப்படத்திற்கு பொருந்திவருகிறது. கொல்லப்பட்ட அவர்களது இரத்தம் தோய்ந்த முகங்கள் உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நாள் போலீசார் மூவரில் இருவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் ஆனால் LEJ படைக் குழுவுடன் அவர்களின் தொடர்பு பற்றி சரிபார்த்து வருவதாகத் தெரிவித்தனர்.

LEJ-வும், இதர வெறி கொண்ட சன்னி குழுக்களும், பாகிஸ்தானில் இதுபோன்ற குழு வன்முறைகளை நடத்திய வரலாறு இருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ தலையீட்டின் காரணமாகவும், பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகளை அமெரிக்காவின் CIA மற்றும் FBI முகவர்கள் வேட்டையாடி வருவதாலும் இந்தப் பதட்டங்கள் தூண்டி விடப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானில் உள்ள ஷியாக்களில் பலர் தனித்தன்மைகொண்ட ஹசாரா (Hazara) இனக்குழுவிலிருந்து வந்தவர்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏழ்மை நிறைந்த மற்றும் இடருக்கு ஆளாகி வரும் சிறுபான்மை இனக்குழுவே ஹசாரா ஆகும். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கும் ஹசாரா குழுக்களுக்கும் இடையில் கடுமையான பகை நிலவியது. 1997-ம் ஆண்டு மஜார் -இ- ஷெரீபில் தலிபான் கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஹசாராக்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. அடுத்த ஆண்டு தலிபான் அந்த நகரத்தை பிடித்துக்கொண்டதும், மஷார் இ-ஷெரீபில் ஹசாராக்கள் படுகொலை பழிவாங்கலகளுக்கு ஆளாகினர்.

தலிபான் ஆட்சியை கவிழ்த்த வடக்கு அணியின் பகுதியாக பல ஹசாரா அமைப்புக்கள் இணைந்துள்ளன. தலிபான் ஆட்சி பஸ்துன் மலைவாழ் இனத்தின் மத்தியில் அவர்களை பிரதானமான அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது. வாஷிங்டனின் தூண்டுதலால் அமைக்கப்பட்ட காபூல் ஆட்சி-யில் இடம்பெற்றுள்ள மூன்று துணைத்தலைவர்களில் ஒருவரான உஸ்தாத் கரீம் கலீல் ஹசாராக்களை அடிப்படையாகக் கொண்ட Hizb-e-Wahdat Islami என்ற அமைப்பின் தலைவர் ஆவார்.

இவற்றின் விளைவாக, பாகிஸ்தானில் உள்ள LEJ போன்ற குழுக்கள் ஷியாக்கள் மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர், இந்தக் குழுக்கள் தாலிபானை ஆதரித்தவை. எனவே, ஹசாராக்கள் அமெரிக்க ஏஜெண்டுகள் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததும், கொந்தளிப்பு மேலும் பற்றி எரிந்தது. சுன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா இன ஹசாராக்கள் போர் எதிர்ப்பு கண்டனத்தில் கலந்துகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினர்.

அஸ்னா-அல்-அஷாரீயா மசூதியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது பாகிஸ்தானில் பரவலாக வெறுப்பைத் தோற்றுவித்துள்ளது. ஜூலை 7-ந்தேதி நூற்றுக்கணக்கான மகளிர் மூல்தானில் ஆர்ப்பாட்டம் செய்தனர். "ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும் இடையில் மோதல்களை" உருவாக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாக அவர்கள் பதாகைகளை ஏந்திவந்தனர். குயெட்டா, பெசாவர், இஸ்லாமாபாத் லாகூர், உட்பட பாகிஸ்தான் முழுவதிலும் ஜூலை 11-அன்று இந்த படுகொலைகளைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. அதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத்துக்கொண்டனர்.

இந்த தாக்குதலையும், அதற்குபின்னர் நகருக்கு துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்று குயெட்டாவில் வெடித்த ஷியாக்களின் எதிர்ப்புக்களையும் பாகிஸ்தான் ஆட்சி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. குயெட்டாவிற்கு துருப்புக்களை அனுப்பியது. பலூச்சிஸ்தான் கவர்னராக முஷாரப்பினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற தளபதி அப்துல் காதீர் பெட்டாவிற்கு துருப்புக்கள் அனுப்பப்பட்டதை நியாயப்படுத்தினார்: "நாங்கள் இங்கு வைத்திருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன், குறைவன போலீசாருடன் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியத சூழ்நிலையில் இருக்கிறோம் என்று எண்ணினோம். ஆகாயால் நாம் சிவில் இராணுவ படையையும், இராணுவத்தையும் அழைத்திருக்கிறோம் என்றார்.

ஆனால் முஷாரப் இந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் வாஷிங்டன் விஜயத்தை முடித்து விட்டு ஐரோப்பாவில் இருந்தார். சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தலில் MMA வடமேற்கு எல்லை மாகாணம் மற்றும் பலூச்சிஸ்தானில் ஆட்சியை பிடித்தது. அப்பகுதிகளில் தனது கரத்தை வலுப்படுத்திக்கொள்ள முஷாரப் குறியாக இருக்கிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியதும் அஸ்னா-அல் அஷாரியா மசூதியில் நடைபெற்ற தாக்குதல் "ஒன்றில் மத தீவிரவாதிகள் அல்லது குழுவாத பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது" என்று குற்றம் சாட்டினார் மற்றும் மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அமெரிக்காவிற்கு எதிரான கொரில்லா தாக்குதல்களை நடத்தும் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் இயங்குவது, இந்த இரண்டு எல்லை மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான். எனவே இரு நாடுகளுக்கும் இடையே கொந்தளிப்பை அதிகரித்ததுள்ளது. ஆப்கானிஸ்தான் படைவீரர்களுக்கும் பாகிஸ்தான் படைவீரர்களுக்கும் இடையே எல்லையில் பல்வேறு மோதல்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுக்கொண்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை ஒடுக்குவதற்கும் எல்லைகளை மூடுவதற்கும் கூடுதலாய் நடவடிக்கை எடுக்குமாறு முஷாரப்பிற்கு வாஷிங்டன் நிர்பந்தம் கொடுத்து வருகிறது.

முஷாரப், குழுப் படுகொலைகளைப் பயன்படுத்தி குயெட்டாவில் இராணுவத்தின் நடமாட்டத்தை அதிகரித்திருக்கிறார். இதுபோன்ற முயற்சிகள் நிலவரத்தை மேலும் கொந்தளிப்படையவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved