World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பிலிப்பைன்ஸ்

Military mutiny in the Philippines: a sign of deeper political tensions

பிலிப்பைன்ஸ்ஸில் இராணுவக் கிளர்ச்சி: ஆழமான அரசியல் கொந்தளிப்பின் அடையாளச் சின்னம்

By John Roberts
31 July 2003

Back to screen version

பிலிப்பைன்ஸ் இராணுவப் படைகளைச் சேர்ந்த 300 இளம் இராணுவ அதிகாரிகளின் கிளர்ச்சி ஞாயிற்றுக் கிழமையன்று மிக விரைவாக ஒரு முடிவிற்கு வந்துள்ளது. இராணுவ அதிகாரிகளும், படையினர்களும் மேற்கொண்ட இக் கிளர்ச்சியானது, இராணுவம் அல்லது ஒட்டுமொத்தமாக பொதுமக்களிடம் இருந்து ஆதரவு எதுவும் இல்லாத நிலையில் தோல்வியடைந்துள்ளது. எப்படி இருந்தபோதிலும், மிக குறுகிய காலத்தில் நடைபெற்றுள்ள இந்த கிளர்ச்சியானது, ஜனாதிபதி குளோரியா மெகாபாகல் அராயோ (Gloria Macapagal Arroyo) தலைமையில் இயங்குகின்ற ஆளும் தட்டில் நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. பிலிப்பைன்ஸ் தொடர்ந்தும் பொருளாதார தேக்க நிலையில் உள்ளதுடன் மேலும், தெற்கு மின்டநாவோ பகுதியில் தொடர்ந்தும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிளர்ச்சி துவங்கியபோது, மணிலாவின் பிரதான நிதிப் புழக்க மையமான மக்காட்டி நகரத்திற்குள் சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்த பெருமளவு ஆயுதம் தாங்கிய இளநிலை அதிகாரிகளும், படையினர்களும் நுழைந்தனர். அவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகள் நடமாடி வருகின்ற மிக உயர்ந்த அடுக்கு மாடி சொகுசு மாளிகை வளாகமான ஓக்வுட் பிரிமியர் அயாலா சென்டரை பிடித்துக் கொண்டனர். இதற்கு முன்னர் கோரி அக்கினோ ஜனாதிபதியாக இருந்தபோது இதே கட்டிடத்தில் தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றிருந்தன. இந்த வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பிலிப்பைன்சில் உள்ள அவுஸ்திரேலிய தூதர் தற்காலிகமாக சிக்கிக்கொண்டார்.

22 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியில் படையினர் இந்த கட்டிடத்தைச் சுற்றி குண்டு வெடிப்பு கருவிகளை பொருத்தியிருந்தனர். அவர்கள் சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காக, ஜனாதிபதி அராயோ தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அரசாங்கத்திற்கு ஆதரவான துருப்புக்கள் அந்தக் கட்டிடத்தை சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர். முதலில் ஜனாதிபதி கிளர்ச்சிக்காரர்கள் சரணடைவதற்கு காலக்கெடு நிர்ணயித்தார். பின்னர் அதை திருத்திக்கொண்டு இறுதிக் காலக்கெடுவை அறிவித்தார். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கும், அந்தக் கட்டிடத்தை சுற்றிவளைத்துக் கொண்டு நின்றவர்களுக்கும் இடையில் மிகச் சாதாரணமாக நிலவிய உறவுகள் குறித்து சில விமர்சகர்கள் எழுதியுள்ளனர். ஜனாதிபதி கிளர்ச்சி செய்தவர்களை நோக்கி சுடுமாறு உத்திரவிட்டிருந்தால் அதை ஆட்சிக்கு ஆதரவான இராணுவத்தினர் மதித்து செயல்பட்டிருப்பார்களா? என்பதில் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருந்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. துப்பாக்கி சத்தம் எதுவும் கேட்கவில்லை. கிளர்ச்சி செய்தவர்கள் தங்களது ஆயுதங்கள், குண்டுகளுடன் படை முகாம்களுக்கு திரும்பினர்.

ஜனாதிபதி அராயோ மற்றும் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும் என்றும், மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தாங்கள் ஈடுபடவில்லையென்றும், தங்களது மனக்குறைகளை எடுத்துரைக்கவே இதில் ஈடுபட்டதாகவும் கிளர்ச்சி அதிகாரிகள் வலியுறுத்திக் கூறினார்கள். ஞாயிற்றுக்கிழமை கிளர்ச்சியில் தொடர்புடைய சிலர் இந்த வாரத் துவக்கத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதும் அவர்களுக்கு அதிருப்தி நீடிக்கவே செய்தது. ஊதியம் மற்றும் பணி நிலை தொடர்பாக அவர்கள் புகார்களை தெரிவித்தனர். கிளர்ச்சி செய்த குழுவினர் அரசாங்கம் மீதும் இராணுவ தலைமை அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறினர். குறிப்பாக இராணுவத்தில் உள்ள சில பிரிவுகளைச் சார்ந்தவர்கள், முஸ்லீம் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விற்றதாகவும், வாஷிங்டனில் இருந்து மேலும் இராணுவ மற்றும் நிதி உதவி பெறுவதற்காக டவோ நகரில் இராணுவத்தினரே குண்டுகளை வீசி நாடகமாடியதாகவும் குற்றம் சாட்டினார்.

அண்மையில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் என்று தண்டிக்கப்பட்ட பார்த்தூர் ரோமன் அல் கோஹி (Fathur Roman al-Ghozi) தப்பியோடிய சம்பவமானது, உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஊழலை காட்டுவதாக கிளர்ச்சிக்காரர்கள் சுட்டிக்காட்டினர். இந்தோனேஷிய குடிமகனான அல்-கோஹி, ஜெமா இஸ்லாமிய பயங்கரவாத குழுவில் பிரதான பிரமுகர் என்று பிலிப்பைன்ஸ் மற்றும் மேலைநாட்டு புலனாய்வு ஏஜென்சிகள் தெரிவித்தன. மற்றும் அபுசாயப் இயக்கத்தைச் சார்ந்த இரண்டு கைதிகள் மணிலாவில் உள்ள பிரதான போலீஸ் வளாகத்தில் இருந்து தப்பியோடினர். அந்த வாளகத்திற்குள்ளே இருந்து ஏற்பாடு செய்துதான் அவர்கள் தப்பியோடியிருப்பர் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த கிளர்ச்சியை முன்நின்று நடத்திய அதிகாரிகள் பெரிய இடங்களில் தொடர்பு உள்ளவர்களாக இருந்தனர். கிளர்ச்சி செய்தவர்களின் பிரதான பிரதிநிதி கடற்படை லெப்டினன்ட் அன்டானியோ கிர்லானி, இதர கிளர்ச்சிப் படையினரைப்போல் இராணுவ குடும்பத்தில் இருந்து வந்ததுடன், பிலிப்பைன்ஸ் இராணுவ கல்லூரியில் பட்டம் பெற்றவராவார். மற்ற மூன்று அதிகாரிகளான கேப்டன் ஜெரார்டோ கம்பாலா 32 வது காலாட்படை பிரிவைச் சார்ந்தவர். ஸ்கவுட் ரேஞ்சர் பிரிவைச் சார்ந்த லெப்டினன்ட் ஜோஸ் என்ரிகோ டிமன்ட்ரியோ டிங்கில் மற்றும் லெப்டினன்ட் சாரன்ஸ்புவான் ஆகிய மூவரும், அமெரிக்க சிறப்பு படைகளில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள், சென்ற ஆண்டு மின்டநாவோ பாசிலியன் தீவில் அபு-சாயப் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கூட்டு நடவடிக்கைகளில் அமெரிக்க சிறப்பு படைகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த குறுகிய கால இராணுவக் கிளர்ச்சியில் கலந்துகொண்ட இளநிலை அதிகாரிகள் ''தேசிய சீரமைப்பு வேலைத்திட்டம்'' என்ற அறிக்கையின் பிரதிகளை சுற்றுக்கு விட்டனர். இந்த அறிக்கையை தயாரித்தவர், எதிர்கட்சியைச் சேர்ந்த செனட்சபை உறுப்பினரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான கிரேகோரியோ கொனாசன் (Gregorio Honasan) ஆவர். 1980 களின் கடைசியில் ஜனாதிபதி அக்கினோவிற்கு எதிராக பல ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை இவர் தூண்டிவிட்டவர். இந்த அறிக்கையானது பொதுமக்களை கவரும் வலதுசாரி கருத்து மனப்போக்கு உள்ள ஆவணம் ஆகும். இந்த ஆவணத்தில் போலீசையும், இராணுவத்தையும் சீர்திருத்தும் வலுவான உறுதிப்பாடு கொண்ட ஒரு தேசிய தலைவர் தேவையென்றும், அத்தகைய ''உறுதிப்பாடுள்ள தேசியத் தலைவரால்தான்'' நாட்டில் நடக்கும் குற்றங்களையும், கிளர்ச்சிகளையும் முறியடிக்கின்ற வல்லமை மற்றும் பயனுள்ள ஆயுதங்களாக போலீசாரையும், இராணுவத்தையும் பயன்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தி கூறப்பட்டிருக்கின்றது.

இந்த வேலைத்திட்டமானது, அராயோ ஆட்சியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், சிறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டு வருவதையும், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதையும், வேளாண்மை உற்பத்தி குறைந்துகொண்டு வருவதையும் சமாளிக்கின்ற வகையில் ''பூகோளமயமாக்கத்தின் வேகத்தை'' மட்டுப்படுத்தவேண்டும் என்று இந்த அறிக்கை கேட்டுக்கொள்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என்று கருதப்படும் கொனாசன், மே மாதம் தனது திட்டங்களை அறிவித்தார்.

கிளர்ச்சி மிக சிறிய அளவிற்கு நடைபெற்றிருந்தாலும், ஜனாதிபதி அராயோ கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மிக கவனமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். செவ்வாய்கிழமையன்று இராணுவ புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிளர்ச்சியில் சம்மந்தப்பட்டதாக கிர்லானி மற்றும் நான்கு இதர அதிகாரிகளை கைது செய்தனர். அவர்கள் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை நடக்கும் என்று அராயோ அறிவித்திருக்கிறார். கிளர்ச்சியாளர்கள் சரணடைவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட உடன்பாட்டிற்கு முரணாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கிர்லானி தான் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் வானொலி பேட்டி ஒன்றில் புகார் கூறினார்.

கொனாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடாவின் ஆதரவாளர்கள் என்றும், முன்னாள் ஜனாதிபதி இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தூண்டிவிட்டதாகவும் அராயோ குற்றம் சாட்டியுள்ளார். சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கொனாசன் ஒப்புக்கொண்டிருந்தபோதும், இந்தக் கிளர்ச்சியை தான் ஆதரிக்கவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதி எஸ்ட்ராடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ராமொன் கார்டனாசை கைது செய்வதற்கு போலீசார் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர். அவர் மீது கிளர்ச்சிக்காரர்கள் பதுங்குவதற்கு இடம் கொடுத்ததாகவும், அவரது வீட்டில் துப்பாக்கிகளும், குண்டுகளும் வைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அராயோ இராணுவத்தை மிகப்பெருமளவில் நம்பியிருக்கிறார். அதிகாரிகள் குழுவை அவர் பகைத்துக்கொள்ள முடியாது. சட்டவிரோதமான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை கிளர்ச்சிக்காரர்கள் மேற்கொண்டதாக ஜனாதிபதி கண்டனம் செய்தார். ஆனால் 2001 ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எஸ்ட்ராடாவை பதவியிலிருந்து ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் நீக்கிவிட்டுதான் அராயோ பதவிக்கு வந்தார். அப்போது இராணுவம், பெரு வர்த்தக குழுக்கள் மற்றும் நீதித்துறை ஆகியன அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. எஸ்ட்ராடா ஊழல் புரிந்ததாக குற்றம்சாட்டி பெரும்பாலும் மத்தியதர வகுப்பினர் நடத்திய கண்டன இயக்கங்களை தொடர்ந்துதான் அராயோ பதவிக்கு வந்தார்.

அதேபோன்றதொரு முயற்சிக்கு தான் பலியாகிவிடக்கூடாது என்பதில் அராயோ தெளிவாக இருக்கிறார். கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவுடன் திங்களன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது இளநிலை இராணுவ அதிகாரிகளின் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நடுநிலையான விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இராணுவத்தில் இளநிலை அதிகாரிகளிடம் நிலவுகின்ற ஆவேசத்தை தணிக்கின்ற ஒரு முயற்சியாக இராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் விக்டர் கார்பஸ் நேற்று பதவி விலகினார். ''சதுரங்கம் விளையாடும்போது ராணி சுற்றிவளைக்கப்பட்டு விட்டால், விளையாட்டில் சேவகனை பலி கொடுக்க வேண்டியது அவசியம்தானே'' என்று அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்தார்.

வாஷிங்டன் தந்துவரும் அரசியல் ஆதரவினால் தான், இராணுவக் கிளர்ச்சியை மிக விரைவாக ஒடுக்கிய வல்லமை அராயோவிற்கு உருவாகியிருக்கின்றது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான ஜோனாமூர் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சட்டப்பூர்வமான அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரித்து நிற்கிறோம் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் உடனடியாக பாதகமான விளைவுகள் தான் உருவாகும். இரு தரப்பு உறவிலும் பாதகமான விளைவுகள் ஏற்படும்'' என்று கூறினார்.

அராயோ புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரை'' ஆதரித்தார். அராயோ அரசாங்கத்தின் பிரதான திட்டமான அபுசாயுப் பிரிவினைவாதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளுக்காக, தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிகளுக்கு அமெரிக்கா தனது துருப்புக்களை அனுப்பி உதவியது. அவரது நிர்வாகம் அமெரிக்காவுடன் பல்வேறு இராணுவ உடன்படிக்கைகளையும் செய்து கொண்டுள்ளது. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளின்போது, பிலிப்பைன்ஸ் தனது பங்கிற்கு துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்ப உடன்பட்டது. வாஷிங்டனில் அராயோவிற்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டதுடன், பெருமளவில் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி புஷ் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதன் மூலம் அராயோவின் அரசியல் செல்வாக்கு மேலும் வளரும்.

மணிலாவில் உள்ள ஆளும் வட்டாரங்களில் அராயோ அமெரிக்காவின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' பங்கு கொண்டிருப்பதற்கு வெளிப்படையான எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கு இராணுவத்தை நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிளர்ச்சி செய்த இராணுவ அதிகாரிகளின் கோரிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிலிப்பைன்ஸ் விசுவாசத்திற்கு அமெரிக்கா தருகின்ற பொருளாதார உதவி மிகக் குறைவாகயிருக்கிறது என்பதில் ஓரளவிற்கு கருத்து வேறுபாடுகள் மட்டமே அங்கு நிலவுகின்றன.

பூகோளமயமாக்கல் திட்ட நடவடிக்கைகளின் வேகம் மட்டுப்படுத்தவேண்டும் என்று கொனாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார். இதை பிலிப்பைன்சின் முன்னாள் இராணுவ தலைமை அதிகாரியும், பாதுகாப்பு அமைச்சரும் மற்றும் ஜனாதிபதியுமான பிடல் ராமோஷ் எதிரொலித்திருக்கிறார். இது சம்மந்தமாக அவர் ஜூலை 20 ந் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ''மோசடியான வர்த்தக விளையாட்டு'' என்ற தலைப்பில் ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார். 1995 ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் பிலிப்பைன்ஸ் நிர்பந்திக்கப்பட்டுதான் இணைந்திருக்கின்றது. வேளாண்மை பொருட்களுக்கான சந்தைகளில் பிலிப்பைன்ஸ் அதிகமாக இடம்பெறவதற்கு பதிலாக இதர ஆசிய ஆபிரிக்க நாடுகளைப்போல், அந்த சந்தைகளை மிகப்பெருமளவில் அது இழந்துள்ளது. ஏனென்றால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் விவசாயிகளுக்கு மிகப்பெரும் அளவில் மானியங்கள் வழங்கப்பட்டு வருவதால், அவர்களோடு போட்டி போட்டு பிலிப்பைன்ஸ் விவசாயிகள் வேளாண்மை விலை பொருட்களுக்கான சர்வதேச சந்தைகளை பிடிக்க இயலவில்லை என்பதாக ராமோஷ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

மறைந்து கிடக்கும் விவசாயிகளுக்கான ''மானியங்கள் மற்றும் இதர தந்திரங்களால்'' பிலிப்பைன்சில் சமாளிக்க முடியாத பொருளாதார மற்றும் சமூக நிலவரங்கள் உருவாகி வருவதாக அவர் அந்தப் பத்திரிகைக்கு தெரிவித்தார். ஏழை நாடுகள் நீண்டகாலத்திற்கு இப்படிப்பட்ட தந்திரங்களை சமாளிக்க முடியாது. மக்களுக்கு உண்மையான தேவைகள் உள்ளன. மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். 1995 முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். 1990 களின் துவக்கத்தில் வேளாண்மை விலைபொருட்களில் சிறிதளவு உபரி காணப்பட்டது. இப்போது அதுவும் பற்றாக்குறை நிலைக்கு சென்றுவிட்டது என்பதாகவும் ராமோஷ் விளக்கியிருக்கிறார். மற்றும் அராயோவிற்கு ராமோஷ் மிக முக்கியமான ஆதரவாளர். அராயோ ''வாஷிங்டனின் மிக உறுதியான நண்பர்'' என்பதாக நியூயார்க் டைம்ஸ் எழுதியிருக்கிறது.

கொனாசன் மற்றும் ராமோஷ் ஆகிய இருவரும் தங்களது சொந்த நோக்கங்களை கருத்தில் கொண்டு பிலிப்பைன்சில் உருவாகிவரும் சமூக கொந்தளிப்பு நிலையை சுட்டிக்காட்டியுள்ளனர். எஸ்ட்ராடா மற்றும் ராமோஷைப்போல் அராயோவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கோரிக்கைகளான பொருளாதார சீரமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் உறுதியுடன் இருக்கிறார். 2002 ம் ஆண்டில் பட்ஜெட் வரலாறு காணாத அளவிற்கு பற்றாக்குறையில் இருந்தது. அந்த பற்றாக்குறையில் இந்த ஆண்டு அராயோ மூன்றில் ஒரு பகுதியை குறைத்திருக்கிறார். இதன் மூலம் ஏற்கெனவே மிகக் குறுகிய வட்டாரத்தில் நிலவுகின்ற சமூக நலத்திட்டங்கள் மேலும் சீர்குலைந்துவிட்டன. 2001 ம் ஆண்டில் பிலிப்பைன்சின் வேலையில்லாத் திண்டாட்டம் 17.2 சதவிகிதமாகயிருந்தது. அதே நிலை இப்போதும் நீடிக்கிறது.

அதே நேரத்தில் கொனாசன், அராயோ நிர்வாகத்தின் மீது வளர்ந்துவரும் அதிருப்தியை தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள முயலுகிறார் என்று ராமோஷ் வாஷிங்டனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் அரசியலில் குழப்பம் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு கடுமையான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வலுவான அரசியல் தெம்பும், திராணியும் உள்ள தேசியத் தலைவர் தேவை என்றும், ஆளும் குழுவின் சில பிரிவினர் கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களது ஆதரவு ராமோஷ் மற்றும் கொனாசனுக்கும் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆகவே, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கான ஆயத்தம் மேலும் குழப்பத்தில் முடியும் என்பதற்கான மருந்தாக அவர்களது யோசனைகள் அமைந்திருக்கின்றது என்பது தெளிவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved