World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Jury fails to convict man for beheading Thatcher statue

தாட்சர் சிலையின் தலையை அடித்து வீழ்த்தியவருக்கு தண்டனை கொடுக்க ஜூரிகள் தவறினர்

By Chris Marsden
21 December 2002

Back to screen version

பிரிட்டனின் முன்னாள் பழைமைவாத கட்சிப் (Conservative) பிரதமர் மார்க்கரட் தாட்சர் சிலையின் தலையை வீழ்த்தியவருக்குத் தண்டனை வழங்குவது தொடர்பாக, ஜூரிகளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தண்டனை எதுவும் வழங்க முடியவில்லை. டிசம்பர் 17-ந் தேதியன்று போல் கெல்லஹர் (வயது 37), கிரிக்கெட் மட்டையாலும், இரும்புத் தடியாலும் சிலையின் தலைப்பகுதியை அடித்து நொறுக்கி வீழ்த்தியதை அவரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். லண்டன் செளத் வார்க் கிரவுன் நீதிமன்ற ஜூரிகள் ஏறத்தாழ 4 மணி நேரம் ஆலோசித்த பின்னர், தீர்ப்பு தொடர்பான முடிவு எதற்கும் வரமுடியாததால் ஜனவரி 22-ந்தேதி மறு விசாரணைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நீல் சிம்மான்ஸ் என்ற சிற்பியினால் 150.000 பிரிட்டிஷ் பவுன்கள் செலவில் 8 அடி உயரமான இரண்டு தொன் எடையுள்ள இத்தாலி கர்ராரா சலவைக் கற்களால் வடிவமைக்கப்பட்ட மார்கிரட் தாட்சரின் சிலை, பிரிட்டனின் மக்களவை உறுப்பினர்கள் லாபியில் வைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டு, லண்டன் கில்ட் மண்டபத்தில் அந்தச் சிலை ஜூலை மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நாடக அரங்கு தயாரிப்பாளரான போல் கெல்லஹர், சிலையை நோக்கி நடந்து சென்று அதைச் சிதைத்ததாக ஒப்புக்கொண்டார். அதிகாரிகள் அவரைக் கைது செய்வதற்காக வந்த நேரத்தில், தான் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாற்காலியின் மீது அவர் அமர்ந்திருந்தார்.

சமரசம் காண முடியாத அளவிற்கு நிலவிய கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே ஜூரிகள் தண்டனை வழங்குவது தொடர்பான முடிவிற்கு வர முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. நீதிபதியும், குற்றம்சாட்டியவர்களும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். அரசியல் அடிப்படையில் இதைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கெல்லஹர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

கெல்லஹர் தன் தரப்பில் எடுத்துக் கூறம்போது, முதலாளித்துவத்தையும், யுத்தத்தையும் தான் எதிர்த்து நிற்பதாக வாதிட்டதுடன் ''இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதன் நோக்கம் கோர்ட்டுக்கு செல்லவேண்டும் என்பதுதான். என்னுடைய கருத்துக்களை, வலியுறுத்திக் கூறுவதற்கு நீதிமன்றம் ஒரு வாகனமாகப் பயன்படுகிறது'' எனவும் குறிப்பிட்டார்.

குற்றவியல் எண்ணத்தில் சேதம் விளைவித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். ''என்னுடைய எண்ணத்திற்கு கலைநயமான வடிவம் தந்திருக்கிறேன். இந்த சிதைந்த உலகத்தோடு உறவாட எனக்கு உரிமை உண்டு. இச் செயலை, நையாண்டித் தாக்குதலாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். உலக அரசியல் முறையின் தீங்குகள் அனைத்தினதும் சின்னமாக அந்தச் சிலை விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். பூகோள முதலாளித்துவத்தின் தீங்குகளிலிருந்து தனது இரண்டு வயது மகனைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தினாலும் இதைச் செய்ததாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

உங்களது செயல், குற்றவியல் அடிப்படையில் சேதாரம் விளைவிக்கும் செயல் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று நீதிமன்றத்தில் கேட்கப்பட்டபோது ''மார்கரட் தாட்சர் பதவியில் இருந்ததன் மூலம் அவரது செயல்களால் ஏற்பட்ட கிரிமினல் சேதங்கள் அனைத்தையும் நான் சுட்டிக்காட்ட முடியும்'' என கெல்லஹர் பதிலளித்தார்.

நீதிமன்றத்தில் அவர் தனது தரப்பு வாதத்தை முடித்த நேரத்தில், ஜூரிகள் தன்னை விடுதலை செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ''ஜூரிகளே! அரசாங்க நிர்வாகத்திடமிருந்து மீண்டும் அதிகாரத்தை வசப்படுத்திக்கொண்ட மக்கள், உங்களது பெயர் வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்படும். அதற்கு ஏற்ப உங்களுக்கு தியாகிகள் என்ற புகழ் மகுடம் காத்திருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''லண்டன் கில்ட் மண்டப காலரியில் காட்சிக்கு நின்ற அந்தச் சிலையை ஜூலை 3ந் தேதி தாக்கினார். உலகின் அரசியல் முறையில் காணப்படும் தீங்குகளை அது பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கருதினார்'' என அரசு வழக்கறிஞர் ஜான் ஹார்டி குறிப்பிட்டார்.

கண்டனம் தெரிவிக்கும் அவரது இச்செயல் குறித்து, சிலர், ''மறைமுகமாக'' பாராட்டுகின்றனர். ''தாட்சர் ஆண்ட காலத்தில் பெருமளவிற்கு தனி மனிதர்கள் உணர்வுகள் தூண்டிவிடப்பட்டன என்று சொல்வது சரிதான்'' என்றும், தாட்சர், ''நாட்டைக் காத்தவர்'' எனச் சிலர் கருகின்றனர். ''ஆனால் இதில் உண்மை நிலை எதுவாக இருக்கவேண்டும்? என்னதான் கெல்லஹர் கொள்கைவாதியாக இருந்தாலும், அதில் அவர் உறுதியாக இருந்தாலும், ஊரைச் சுற்றி வீணான, தேவையற்ற சேதங்களை விளைவிக்க அவருக்கு உரிமை இல்லை'' என்று அரச வழக்கறிஞர் குறிப்பிட்டு, அரசியல் காரணங்களை ஜூரிகள் கருதிப் பார்க்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

''சிலையின் தலையைக் கொய்தவர், தனக்கும், உலகிற்கும் தாட்சர் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் முறையால் உடனடியாக ஆபத்து உண்டு என்று கருதி, தனது கருத்தை எடுத்துக்காட்ட அவ்வாறு செய்ததாக கூறுகிறார்'' என்று நீதிபதி ரிச்சர்ட் ஐக்கென்ஸ் ஜூரிகளை நோக்கிக் கூறினார்.

''சீமாட்டி தாட்சர் பிரதிநிதித்துவப்படுத்திய பொருளாதார அரசியல் முறைகளால், உடனடியாகத் தனக்கும், தனது இரண்டு வயது புதல்வனுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதி கெல்லஹர் சட்டப்படி நியாயப்படுத்த முடியுமா? என்பதை ஜூரிகள் முடிவு செய்ய'' நீதிபதி கட்டளையிட்டார்.

தாட்சர் சிலையைச் சேதப்படுத்தியவருக்கு ''சட்டப்பூர்வமான சாக்குப்போக்கு உண்டா'' என்பதை எட்டு பெண்கள், நான்கு ஆண்கள் ஜூரிகளுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. ஒன்றரை மணி நேரம் ஜூரிகளுக்கு அவகாசம் தரப்பட்ட பின்னரும், அவர்கள் பெரும்பான்மை அடிப்படையில் முடிவிற்கு வரமுடியவில்லை. குறைந்தபட்ச எண்ணிக்கையில் அவர்களில் 10 ஜூரிகளாவது முடிவு செய்வதற்கு வாய்ப்புகள் எதுவும் உண்டா? என நீதிபதி ஜூரிகளை நோக்கிக் கேட்டார். ''அதற்கான சாத்தியம் இல்லை ஐயா'' என்று ஜூரிகள் குழுவின் பெண் பிரதிநிதி தெரிவித்தார்.

அந்தச் சிலையை பழுது பார்ப்பதற்காக சிற்பியிடம் திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. சிலையை சேதப்படுத்தியது சம்மந்தமாக ஜூரிகளிடையே உருவான தேக்க நிலையின் சமுதாய, அரசியல் பிளவுகளைப் பழுதுபார்ப்பதைவிட, சிலையைப் பழுதுபார்ப்பது எளிது. தாட்சரால் உருவான வெறுப்புணர்வு கெல்லஹரை மட்டும் பாதிக்கவில்லை. பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் அதே வெறுப்புணர்வுடன் உள்ளனர். இதில் ஒரேயொரு வியப்பு என்னவென்றால், ஜூரிகளிடையேயான பிளவு சரிசமமாக உள்ளது. அடுத்தமுறை கூடும்போது ஜூரிகள், பொதுமக்களின் கருத்தை அதிகமாக பிரதிபலிக்கும் தீர்ப்பை வழங்குவார்கள் என நம்பப்படுகிறது. அப்போது கெல்லஹர் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திர மனிதராக நடமாடுவார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved