World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington demonstrators speak out against war on Iraq

வாஷிங்டன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக்கிற்கு எதிரான போருக்கு கண்டனம்

By Paul Sherman
20 January 2003

Back to screen version

சனிக்கிழமையன்று வாஷிங்டனில் அமெரிக்கா மேற்கொள்ளும் போருக்கு எதிராக ஆர்பாட்டம் செய்த தொழிலாளர் மற்றும் இளைஞர்களை உலக சோசலிச வலைத் தளம் பேட்டி கண்டது.

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த, சார்லஸ்டன் பகுதியிலிருந்து வந்த ஆடம் தனது பேட்டியில் கூறியதாவது:-

"ஆக்கிரமிப்பவர்களாக மாறுவதற்கு நாம் முயலும்போது, அதனால் எந்த நன்மையும், ஏற்படாது. ஈராக் ஆயுதங்களை தயாரிக்கிறது என்பதற்கான சான்று எதையும், நான் பார்க்கவில்லை. ஈராக்கிடம் ஆயுதங்கள் உள்ளன, என்பதை நான் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு புஷ் முயன்று அது வெற்றிபெற்றால் கூட, அப்போதும் போர் தான் அதற்கு சரியான பதில் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது."

"புஷ் பழிவாங்கத் துடிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். எண்ணெய்க்காகவும், அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் அவர் பழிவாங்கத் துடிக்கிறார். அவரது தந்தை அவ்வாறு செய்யவில்லை. அந்த மண்டலத்தை எண்ணெய் வளத்தையும், செல்வத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர புஷ் விரும்புகிறார்."

"போர் தவிர்க்க முடியாதது என்று அஞ்சுகிறேன். ஆயுத ஆய்வாளர்கள் திரும்பி வந்து என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. புஷ் போரை விரும்புகிறார், அவர்கள் அந்தப்போரை ஆரம்பிக்கப் போகிறார்கள், நமது பண்பாடு சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு வன்முறையின் பக்கம் திரும்பிவிட்டது. எந்தப் பிரச்சனைக்கும் பதிலாக வன்முறைதான் அமைந்திருக்கின்றது. ஒரு பிரச்சனையை தீர்த்துவைப்பதற்கு முயலுவதற்கு பதிலாக முதல் பதிலே வன்முறையாக அமைந்திருக்கிறது."

"ஜனநாயகக் கட்சியுடன் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. ஜனநாயகக் கட்சியினர் மிகத் தீவிரமான மிதவாதிகள். எதையும் எதிர்த்து நிற்க அவர்கள் தயாராக இல்லை, மாற்று எதுவுமில்லை, அவர்கள் உண்மையை பேசுவதற்கு நியாயத்தின் பக்கம் நிற்பதற்கு அஞ்சுகிறார்கள்."

"விளைவைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் குண்டு வீசி தாக்கப்போகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அப்படி போர் தொடங்குவதற்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லப்போகிறார்கள். அந்தக் காரணம் எது என்றோ, அதைப் பற்றி மக்கள் கருதுகிறார்கள் என்றோ அவர்கள் கவலைப்படுவதில்லை."

வாஷிங்டன் டிசி (DC) பகுதியைச் சேர்ந்த காரா என்ற ஆர்ப்பாட்டக்காரர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார். "போர் முற்றுவதை நான் தடுக்க விரும்புகிறேன். தொடர்ந்து போர் நடந்து கொண்டேயிருக்கிறது. இப்போதும், அவர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து மக்களை கொன்று குவித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

"பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் குறிப்பாக என்னை துன்புறுத்துகின்றன. பொருளதாரத்தடைகளின் காரணமாக மாதத்திற்கு 4,000 குழந்தைகள் மடிவதை நாம் பார்க்கும்போது, அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

"பொருளாதாரத்தடை நடவடிக்கைகளால் நாட்டின் தண்ணீர் வழங்கும் முறையும், சுகாதார வசதிகளும், மருத்துவ வசதிகளும், சீர்குலைந்துவிட்டன. ஈராக்கிற்குள் அவை வரமுடியவில்லை, தங்களுக்குத் தேவையான உணவை பெறுவதில் அவர்கள் மேலும் சிரமப்படுகிறார்கள். இதனால், குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள். குழந்தைகள் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால், அவர்களை நாம் துன்புறுத்துகின்றோம். ஐ.நா. பொருளதாரத் தடைகளை விதித்தது. ஆனால், அதற்கு பின்னணியில் இருப்பது அமெரிக்கா, இவை நீடிப்பதற்கும், சாவுகள் தொடர்வதற்கும், நாம்தான் பிரதான ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகிறோம்.

"புஷ் என்ன நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியாது, எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், உலகின் மீது மேலாதிக்கம் செலுத்திவிடமுடியும் என்று அவர் நினைக்கிறார். ஜனநாயக் கட்சியினர் செயல்பாடு என்னை முற்றிலும் வெறுப்படையச் செய்கிறது. அவர்கள் குடியரசுக் கட்சியினரை போலவே எல்லா வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். கிளின்டன் வெள்ளாட்டுப் போர்வையில் நடமாடும் ஓநாய் என்று நான் எப்போதுமே கூறுவது உண்டு. அவரது ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தடை நடவடிக்கைகள் நீடித்தன. அவர்களும் இந்த துயர நிலைக்கு பொறுப்பானவர்கள்தான்."

வடக்கு கரோலினா, டர்காம் பகுதியில் வாழ்பவர்கள் ஆலிவா மற்றும் கோர்ட்நி இவர்கள் இருவரும் பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5 மணிக்கு வாஷிங்டன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

"புகார் கூறிக்கொண்டேயிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யவேண்டும் என்பதுதான் எனது கருத்து," என்று ஆலிவா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- "இந்தப் பிரச்னையின் கரு என்னவென்றால், நம்மிடம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் போருக்கு போக விரும்புவதன் உண்மையான காரணத்தை அவர்கள் நம்மிடம் சொல்லவில்லை. அரசியல் முறையில் பிரச்சாரம் என்பது ஒரு அங்கம்தான் ஆனால் இது பிரச்சாரத்திற்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.

இந்த போருக்கு பின்னால், மக்கள் அணிவகுத்து நிற்பது தவறானது. போர் எதற்காக தொடங்குகிறது என்ற உண்மையான காரணத்தை மக்களிடம் சொல்லாமல் போரை தொடக்குவது தவறானது. சில வேலைகளில் புஷ்கூட இந்த பிரச்சாரத்தை நம்புகிறார் என்று கருதுகிறேன். அதைப் பற்றி அவர் சிந்தித்தாரா என்பது எனக்குத் தெரியாது. பிரச்சனைகள் குறித்து புஷ் ஆழமாக சிந்திப்பவர் அல்ல.

அவர்கள் பகிரங்கமாக போர் பற்றி விளக்குவார்களானால், அப்போது பொதுமக்கள் நேரடியாக போரை ஆதரிக்கிறோமா, அல்லது எதிர்க்கிறோமா என்று கூறமுடியும். அந்த நேரத்தில் போரை பொதுமக்கள் ஆதரிக்கமாட்டார்கள். தற்போது ஏராளமான மக்களை கொன்று குவிப்பதற்காக அவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மக்களை மட்டுமல்ல, ஈராக் மக்களையும் பலி இடுவதற்கு அவர்கள் தயாராகி வருகிறார்கள். அது ஏன் அவ்வாறு நடைபெறகிறது, என்பது குறித்து நம்மிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

"இங்கு வாஷிங்டன் டி.சி.யில் நான் ஓர் சுவரொட்டியைப் பார்த்தேன். அதில் தந்துள்ள வாசகம் இவை எல்லாவற்றையும் ரத்தினம் சுருக்கமாக விளக்கிவிட்டது. "பொது சுகாதாரம் கல்விக்காக 200-பில்லியன் டாலர்களை செலவிட்டால் எப்படியிருக்கும்?" என்பதுதான், அந்த வாசகம். இராணுவத்திற்கு செல்லும் இந்தப் பணம் முழுவதும் மக்களுக்காக, அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, வீடு கட்டுவதற்காக, மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக செலவிடப்பட்டால், எத்தகைய சமுதாய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் கருதிப்பார்க்க வேண்டும்."

கோர்ட்நி என்பவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது, "இதை வேறுபடுத்திக்காட்டுவதற்காகத்தான் நான் இங்கு வந்தேன், 2000-செப்டம்பர்11-ல் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும், இதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. புஷ் ஒரு ஆக்கிரமிப்பாளர். என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது ஆக்கிரமிப்பிலேயே கவனம் செலுத்துகிறார்; செப்டம்பர்11 நிகழ்ச்சிகளை, இந்தப் போரை நியாயப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.

தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், காட்டப்படுவது, அரசாங்க பிரச்சாரம் இது என்னை குழப்பித்தள்ளுகிறது. என்னுடைய தாயார் டி.வி.யில் காட்டப்படுவதை நம்புகிறார். எனவே, அவர் முழுக்க முழுக்க இந்தப் போரை ஆதரிக்கிறார். இப்படி பிரச்சாரம் செய்வது தவறு, ஏனென்றால், மக்களுக்கு முழுமையான விவரங்கள் விளக்கப்படவில்லை. நாம் எதை நம்பவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்களோ, அதை மட்டுமே காட்டுகிறார்கள், அப்படி காட்டப்படுவதை நம்பி மக்கள் தரும் ஆதரவு அடிப்படையில் அவர்கள் போருக்குச் செல்கிறார்கள்."

சாந்திரா என்பவர்தான் ஏன் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் என்பதை விளக்கினார். அவர் கூறினார்:- ``தனிப்பட்ட முறையில் எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறேன். எனக்கு 54-வயதாகிறது, இதுதான் நான் கலந்துகொள்ளும் முதலாவது ஆர்ப்பாட்டம். வீட்டில் உட்கார்ந்திருப்பதைவிட வெளியில் வந்து தவறு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நான் முடிவு செய்வதற்கு தேவையான அளவிற்கு உண்மையான தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை என்று நான் கருதுகிறேன். எனது இரண்டு பிள்ளைகளும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். என்ன நடக்கிறது, என்பதைக் குறித்து மேலும் தகவல் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இன்னொருவர் இட்டுச்செல்லும் வழியில் கண்ணை மூடிக்கொண்டு நடக்க தயாராக இல்லை.

நான் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறேன். அதற்கு தேவையான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால், எனக்கு என்ன உணர்வு, ஏற்படுகிறது என்றால் மற்றொரு நோக்கத்திற்காக நாம் போருக்குச் செல்கிறோம். மற்றொரு நாட்டின் இயற்கை வளத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக நாம் போருக்குச் செல்கிறோம். யாரை தாக்குவது? யார் ஆட்சியை கவிழ்ப்பது என்பது குறித்து புஷ் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்து முடிவு செய்தால், அதன்படி நாம் போருக்குச் செல்கிறோம்.

"ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது கருத்தை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அந்த வழியில் நடைபோடுகிறார்கள். எனவேதான் நான் இங்கு வரவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. தற்போது இந்த வகையில் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கபோகிறார்கள் என்பது எனது உணர்வாகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved