World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்

Bangladesh government exploits bomb blasts to detain political opponents

பங்களாதேஷ் அரசாங்கம் அரசியல் எதிரிகளை தடுத்து நிறுத்திட, நடந்து முடிந்த குண்டு வெடிப்புகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது
By Sarath Kumara
8 January 2003

Back to screen version

பங்களாதேஷ் அரசாங்கம் டிசம்பர் 7ம் தேதி அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளை தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைளை தீவிரமாக்கிட உபயோகப்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் தன்னுடைய எதிர் கட்சியான அவாமி லீக்கின் (AL) முக்கிய தலைவர்களை கைது செய்யவும் உபயோகப்படுத்தி உள்ளது. தலைநகரம் டாக்காவின் 110 கி.மீ வடக்கே அமைந்துள்ள மைமென்சிங் நகரத்தின் நான்கு திரையரங்குகளில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் 19- பேரைக் கொன்றதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

நோன்பு மாதமான ரமலான் முடிவடைந்ததைக் கொண்டாடுவதற்காக திரையரங்கிற்குச் சென்ற ஆயிரக்கணக்கான சாதாரண உழைக்கும் மக்களால் திரையரங்குகள் நிறைந்திருந்தன. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவர்களில் பலரும் ஆபத்தான நிலைமையிலிருந்தனர். யாரும் இத் தாக்குதலுக்கு உரிமைகோரவில்லை.

''பங்களாதேஷிற்கு எதிராக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம் உண்டாகும் வேலைகளை அவர்கள் செய்கிறார்கள்'' என எந்தவொரு தக்க சான்றும் அளிக்காமல் பிரதம மந்திரி பேகம் கலிதா ஜியா குற்றஞ்சாட்டியுள்ளார். மெல்லிய திரைமறைவாக எதிர்கட்சிகளை மேற்கோளாக சுட்டிக்காட்டி, தாக்குதல்களுக்கு அவர்கள் பின்னிருந்ததாக கூறியுள்ளார். வெடிகுண்டு தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் காவல் துறையினர் 40 எதிர்கட்சியை சேர்ந்தவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சாபர் உசைன் செளத்ரி, எதிர்கட்சி தலைவர் ஷேக் ஹசினாவின் அரசியல் செயலாளர் மற்றும் அவாமி லீக் மாணவர் தலைவர் ஷாபி அகமது ஆகியோராவர். குற்றங்களை தடுத்து நிறுத்த தொடங்கப்பட்ட ''ஆப்பரேஷன் க்ளீன் ஹார்ட்'' (Operation Clean Heart) என்ற இயக்கத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக விரிவான தேடுதலில் ஈடுபட்ட இராணுவத்தினால் முதன் முதலாக அக்டோபரில் செளத்ரி கைது செய்யப்பட்டார். ஆனால் உயர்நீதிமன்றமும் அவரை கைது செய்தமை சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியதால் அரசாங்கம் அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று.

முன்டாசிர் மாமூன் மற்றும் ஷாரீயார் கபீர் ஆகிய இரண்டு எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் அரசுக்கு எதிரான பிரபலமான விமர்சகர்கள். சுயேட்சை பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகளுக்கு பாடுபடுபவரான கபீர் அவர்கள், தேச துரோக செயல்களுக்காக சென்ற வருடம் கைது செய்யப்பட்டு டாக்கா மத்திய சிறைச்சாலையில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்களுக்கும் எதிராக வகுப்பு கலவரங்களை நிறைவேற்றியதாக குற்றஞ்சாட்டினார்.

கைது செய்யப்பட்ட எவருமே வெடிகுண்டு தாக்குதலுடன் சம்பந்தபடுத்தி குற்றஞ்சாட்டப்படவில்லை. பங்களாதேஷின் சிறப்பு அதிகார சட்டத்தின் படியே சுற்றி வளைத்தல் நடைபெற்றது. இச்சட்டம் தேசத்திற்கு எதிரான வழக்குகளில் சம்பந்தப்படுத்தப்படாமலேயே காவலில் வைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. சர்வதேச மனித உரிமை அமைப்பு இத்தகைய கைதுகளைப் பற்றிய கவலையையும் அதன் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் நிலைமையுயும் பற்றி கருத்து தெரிவித்துள்ளது.

அவாமி லீக்கிற்கு எதிராக பிரதம மந்திரி கலீதா பழி சுமத்தினாலும், இஸ்லாமிய அடிப்படைக் குழுக்களுடன் எந்த விதத்திலும் தொடர்பு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ''அடுத்தடுத்து நடந்துள்ள இந்த வெடி குண்டு தாக்குதல்களின் திட்டங்கள், அல்கொய்தா போன்ற பலமான அமைப்பின் செயல்பாடுகள் போலிருந்தாலும் இது அவர்களது வேலை இல்லை'' என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஊடுருவலை எதிர்த்தும் தலிபான், அல் கொய்தா அமைப்புகளுக்கு வெளிப்படையாகவும் ஆதரவளித்த இரு இஸ்லாமிய அடிப்படைக் கட்சிகளான ஜாமாத்-இ-இஸ்லாமிய மற்றும் ஒக்கிய ஜொட் ஆகியவற்றுடன் கலீதாவின் ஆளும் பங்களாதேஷ் தேசிய கட்சி (BNP) கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக பங்களாதேஷில் அல் கொய்தா தொடர்பான பிரச்சினைகளில் பிரதம மந்திரி நன்றாகவே கவனமாக இருக்கிறார். ஏன்னென்றால் அது ஆளும் கூட்டமைப்பினில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடும்.

சென்ற அக்டோபரில் BNP ஆட்சி, டைம் இதழில் அல் கொய்தா உறுப்பினர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டை கடுமையாக நிராகரித்தது. மேலும் அரசு சென்ற மாதம் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சனல் 4 ஐச் சார்ந்த இரு பத்திரிக்கையாளர், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியை பங்களாதேஷில் செய்து கொண்டிருந்தனர். அவர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி கூறியது.

கலிதா சமநிலை உண்டுபண்ணும் காரியத்தில் இறங்கியுள்ளார். இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டு கட்சிகளுடன் கூட்டு வைத்து கொண்டிருக்கும் அதே வேளையில் வாஷிங்டனுடனும் நட்புறவினை வைத்துக்கொள்ள விரும்புகிறார். இந்த அரசாங்கம் புஷ் நிர்வாகத்தினரின் நெருக்குதல் காரணமாக சாட்டியுரைக்கப்பட்ட அல் கொய்தா அமைப்புக்கு எதிராக நடந்து கொள்ள நேரிட்டால் அது கூட்டணிக்கு இடையில் அழுத்தத்தை உருவாக்கி, வளர்ந்து வரும் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புகளை மேலும் அதிகமாக்கிடக் கூடும்.

அவாமி லீக், தங்களுடைய உறுப்பினர்களை தடுப்புகாவலில் வைத்ததற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்ததுடன், வெடிகுண்டு தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நிறைந்த அரசுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளது. ''ஆளும் கூட்டணி கட்சியில் உள்ள மதவெறி கொண்ட பயங்கரவாத அமைப்பு ஒன்று தான் அத்தகைய கொடிய குற்றத்தின் பின்னால் உள்ளது'' என எதிர்கட்சி தலைவர் ஹசினா தீர்மானமாக கூறியுள்ளார். அக்குற்றவாளிகளை கைது செய்து வழக்கு தொடருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டம் என்ற போர்வையில் ஆளுங்கட்சியின் ஒரு பகுதியினர் வாஷிங்டனுடன் உறவுகளைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ''டெய்லி ஸ்டார்'' என்ற செய்தித்தாளில் டிசம்பர் 10ம் தேதியிட்ட தலையங்கம், ''உள்நாட்டிலுள்ள குற்றவாளிகளுடன் கூட்டணியோ அல்லது சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ள மத அமைப்போ இந்த செயலைச் செய்திருந்தாலும், நம்முடைய நாடு இன்னமும் பூகோள பயங்கரவாதத்தினை தடை செய்யும் நிலையில் இல்லை என்பதை நினைவூட்டுவதாக உள்ளது'' என கூறுகின்றது. இரண்டு நாட்கள் கழித்து இச்செய்தித்தாள் வெளிப்படையாகவே ''அமெரிக்கா அல்லது ஐரோப்பாவினை இவ்விஷயத்தில் உதவிக்கு அழைத்துள்ளது''.

இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் யாரால் நடாத்தப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான இலக்குகள் இஸ்லாமிய அடிப்படை குழுக்களின் செயல்பாடுகளாக இருக்கக்கூடும் என்ற ஐயம் உள்ளது. ஏனெனில் அவை திரைப்படங்களுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்ததோடு பிரபலமான வங்காள அதிரடி திரைப்படங்களை இஸ்லாமியத்திற்கு எதிரான மேற்கத்திய ஈடுபாடு என்று அவற்றை அறிவித்திருந்தன. யார் பொறுப்பாக இருந்திருந்தாலும் வெடிகுண்டு தாக்குதல்கள் உணர்ச்சியற்ற கொடூரமான நடவடிக்கையாக ஒன்றும் அறியா மக்களைக் கொல்லவும் காயப்படுத்தவும் காரணமாகவும் இருந்திருக்கிறது.

குண்டு வெடிப்பு நடந்தவுடன் அரசாங்கம் 40,000 இராணுவ துருப்புகள் மற்றும் காவல், துறையினருடன் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கையான ''ஆப்ரேஷன் க்ளீன் ஹார்ட்" என்ற இயக்கத்தின் படி 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மைமென்சிங் -ல் இருந்த இராணுவ வீரர்கள் திரையரங்குகளில் காவல் தடுப்பெல்லை வேலி அமைத்து சட்டம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்கினை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் கேள்வி என்னவெனில் விரிவான காவல்துறை ஏற்பாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு குற்றஞ்செய்பவர்களால் வெடி குண்டு தாக்குதல்களை நிறைவேற்ற முடிந்தது என்பதே.

இந்த வெடி குண்டு தாக்குதல்கள், பொது மக்களின் கவனத்தை அதிகரித்து வரும் பொது மக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருகின்ற ''ஆப்ரேஷன் க்ளீன் ஹார்ட்" என்ற நடவடிக்கையிலிருந்து திசை திருப்பியுள்ளது. சரியாக விளக்கமளிக்க இயலாத சூழ்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஏறக்குறைய 38 பேர்கள் இறந்து விட்டனர். இராணுவம் இந்த மரணங்களை ''மாரடைப்பு'' என்று வகைப்படுத்தினாலும், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் பயன்படுத்திய முறைகளால் தான் என்று குற்றஞ் சாட்டியுள்ளனர். நவம்பர் பிற்பகுதியிலும் டிசம்பர் மாத முற்பகுதியிலும் பங்களாதேஷ் செய்தித்தாள்களில் இராணுவ நடவடிக்கைகளை வினா எழுப்பிய பல கடிதங்கள் பிரசுரமாயின.

மைமென்சிங் வெடிகுண்டு தாக்குதல்கள் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியல்ல. டாக்காவிற்கு தெற்கே 180கி.மீ தொலைவில் அமைந்துள்ள சத்கீரா என்ற நகரத்தில், செப்டம்பர் மாதம் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்ற வருடம் 100க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகள் வேரூன்றிய சமூக மற்றும் அரசியல் சிக்கல்களுக்கு எந்தவொரு ஆட்சியினராலும் தீர்வினைக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கான அறிகுறியே.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved