World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

European Union sends troops to Congo
First independent EU military mission

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இராணுவ நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியம் கொங்கோவிற்குப் படைகளை அனுப்புகிறது.

By Andreas Reiss
27 June 2003

Back to screen version

கொங்கோ ஜனநாயக குடியரசில் (Democratic Republic of Congo -DRC) தன்னுடைய முதல் இராணுவ நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடங்கியுள்ளது. ஜூன் 10-ம் தேதி புனியா (Bunia) விற்கு அருகில் பூசலுக்குட்பட்ட பகுதியில் முதல் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் வந்து சேர்ந்தனர். மொத்தம் 1400-வீரர்கள் மத்திய ஆபிரிக்க போர் அரங்கில் நிறுத்தப்பட உள்ளனர்.

அதிகாரபூர்வமாக, இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இராணுவ நடவடிக்கைக்கு கூறப்படும் நியாயப்படுத்தல் பல ஆண்டுகளாக பூசல்களினாலும் உள்நாட்டுப் போரினாலும் குலைந்திருக்கும் அப்பகுதியில் அமைதி ஏற்படுத்துவது என்பது ஆகும். ஆனால் 1998 லிருந்தே கொங்கோவின் எல்லைப்பகுதியில் வெளிப்படையாகவே போரானது நடந்து வருவதை, அது குடியேற்ற ஆதிக்க காலத்தில் வேரூன்றி இருப்தை எடுத்துக் கொண்டால், மேலோட்டமான ஆய்வு கூட அப்படிப்பட்ட அறிக்கைகள் அதிக அளவு மடத்துணிவுடையது என்பது தெரியவரும்.

ஐரோப்பிய வல்லரசுகள் தங்களை ஒர் இராணுவ சாகசத்தில் ஈடுபடுத்திக்கொள்வதனால் அதன் சொந்த ஆற்றல் நிலைமையை அதன் போக்கில் கொண்டுவரும் என்ற உண்மைக்கான அதிக அம்சங்கள் இருக்கின்றன, மற்றும் அதன் ஆபத்துக்களும் விளைவுகளும் முற்றிலும் கணிக்க முடியாதவையாகும். கடும் சண்டையில் வீரர்கள் அகப்பட்டுக்கொள்ள நேருதற்கு நீண்டகாலம் ஆகாது என்பது நிச்சயமாகத் தெரியும். ஆனால் பாரிஸ், பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஆகியவற்றிலுள்ள முடிவு எடுப்போர் ஐரோப்பாவின் தனித்த இராணுவத்தைக் காட்ட வேண்டும் என்று விரைந்து நிற்கும் அளவில், இந்த ஆபத்துக்கள் பற்றிக் கவலைப்படவில்லை.

நெருக்கடி நிறைந்த ஆபிரிக்காவில் நிலைமை பேரழிவிற்குச் சமமாக இருக்கிறது. போரின் நேரடி அல்லது மறைமுக விளைவுகளினாலும், பஞ்சங்கள் அல்லது வியாதிகள் போன்றவற்றாலும் இதுவரை குறைந்தது 3.5 மில்லியன் மக்கள் மடிந்துள்ளனர். சில மதிப்பீடுகள் 4-மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் எனக் கூறுகின்றன. இந்தப் பகுதியில் உள்ள நிலைமைகள் ஐரோப்பாவில் 30-ஆண்டுகால போரின்போது இருந்த நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன; முன்னாள் அமெரிக்க அரசுத்துறை செயலாளர் மாடலின் ஆல்பிரைட் இம்மோதலை ''முதல் ஆபிரிக்க உலகப்போர்'' என்று விவரித்துப் பேசினார். கடந்த சில ஆண்டுகளாக DRC-ல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் (பழைய Zaire) மேலை ஐரோப்பிய நிலப்பகுதிக்குச் சமமான அளவு அழிவு மற்றும் சொல்லொணா துன்பங்களை மேற்கொண்டுள்ள பகுதி மக்களின் நிலை உண்மையில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் இணையற்றவையாக உள்ளன.

இராணுவ நடவடிக்கைகளுக்காகப் பரந்த அளவில் குழந்தைகளை சேர்ப்பது குறிப்பாக கொடூரம் வாய்ந்தது ஆகும். பல நேரம் இராணுவ அமைப்புக்களில் சிலர் 6-வயதே நிரம்பிய அளவில் - சேரக் கட்டாயப் படுத்தப்படுகிறார்கள்-- ஆனால் பலரும் தாங்களாகவே வந்தும் சேருகின்றனர். அனாதைகளாகிவிட்ட அளவிலும், பல ஆண்டுகள் போரையொட்டித் தன்னையே நம்பி இருக்கும் நிலையிலும் உயிர்வாழ இது ஒன்றுதான் அச்சிறுவர்களுக்கு வழிவகையாக உள்ளது. இராணுவத்துணை அமைப்புக்களில் பயம், பசி, வலி ஆகியவற்றை அவர்கள் உணராமல் இருப்பதன் பொருட்டு குடியோ அல்லது போதைப்பொருளோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக 65- ஐ.நா இராணுவ வீரர்கள் மட்டும் (பெரும்பாலானவர்கள் உருகுவேயிலிருந்து வந்தவர்கள்) கொங்கோவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு அதிகாரம் இல்லை ஆயினும், இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுதற்கு வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு அமைதிப்பணிகள் என்று சொல்லப்படுவதை மேற்பார்வையிடுதலையும், ஐ.நா-பார்வையாளர்கள், அகதி முகாம்கள் மற்றும் குடிமக்கள் இவர்களைப் பாதுகாக்கவும் உள்ளனர். போரின் பரப்பு, நடக்கும் காலஅளவு, கடுமை இவற்றைப் பார்க்கும்போது இது இயலாதது என்பது ஆச்சரியமல்ல. சமீபத்தில் புனியாவில் (Bunia) 300-பேர் படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் அடுத்து பலர் உறுப்புக்களையும் இழந்த நிலையும், இரண்டு ஐ.நா- வீரர் மாண்டதும், ''கூடுதலான தாக்கும் அதிகாரம்'' உடைய படைதேவை என்பதைக் கோரியது. பிரான்ஸ் அப்படிப்பட்ட அழைப்புக்களுக்கு உடனே செவிமடுத்து, இப்பொழுது கொங்கோவிற்கு அனுப்பப்பட்டுள்ள படையில் அதிக அளவு பங்கிலான வீரர்களை 900-பேரை அனுப்பிவைத்துள்ளது.

போரின் தோற்றமும் அதில் பங்குபெறுவோரும்

பல ஆண்டுகளாக மத்திய ஆபிரிக்காவில் நடந்துவரும் போர் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மட்டும் நடப்பது அல்ல. அது தொடங்கியதிலிருந்து அதன் அண்டை நாடுகளும், சில சமயம் தூரத்திலுள்ள ஆபிரிக்க நாடுகளும் போரில் பங்குபெற்றுள்ளன. கின்ஷாசாவில் (Kinshasa) உள்ள கொங்கோ அரசாங்கத்திற்கு அங்கோலா, நமீபியா, ஜிம்பாப்வே மற்றும் சாட் ஆகிய நாடுகளின் குழுக்களிலிருந்து ஆதரவு கிடைக்கிறது; எதிர்ப்பாளர்களுக்கு புருண்டி, உகாண்டா, எல்லாவற்றையும் விட ருவண்டா இப்பகுதிகளின் படைகள் உதவுகின்றன. திரைமறைவிற்குப்பின் தென் ஆபிரிக்கா- மேலைநாடுகளின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்று உகாண்டாவின் தொடர்பு மூலம் கணிசமான பங்கைக்கொண்டுள்ளது.

மத்திய ஆபிரிக்காவில் பல ஆண்டுகளாக சொல்லப்போனால் பல பத்துவருடங்கள் மடங்கின் கணக்கில் எரிந்து கொண்டிருக்கும் பரந்த அளவிலான பூசல்களின் பகுதியே இந்த தற்போதைய கொங்கோ அரசாங்கத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையாகும். இதனுடைய தோற்றம் குடியேற்றமுறை காலத்திற்கே செல்லுகின்றன. செயற்கையான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டிருத்தல், இன பூசல்களைத்தூண்டிவிடுதல், காலனித்துவ சக்திகளுக்கு, ஆதரவான உள்ளூர் மேல்தட்டினரைத் தோற்றுவித்தல் போன்றவை, இப்பிராந்தியத்தில் தொடர்ந்து இராணுவ மோதல்களுக்கான அடித்தளத்தை நாட்டியுள்ளன -இதனை தங்களுடைய சொந்த நலனுக்காக காலனித்துவ வல்லரசுகள் பயன்படுத்தும் பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் தோன்றிய ஆபிரிக்க விடுதலை இயக்கங்கள், பழைய ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு அவர்களின் ஏகாதிபத்திய நலன்களுக்கு உறுதியளிக்கக் கூடியவராக செயல்படக்கூடிய ஆபிரிக்க அரசாங்களைப் பயன்படுத்துவதை சவால் செய்வதை முன்வைத்தன. குளிர்யுத்த நிலைமைகளின் கீழ், காலனித்துவத்திற்கு பிந்தைய காலத்தில் தங்களுடைய நலன்களைக் காப்பதற்கு அவர்கள் கொண்ட இயங்குமுறை ஊழல் மிகுந்த சர்வாதிகாரிகளை அப்பகுதியில் அதிகாரத்தில் இருத்தி ஆதரிப்பதுதான். இந்த முறையில் அவர்களுக்கு இப்பகுதியின் மேற்கத்திய நிறுவனங்களால் மாபெரும் அளவிலான மூலப்பொருட்கள் வளங்களைப் பெறவும் மற்றும் அவற்றின் தடையிலா வணிக சுரண்டலையும் இவை உத்திரவாதம் செய்தன.

இதற்குப் பரிசாக உள்ளூர் அதிகாரத்துவங்கள் கொள்ளையின் ஒரு பகுதியைப் பரிசாகப் பெற்றனர் மற்றும் பெரும் செல்வங்களை குவித்தனர் (பழைய கொங்கோ சர்வாதிகாரி மொபுடு சேசி சிகோ (Mobutu Sese Seko), தன் அதிகாரத்தை இழந்த நேரத்தில் அயல்நாட்டு வங்கிகளில் பில்லியன் கணக்கில் பணம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது). குளிர் யுத்தத்தின் முடிவு இந்த முறையின் அடிப்படையைக் கீழறுத்துவிட்டது. நிலைநிறுத்தப்பட்ட இவ்வாறான நிலையான கொடுங்கோலாட்சிக்குப் பதிலாக, மேலை வல்லரசுகள் வளைந்து கொடுக்கக் கூடிய ஆட்சிகள் தேவை என அழைப்பு விடுக்கின்றன. பழைய ஆளும் தட்டுக்களின் மிகப்பெரிய ஊழல்முறை ஒரு தடையாக ஆகி இருக்கிறது.

குளிர் யுத்த காலத்தில், மேலை வல்லரசுகள் "பிரித்தாளும்" கொள்கைப்படி செயல்பட்டு வந்திருந்தனர், அடிக்கடி பல்வேறு பழங்குடி குழுக்களுக்கு இடையில் நிலவிய மோதல்களைப் பயன்படுத்தினர். இரத்தக் களரியின் போக்கு பெருகும் என்பது தெரிந்திருந்தும் ஏற்பதற்குரியதாக கருதப்பட்டது. ருவண்டாவில் 1994ல் நடைபெற்ற நிகழ்வுகள் அப்படிப்பட்ட தன்மையை விளக்குகின்றன. நான்கே மாதங்களில் ஹுட்டு (Hutu) ஆதிக்கம் மிகுந்த ருவண்டா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பிரச்சாரம் பெருமளவு மக்கள் படு கொலையை விளைவித்தது, அதில் ஹுட்டுவிற்கு எதிர்ப்பாயிருந்த குடிகள் மற்றும் டுட்சிக்கள் 800,000 பேருக்குமேல் பலியாயினர்.

இன அழிப்புக்கு முந்தைய ஆண்டுகளில் பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனும் அவருடைய மகன் ஜோன் கிரிஸ்டோப் உம் ருவண்டா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த வகையில் திகைக்க வைக்கும் பங்கை ஆற்றினர். படுகொலைக்குப் பிறகு, ருவண்டாவில் டுட்சிக் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்த தலைப்பட்டு, குடிமக்களும் பழைய ஆயுதமேந்தியோரும் பதில் தாக்குதலுக்கு பயந்து பல்லாயிரக்கணக்கில் புகலிடம் நாடி கொங்கோ எல்லைக்கு ஓடினர். இது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கியது. அரசியல் சிக்கல்களும், உணவு மற்ற தேவைகளை அளித்தலில் ஏற்பட்ட பிரச்சனைகளும் புலம் பெயர்ந்தோருக்கும் ஏற்கனவே அங்கு வசிப்பவர்களுக்கும் இடையே பூசல்களை ஏற்படுத்தின.

1997-ல் பல ஆண்டுகளாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் ஆண்டுவந்த சர்வாதிகாரி மொபுடு, லோரன்ட் கபிலாவின் (Laurent Kabila) தலைமையிலான எதிர்ப்புப்படைகளால் வீழ்த்தப்பட்டார். இந்த எதிர்ப்பாளர்கள் அமெரிக்காவிலிருந்து மிக முக்கியமான படைபலத்தையும், பணபலத்தையும் பெற்றனர். இதற்குப்பதிலாக கபிலா ஆட்சியைக் கைப்பற்றுமுன்னரே அமெரிக்க நிறுவனங்களுக்கு சுரங்க உரிமைகளும் மற்ற சலுகைகளும் வழங்கப்பட்டன. கின்ஷாசாவில் ஏற்பட்ட அதிகார மாற்றம் கொங்கோவில் பிரான்சின் நலன்களுக்கு ஆபத்தளித்துள்ளது; கொங்கோவில் இப்பொழுது முழுமையான தனித்த அமெரிக்க செல்வாக்குதான் இருக்கும் போல்தெரிகிறது.

ஆட்சியை கைப்பற்றிய பிறகு கபிலா இப்பிராந்தியத்தின் வளமிக்க மூலப்பொருட்களை கொள்ளையடித்தலைத் தொடர்ந்தார் மற்றும் மேலை பெருநிருவனங்களின் நலன்களுக்காக அவற்றை எடுத்துக்கொள்ளவும் அனுமதித்தார். சில காலத்திலேயே புதிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு கிளர்ச்சியாளர்களின் எதிர்ப்புக்குழுக்கள் எழுந்தன. அண்டை நாடுகள் அவற்றிற்கு உதவியளித்தவகையில் கிழக்குக் காங்கோபகுதியின் வளமையில் தங்கள் பங்கையும் உறுதிப்படுத்திக்கொண்டன. ருவண்டாவில் தோற்றபிறகு வெற்றிபெற்ற டுட்சிப்படைகளால் பதிலடி கிடைக்குமோ என்ற பயத்தில் கிழக்கு கொங்கோவிற்கு ஓடிய ஹூட்டு ஆயுதப்படையினரை கபிலா கூட்டாளிககளாகப் பெற்றார். 2001-ல் லோரண்ட் கபிலா கொலைசெய்யப்பட்ட பிறகு ஆட்சி அவருடைய மகன் ஜோசப் கபிலாவிடம் சென்றடைந்தது; இவர் தன் தந்தையின் கொள்கைகளையே தொடர்ந்து வருகிறார்.

இப்பொழுது பல போர்பிரபுக்களின் தலைமையிலான ஆயுதமேந்திய குழுக்கள் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளன. தங்கள் கீழ் பணியாற்றும் வீரர்களின் இனப்பிரிவு உணர்வைத் தூண்டி ஆதரவு கொண்டு, தங்கள் செல்வாக்கையும் செல்வத்தையும் பெருக்குவதற்கான போராட்டத்தை முறைமையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட அண்டை நாட்டின் அரசாங்க ஆதரவு பெற்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்குழுக்கள் என்று எளிதில் பகுத்தறிய முடியாத முறைதான் அங்கு நிலவிவருகிறது. பல கிளர்ச்சிக் குழுத்தலைவர்களும் தங்களுடைய சுயநலன் சார்ந்தவற்றில்தான் கவனம் செலுத்துவார்கள். பல்வேறு பக்கங்களின் உதவியைக்கொண்டு உயர்ந்த அளவில் ஆயுதபாணியாக்கப்பட்ட உள்ளூர் யுத்த பிரபுக்களை எண்ணத்தில் கொண்டால், இப்போர் நடவடிக்கைகள் சில உந்து விசையைப் பெற்றிருக்கும் போக்கு வியப்பை அளிக்கவில்லை.

தங்கம், எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள்

புனியா நகரம் இடுரி மாகாணத்தில் உள்ளது; இங்குதான் ஹெமா, லெண்டு பழங்குடி மக்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்ட வண்ணம் இருந்து வருகின்றனர். கின்ஷாசா அரசாங்கத்திடமிருந்து லெண்டுக்கள் உதவி பெறுகின்றனர்; ஹெமா பழங்குடியினர் ருவண்டாவால் ஆயுத உதவி பெறுகின்றனர், சமீபகாலம் வரை உகாண்டாவிலிருந்தும் உதவி பெற்றனர்.

''இந்த இரு பழங்குடி குழுக்களும் எத்தனையோ ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றனர்'' என்று Berliner Zeitung - TM Stefan Enlert எழுதியுள்ளார்; இந்தப்பூசல்கள் சுற்றியுள்ள இடூரி மாநிலத்தில் பெரிய அளவிலான போரை ஏற்படுத்தி நீண்டகாலத்திற்கு முன்னரே இனக்கொலை அளவு பெரிதாக வளர்ந்தது. உகாண்டாவும், ருவண்டாவும் இதற்கு ஆயுத உதவி அளிக்கின்றன. இப்பகுதி உறுதியற்ற தனிமை கொண்டால், இடூரியிலுள்ள மூலப்பொருட்கள் வளத்தை கொள்ளையடிப்பதிலிருந்து நிறைய பொருளீட்ட அவர்களால் முடியும். Ehlert இந்த அபிவிருத்தியைச் சுருக்கமாகக்கூறுகிறார்: ''இது தங்கம், மரம், பின்னர் எண்ணெயும் உகண்டா எல்லையில் கிடைக்கும் விஷயம் பற்றியதாகும்.''

மத்திய ஆபிரிக்கா மிக அசாதாரண முறையில் இயற்கை மூலப்பொருட்கள் வளத்தில் கொழிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தங்கம், வைரங்கள் தவிர, இப்பகுதியில் தாமிரம், உரேனியம், பல்லடியம், கோபால்ட், கோல்டன் தாதுப்பொருள் ஆகியவையும் கொழிக்கின்றன. இது டாண்டாலம் உலோகத்தைக் கொண்டிருக்கிறது, இது மொபைல் தொலைப்பேசிகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. போரின் மூலம் ஏற்பட்டுள்ள பூசல்கள் இந்த கச்சாப் பொருட்களை அடைதலுக்கும் வணிக அளவில் பயன்படுத்தவும்தான் நடைபெறுகின்றன. தாதுப்பொருட்களை சுரண்டி விற்கும் அளவில் தங்கள் செலவை ஈடுகட்டும் வருமானத்தை இந்தக் கிளர்ச்சிக் குழுக்கள் பெறுகின்றன. இதுதான் இவர்களுடைய முக்கிய வருமானம் என்ற உண்மையானது, முற்றிலும் அரசியலையே முன்வைத்துக்கிடைக்ககூடிய மோதலுக்கான தீர்மானங்களைக் கீழறுக்கின்றன.

சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மூலப்பொருட்கள் அடைவதிலுள்ள வழிவகைகளில் தங்கள் செல்வாக்கை வளர்க்க விரும்புகின்றன. சான்றாக, அமெரிக்க நிறுவனங்களைப் போலவே, சிம்பாப்வேயும், கொங்கோ அரசாங்கத்திற்குப் பல ஆண்டுகள் கொடுத்த ஆதரவிற்காக அங்குள்ள சுரங்கத் தொழில் மூலப்பொருள் எடுக்கும் நிறுவனங்களில் உரிமைகளும், பங்குகளும் தேவை என்று கேட்டுப்பெற்றுள்ளது.

ஆனால் இந்தப் பூசல்கள் எல்லாவற்றையும் வெறுமனே பல ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரப் போட்டிகள் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சக்திவாய்ந்த மேலை நிறுவனங்களின் நலன்களும் இதன் பின்னணியில் உள்ளன. உதாரணமாக கோல்டான் மூலப்பொருள் கொங்கோவிலிருந்து வேறுநாடுகள் வழியாக மேலை நிறுவனங்களை அடைகின்றன; அவை இந்த மூலப்பொருளை தோண்டியெடுக்கும் சுரங்க வேலைகளில் உள்ளூர் இடைநிலை நிறுவனங்கள் மூலம் தொடர்புகொண்டுள்ளன. 2001-ல் ஓர் ஐ.நா- அறிக்கை ஜேர்மன், கனேடிய, அமெரிக்க நிறுவனங்கள் இதில் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிவிக்கிறது.

கபிலா அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற்ற அளவில் Canadian Heritage Oil Company - வடகிழக்கு கொங்கோவில் எண்ணெய்க்குத் துளையிடும் பணியில் இறங்கிவிட்டது; இப்பகுதியில்தான் நிலம்பிடிக்க கடுமையான சண்டை இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பல மில்லியன் பாரல்கள் எண்ணெய் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய்காக நடத்தும் போராட்டத்தில் மத்திய ஆபிரிக்காவிற்குப் புதிய முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய நாடுகள் எந்த வகையிலும் தனித்த கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் எனக் கூறுவதற்கில்லை. அவை மேலைநாடுகளுடன் ஓரளவு இரகசியமாக, நெருங்கிய உறவுகொண்டுள்ளன; மற்றும் இறுதி ஆய்வில், வளர்ச்சி உதவிக்கு அவற்றையே நம்பியுள்ளன. இது உதவியளிக்கும் நாடுகளின் செல்வாக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. தன்னுடைய ஒப்புதலைப் பெறாவிட்டால் குறிப்பிட்ட நாட்டிற்கான பல முறை "உதவியை நிறுத்திவிடுவோம்" என்று அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. ஜனநாயகமயப்படுத்தலுக்கான அதன் பாசாங்குக் கோரிக்கையானது, வணிகச்சந்தைகளைத் தாராளமயமாக்குவதற்கான உந்துதல் ஆகும், அது ஆபிரிக்காவின் செல்வத்தை தடையற்ற முறையில் அயல்நாட்டு வணிகநிறுவனங்கள் அடைவதற்கு வழிவகை செய்யும்.

பிரான்சும் ஐரோப்பாவும்

கொங்கோவில் பிரான்சின் தலையீடு பரந்த நோக்கத்தாலும் மனிதாபிமானக் காரணங்களினாலும் ஏற்பட்டுள்ளது என்று நினைத்தால் அது வேண்டுமென்றே உண்மையை பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்வதற்கு ஒப்பாகும். சிறப்பாக, மத்திய ஆபிரிக்காவில், மிகுந்த ஊழல் வாய்ந்த அரசாங்கங்கள் பிரெஞ்சு ஆதரவுடன்தான் பதவியில் இருக்க முடியும்; ருவாண்டாவில் டுட்சிகளுக்கு எதிரான வேட்டைபோல் நிகழ்ந்த நடவடிக்கைகள் பிரான்சின் தயவினால்தான் ஏற்கப்பட்டன; பல ஆண்டுகளாகத் தன்னுடைய நலன்களுக்காக இரத்த களரியை பிரான்ஸ் ஏற்படுத்தியது, தேவையானால் கட்டளையிடுவது போல் நடந்து கொள்ள முடியும் என்று அர்த்தப்படுத்தியது. இவை அனைத்துமே மறக்கப்பட்டு நாம் பிறருக்கு உதவும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளது மட்டுமின்றி முன்னணியிலும் அது உள்ளது என்று நம்பவேண்டுமாம்.

ஆபிரிக்காவில் தன்னுடைய இராணுவம் நிலைகொள்ளலை ஏற்படுத்தியுள்ள பிரான்சின் அக்கறையில் முக்கியமான அம்சம் பழைய மற்றும் புதிய மூலப்பொருட்களை அடையும் வழிகளை மீண்டும் பெறுவது என்பதுதான். 1997-ல் மொபுடுவின் வீழ்ச்சி அப்பகுதியில் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது, கொங்கோவின் சர்வாதிகாரி வீழ்ந்தபின் அமெரிக்கா தன்னுடைய செல்வாக்கிற்கு உட்படுத்திக் கொண்டுவிட்ட பகுதியை மீட்க வேண்டும் என்றே ஜனாதிபதி சிராக் இந்த வாய்ப்பைக் கருதுகிறார்.

அமெரிக்காவுடனான போட்டியும் இந்த தலையீட்டிற்கு மிக முக்கியமான காரணத்தைக் கொண்டுள்ளது. ஈராக்கிய போரின்போது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே வேறுபாடுகளும் நலன்களின் பகிர்வில் பூசல்களும் விளைந்த நிலையானது, அமெரிக்காவை நம்பியிராத தனித்த இராணுவ ஆற்றல் தேவை என்ற குரல்களை வலுப்படுத்தியுள்ளன. "Operation Artemis" என்பது ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ நடவடிக்கையை முதன்முறையாக NATO -விலிருந்து சுதந்திரமாக ஐரோப்பாவிற்கு வெளியே மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவிக்கிறது.

வார இதழான Die Zeit க்கு அளித்த பேட்டி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைத் தூதரான Javier Solana அறிவித்ததாவது, ''ஐ.நா-வின் தலைமைச் செயலர் கோபி அன்னன் அங்குள்ள ஐ.நா- துருப்புக்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டார். நாங்கள் சரி என்றோம், ஏனெனில் இப்பொழுது எங்களால் அது முடியும். இன்று நாங்கள் இராணுவ அளவில் முன்னேறியுள்ளோம் என்பதை முதன்முதலாக காட்ட முடியும். ''எங்கு விருப்பம் இருக்கிறதோ, அங்கு ஒரு வழியும் உண்டு'' என்பதை நாங்கள் செய்து காட்டுகிறோம். நேட்டோவும் இதை செய்யமுடியும். ஆனால் அமெரிக்கர்களோ நேட்டோவோ இதில் அக்கறை காட்டவில்லை, எனவே நேட்டோ துணையின்றி நாங்களே இப்பணியைச் செய்வோம். நாங்கள் ஒன்றாகச்சேர்ந்து இதைச் செய்வோம், ஏனெனில் இராணுவ அளவில் திறமையுடன் இயங்கி அதையொட்டி அரசியல் அடையாளம் ஒன்றைக் காண்பிப்போம்''.

சோலனா பிரான்சிற்கு குடியேற்ற நலன்கள் இல்லை என்று எதிர்ப்பு கூறலாம் (''...... பெல்ஜியர்களே அன்றி, பிரெஞ்சுக்காரர்கள் அல்ல, தங்கள் அடையாளங்களை இங்கு விட்டுச்சென்றுள்ளது.'') ஆனால் எத்தனையோ ஆண்டுகள் மொபுட்டு ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவும் ருவாண்டாவில் இன அழிப்பு படுகொலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததும் இத்தகைய கூற்றுக்கள் பாசாங்கானவை என்பதைப் புலப்படுத்துகின்றன.

ஜேர்மனியின் நிலை

ஜனாதிபதி சிராக் ஜூன் நடுவில் பேர்லினுக்கு விஜயம் செய்தபொழுது கொங்கோவில் தலையீடு பேச்சுவார்த்தைகளில் முக்கியமானவற்றுள் ஒன்றாக இருந்தது. ''இது ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு அரசியல்'' என்றும் அமெரிக்காவின் தன்னிச்சையான அணுகுமுறைக்கு மாற்றுமாதிரி போன்றது எனவும் சிராக் கூறியதாகச் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ''இது ஒரு செயல்பாட்டில் ஐரோப்பிய ஒற்றுமையுணர்வை புலப்படுத்தும்; இவ்வாறுதான் ஐ.நா-விரும்புகிறது'' என்று பிரெஞ்சு ஜனாதிபதி கூறியதை Spiegel -online மேற்கோள் காட்டுவதோடு ''இது ஒரு தந்திரமாக மறைக்கப்பட்ட அமெரிக்காவின் மீதான பக்கவாட்டுத் தாக்கு'' என்றும் எழுதியுள்ளது.

ஜேர்மனியின் பங்கை ''சற்றே அளவுடையது'' என கூறிய சிராக், தான் அதை ஜேர்மனி ஏற்கனவே முழு அளவில் ஆப்கானிஸ்தானில் முழுத்திறனுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதிலிருந்து அறிந்துகொள்ளமுடியும் என்றார்.

கொங்கோ பணியில் ஜேர்மனி போக்குவரத்து மற்றும் இராணுவ மருத்துவமனை விமானங்களைக் கொடுப்பதோடு சில அதிகாரிகளையும் அனுப்பிவைக்கும்; அவர்கள் DRC- யில் இல்லாமல் உகாண்டாவில் இருப்பர். ஜேர்மன் பிரிவில் மொத்தத்தில் 350-பேர் இருப்பார்கள். இதுவும் விரைவில் மாறக்கூடும். பாராளுமன்றம் பணிக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பே பாதுகாப்பு அமைச்சர் ஸ்ட்ரக் ஜேர்மானியப் பங்கு விரிவு செய்யப்படுவதைப் பற்றி பேசியுள்ளார். இது ஐ.நா-விற்கு தேவைப்படக் கூடும் மற்றும் விரும்பப்படலாம் என்றும் அவர் கூறினார். அமைச்சரக அளவில் மேலும் சில திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டுவருகின்றன என்பது தெளிவானது.

Bundestag-TM உள்ள அனைத்து பாராளுமன்ற பிரிவுகளும் கொள்கையளவில் ஜேர்மனியப் பங்கை ஏற்றுள்ளன. சிறப்பாக குறிப்பிடத்தக்கது, அயலுறவு அமைச்சர்கள் Josch Fishere -பாதுகாப்பு வல்லுநர் Winfriend Nachtweih உட்பட, பசுமைக் கட்சி அரசியல் தலைவர்கள், இந்தப் பணியில் ஜேர்மனியப் பங்கை வலியுறுத்தி ஆதரவுடன் கருத்துத் தெரிவித்துள்ளனர். அயலுறவு அலுவலகத்தில் அரசாங்க அமைச்சராவுள்ள கெர்ஸ்ரன் முல்லர், இப்பணியில் மிகுந்த அக்கறை காட்டுவதோடு பணி தொடங்குவதற்கு முன்பே "ஆய்வுக் காரணங்களுக்காக" அப்பகுதிக்குப் பயணம் செய்துவிட்டும் வந்துள்ளார். இவ்வம்மையார் பயணத்தின் போது உகாண்டா, ருவாண்டா நாட்டுத் தலைவர்களையும் DRC- ஜனாதிபதி கபிலாவையும் சந்தித்துள்ளார்.

பேர்லினுக்குத் திரும்பியதும் ஐரோப்பிய ஒன்றியம் கொங்கோ பணியில் பங்கேற்க வேண்டும் என்று அயராது வாதிட்டுவந்தார். இப்பொழுது அனுப்பப்படும் படை போதுமென்றாலும், செப்டம்பர் மாதம் கூடுதலான படைகள் பணிப்பகுதி விரிவாக்கப்படும் என்ற அளவில் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றையும் விட ஒன்று தெளிவானது: தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை அமைதியைக்காத்து மக்களைப் பாதுகாப்பதற்காக உறுதியளிக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கை அல்ல. இப்பகுதியில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய வல்லரசுகள் இந்தப்பணியில் தற்பொழுது இறங்கியுள்ளன. பலமுறை சோதிக்கப்பட்டு வெற்றியடைந்த பாணியான சாதாரணக் குடிமக்களின் கஷ்டங்கள் என்பது இந்தப் பன்னாட்டுப் பணியை நியாயப்படுத்த சுட்டிக்காட்டப்படுகின்றன.

மேலும் அட்லாண்டிக்கை கடந்து ஓர் அரசியல் குறிப்பையும் அனுப்ப விரும்புகிறார்கள்; அமெரிக்கா ஒன்றுதான் திறமையும் அதிகாரமும் உடைய பன்னாட்டு பணிகளைச்செய்யக் கூடிய வல்லரசு என்பதற்கில்லை என்று நிலைநிறுத்த விழைகின்றனர். கொங்கோவில் ஐரோப்பாவின் சாகசச்செயல் வல்லரசுகளிடையே பூசல்களைப் பெருக்கவே வழிகோலும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved