World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Jordan: Elections provide a fig leaf for unpopular regime

ஜோர்டான்: மக்கள் செல்வாக்கை இழந்த ஆட்சிக்கு தேர்தல் ஒரு மூடுதிரை

By Jean Shaoul
25 June 2003

Back to screen version

ஜோர்டான் நாடாளுமன்றத் தேர்தல்கள் தீவிரமான அரசியல் விமர்சகருக்கு ஒரு வகை நெருக்கடியாக அமைந்திருக்கிறது. பொதுவாக ஒரு தேர்தல் முடிவைப்பற்றி எழுதும்போது பதவிக்கு விரவிரும்புகின்ற கட்சிகளின் தன்மை, எப்படி மக்கள் வாக்களித்தார்கள், எந்தக் கட்சி வென்றது, அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பார்கள், மற்றும் புதிய ஆட்சி கடைபிடிக்க இருக்கின்ற கொள்கைகள் ஆகியவற்றை பற்றி விவாதிப்பது வழக்கம்.

ஜோர்டான் தேர்தல்களைப்பற்றி விவரிக்கும் நேரத்தில் இப்படி செய்வதுண்மையில் இயலாத காரியமாக இருக்கிறது. ஜூன்-17-ந்தேதி 5.5 மில்லியன் மக்களைக்கொண்ட ஜோர்டானில், அதன் முடிவுகளைக்காட்டிலும் தேர்தல் நடந்ததுவே முக்கியத்துவமுடையாதாக இருக்கிறது. இந்தப் பிராந்தியம் முழுவதையும் "ஜனநாயகமயமாக்க" வேண்டும் என்று அமெரிக்கா கூறிவருகின்ற பொழுது, வரம்பற்ற சர்வாதிகார ஆட்சிக்கு அரசியல் மூடுதிரை வழங்குவதற்காகவே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

மிகச்சிறிய பாலைவன ராஜ்ஜியமான ஜோர்டான் முதலாவது உலகப்போருக்குப் பின்னர் முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து வெட்டி எடுத்து உருவாக்கப்பட்டது. அந்த வட்டாரத்து உள்ளூர் ஆளுநர் ஒருவர் முதல் உலகப்போரில் பிரிட்டிஷாருக்கு செய்த சேவைக்காக வெகுமதியாக ஜோர்டான் தரப்பட்டது. அவரின் வாரிசே இன்றைக்கும் அப்பகுதியை அரசாண்டு கொண்டிருக்கின்றது.

இன்றைய மன்னர் இரண்டாவது அப்துல்லா- வரம்பற்ற அதிகாரம் கொண்ட மன்னராக அரசாண்டு வருகிறார். தனது சொந்த இனத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிதோயின் (Bedouin) இராணுவத்தை நம்பி அவர் ஆட்சி செய்து வருகிறார். அவர் ஜோர்டானின் சிறப்புப் படையில் தளபதியாக பணியாற்றிய அனுபவம் உள்ளதோடு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பான பயிற்சி பெற்றவர். ஜோர்டான் நாடாளுமன்றம் அடையாளச் சின்னமாக விளங்குகிறதே தவிர, அதிகாரம் எதுவும் இல்லை. மன்னரின் அதிகாரங்களுக்கு நாடாளுமன்றம், எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது. கீழ்ச்சபைதான் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மன்னர் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட முடியும். அவர் விரும்பாத சட்டம் இயற்றப்பட்டால் அதை ரத்து செய்துவிட முடியும். அவரது ரகசிய போலீஸ் முஹராபத் (Muharabat) என்று அழைக்கப்படுகிறது. ஜோர்டான் மக்களது வாழ்வில் ஒவ்வொரு அம்சத்தையும் அந்த இரகசிய போலீஸ் கண்காணித்து வருகிறது.

ஜோர்டான் இயற்கை வளங்கள் அதிகமில்லாத மிக ஏழ்மையான நாடு, 1948- மற்றும் 1967- ம் ஆண்டு இஸ்ரேலியர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்த அல்லது தப்பியோடி வந்த முன்னாள் மேற்குக்கரை பாலஸ்தீன மக்களுக்கு முகாமாக ஜோர்டான் விளங்குகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் இது. 2001-ல் ஜூலை மாதம் நான்கு ஆண்டுகள் பூர்த்தியானதும் இரண்டாவது அப்துல்லா நாடாளுமன்றத்தை கலைத்தார். பல முறை அவர் தேர்தல்களை தள்ளி வைத்தார். "பிராந்திய சூழ்நிலைகளை" மேற்கோள் காட்டி தேர்தல்கள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தி வரும் கொடூரமான ஒடுக்கு முறைகளால் ஆத்திர மூட்டப்பட்ட மக்களால் கிளர்ச்சி உருவாகி அமெரிக்கா மற்றும் சர்வதேச நிதிநிறுவனங்கள் கட்டளையிட்டுள்ளபடி தான் மேற்கொண்டுள்ள பொருளாதார செயல் திட்டத்தை பொதுமக்களது கிளர்ச்சி சீர்குலைத்து விடும் மற்றும் தனது சர்வாதிகார ஆட்சியை ஒழித்துக்கட்டி விடும் என்று அஞ்சினார்.

பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும் இஸ்ரேலுடன் வழக்கமான உறவுகளை நிலை நாட்டவும் திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை சரிகட்ட மேலை நாடுகளின் உதவி மற்றும் கடன்களை பெறுவதற்குமான அவரது திட்டங்களையும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை ஆதரிப்பதையும் ஜோர்டான் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் தெருக்களில் அணிவகுத்து வருகையில், அப்துல்லா பொது ஆர்ப்பாட்டங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் தடைவிதித்தார். இஸ்லாமியக் கட்சிகள் போன்றவை பொதுமக்களது ஆதரவை திரட்டிவிடாது தடுப்பதற்காக இது போன்ற தடைகளை அவர் விதித்தார்.

2001-க்கு பின்னர், மன்னர் தனது அவசர கட்டளைகள் மூலமும், அரசாட்சி செய்துவருகிறார், 160-க்கு மேற்பட்ட "தற்காலிக சட்டங்களை" பிரகடனப்படுத்தியுள்ளார். அவை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான போருக்கு பொதுமக்களின் எதிர்ப்பு ஒருமனதாக இருப்பினும், ஈராக்குடன் உள்ள எல்லையில் அமெரிக்க துருப்புக்கள் அணி வகுத்து நிற்பதும் ஜோர்டான் தலைநகருக்கு அருகில் ராக்கெட்டுக்களை எதிர்த்து தாக்குகின்ற பட்ரியோட் ஏவுகணைகள் இடம் பெற்றிருப்பதும் அமெரிக்காவிற்கு அப்துல்லா ஒத்துழைப்பு தந்து வருகிறார் என்பதை மறுக்க முடியாது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

கிளர்ச்சிகள் உருவாக்க கூடும் என்பதை எதிர்பார்த்து எதிர் கட்சிக்காரர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது மற்றும் போர் தொடங்குவதற்கு முன்னர் போராளிகள் என்று சந்தேகப்பட்டவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். 2002-நவம்பரில், மன்னருக்கு ஆதரவான முக்கியமான பகுதிகளுள் ஒன்றான, தெற்கு நகரான மா-அன்- பகுதியில் "சட்டவிரோதக் கும்பல்" மக்களை பயமுறுத்தி வருகிறார்கள் என்று காரணம்காட்டி பாதுகாப்பு படைகள், வரலாறுகாணாத பலாத்கார முறைகளை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுத்தன, இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

மிகப்பெரும்பாலான நாடுகளில் நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு மோசடி பேர்வழிகள் கூட்டத்தை விரட்டி விட்டு இன்னொரு மோசடி பேர்வழிகள் கும்பலைக் ஆட்சிக்கு கொண்டுவர சிறந்த ஒரு வாய்ப்பதைத் தருகின்ற வேளையில், ஜோர்டானில் தேர்தல் மிகக்குறைந்த அளவு மதிப்பைக் கூட கொண்டிருக்கவில்லை.

மன்னர், பிரதமரை நியமிப்பதற்கு எந்தவிதமான கடமையும் உள்ளவர் அல்ல அல்லது பெரும்பான்மை கட்சி அல்லது நாடாளுமன்றத்தின் மூலம் அரசாங்கத்தை நியமிக்கமாட்டார். தனது விசுவாச ஆதரவாளர்கள் மற்றும் பணக்கார பாலஸ்தீன வர்த்தகர்கள் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆட்சியை அமைத்து வருகிறார். பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ரவுலா கலா ஃபிற்கு மன்னர் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், சம்பிரதாயத்தை மீறி செயல்படுகின்ற எண்ணம் தமக்கு இல்லை மற்றும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் ஆட்சியை அமைக்கப்போவதில்லை என்பதையும் விளக்கியுள்ளார். அமைச்சர்கள் அவர்களது தகுதி அடிப்படையில் பொறுக்கி எடுக்கப்படுவார்களே தவிர அவர்களது அரசியல் சார்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் என்பதையும் மன்னர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் "தங்களை அடுத்த தேர்தலில் அதே வாக்காளர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். என்பதற்காக தனது கட்சி பிரதிநிதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதில்" காலத்தைக் கழித்தனர் என்றும் இதனை நியாயப்படுத்தினார்.

"நாட்டிற்கு புதிய கொள்கைகளை உருவாக்குவதை விட வலுவான அரசியல் அணிகளை உருவாக்கும் இடைமருவும் கட்டமாகத்தான்" தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்று அவர் விவரித்தார்.

தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் அவர்கள் கட்சி உறுப்பினர்களாக இருப்பதைக்காட்டிலும் "சுயேட்சைகளாகவே" மன்னருக்கு தேவைப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 80-லிருந்து 110-ஆக மன்னர் உயர்த்தினார். வாக்களிக்கும் வயது வரம்பை 18-ஆக குறைத்தார். "ஜனநாயகத்தை உருவாக்குவதாக" தோற்றமளிக்குமாறு காட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை மகளிருக்காக ஒதுக்கீடு செய்தார். 110- இடங்களுக்கு 760- வேட்பாளர்கள் போட்டியிட்டனர், கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே மன்னரின் விசுவாசமான ஆதரவாளர்கள்.

வாக்குபதிவு நடக்கும் தினத்தை பொது விடுமுறை நாளாக மன்னர் அறிவித்திருந்தாலும் 20-லட்சம் வாக்காளர்களில் 56 சதவீம் பேர் மட்டுமே வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். ஜோர்டானில் மிகப்பெரிய நகர்களான அம்மான் மற்றும் சர்க்கா-வில் மிகக்குறைந்த அளவிற்கு வாக்குகள் பதிவாயின. நாட்டின் இதர பகுதிகளில் அதிக அளவிற்கு வாக்குகள் பதிவாயின. இது தற்செயலானதல்ல. இனக்குழுக்களும் கிழக்கு கரையாளர்களும் (பூர்வீக ஜோர்டானியர்கள்) வாழ்ந்து வரும் பல பகுதிகளில் சிறிய நகரங்களில், கிராமங்களில் மலை ஜாதியினர் பகுதிகளில் வாக்குப்பதிவில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. நகரங்களில் பிரதானமாக பாலஸ்தீன வம்சா வழியினர் பெருமளவில் வாழ்ந்து வரும் பகுதியில் மிகக்குறைந்த அளவிற்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மன்னருக்கு விசுவாசம் கொண்டவர்கள் 93- இடங்களில் வெற்றிபெற்றனர். இஸ்லாமிய சகோதரத்துவ அரசியல் கட்சி, இஸ்லாமிய செயல்பாட்டு முன்னணி (IAF) போன்ற அமைப்புக்கள் போட்டியிட்ட 30- இடங்களில் 15-இடங்களை கைப்பற்றின. இஸ்லாமிய அமைப்புக்களின் வெற்றி என்பது நாட்டில் அவர்களுக்குள்ள ஆதரவை எதிரொலிக்கின்றது என்பது நாட்டில் அவர்களுக்குள்ள உண்மையான ஆதரவை குறைத்து மதிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

ஜோர்டானின் வரலாற்றில் மிகத் தூய்மையான தேர்தல் இது என்று நிர்வாகத்தால் கூறப்பட்ட இப்படி மிகக் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல்களில் கூட வாக்குப்பதிவில் மோசடி நடைபெற்றது என்று கூறுவதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்களும், பத்திரிகையாளர்களும் வாக்குச் சாவடிகளில் நுழையக்கூடாது என மன்னரால் தடைவிதிக்கப்பட்டது அத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு வலுவூட்டுகின்றது.

இஸ்லாமியக் கட்சிக்காரர்கள் மற்றும் ஒரு சில சுயேட்சைகள் நீங்கலாக எல்லா வேட்பாளர்களும் பரவலாக அப்துல்லாவின் செயல் திட்டங்களை ஆதரிப்பவர்கள். ''இந்த நாடாளுமன்றம் மன்னருக்கு எந்த தலைவலியையும் கொடுக்கக்கூடாது" மற்றும் "15 இஸ்லாமிய கட்சிக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓரளவிற்கு விவாதம் நடத்துவதற்கு உத்திரவாதம் செய்துதரும் மற்றும் அரசாங்கத்திற்கு ஓரளவிற்கு அழுத்தம் கொடுக்க உதவும்''- என்று ஜோர்டான் தலைநகரில் பணியாற்றும் BBC- செய்தித்தொடர்பாளர் ஹேபா சலே சற்று அகந்தையாகவே எழுதினார்.

ஜோர்டானியர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்கள் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது போன்ற பிராந்தியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கல்வி, பொருளாதார மேம்பாடு, சம வாய்ப்புக்கள், தேசிய தேர்தல்களில் பங்கேற்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளில் ஊன்றி கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மன்னரும் அவரது அடிவருடி ஆட்சியும் செப்டம்பர் 2002க்குப் பின்னர், ஜோர்டான்தான் முதலில் என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஜோர்டானின் திட்ட அமைச்சர் பாஸ்ஸெம் அவாதல்லா (Bassem Awadallah) புதிய தேசிய குறிக்கோளை விளக்கினார். முதலில் ஜோர்டான் என்பதன் பொருள் "தேசிய நலனைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு பிரச்சனைகளில் மாற்றம் செய்வதற்கான செயற்பாட்டுக் களத்தில்" வேட்பாளர்களும் வாக்காளர்களும் கவனம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காகத்தான் என்று அவர் விளக்கினார்.

2002-ல் அமெரிக்கா, ஜோர்டானுக்கு 250-மில்லியன் அமெரிக்க டாலர்களை பொருளாதார உதவியாக வழங்கியது. கல்வியை ஊக்குவிப்பதற்காக பொருளாதாரத் திட்டத்திற்கு நிதியூட்ட இந்த தொகை தரப்பட்டது. 2003- ஜனவரியில் ஈராக்கிற்கு எதிரான போரில் மன்னர் அப்துல்லா அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேலும் 145-மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா வழங்கியது.

ஜோர்டானின் மோசமான பொருளாதார நிலை

1980-களில் சர்வதேச அளவில் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதும் 1987-ம் ஆண்டு முதலாவது பாலஸ்தீன இண்டிபாடா எழுச்சியும் 1989ல் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியது. அப்துல்லாவின் தந்தையான மன்னர் ஹூசேன் தனது பாரம்பரிய ஆதரவாளர்களுக்கு அரசாங்க பதவிகளையோ மானியங்களையோ வழங்கமுடியாத சூழ்நிலை உருவாயிற்று. அரசாங்க நெறிமுறைகள் மற்றும் அரசாங்க ஒப்பந்தங்களின் பின்னணியில் தனது வர்த்தக கூட்டாளிகளுக்கு மன்னர் ஹூசேன் ஆதரவு தரமுடியாத நிலை உருவாயிற்று.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இல்லாமல் ஹூசேன் பலாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்திருக்க வேண்டிய, சமுதாய செலவினங்களை குறைக்க வேண்டிய, முக்கியமான பொருட்களுக்கான மானியங்களை நீக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும் - இது சமூக உறவுகளை சீர்குலைத்திருக்கும் மற்றும் அவரது எதேச்சாதிகார ஆட்சி தங்கி இருக்கும் ஆதரவையும் சீர்குலைத்திருக்கும். இப்படிப்பட்ட நெருக்கடியிலிருந்து பிணை எடுப்பதற்கு விலையாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் தாராள பொருளாதாரமயமாக்கலை செயல்படுத்துதல் இருந்தது.

மன்னர் ஹூசேன் அரசியல் கயிற்றில் ஜாலவித்தையில் கைதேந்தவர், 1957-ம் ஆண்டு அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினார். அதிருப்தி கொண்ட ஜோர்டான் மக்களைத் திருப்திப்படுத்தும் ஒரு வழியாக தேசிய அளவிலான தேர்தல்களை நடத்தினார், மலைவாழ் இனங்கள் மற்றும் இனக்குழுக்குளுக்கு, வர்த்தகர்களுக்கு நாடாளுமன்றத்திற்கும் மந்திரி பதவிக்கும் போட்டியிடுவதற்கு சில சலுகைகளை தந்தார். இப்படிப்பட்ட சலுகைகளை விரிவாக்கியதன் மூலம் ஆதரவிற்கான எல்லையை, வஸ்தா (wasta) என அறியப்படுவதை அதிகரிப்பதில் நம்பிக்கை கொண்டார் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கண்டனங்களை முனை மழுங்கச்செய்தார். தனது விசுவாசிகளுக்கு காபினட் மந்திரி பதவிகளை தருவதற்கு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அரண்மனையின் ஆதரவாளர்கள் 22-பேர் மட்டுமே வெற்றி பெற்றபொழுது அவரது நம்பிகைகள் நசிந்து விட்டன. 1989-தேர்தலில் 80 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 34-பேரும், இடதுசாரிகள் 13 பேரும் சுயேட்சைகள்11 பேரும் வென்றனர், எதிர்கட்சிகளுக்கு 59 சதவீதம் பெரும்பான்மை கிடைத்தது.

மன்னர் ஹூசேன் 1991-வரை வளைகுடாப்போரில் சதாம் ஹூசேனை ஆதரித்ததைத் தொடர்ந்து ஜோர்டானின் பொருளாதார நிலை மிகக் கடுமையாக சீர்குலைந்தது. வளைகுடா நாடுகளிலிருந்து கிடைக்கின்ற பொருளாதார உதவி மற்றும் ஜோர்டான் நாட்டவர் இந்நாடுகளிலிருந்து அனுப்புகின்ற பணம் ஆகியவற்றை எப்போதும் ஜோர்டான் சார்ந்து இருக்கின்றது. அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ஜோர்டானின் பொராளாதார வளம் வறண்டு விட்டது. இந்த படிப்பினைகள் காரணமாக அமெரிக்கா தொடக்கிய இஸ்ரேல் பாலஸ்தீன சமாதான முயற்சிகளை ஹூசேன் ஆதரிக்க வழிவகுத்தது மற்றும் 1994-ம் ஆண்டு இஸ்ரேலுடன் ஜோர்டான் ஓர் உடன்படிக்கையை செய்து கொண்டது.

1989-ம் ஆண்டு பாதகமான தேர்தல்களை அடுத்து உடனடியாக, பாலஸ்தீனர்கள், இடதுசாரிகள் மற்றும் மதச்சார்புடைய குழுக்கள் தேசிய தேர்தல்களில் வெற்றி பெறமுடியாத வகையில் அவர் தேர்தல் சட்டங்களில் தகுந்த சீர்திருத்தங்களை செய்தார். 1993 மற்றும் 1997-ம் ஆண்டு தேர்தல்களில் மலைவாழ் இனத்தவர் கிழக்குக்கரை கிராம வாசிகள் மத்தியிலான மன்னரின் பாரம்பரிய தளங்கள் வலுப்படுத்தப்பட்டன, நகரங்களிலும் மாநகரங்களிலும் வாழுகின்ற ஏழ்மை நிலையிலுள்ள மக்களும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்ற பாலஸ்தீன அகதிகளும் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்டனர். பாலஸ்தீனர்களில் மிகப்பெரும்பாலோர் வாக்குப்பதிவைப் புறக்கணித்தனர். தேர்தலானது நாட்டிற்குள் சமுதாய பிரிவுகளுக்கு இடையிலான கொந்தளிப்புக்களை அதிகரிக்கவே சேவை செய்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி தனியார்மயமாதல் நடவடிக்கைகள் நடைபெற்றுவந்தன. அதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் தான் பயன் அடைந்தனர். பொதுத்துறையை முக்கியமாக நிர்வகித்து வரும் தனது பாரம்பரிய ஆதரவாளர்களை அவர்களுக்கு புதிய தொழில்களில் "முக்கிய முதலீட்டாளர்கள்" என்று புது நிறுவனங்களில் வெகுமதிகளை வழங்கியதன் மூலம் சமாதானப்படுத்த முயன்றார். தனியார் துறையில் மேலாதிக்கம் செய்து அதைக் கட்டுப்படுத்தி வரும் பாலஸ்தீனிய வர்த்தகர்களை, அரண்மனையை சார்ந்திருப்பவர்கள் ஆதிக்கம் செலுத்தவிடாது முறியடிக்கும் வகையிலும் தடுக்கும் வகையிலும் அவர் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வகுத்தார்.

சர்வதேச நாணய நிதியம் நடைமுறைப்படுத்திய பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் ஜோர்டான் மக்களுக்கு சொல்லொணா துயரங்களை தந்தன, வரி விதிப்புக்கள் உயர்ந்தன, மானியங்கள் வெட்டப்பட்டன, வேலைவாய்ப்புக்களை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் 27 சதவீதமாக உள்ளது, மேலும் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடிக்கொண்டிருக்கின்றனர். நாணயத்தின் மதிப்பு குறைந்து இருப்பதால் விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றன. ஜோர்டானின் ஒட்டுமொத்த கடன் 8- பில்லியன் அமெரிக்க டாலர்கள், இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகமாகும்.

ஹூசேனின் புதல்வர் அப்துல்லா 1999-ம் ஆண்டு பதவிக்கு வந்தார், அதே கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். சென்றவாரம் நடைபெற்ற தேர்தல்கள் அவரது அரசியல் அல்லது பொருளாதார திசைவழியில் மாற்றமில்லை என்பதை அர்த்தப்படுத்தும். முற்றிலுமாக புஷ் நிர்வாகத்தை நம்பியிருக்கின்ற ஜோர்டான், ஈராக்கை, அமெரிக்கா நாசப்படுத்தியதை ஆதரித்தது. அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் அது கையெழுத்திட்டுள்ளது. பெரு வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்றவகையில் மத்திய கிழக்கை சீரமைப்பதற்கு அழைப்பு விடுக்கும் உலக பொருளாதார அரங்கின் தலைவர்கள் உச்சி மாநாடு நடத்துவதற்கு தற்போது ஜோர்டான் விருந்தோம்பிக் கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved