World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

In the classical realist tradition

Sisila Gini Gani, directed by Prasanna Vithanage, script Sanath Gunathilaka and music by Premasiri Kemadasa

சிறந்த யதார்த்தமான மரபினுள்

சிசில கினி கணி (நீர் நெருப்பாகும்), இயக்கம் பிரசன்ன வித்தானகே, திரைக்கதை சனத் குணதிலக மற்றும் இசை பிரேமசிரி கேமதாச

By Piyaseeli Wijegunasingha
1 February 2003

Back to screen version

இலங்கை ரசிகர்கள் சிசில கினி கனி (நீர் நெருப்பாகும்) திரைப்படத்தைக் காண அண்மையில் ஒரு அபூர்வமான சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்தனர். கொழும்பு றீகல் திரையரங்கில் ஒரு குறுகிய காலம் திரையிடப்பட்டிருந்த இத் திரைப்படம் பிரசன்ன வித்தானகேயின்1992ல் பரிசு வென்ற முதல் படைப்பாகும்.

வித்தானகேயின் திரைப்படமானது, நகர மேயராகும் ஆவல் கொண்ட ஒரு சிறந்த சட்டத்தரணியும் மணமான செல்வந்தனுமான ஹரிஸ் மாகலந்த (சனத் குணதிலக), மற்றும் சிங்களமும் பறங்கியரும் கலந்த பெற்றோரைக் கொண்ட ஒரு அழகான இளம் பெண்ணான அனேட்டியையும் (சபீதா பெரேரா) உள்ளடக்கிய ஒரு துன்பகரமான காதல் காவியமாகும். மலைகளில் தேடல் நடத்தும் ஒரு குழு, மாகலந்தவின் மனவளர்ச்சி குன்றிய மகனைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் காட்சியுடன் தொடங்கும் இத்திரைப்படம், அனேட்டிக்கும் ஹரிசுக்கும் இடையிலான முதல் சந்திப்பு, அவர்களின் மனவெழுச்சியின் தோற்றம் மற்றும் சிக்கலான உறவுகளின் வழித்தடங்களை சித்திரிக்கும் ஒரு தொகை முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவுகளுடன் (flashbacks) விரிவடைகின்றது.

ஹரிஸ், அனேட்டியை விருந்து ஒன்றில் நடனமாடும் போது முதல்முறையாக சந்திக்கின்றான். சில நாட்களின் பின்பு, கொட்டும் மழையில் அவளை தனது காரில் ஏற்றிச் செல்கிறான். அவளது நனைந்த ஆடைகளை மாற்றிக்கொள்ள முடியும் எனக் கூறி அவனது மாளிகைகளில் ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்கிறான். ஹரிஸுடன் உடலுறவுகொள்ளும் அனேட்டி, பிரதானமாக அவள் மணம் செய்துகொண்டவனுடனான அனுபவங்களின் காரணமாக தனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை என அவனிடம் கூறுகிறாள். "திருமணம்," "சிறைவாசத்தைப் போன்றது," என அவள் குறிப்பிடுகிறாள்.

ஆனால், ஹரிஸுடனான அனேட்டியின் உறவு மலர்வதோடு அவள் நிரந்தரமாக மாளிகைக்குச் செல்கிறாள். அவள் திருமண உறவு பற்றிய அவளது கருத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்குவதோடு தனது மனைவியை விவாகரத்துச் செய்யுமாறு ஹரிஸை வற்புறுத்துகிறாள். ஹரிஸ் தனது திருமணம் பொருத்தமானது எனவும் தமது மனநலம் குன்றிய இளம் மகனின் பேரில் அதைக் கலைத்துவிட முடியாது எனவும் அனேட்டிக்கு தெரிவிக்கிறான். எவ்வாறெனினும், சிறுவனின் அன்பையும் நம்பிக்கையையும் வெற்றிகொள்ள முடியுமானால் தமது திருமணத்துக்கான பிரதான தடையை அகற்றிவிட முடியும் என அனேட்டி தீர்மானிக்கின்றாள்.

அவள் சிறுவனின் சிறுவர் பாடசாலைக்கு சென்று அவனை இரகசியமாக ஒரு சிறுவர் பூங்காவுக்கு அழைத்துச் செல்கின்றாள். ஆனால் சிறுவனோ, அனேட்டியால் வெற்றிக்கொள்ளப்படுவதற்கு பதிலாக பீதியடைவதோடு, அவன் சிறுவர் பாடசாலைக்கு திரும்பியவுடன் முழுமையாக விடுதலையடைகிறான். அனேட்டியின் நடவடிக்கைகளை அறிந்த ஹரிஸ் ஆத்திரமடைகிறான். இருவருக்கும் இடையில் காத்திரமான மோதல் வெடிப்பதோடு, அவன் அவளது முன்னைய பாலியல் கள்ளப்புணர்ச்சியைப் பற்றி சுட்டிக் காட்டி அவமதிக்கிறான்.

ஹரிசின் பிரதிபலிப்புகள் மீதான கோபத்தாலும் மனமுறிவினாலும் அனேட்டி தனது தாயின் வீட்டுக்கு திரும்ப முடிவுசெய்கிறாள். ஆனால் சிறுவனின் பாசத்தை வெற்றிகொள்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. "உலக எல்லை"க்கு (ஒரு மூடுபனி நிறைந்த மலைத்தொடர் பகுதி. மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட செங்குத்தான பிளவின் பின்னர் இப்பெயரிடப்பட்டது) செல்லும் பாடசாலை பயணத்தில் அவள் அவனை பின்தொடர்கிறாள்.

சிறுவர்களின் மதிய போசண வேளையில் திடீரென மூடுபனி மூட, கன்னியாஸ்திரிகள் சிறுவர்களை துரிதமாக பஸ்ஸில் ஏற்றுகிறார்கள். இந்த அவசரத்தில் மூளைவளர்ச்சி குன்றிய சின்னஞ் சிறியவனை மறந்துவிடுகிறார்கள். மூடுபனியினுள் இருந்து அனேட் அவனை அழைப்பது திடீரென அவனுக்கு கேட்கிறது. குழப்பமடைந்த நிலையில் அவன் இன்னமும் அமர்ந்திருக்கின்றான். அனேட் மூடுபனியில் இருந்து வெளியில் வந்து சிறுவனின் கைகளைப் பற்றி அவனுக்கு பஸ்ஸினுள் ஏற உதவ முயற்சிக்கிறாள். ஆனால் பீதியடைந்த சிறுவனோ தன்னை விடுவித்துக்கொண்டு மலையில் உள்ள செங்குத்தான பள்ளத்தின் விளிம்பை நோக்கியும் அவனது மரணத்தை நோக்கியும் ஓடுகிறான்.

சிறுவனைத் தேடும் படலம் நாள் கணக்காக தொடர, ஹரிஸின் மேயர் (மாநகர முதல்வர்) தேர்தலுக்கான பிரச்சாரத்தை பின்தொடரும் பத்திரிகையாளர்களுக்கு அனேட்டுக்கும் சட்டத்தரணிக்கும் இடையிலான உறவு தெரியவருவதுடன் இந்த உறவைப் பற்றி அவதூறை கிளறிவிடுகின்றனர். அந்த இளம் பெண் சிறுவனின் மரணத்துக்கு காரணமானவள் என்ற சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்படுவதோடு திரைப்படம் முடிவடைகிறைது.

உள்ளடக்கத்தில் துல்லியமாகவும், அமைப்பில் கச்சிதமாகவும் அமைந்துள்ள தயாரிப்பாளரின் முதலாவது திரைப்படமான சிலிச கினி கனி, ஒரு வியக்கத்தக்க முதிர்ச்சியைக் காட்டுகிறது. இத்தகைய சிறப்பம்சங்களை தொடர்ந்து வந்த வித்தானகேயின் திரைப்படங்களிலும் கண்டுணரக்கூடியதாக உள்ளது. அனன்த ராத்ரிய (ஆத்ம இரவு -1996), பவுரு வலலு (சுவர்களுக்கிடையில்) மற்றும் புரஹந்த கலுவர (முழு நிலவில் ஒரு மரணம் -1997) ஆகிய திரைப்படங்கள் கடந்த தசாப்தத்தில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றது.

சமுதாய யதார்த்த திரைப்படங்களின் சிறந்த மரபுகளைக் கடைப்பிடிக்கும் வித்தானகே, தனது கலைப் பயணத்தை மேடையில் ஆரம்பித்தார். அவரது படைப்பின் தரக்குறியீடானது (Hullmark) ஆழமான சமூக உணர்வு மற்றும் திரைக்கலை படைப்புத்திறனின் அனுபவமிக்க வல்லமையிலிருந்து ஊற்றெடுக்கும் ஒரு சாதாரணமான விவரண பாணியேயாகும். எவ்வாறெனினும் அவர், பகைமையான சமூக அமைப்பு அல்லது சமூக உறவுகளுக்கு எதிரான தனிப்பட்டவர்களின் போராட்டத்தை ஒன்றிலிருந்து அல்லது இன்னொன்றிலிருந்து கைப்பற்றிக்கொள்ளும் யதார்த்தபூர்வமான இலக்கிய சம்பிரதாயத்தாலும் உள்வாங்கப்பட்டுள்ளது தெளிவு.

இந்த மரபின் வேர்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கும் மற்றும் சமுதாயப் படிநிலையை பேணும் ஏனைய ஒடுக்குமுறை அமைப்புகளுக்கும் சமூக கோட்பாடுகளுக்கும் எதிராக எழுச்சிபெற்றுவரும் முதலாளித்துவத்தின் போராட்டத்தில் தங்கியுள்ளன. இந்த மோதலில், முதலாளித்துவ வர்க்கமானது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டினரின் ஆதரவை தக்கவைத்துக் கொண்டது. எவ்வாறெனினும், இந்த அடிப்படைகள் உற்பத்திச் சக்திகள் தனியாருக்கு சொந்தமாக அன்றி, பொதுவில் முழு சமுதாயத்தாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரு உலகத்தில் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட முடியும்.

புதிய ஆளும் அதிகாரத்தால் அதனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபோது சமூக அடிமைத்தனம், அசமத்துவம் மற்றும் அந்நியப்படுத்தல்களின் தோற்றுவாயை புரிந்துகொள்ளவும் அம்பலப்படுத்தவும் முனையும் சமூகப் பிரிவுகளுக்குள் கலைஞர்களும் அடங்குவர். சோலா (Zola), டிக்கன்ஸ் (Dickens), பல்ஸக் (Balzac), செக்கோவ் (Chekhov) போன்ற சிறந்த சமூக யதார்த்த எழுத்தாளர்கள், தமது பாத்திரங்களின் அக உளவியல் மற்றும் அவர்கள் செயலாற்றியது எப்படி என்பவற்றை ஒளிரச்செய்ததோடு, தங்களையும் பங்குதாரர்களாகக் கொண்ட சமுதாயம் மற்றும் அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்டார்கள்.

இந்த அனுகுமுறையின் வழியில், சிசில கினி கனி திரைப்படமானது வரையறுக்கப்பட்ட சமூக வழக்காற்றின் நிரலுக்கு எதிரான அனேட்டின் போராட்டத்தை சிந்தனை மிக்க வகையிலும் நாடகபாணியிலும் சிருஷ்டித்துள்ளது. மற்றும் உன்னதமான முதலாளித்துவ இலக்கியத்தில் உள்ள பல கதாநாயகிகளைப் போன்று அவளது கிளர்ச்சியும் அழிவிலும் உண்மையினை வெளிப்படுத்துவதிலும் நிறைவடைகிறது.

ஆரம்பத்தில் திருமணம் பெண்களை அடிமைத்தனத்துக்குள் திணிப்பதாக அவள் கருதியபோதிலும், அனேட் இறுதியில் அதை நோக்கி ஈர்க்கப்படுவது ஹரிஸ் கிளைர்ச்சியடைவதற்கு பின்னணியில் உள்ள சுயநல காரணிகளை அறியாமலாகும். அவனது உடனடி அரசியல் குறிக்கோள்களை, விசேடமாக மாநகரபிதா ஆவதற்கான அவனது முயற்சிகளை இட்டுநிரப்புவதற்காக அவனது மனைவியின் குடும்ப தொடர்புகள் மூலம் கிடைக்கு வாய்புகளின் காரணமாகவே அவன் விவாகரத்தை விரும்பவில்லை. இந்த தேவைகள் பற்றிய அனேட்டின் வரையறுக்கப்பட்ட புரிந்துணர்வு மற்றும் ஏனைய சமூக சக்திகளும் அவளின் துரதிஷ்டத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை இட்டுநிரப்புகின்றன.

விதானகேயின் திரைப்படம் ஏனைய சமூக நிறுவனங்களின் செயல்களையும் நுணுக்கமாக சுட்டிக்காட்டுகின்றது: ஊடகங்கள் சிறுவன் காணாமல் போனதையிட்டு அறிக்கை செய்கின்ற போதிலும் அதனது விற்பனையை விரிவுபடுத்துவதன் பேரில் வெகுஜனங்களின் கருத்தை பயன்படுத்துவதில் மட்டுமே அக்கறைகொள்கிறது; குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கும் கிறிஸ்தவ தேவாலயம், இந்த துன்பகரமான சம்பவத்தை மனிதர்களின் இதயத்தினுள் கடவுளைப் பற்றிய பீதியைப் புகட்டுவதற்கான சந்தர்ப்பமாக்கிக்கொள்கிறது; மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸ், உண்மையை அறிவதில் உரிமைகொண்டாடுகிறது.

அனேட்டின் துயரமான நிலை மற்றும் அவளின் அழிவுக்கு வழிவகுத்த வறையறுக்கப்பட்ட சமூக உறவுகள் பற்றிய படைப்பாளரின் நுணுக்கமான பரிசோதனைகள் இல்லையேல், சிசில கினி கணி ஒரு கணவனின் காட்டிக்கொடுப்பைப் பற்றிய கதையம்சமாக இலகுவில் பண்புச்சிதைவடைந்திருக்கக் கூடும். விசேடமாக சபீதா பெரேரா மற்றும் சனத் குணதிலகவும் சிறப்பாக நடித்துள்ளனர். சுமிந்த வீரசிங்கவின் கறுப்பு வெள்ளை படப்பிடிப்பு ஆட்கொள்ளத்தக்கது. மற்றும் சனத் குணதிலகவின் கதைவசனம் நேரடியானதும் சக்திவாய்ந்ததுமாகும். வித்தானகேயின் திரையாக்கம், சமூக வாழ்க்கையின் புத்திஜீவித்தனமான சித்தரிப்பு தற்கால கலை ரசிகர்களை உள்வாங்குகிறது என்ற உண்மைக்கு சாட்சிபகர்கின்றது.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved