World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: US "road map" offers nothing to the Palestinians but continued repression

இஸ்ரேல் : அமெரிக்க `சாலை வரைபடம்` பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்த அடக்குமுறையைத் தவிர வேறெதுவும் அளிக்கவில்லை

By Chris Marsden
8 May 2003

Back to screen version

"இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு நிலையான இருநாட்டுத் தீர்வுக்கான சாலை வரைபடத்தை அடிப்படையாகக் கொண்ட -- ஒரு செயல்காட்சி" என உத்தியோகரீதியில் தலைப்பிடப்பட்ட, மத்திய கிழக்கிற்கான அமெரிக்க "சாலைவரைபடம்" என அழைக்கப்படுவது, ஏப்பிரல் 30ம் தேதி வெளியிடப்பட்டதானது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் வாஷிங்டன் ஒரு நேர்மையான இடைத்தரகராக செயல்பட நோக்கங்கொண்டுள்ளது என மிகவும் சூதுவாதற்ற முறையில் பிரமைகளைக் கொண்டிருந்தால்கூட அவற்றை சிதறடித்துவிடும்.

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலுக்கு, ஒரு அமெரிக்க ஆதரவுடனான தீர்வு தரப்படும் என்ற வாக்குறுதி, குரோதம் கொண்ட தங்கள் மக்களின் முன்னால், ஈராக்கிற்கு எதிரான போரில் தங்களின் ஆதரவைப் பேணுவதற்காக பல்வேறு அராபிய ஆட்சிகளுக்கு, உதவுதற்காக வழங்கப்பட்டது. பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டயிள்யூ . புஷ்ஷிடமிருந்து அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டினார். எனவே மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நோக்கங்கள் மனிதாபிமானமுடையவை, கொள்ளையடிப்பதற்கு அல்ல என அவர் கூறிக் கொள்ள முடியும். ஈராக்கிற்கெதிரான போர் நடவடிக்கைகள் "விரும்புவோரின் கூட்டணி" யால் தொடக்கப்படுவதற்கு சற்று முன்னதாக, மார்ச் அஜோரஸ் உச்சி மாநாட்டில், புஷ் தன்னுடைய ஆதரவு இறுதியில் உருவாக்கப்பட இருக்கும் பாலஸ்தீனிய அரசுக்கு இருக்கும் என அறிவித்தார்.

சாலை வரைபடம் இறுதியாக வெளியிடப்பட்ட போது நிலவிய சூழ்நிலையின் தன்மை - அதனுடைய உள்ளடக்கம் இவை பாலஸ்தீனியப் பிரச்சினையில் அமெரிக்கக் குறுக்கீட்டின் நோக்கத்தை, ஈராக்கில் அது நடத்திய போரின் தன்மையைப் போன்றே, "மத்திய கிழக்கில் மேலாதிக்க" ("Mideast Hegemen") அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்பது தெளிவாகிறது. முந்தைய இது போன்ற முயற்சிகளின் தொடக்கத்திலிருந்தது போலன்றி சாலை வரைபடம், அமெரிக்க ஜனாதிபதியின் தோன்றுதல் கூட இல்லாமல், திறந்து வைக்கப்பட்டது. பாலஸ்தீனியருக்கும் இஸ்ரேலியருக்கும் இடையே கடந்த முன்முயற்சிகளில் காணப்பட்டிருந்த ரோஜாத் தோட்ட கைகுலுக்கல் நிகழ்ச்சியும் இல்லை. இலண்டனின் ஃபனான்சியல் டைம்ஸ் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி, "அது ....திருட்டுத்தனமாக, வெள்ளை மாளிகையின் செய்தி அலுவலகத்தின் பின்புறக் கதவு வழியாக வெளிப்பட்டது".

இஸ்ரேலிய எதிர்விளைவு மிக விரைவானதும் தவறாகக் கொள்ள முடியாததுமாகும். சாலை வரைபட வெளியீட்டினை அடுத்து உடனடியாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மேற்குக்கரையிலும் காசாவிலும் அதிக அளவிலான நடவடிக்கைகளை தொடக்கியது. காசா நகரத்தில் மே 1 அன்று நடத்திய தாக்குதல், ஹாமாஸின் உயர்மட்ட உறுப்பினரான யூசுப் அபு ஹின் (Yusef Abu Hein), அவருடைய இரண்டு சகோதரர்கள், மூன்று குழந்தைகள் - ஒரு குழந்தை இரண்டே வயது நிரம்பியது உட்பட 12 பேரின் உயிரை பழி வாங்கியதும் மிக அழிவுகரமானதாகவும் இருந்தது.

அமெரிக்கா பாலஸ்தீனியர்கள் மீது முதற்கட்டத்தின் பகுதியை - "பரந்த அளவிலான அரசியல் சீர்திருத்தத்தை" வெற்றிகரமாக நிர்ப்பந்தித்ததன் பின்னர்தான் சாலை வரைபடம் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனிய நிர்வாகத்தின் ஜனாதிபதி யாசீர் அரபாத்தை நீக்குதல் அல்லது ஒரங்கட்டுதல் முடிந்த பின்னர், வாஷிங்டன் கூறுவதை விருப்பத்துடன் செய்யத் தயாராக இருக்கும் ஒர் ஆட்சியை நிறுவுவதைத்தான் இது தெளிவுபடுத்திக் காட்டுகின்றது.

1993ம் ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டது எடுத்துக்காட்டியவாறு, இஸ்ரேலுடன் எவ்வாறாவது ஓர் உடன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற விழைவு அராபத்திற்கு உண்டு. ஆனால் டெல் அவிவும் வாஷிங்டனும் அவரை அகற்றவே விரும்புகிறார்கள். ஒஸ்லோ உடன்படிக்கையை மீண்டும் எழுதி பாலஸ்தீனிய அரசை உருவாக்கும் எல்லைப் பகுதிகளைக் குறைத்து, மேற்குக்கரையிலும் காசா பாலைவன துண்டு நிலப்பகுதியிலும் சியோனிஸ்டுகளுடைய குடியிருப்புக்களை பரந்த அளவில் அதிகரிக்கும் இஸ்ரேலிய முயற்சிகட்கு அரபாத் மறுத்துவிட்டதால் ஆகும். லிக்குட் தலைவர் ஏரியல் ஷரோன், மலைக் கோயிலில் உள்ள அல்-அக்ஸா மசூதிக்கும், டோம் ஆப்தி ராக்கிற்கும் தூண்டி விடும் முறையிலான ஒரு பார்வையிடலுக்குச் சென்றதன் விளைவாக, செப்டம்பர் 2000த்தில் வெடித்த இண்டிபாடா எழுச்சியை அடக்க முடியாமல் போனதோடு அரஃபாத்தின் விதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அராபத்திற்குப் பதிலாக புதிதாக வர இருப்பவருக்கான வாஷிங்டனின் தேர்வு, அபு மாசென் (Abu Mazen) என அழைக்கப்படும் மகம்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) ஆவர். இவர் ஒரு வணிகர் மற்றும் கத்தார் ஆட்சியாளர்களுக்கு ஆலோசகர். அரபாத்தின் ஃபத்தா (Fatah) இயக்கத்தில் வலது சாரி அணியினராக இருப்பவர். ஒஸ்லோ உடன்பாடுகளின் விவாதங்களில் ஈடுபட்டு அது கையெழுத்திடப்பட முன்னணியில் இருந்தவர்.

பிரதமர் பதவிக்கு அவர் உயர்த்தப்பட்ட பின்னர் அவர் ஆற்றிய உரையில் "எந்தக் கட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும் எந்த முறையில், வடிவங்களில் வந்தாலும்" தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடப்போவதாக உறுதி கூறியது வாஷிங்டனின் ஆதரவைப் பெற்றது. அதேபோல் அவருடைய அமைச்சரவை பதவிக்கு குறிக்கப்பட்டவர்களும் அவ்வாதரவைப் பெற்றவர்களே - அதிலும் குறிப்பாக முகம்மது டாலன் (விuலீணீனீனீனீணீபீ ஞிணீலீறீணீஸீ) உயர் நிலை பாதுகாப்புப் பொறுப்பில் நியமனம் பெற்றமை பாலஸ்தீன போராளிக் குழுக்களை நசுக்குவதற்கு அவர் கொண்டிருந்த தயார்நிலையின் காரணமாகவாகும்.

அபு மாசென் வெற்றிகரமாகப் பதவியில் இருத்தப்பட்ட பின்னர்தான் சாலை வரைபடம் வெளியிடப்பட்டது. பெயர் சொல்லிக் கொள்ளாத புஷ் அதிகாரி ஒருவர் செய்தி ஊடகத்திற்கு வாஷிங்டனின் எண்ணங்களைத் தெளிவுறுத்தினார்: "மக்களிடையே நாங்கள் கூறி வருகிறோம். இது தான் அபு மாசெனை நன்கு வளர்த்து விடும் நேரம். அரபாத்தை இன்னும் அவர் பொறுப்பில் உள்ளது போல் நடத்தினால் அந்த நோக்கம் மதிப்புக்குறைந்து போகும். அவ்வாறு நடக்காது, நடக்கவும் கூடாது."

சாலை வரைபடத்தைப் பொறுத்த வரையில், இந்த ஆவணம் அவர்கள் போராட்டத்தை விடுத்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நசுக்க வேண்டும் மற்றும் கைவிட வேண்டும் போன்ற தொடர் கோரிக்கைகளைத் தவிர பாலஸ்தீனியருக்கு அதிகமாக ஏதும் கொடுக்கவில்லை. அதனுடைய முன்மொழிவுகள் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, உச்சக் கட்டமாக இறுதியில் பாலஸ்தீனிய நாடு உருவாகும் காலம் 2005ல் என நிர்ணயிக்கப்படுகிறது.

"நால்வர் குழு" -அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மன்றம், ரஷ்யா-- ஒவ்வொரு படிநிலையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதா என்று முடிவு செய்யும். ஆனால் ஒவ்வொரு கட்டமும் போகப்போக குறைவான விளக்கத்தைக் கொண்டு வந்துள்ளது மற்றும் இறுதியில் பாலஸ்தீனிய நாடு எதைக் கொண்டிருக்கும் என்பதும் நல்ல தெளிவுடன் விளக்கப்படவில்லை. ஆவணத்தின் பொது நோக்கைக் காணும்போது, அது ஒரு இனவெறி பாணியிலான இனக்குழு குடி இருப்பு (Apartheif bantustan) ஆக முழுமையாக அதன் சக்திமிக்க அண்மை நாடான இஸ்ரேலுக்கு அடங்கியும், கிட்டத்தட்ட வாஷிங்டன் ஒன்றிற்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டிய நிலையிலும் உள்ளதாக இருக்கும்.

பாலஸ்தீனிய நிர்வாகத்திடம் வைக்கப்படும் முதல் கோரிக்கை, அது ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத், ஃபத்தா உடைய சொந்த அல்-அக்ஸா தியாகிகள் படைப்பிரிவு ஆகிய போராளி குழுக்களை நசுக்கிவிட வேண்டும் என்பது ஆகும். ஆவணம் கூறுவதாவது: "இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதலுக்கு இரு -- அரசு தீர்வு காண்பது என்பது, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் முதலில் முடிவுக் கொண்டு வருவதன் மூலம் தான் இயலும், பாலஸ்தீனிய மக்கள் பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்க்கும் தலைமையைப் பெறும்பொழுதுதான் அது சாத்தியமாகும்."

முதல் கட்டம் பாலஸ்தீனியர்கள் நிபந்தனையற்ற, உடனடியான வன்முறைக் கைவிடலை மேற்கொள்ள வேண்டும். `நடைமுறையில் புலப்படக்கூடிய அளவிற்கு தனிநபர்களும், குழுக்களும் இஸ்ரேலியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கெதிராக வன்முறைத் தாக்குதல்களைத் திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் தனிநபர்கள் மற்றும் குழுக்களைக் கைதுசெய்து, சீர்குலைத்து மற்றும் கட்டுப்படுத்துதல் அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் "விளைவு தரக்கூடிய நடவடிக்கைகள் எடுத்து பயங்கரவாதத்தில் ஈடுபடுவோர் நேரடியாகத் தாக்கப்பட்டு, பயங்கரவாத அமைப்பின் திறன்கள், அடிப்படைக் கட்டுமானம் உள்ளவற்றை அழித்திடவும் வேண்டும்."

"புதிய முறையில் திருத்தியமைக்கப்பட்ட/புதிய பயிற்சியைப் பெற்ற பாலஸ்தீனிய பாதுகாப்பு படைகள்", அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளும் இதில் பங்கு பெறுவதுடன் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் உள்ள தங்களை ஒத்த சகாக்களுடன் சேர்ந்து பாதுகாப்பு ஒத்துழைப்பைப் புதுப்பிக்க இருக்கிறார்கள்.

இவையனைத்தும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டுமாம் !

அப்படிப்பட்ட பெரிய அளவிலான மிகக் கடுமையான பாதுகாப்பு வாஷிங்டனால் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டதாய் கருதப்பட்ட பின்னரே, இஸ்ரேலிய படைகள், "சிறிது சிறிதாக தன் படைகளை விலக்கிக் கொள்ளும்" - அதுவும் செப்டம்பர் 28, 2000த்திலிருந்து அது ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து, அதாவது இன்டிபடாவின் தொடக்கத்திலிருந்து - மேலும் கூடுதலான பகுதிகளில் குடியேறுவதை அந்த அளவிலேயே நிறுத்தி வைத்துவிடும்.

இரண்டாவது கட்டம், "ஒரு விடுதலை பெற்ற பாலஸ்தீனிய நாடு தோற்றுவிக்க விரும்பும்" நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும், ஆனால் தற்காலிக எல்லைகளைக் கொண்டிருக்கும்" மற்றும் "நால்வர் குழுவின் கருத்தொருமித்த தீர்ப்பால்" தீர்மானிக்கப்பட்டவாறு "இறையாண்மையைக் கற்பித்துக் கூறல்" நிகழும் மற்றும் பின்னரே பாலஸ்தீனிய தேர்தல்கள் நிகழும், அது அரபாத்தும் வாஷிங்டன் கருத்தை ஏற்காத எந்தக் குழுவும் இன்னும் ஒதுக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனியர்களின் எதிர்காலம் இந்த ஆவணத்தின் மூலம் "(இஸ்ரேல்-- சிரியா, மற்றும் இஸ்ரேல்-- லெபனான் உள்பட) விரிவான மத்திய கிழக்கு அமைதி பற்றிய இலக்கை" உத்திரவாதப்படுத்தும் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டம், "2005ல் இறுதியான, நிரந்தரமான அதிகார நிலைத் தீர்மானம்", அதன்படி எல்லைகள், கிழக்கு ஜெருசலேம் குடியேற்றப்பகுதிகளின் மீதான இறையாண்மை, 4 மில்லியன் பாலஸ்தீனிய அகதிகள் 1948ல் தாங்கள் இழந்த நிலங்களுக்கு மீண்டும் வருதல் உட்பட அனைத்து தீர்க்கப்படாத விஷயங்களும் அடங்கும். மேற்கூறியவை திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை என்றாலும் அனைவராலும் "ஏற்கப்படும், நியாயமான, ஏற்கத் தகுந்த நடைமுறைக்கு மற்றும் யதார்த்த ரீதியான" அடிப்படையில் அது இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு சூனியக் கிழவி தயார் செய்த கஷாயம் (வடிப்பு) போன்ற திட்டம் எவ்வாறு நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதாக, இஸ்ரேலிய-பாலஸ்தீனிய போராட்டத்தைத் தீர்த்து வைக்க வழங்கப்படுகிறது என்பது ஒரு விளங்காப் புதிராக உள்ளது. ஒஸ்லோ உடன்படிக்கையில் இருப்பதைவிடக் மிகக் கவலைதருகிற நிபந்தனைகளை இது பாலஸ்தீனியரின் மீது சுமத்துகின்றது மற்றும் குறைந்த அளவு ஈர்க்கக்கூடிய வெகுமதிகளைக் கூட தொடர்ந்து வைத்திருக்கிறது. இந்தப் பத்திரத்தினால் தோற்றுவிக்கப்பட உள்ள எந்த பாலஸ்தீனியப் பகுதியும் விடுதலை போன்ற ஒன்றைக்கூட கொண்டிருக்காது. அது எல்லைப்புறப் பகுதிகளை அருகாமையில் கொண்டிருக்காது மேலும் இஸ்ரேலியப் படைகளால் தொடர்ந்து கவனிப்புக்குட்படும். சொல்லப் போனால் அது பிடிபட்ட மக்களின் சிறை போலத்தான் இருக்கும்.

சாலை வரைபடமானது, அதிகாரத்திலும் பலத்திலும் கொழுத்த ஆட்சி, ஈராக்கியப் போரில் இராணுவ ரீதியில் அந்நாட்டை நசுக்கிய பின், தன்னைக் கேட்பவர் எவரும் இல்லை, தான் எதுவும் செய்யலாம் என்ற ஆணவம் பிடித்த ஆட்சியால்தான் முன்னெடுக்கப்பட முடியும்.

இது வெளியிடப்பட்ட அளவிலேயே, அரசுத்துறை செயலர் கொலின் பவல், சட்டம் என்ன என்று விதிக்கவும், ஹெஜ்பொல்லாவிற்கு எந்த ஆதரவும் டமாஸ்கஸ் கொடுக்கக்கூடாது என்று வற்புறுத்துவதற்கும் சிரியாவிற்குப் புறப்பட்டுவிட்டார். சதாம் ஹூசேனின் வீழ்ச்சி அந்தப் பகுதி முழுவதிலும் ஒரு "புதிய மூலோபாய நிலைமையை" உருவாக்கிவிட்டது என்றும், டமாஸ்கஸ் கூறியபடி நடந்து கொள்ளாவிட்டால் "சில விளைவுகள் பின்னணியில் உலவிக் கொண்டுள்ளன" என்ற எச்சரிக்கையையும் விடுத்தார். பாலஸ்தீனிய நிர்வாகம் சாலைவரைபடத்திட்டங்களை அது அமுலாக்கவேண்டும் என்ற நிபந்தனையில் அரபு லீக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு உதவித் தொகையை மில்லியன் கணக்கான டாலர்கள் கூடுதலாக்க வேண்டும் என்றும் பவல் வற்புறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

"மூலோபாய நிலையில்" இதே மாற்றம்தான், அமெரிக்கா பாலஸ்தீனிய மக்களிடையே தன்னுடைய ஆணையைத் திணிக்கும் முயற்சிக்கு அடித்தளமாய், பாலஸ்தீனியர், இஸ்ரேல் ஆட்சியின் மேலாதிக்கத்தை ஏற்கும்படி நிர்பந்திக்கும். இஸ்ரேலிய ஆட்சியோ இதுவரை பொருளாதார அளவில் தன்னிறைவு கூடப் பெறாத பாலஸ்தீனிய "சிறு நாட்டை" தோற்றுவித்ததைக் கூட நிராகரித்து வந்துள்ளது.

அமெரிக்க ஊக்கத்தால் திணிக்கப்பட இருக்கிற உடன்பாட்டை, பாலஸ்தீனியர்கள் நிச்சயமாக எதிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். ஹமாஸையும் மற்ற குழுக்களையும் கலைக்கும் முயற்சியில் அபு மாசென் (Abu Mazen) ஈடுபட்டால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். அவருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இல்லாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் கருவியாகவே கருதப்படுகிறார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் பேராசைக்காரர்கள் ஈராக்கை நசுக்கியதற்கு பாவலின் மறுமொழி அதிகபட்ச அளவில் பலவீனமானது என்றும் மோசமான வகையில் அமெரிக்க தேசிய நலன்களைக் காட்டிக் கொடுப்பது என்றும் கருதுகின்றனர். மன்றத்தின் பெரும்பான்மைத் தலைவர், பிரதிநிதி ரொம் டிலே, சாலை வரைபடத்தை இஸ்ரேலுக்கு ஆபத்தானது என்று அழைத்துள்ளார் மற்றும் அது "நவீன-திருப்திப்படுத்துவோருக்கு" வக்காலத்து வாங்குகிறது. மன்றத்தின் பழைய சபாநாயகர், நெவ்ட் ஜிங்ரிச் (Newt Gingrich), பாவலின் கீழான மாநிலப் பிரிவு `விட்டுக் கொடுத்தல் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அப்பகுதியில் பாடுபட்டு வெற்றிக்குப் பின் கிடைத்த அனைத்து நன்மைகளும் தூக்கியெறியப்பட்டு விடும்" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய சலுகைகள் தேவைப்படும் எந்த பேச்சுவார்த்தை மூலம் வரும் உடன்பாட்டையும் திசைபிறழச்செய்ய தனக்கு வாஷிங்டனில் செல்வாக்கு இருப்பதாக ஷெரோன் கணக்குப் போட்டுள்ளார். எந்த வடிவத்திலும் சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்கிடுதலில் அவருடைய அமைச்சர்கள் பெரும்பான்மையினருக்கு எதிர்ப்பே தான். சிலர் மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளில் இனச்சுத்திகரிப்பைக் கொண்டு வந்து "அகன்ற இஸ்ரேலுக்கு" வழி வகை செய்ய வேண்டும் என்று நேரடியாகவே குரல் கொடுத்துள்ளனர்.

மோல்டெட் கட்சியின் தலைவரும் ஷெரோன் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சருமான பென்னி எலோன் (Benny Elon), சாலை வரைபடத் திட்டம் "செயல்படாது" எனக் கூறி அதற்குப் பதிலாக, பாலஸ்தீனிய மக்களை அவர்கள் வசித்து வரும் பகுதிகளிலிருந்து கட்டாயமாக ஜோர்டானுக்குக் பலவந்தமாய் "மாற" செய்து ஜோர்டானைப் பாலஸ்தீனம் என அறிவித்து, ஹாஸ்மைட் மன்னராட்சியின் கீழ் அதைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்.

பாலஸ்தீனிய நிர்வாகத்தை "மிக ஆபத்தான ஆட்சிகளில் ஒன்று" என்று விவரித்த எலன், "தீமை நிறைந்த ஆட்சிகளான தலிபான் மற்றும் சதாம் ஹூசைன் ஆட்சி அழிக்கப்பட்டது போலவே", பாலஸ்தீனிய அதிகாரமும் அழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். அமெரிக்காவிற்கு எலன் தன்னுடைய திட்டத்தை கடந்த வாரம் அளித்ததற்கு ஷெரோன் அவரைக் கண்டித்த அதேவேளை, ஆட்சிக் கூட்டணியின் வலதுசாரிப்பிரிவினரிடையே அத்திட்டம் நல்ல ஆதரவைக் கொண்டு உள்ளது.

சாலை வரைபடத்திற்கு, அதன் அதிகாரபூர்வமான மறுமொழியில் கூட, டெல் அவிவ் அதிகம் ஆதரவு கூறாமல், ஏராளமான விதிகளுக்கு எதிர்ப்பையே தெரிவித்துள்ளது. பாலஸ்தீனியர்கள் முழுமையாகத் தங்களுடைய வன்முறையை நிறுத்திவிட்டதாகத் தங்களுக்குப்பட்டாலொழிய இஸ்ரேல் எந்த காலவரையறைக்கும் உடன்படாது என்று அது வலியுறுத்தியது. அமெரிக்காதான் பாதுகாப்பு விஷயங்களைக் கண்காணிப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனியர்கள் "திரும்புவதற்கான உரிமையை"க் கைவிட வேண்டுமென்றும் படைகளை "அவசரமாகத் திருப்பியழைத்துவிட" தாங்கள் தயாராக இல்லை என்றும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200,000க்கும் மேல் வலதுசாரி யூதவெறியர்கள் வசிக்கின்றனர். ஹெப்ரானுக்கு அருகிலுள்ள இரண்டு மட்டும் தற்பொழுது கலைக்கப்படக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரேல், அரபு கிழக்கு ஜெருசலத்தை, புதிய பாலஸ்தீனிய ஆட்சிக்கு தலைநகர் ஏற்படுத்துவதற்காக கொடுக்கும் என்ற யோசனை கூட இல்லை என்பது சொல்லத் தேவை இல்லை..

ஹாரெட்ஸ் பத்திரிகைக்கு ஏப்ரல் 14ஆம் தேதி பேசிய ஷெரோன், "ஈராக்கியப் போர், பாலஸ்தீனியருடனான ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது, அதைத் தவறவிட மாட்டோம்" என்று கூறினார். ஆனால் தான் ஜனாதிபதி புஷ்ஷிடம் "பல முறை கூறிவிட்டேன் - இஸ்ரேலின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் கடந்த காலத்தில் எந்த சலுகைகளையும் கொடுக்கவில்லை, இப்பொழுது ஒரு சலுகையையும் கொடுக்கவில்லை, இனியும் வருங்காலத்தில் எந்த சலுகையையும் கொடுக்க மாட்டேன்" என்று பீற்றிக் கொண்டார்.

பரந்த அளவில், ஈராக் நன்கு கவனிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் "ஈரான் பேரழிவு ஆயுதங்கள் உற்பத்தியில் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டிருப்பதுடன், (Ballistic missiles) ஏவுகணைத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. லிபியா அணுஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதில் பெரும் முயற்சி கொண்டுள்ளது" மற்றும் "செளதி அராபியாவிலும், ஓர் ஆட்சி பதவியிலிருந்து கொண்டு இங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு பண உதவிகளை அளித்து வருகிறது." எதிர்காலத்தில், அமெரிக்கா கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டபின் இந்த ஆட்சிகளைப் பற்றியும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்` என்று சூழ்ச்சித் திறம்படக் கூறினார்.

தேசிய மதவாதக் கட்சியில் உள்ள ஷெரோனுடைய கூட்டணி உறுப்பினரில் தீவிர வலது சாரியினரும் குறைந்த அளவே ராஜதந்திர நடைமுறையுடன் உள்ளனர். அவர்களுடைய சஞ்சிகையான ஹாட்ஜோபே (Hatzofeh) ஏப்ரல் 20ல் தெரிவித்தது: "முடியாது மதிப்பிற்குரிய அமெரிக்க ஜனாதிபதி அவர்களே, பயங்கரவாதிகளுக்கு நீங்கள் முயற்சியெடுத்து வழங்க இருக்கும் வெகுமதியை நாங்கள் ஏற்பதற்கில்லை."

ஏனைய சியோனிச சார்பு பேச்சாளர்களும் அதே போன்ற குரோதமான போக்கையே காட்டுகின்றனர். உலக யூதர்கள் மாநாட்டில் மூத்த துணைத்தலைவரான இஷி லெய்ப்லர் (Isi Leibler), லிக்குட்டிற்கு ஆதரவான ஜெருசலேம் போஸ்ட்டில் எழுதினார், "இப்பொழுதுள்ள நிலையில், சாலை வரைபடத்தை இஸ்ரேல் அப்படியே ஏற்கின்ற சூழ்நிலை இல்லை... பன்னாட்டு அளவில் ஐரோப்பியத் துரோகிகளையும் செயலற்ற ஐநாவையும் நாணயமான இடைத்தரகர்களாக இஸ்ரேல் ஒரு போதும் ஏற்பதற்கில்லை. அதில் மேலாதிக்கம் செய்யும் கொடுங்கோலர்களாலும் அரசாங்கங்களாலும் இஸ்ரேலிய எதிர்ப்பு உணர்வு கடந்த சில மாதங்களில் எப்பொழுதும் கண்டிராத அளவிற்கு உயர்ந்திருக்கிறது." தன்னுடைய உத்தியோகப்பூர்வ தோற்றம் எப்படியிருந்தாலும், ஷரோன் சாராம்சத்தில் இக்கருத்துக்களுடன் உடன்படுகிறார்.

கடந்த வார இஸ்ரேலிய திடீர்ச்சோதனைகளுக்குப் பின்னர், பாலஸ்தீனிய நிர்வாகத்தின் தலைமை பேச்சுவார்த்தையாளரான, ஸேப் எரெகட் (Saeb Erekat), இஸ்ரேல் சாலை வரைபடம் வெளிவந்தவுடன் அதன் எதிரொலியாக பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஷெரோனுடைய செயல்முறையே, பாலஸ்தீனிய ஆயுதமேந்திய குழுக்களை உசுப்பிவிட எப்பொழுதும் இரத்தம் தோய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுதான். அவை, முறையே "புதிய நிலவர உண்மைகளை" ஏற்படுத்துவதற்கான IDFன் கடுமையான நடவடிக்கைகளைக் கூட நியாயப்படுத்தும். அச்செயல் அவருடைய தொடர்ந்த இலக்கான அகன்ற இஸ்ரேலுக்கு தூண்டுகோலாய் அமையும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved