World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Imperialism and Iraq: Lessons from the past

ஏகாதிபத்தியமும் ஈராக்கும்: கடந்த காலப் படிப்பினைகள்

Part Two

By Jean Shaoul
30 May 2003

Back to screen version

அமெரிக்கா வற்புறுத்துவதை ஏற்று 1919 ஜனவரியில் பாரிஸ் மாநாடு துருக்கியின் முன்னாள் மாகாணங்களை நாடுகளின் கழகங்களினது (லீக் ஆப் நேஷன்ஸ்) கண்காணிப்பில் விடுவதற்கு முடிவு செய்தது. அவை கட்டுப்பாடு எதுவும் இல்லாத வர்த்தகத்திற்கு வழிவகை செய்யும் முதலாவது கட்டளை (A Mandate) என்று அழைக்கப்பட்டது. 1919க்கும் 1923-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள்ளேயே இரகசிய மற்றும் இழிவான உடன்படிக்கைகளை செய்துகொண்டார்கள். இந்த உடன்படிக்கைகள் அரபு மக்களுக்கும் பெரும் பாதகங்களை ஏற்படுத்தியவை. அரபு மக்களுக்கு தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தையும் மீறுகின்ற வகையிலும் அந்த மக்களுக்கு துரோகம் செய்கிற வகையிலும் அந்த பிராந்தியத்தின் பொருளாதார வளங்களைத் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்கிற தங்களது சொந்த ஆட்சியை நிலைநாட்டுகின்ற வகையில் இந்த உடன்பாடுகள் உருவாக்கப்பட்டன. தங்களது சொந்த நலன் கருதி அந்த பிராந்தியத்தை 16 சிறிய நாடுகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அப்படி செய்யப்பட்ட பிரிவினை எந்தவிதமான பூகோள, வரலாறு, சமுதாய அல்லது பொருளாதார அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அரபு மக்களை அந்த இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் பல நாடுகளாகப் பிரித்துவிட்டனர். இதன் மூலம் எதிர்காலத்தில் டஜன் கணக்கில் எல்லைத் தகராறுகள் உருவாவதற்கு வழி செய்துவிட்டார்கள். அடிப்படையிலேயே தனித்து நிற்க முடியாத நிலையற்ற அரபு நாடுகளை அந்த ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கிவிட்டார்கள்.

இதில் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். 1922-ம் ஆண்டு உக்கைர் (Uqair) என்கிற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரிட்டன், ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் எல்லைகளைப் பிரிப்பதற்கு வேண்டுமென்றே முடிவு செய்தது. பாரசீக வளைகுடாவில் ஈராக்கிற்கு பிரதான வழித்தடத்தை மறுக்கின்ற வகையிலும் அந்த பிராந்தியத்தில் ஈராக்கின் செல்வாக்கைக் குறைக்கின்ற முறையிலும் ஈராக் பிரிட்டனைச் சார்ந்தே இருக்கவேண்டிய நிலையிலும் எல்லைகள் உருவாக்கப்பட்டன.

1920ம் ஆண்டு சான் ரெமோவில் (San Remo) நடைபெற்ற மாநாட்டில் ஏகாதிபத்திய அரசுகள் சீட்டாட்டம் நடத்துவதைப்போல், மத்தியக் கிழக்கு நாடுகளின் உரிமைப் பத்திரங்களைத் தங்களுக்குள்ளேயே பிரித்துக்கொண்டன. சிரியாவையும் லெபனானையும் ஆட்சி செய்கின்ற கட்டளையை பிரான்ஸ் பெற்றது. பிரிட்டன், ஈராக், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நிர்வாக உரிமைகளைப் பெற்றது. அவர்கள் புதிதாக பிரிக்கப்பட்ட பிராந்தியத்திற்குள் வர்த்தக உறவுகளை சீர்குலைக்கும் வகையில் புதிய பிராங் மற்றும் ஸ்டேர்லிங் நாணயங்களை அறிமுகப்படுத்தினார்கள். பிரிட்டனும் பிரான்சும் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு அந்த கட்டளைகளைப் பெற்றன. அவை காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டும் உரிமை படைத்தவை அல்ல; ஆனால், பருவமடையாத வயதினருக்கு கார்டியன்களைப் போல், லீக் ஆப் நேஷன்ஸ் அறங்காவலர் குழு உறுப்பினர்களாகத் தான் செயல்படவேண்டும். மோசூல் மாகாணததை இழந்ததற்கு ஆறுதல் பரிசாக பிரான்ஸ் TPC நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளைப் பெற்றது. சைக்ஸ் - பைகாட் ஒப்பந்தப்படி TPC நிறுவனம் ஈராக் எண்ணெய் வளத்தைக் கண்டு பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

1917 அக்டோபரில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி, பிரிட்டனின் மத்தியக் கிழக்குத் திட்டங்களை கீழறுப்பதில் முக்கிய பங்குவகித்தது. ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீது உருவாக்கிய தாக்கத்தை அளவிற்கு அதிகமாக மதிப்பீடு செய்ய இயலாது. அது கிழக்கின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நூற்றாண்டுகளான ஒடுக்குமுறையின் நுகத்தடியிலிருந்து விடுபடுவதற்கு உத்வேகத்தை மட்டும் வழங்கவில்லை, "சுயநிர்ணய உரிமைக்கு" ஜனாதிபதி உட்ரோவில்சனின் ஆதரவிற்கும் பின்புலமாய் இருந்தது. போல்ஷிவிக்குகள் ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் பெறுகிற உரிமையை வலியுறுத்தி வந்ததால், கம்யூனிசத்தின் செல்வாக்கு வளர்வதைக் கட்டுப்படுத்தவும் அதே நேரத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில் ஐரோப்பிய அரசுகள் செயல்படுவதை கட்டுப்படுத்தவும் கூட உட்ரோவில்சனின் "சுயநிர்ணய உரிமை" யின் நோக்கமாய் இருந்தது.

அரபு மக்கள், சமாதான உடன்படிக்கையாலும் ஜனாதிபதி உட்ரோவில்சனின் 14 அம்சத் திட்டத்தாலும் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, அரபு தேசியவாதிகள் பழைய ஏகாதிபத்தியத்திற்குப் பதிலாக, புதிய ஏகாதிபத்தியத்தை ஜீரணிப்பதற்கு நேரமில்லாத நிலையில் இருந்தனர். ஹெஜாஸ்ஜ் மன்னர், ஷரீப் ஹூசேனின் புதல்வர் பைசல் (Faisal) சிரியாவை திரும்ப ஒப்படைக்கக் கோரும் அரபு மக்களது கிளர்ச்சிக்கு தலைமைதாங்கி நடத்திச் சென்றார். சிரியாவிற்கு சென்று, 1920ம் ஆண்டு சிரியா தனி நாடு என்று சுதந்திரப் பிரகடனம் செய்தார். அந்த நேரத்தில் பிரான்ஸ் இராணுவம் தலையிட்டு அந்தப் எழுச்சியை முறியடித்தது மற்றும் பைசலை சிரியாவில் இருந்து விரட்டியது.

இந்த எழுச்சி ஜெருசலேத்திலும் தெற்கு மற்றும் மத்திய ஈராக்கிலும் பிரிட்டனது இராணுவ மற்றும் சிவில் ஆட்சிக்கு எதிரான அரபு மக்களின் கிளர்ச்சிகளுக்கு தூண்டலாய் அமைந்தது. ஆக்கிரமிப்பு ஆட்சி விரைவில் சீர்குலைந்தது. ஏராளமான படைகளை அனுப்பி, கடுமையான சண்டைகள் செய்து, கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு மற்றும் விமானப்படைகள் மூலம் பிரிட்டன் குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தியதால் மூலமே பிரிட்டன் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடிந்தது. இந்தப் போரில் பிரிட்டனின் கருவூலத்திற்கு மொத்தச் செலவு 40 மில்லியன் பவுண்டுகள் பிடித்தது. அப்போது பிரிட்டன் செய்த மதிப்பீடுகளின்படி அந்தப் போரில் 8,450 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். அதே நேரத்தில் பிரிட்டிஷ் தரப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாண்டனர் அல்லது காயமடைந்தனர்.

அந்த நேரத்தில் போர் அமைச்சகத் துணைச் செயலாளராக பணியாற்றி வந்த விஸ்கவுண்ட் பீல் (Viscount Peel) வெளியிட்ட அகம்பாவக் கூற்று அக்கிளர்ச்சி எப்படி காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்பட்டது என்பதை குறிகாட்டுகிறது. உள்நாட்டில் "உணர்வாளர்கள்" ஈராக்கில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதைப் பற்றி கவனிக்கத் தவறுகின்ற அளவு, அயர்லாந்து நிகழ்ச்சிகளால் (Black and Tans) அவர்களது கவனம் திசை திருப்பப்பட்டிருப்பது பற்றி தாம் மகிழ்வதாக அவர் குறிப்பிட்டார். தரைப்படைகள் மூலம் ஈராக் மக்களை அடிபணியச் செய்வதைவிட, விமானப்படை மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி அடிபணியச் செய்வது மிகவும் மலிவானது என்பதால் அது விரும்பத்தக்க வழிமுறையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

நேரடி ஆட்சிக்கு உள்ளூர் ஒத்துழைப்பாளர்களை பிரிட்டிஷார் பதிலீடாக்குகின்றனர்

பிரிட்டனின் நேரடியாக ஆட்சி நடத்துவது செலவின அடிப்படையில் பார்க்கும்போது கட்டுப்படியாகாதது என்று அரபு நாட்டு மக்களின் கிளர்ச்சி எடுத்துக்காட்டியது. பொதுமக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசாட்சியில்லாமல் வரி வசூலிப்பது இயலாத காரியம் மற்றும் அரசே திவாலாகிவிடும். பிரிட்டன் செய்துள்ள 16-மில்லியன் பவுன் முதலீட்டினையும் 50 மில்லியன் மதிப்புடைய, எண்ணெய் உற்பத்தியை அப்போதுவரை தொடங்காத எண்ணெய் வயல்களையும் சீர்குலைத்துவிடும். கீழை நாடுகளின் மக்கள் போல்ஷிவிக் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாது, தடுப்பதற்காக சில வகை சலுகைகளை காட்டவேண்டி இருந்தது.

ஆகையால் பிரிட்டன் தேவையான மூடிமறைப்பை வழங்குவதற்கான ஒரு சூத்திரத்தை உருவாக்கியது. உள்ளூர் மன்னரை தேர்ந்தெடுத்து அவரை ஆதரிக்கிற சமுதாய பிரிவுகளை வளர்த்து அவர்கள் கோருகின்ற "சுயநிர்ணய உரிமை" என்பதை பிரிட்டனுக்கு சேவைசெய்வது என்ற அர்த்தம் கொடுக்கும் பிறிதொரு சொல்லாய் இருக்குமாறு மற்றும் அதன் மூலம் தேசிய விடுதலைக்கான நியாயமான கிளர்ச்சியை தடுப்பது என்று தானே தீர்த்துக் கொண்டது.

இந்த திட்டப்படி, மிக விரைவாக ஒரு தீர்வை அதன் பிரிட்டிஷ் அரசாங்கம் விரைவில் உருவாக்கியது. 1921 மார்ச் மாதம் கெய்ரோவில் நடைபெற்ற மாநாட்டில் ஷெரீப் ஹூசேனின் புதல்வர்கள் பொம்மை அரசர்களாக பிரிட்டன் சார்பில் ஆட்சி நடத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஷெரிப் ஹூசேனின் புதல்வர்களுக்கு ஏற்கனவே, பிரிட்டன் சுதந்திர அரபு நாடு தொடர்பான உறுதிமொழியை தந்திருந்தது ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் அவர்களை கைவிட்டுவிட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட ஓரளவிற்கு நாடோடிகள் நிறைந்த ஜோர்டான் மன்னராக அப்துல்லா நியமிக்கப்பட்டார். பிரான்சினால் சிரியாவிலிருந்து அண்மையில் விரட்டப்பட்ட அவரது சகோதரர் பைசல், ஈராக் மன்னராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்தை ஈராக் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு வழிவகைகளை ஆராய்ந்தனர். இதற்கு எளிய வழி ஒன்றை கண்டுபிடித்தனர். மன்னர் பதவிக்கு வரவேண்டும் என்று போட்டியிட்ட சாஹிப் தாலிபை கைது செய்து நாடு கடத்திவிட்டனர். இதைக் கண்ட வேறு எவரும் மன்னர் பதவிக்கு வரவிரும்பவில்லை. பொதுமக்கள் வாக்கெடுப்பு என்ற நாடகம் நடத்தி 96 சதவீத மக்கள் பைசலை மன்னராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். 1921 ஆகஸ்ட் மாதம் ஈராக் மன்னராக பைசல் பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஈராக்கிற்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு தொடர்பான நிபந்தனைகள் முடிவு செய்யப்பட வேண்டியிருந்தது. பைசல் கோரியவாறு, கட்டளை உரிமை இரத்துச் செய்யப்படாத அதேவேளை, பிரிட்டனுக்கும், ஈராக்கிற்கும் இடையே 1922- அக்டோபர் மாதம், கையெழுத்தான ஒரு உடன்படிக்கையின்படி உள்நாட்டு விவகாரங்கள் ஈராக் பொறுப்பில் விடப்பட்டன. நிதி பாதுகாப்பு வெளியுறவு மற்றும் ஆலோசகர்கள் தொடர்பான பிரிட்டனின் மேலாதிக்க கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் அப்பட்டமாக பிரிட்டனுக்கு ஆதரவு அளிப்பதாக சாதகமாக அமைந்துவிட்டன. எண்ணெய் வளம் தொடர்பான சலுகைகள் குறித்தும், ஜிறிசி- நிறுவனம் தொடர்பாகவும் நடைபெற்ற உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. ஈராக் மன்னரும் அவரது அமைச்சரவையும் அதனை ஏற்றுக் கொள்ளும்பொருட்டு, பிரிட்டன் ஓராண்டுவரை, இடைவிடாத நிர்பந்தங்களையும் அச்சுறுத்தலையும் கொடுத்துவந்தது. அதற்குப் பின்னர், ஈராக்கின் அரசியல் நிர்ணய சபை அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றும் முன்னர், ஈராக் தேசியவாதிகள் கடுமையான எதிர்ப்பின் முன்னர், இரண்டாண்டுகள் வரை அச்சுறுத்தல்களும், கடுமையான நடவடிக்கை தந்திரங்களும் கடைபிடிக்கப்பட்டன.

ஆங்கிலோ- ஈராக்கிய உடன்படிக்கை ஒரு புதுவகையான காலனி ஆதிக்க கொள்கையின், ஒத்துழைப்பாளர்களை சார்ந்திருக்கும் தொடக்கத்தை குறிப்பதாக அமைந்தது. ஈராக்கில் நேரடியான பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

எண்ணெய் வளமும் ஈராக்குடனான பிரிட்டனின் பேரங்களும்

எண்ணெய் வளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பிரிட்டனின் பிரதான அலுவலாக எண்ணெய் வளம் அமைந்திருந்தது. போர் காலத்தைப் போன்று 1917-ம் ஆண்டு, கடுமையான எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டது, அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கவலைகளை அதிகரித்தது. போருக்குப் பின்னர் ஜேர்மனி சிதைந்தது, துருக்கி சிதறியது, பிரான்சும் அமெரிக்காவும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு வர்த்தகம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டு வந்தமை நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியது. இதைத் தொடர்ந்து வந்த பேரத்தில் ஈராக் மக்கள் தான் நஷ்டத்திற்கு இலக்கானார்கள்.

நடைமுறையில் பார்க்கும்போது, பிரிட்டனும் ஈராக்கும் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரதான பிரச்சனையாக ஈராக் நாட்டின் எல்லைகள் இருந்தது. மோசூல் எல்லைப்பகுதி-- துருக்கி பெட்ரோலிய நிறுவனத்திற்கு எண்ணெய் சலுகை தொடர்பாக நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள், தொடக்கத்தில் TPC-நிறுவன நலன்கள், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் டென்மார்க் சம்பந்தப்பட்டவையாக அமைந்திருந்தன. இவற்றின் விளைவாக, போருக்குப் பின்னர் அமெரிக்கர், பிரித்தானியர், பிரெஞ்சு மற்றும் இத்தாலியர் சர்வதேச மாநாடுகளில் பல ஆண்டுகள் முடிவற்ற வாக்குவாதங்களை நடத்திக்கொண்டேயிருந்தார்கள். இந்த முடிவற்ற விவாதங்களில் எண்ணெய் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பொதுமக்கள் அது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. எனவேதான், போர் மற்றும் சமாதான உடன்படிக்கை எதுவாகயிருந்தாலும் அதில் முற்படும் காரணக்கூறாய் எண்ணெய் வளம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதை அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை.

1920-ம் ஆண்டு கையெழுத்தான சான் ரெமோ ஒப்பந்தப்படி மோசூல் மாகாணத்தை பிரான்ஸ் விட்டுக்கொடுத்ததற்கு பதிலாக துருக்கி பெட்ரோலியம் கம்பெனியில் ஜேர்மனிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்கு பிரான்சிற்கு மாற்றித் தரப்பட்டது. மோசூல் மாகாணத்தில் TPC- க்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தாலும், போர்க் காலத்திலும், அதற்குப் பின்னரும், எண்ணெய் கண்டுபிடிக்கும் துறப்பணப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், துருக்கிக்கு எதிரான குரோதப் போக்குகள் மற்றும் மோசூல் மாகாண எல்லைத் தகராறு முடிவிற்கு வரவில்லை. 1923-ம் ஆண்டு, லோசான் மாநாடு (Lausanne conference), இந்தப் பிரச்சனைகள் குறித்து முற்றிலுமாக தீர்வுகாண முடியவில்லை.

ஈராக் எல்லைக்குள் இருக்கின்ற எண்ணெய் கிணறுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் பிரிட்டன் உறுதியாக இருந்தது. ஏனெனில், TPC சலுகை உடன்படிக்கையில் அது சேர்க்கப்பட்டிருந்தது மற்றும் அதன் அபிவிருத்திகளைக் கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கி இருந்தது. மோசூல் மாகாணம் இல்லாமல் ஈராக் நாடு பொருளாதார அடிப்படையில் கட்டுபடியாகாத ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. ஆளுகின்ற சன்னி பிரிவு குழுவைவிட தெற்குப் பகுதியில் இருந்த ஷியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். துருக்கியும் பிரதான குர்து மக்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால், ஈராக் ஆளும் மேல்தட்டினருக்கு சுதந்திரமான பொருளாதார அல்லது இராணுவ ஆதரவு எதுவும் இல்லாத நிலையில், துருக்கியர்களை விரட்டுவதற்கும் குர்து இனத்தவரை அடக்குவதற்கும் பிரிட்டனை முற்றிலுமாக சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. 1924ம் ஆண்டு பிரிடடிஷ் விமானப்படை இந்தத் தகராறில் இடைவிடாது ஈடுபடுத்தப்பட்டது. ஈராக்கில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த துருக்கியின் ஆதரவு பெற்ற குர்து இனத்தவரின் கோட்டை என்று கருதப்பட்ட சுலைமானியா நகரம் மீது பிரிட்டனின் விமானப்படை குண்டு வீசித் தாக்குதல்களை நடத்தவேண்டி வந்தது.

ஆனால், பிரிட்டன் அமெரிக்காவின் எண்ணெய் வளம் தொடர்பான அக்கறைக்கு எதிராகவும் செல்ல வேண்டிய நிலை உருவாயிற்று. அமெரிக்கா போரில் ஈடுபடாதது, பிரிட்டன் தங்களை முந்திச் செல்வதற்கு எளிதாக அனுமதிப்பதற்காக அல்ல. முன்னாள் துருக்கி எல்லைகளில் எண்ணெய் வளத்தை பிரிட்டன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று துருக்கிக்கும் TPC-க்கும் இடையில் போருக்கு முன்னர் உருவான உடன்படிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த உடன்படிக்கை மூலம் பிரிட்டனின் கப்பற்படை மேலாதிக்கம் ஓங்கிவிடும். அமெரிக்காவின் எண்ணெய் வளத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் பிரிட்டனுக்கு இல்லாமல் போய்விடும். ஐரோப்பியப் போட்டியாளர்களால் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு அறைகூவல்விடுக்கும் நிலைமை ஏற்படும்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் செயல்பட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. போரின்போது கைப்பற்றப்படும் எந்த எல்லையாக இருந்தாலும் அங்கு நடைபெறுகிற நிர்வாகம் "எல்லா நாடுகளின் வர்த்தகத்திற்கும் சட்டப்பூர்வமாக" சம உரிமைகள் வழங்குவதற்கு உத்தரவாதம் செய்துதரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வற்புறுத்தியது. இந்தச் சூழ்நிலையில் சமத்துவ உரிமை என்கிற கருத்து ஒரு ஏகாதிபத்திய வல்லரசு, மற்றொரு ஏகாதிபத்திய வல்லரசின் ஆதிக்க வெறியை கட்டுப்படுத்தும் கருத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மெசபடோமியாவின் எண்ணெய் வளங்கள் மீது பிரிட்டன் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது மற்றும் ஆங்கிலோ-- அமெரிக்க உறவுகள் மிக வேகமாக சீர்குலைந்தன.

அமெரிக்காவின் மிகப்பெரும் பொருளாதார வலிமையையும் உயர்வான நிலையையும் கருத்தில் கொள்கையில், பிரிட்டன் தனது எண்ணெய் வளத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், அமெரிக்காவிற்கு போரில் கைப்பற்றியவற்றைப் பகிர்ந்துகொள்வதில் பங்கு கொடுப்பதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை. பிரிட்டன் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் தனிப்பட்ட உடன்பாடு ஒன்றை செய்துகொண்டது. நியூ ஜேர்சியைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் ஓயில் நிறுவனத்தோடும் சக்கோனி வேக்யூம் (Socony Vacuum) (பின்னர் மொபில் ஆயில்) நிறுவனத்தோடும் பிரிட்டன் உடன்படிக்கை செய்துகொண்டது. துருக்கி பெட்ரோலியம் கம்பெனி பின்னர் ஈராக் பெட்ரோலியம் கம்பெனி என்று பெயர் மாற்றப்பட்டது, இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் சம பங்குகள் வழங்கப்பட்டன. பிரான்ஸ் மற்றும் இரண்டு பிரிட்டன் கம்பெனிகளோடு இணைந்து இந்தப் பங்குகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு, அதன் அனைத்து அரசியல் அதிகாரமும் இருப்பினும், பிரிட்டனால் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கர்களின் வலிமையைத் தடுக்க முடியவில்லை. அந்த நிறுவனங்கள் TPC நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆகிவிட்டன. இதன் விளைவாக ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனம் ஊடாக, பிரிட்டனின் பங்கு அந்த எண்ணெய் நிறுவனத்தில் குறைந்தது. பழைய ஓட்டோமான் சாம்ராஜ்ஜிய எல்லைகளுக்குள் எண்ணெய் வள உரிமைகள் தனக்கு இருக்கவேண்டும் என்று பிரிட்டனால் வலியுறுத்த இயலவில்லை. போருக்கு முன்னர் துருக்கியுடன் இந்த வகையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தவும் அதனால் முடியவில்லை. ஈராக் நாட்டின் தெற்கு எல்லைகளை ஏகாதிபத்திய அரசுகள் பிரித்த விதத்தைப் பார்க்கும்போது பின்னர் சவுதி அரேபியாவிலும், பஹ்ரைன் பகுதியிலும், அமெரிக்கா எண்ணெய் வள சலுகைகளை பெறக்கூடியதாக இருந்ததை இது அர்த்தப்படுத்தியது.

1924-ம் ஆண்டு, வெளியுறவு செயலாளராக இருந்த ஏகாதிபத்திய தூண்களில் ஒருவரான கர்சன் பிரபு (Lord Curzon) "மோசூல் மற்றும் ஈராக் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள பிரச்சனையில் எண்ணெய் வளம் தொடர்பானது" என்ற குற்றச்சாட்டுக்களை மிகக் கடுமையாக மறுத்தார். "மோசூல் பிரச்சினை அல்லது ஈராக் பிரச்சினை அல்லது கிழக்கின் பிரச்சினைகள் பற்றியதில் எந்தவிதத்திலும், அவரது நோக்கிற்கோ அல்லது அவரது மேன்மைதங்கிய அரசாங்கத்தின் நோக்கிற்கோ எண்ணெய்க்கு மிகச்சிறிய தொடர்பையும் கொண்டிருக்கவில்லை" என்றார் அவர். அவரது கூற்றுக்கு மாறாக சான்றுகள் அமைந்திருந்தன.

ஈராக் அரசாங்கம் மற்றும் குர்து இன மக்களின் தலைக்கு மேலாக இந்த கீழ்த்தரமான பேரம் ஒருமுறை முடிக்கப்பட்டிருந்ததும், மோசூலை ஈராக்கிற்கு தருவதற்கான ஒப்பந்தத்திற்கு வழி தெளிவாக வகுக்கப்பட்டது. அதிகாரங்கள் அனைத்தையும் பிரிட்டன் தன் கையில் வைத்துக்கொண்டிருந்ததால், 1925- மார்ச் மாதம் ஈராக் அரசாங்கம் TPC-நிறுவனத்துடன், ``லீக் ஆஃப் நேசன்ஸ்`` நடுவர்கள் மோசூல் எண்ணெய் வள கண்டுபிடிப்பு அதிகாரங்களை ஈராக்கிற்கு வழங்கினால், ஈராக்கிற்கு பெருமளவில் பாதகம் செய்கின்ற நிபந்தனைகள் அடங்கியிருந்த சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டியதைத் தவிர வேறு வழி அதற்கு இல்லாதிருந்தது. அது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. ஜூலை மாதம் மோசூல் ஈராக் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி 25-ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் லீக் ஆஃப் நேஷன்ஸ் கட்டளை நீடிக்கவேண்டும், அல்லது சுதந்திர நாடாக ஈராக் லீக் ஆஃப் நேசன்ஸ்- இல் உறுப்பினராக ஆகும் வரை நீடிக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஏழு மாதங்களுக்கு பின்னர், 1926-ம் ஆண்டு ஈராக் அரசியல் நிர்ணய சபை பிரிட்டனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்வது தவிர, வேறு வழியில்லாமல் போய்விட்டது. அந்த ஒப்பந்தப்படி மோசூல் மீது துருக்கி மீண்டும் படையெடுக்குமானால் பிரிட்டனின் விமானந்தாங்கி கப்பல் படையிலிருந்து விமானப்படைகள் துருக்கியை தாக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டது. இங்கு பணயம் வைக்கப்பட்டது ஈராக் எல்லை பிரச்சனையல்ல, அதன் எண்ணெய் வளம் ஆகும்.

இந்த உடன்படிக்கைகளுக்கு பின்னர்தான், இறுதியாக வர்த்தக அடிப்படையில் எண்ணெய் எடுப்பது தொடங்கியது. 1927-ம் ஆண்டு, கிர்கூக் பகுதியில் முதலாவது எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது, பெருமளவில் வர்த்தகம் செய்கிற அளவிற்கு எண்ணெய் வளம் கிடைக்கவில்லை. 1930-களின் கடைசிப் பகுதி வரைக்கும், ஓரளவிற்கு வர்த்தக அடிப்படையில் எண்ணெய் உற்பத்தி ஆரம்பமாகாதிருந்த போதிலும், 1950-கள் வரை பெரும் அளவிலான வர்த்தக அடிப்படையிலான எண்ணெய் உற்பத்தி தொடங்கவில்லை. பிரிட்டன், நாடுகளை அடிமைப்படுத்தி அரசியல் ஆதிக்கத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு, உள்நாட்டில் தனக்கு உடைந்தையாக செயல்படுபவர்களை பதவியில் அமர்த்திய பின்னர்தான் எண்ணெய் வள ஆய்வும், உற்பத்தியும் மிகத் தீவிரமாக தொடங்கின. அபிவிருத்தியை முன்கொண்டு வருதற்கு அப்பால், தசாப்தகாலங்களான ஏகாதிபத்திய சூழ்ச்சிகள், போர் மற்றும் மேலும் கூடய சூழ்ச்சிகள் அந்த பிராந்தியத்தில் எண்ணெய் வளத்தை வர்த்தக ரீதியாக சுரண்டுவதற்கு உதவி இருந்தது மற்றும் அப்பிராந்தியத்தின் அபிவிருத்தியைத் தடுத்தது.

பைசலை பதவியில் தக்கவைக்க பிரிட்டன் விமானப்படை பயன்படுத்தல்:-

பிரிட்டனின் எண்ணெய் வளம் அதற்கான பாதுகாப்பு ஆகியவை மன்னர் பைசல் அவரது ஆட்சியை சார்ந்தேயிருந்தது. அந்த ஆட்சிக்கு பொதுமக்களது ஆதரவு இல்லை.

மன்னரும், அவரது ஆட்சியும் மிக குறுகலான சமுதாயப் பிரிவுகளை நம்பியே செயல்பட்டுவந்தது. நில உடைமையாளர்கள், பழைய பிரமுகர்கள், முன்னணி வர்த்தகர்கள், ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் - மன்னரை ஆதரித்து நின்றனர். மற்றும், மலைவாழ் இனங்களின் ஷேக்குகளும், அல்லது தலைவர்களும், மன்னரை ஆதரித்தனர். மலைவாழ் இனங்களுக்காக ஷேக்குகளது அதிகாரத்தை பெருக்கும் வகையில் குறிப்பான சட்ட நடைமுறைகளை பிரிட்டன் உருவாக்கியது. இதன் மூலம் அரசாங்கத்தின் சுதந்திரமான செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. அரசாங்கம் மலைவாழ் இனத் தலைவர்களது அதிகாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தங்களது பகுதிகளைக் கண்கானிக்கவும் அவர்களின் பகுதிகளை நிர்வாகம் செய்யவும் மற்றும் வரிகளை வசூலிக்கவும் மிக விரைவில் அரசாங்கம் அந்த ஷேக்குகளையும், நிலப்பிரபுக்களையும், நம்பியிருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஈராக்கின் நிதிநிலை எப்போதும் உறுதியற்றதாக இருந்துவந்தது. எல்லாவற்றுக்கும் முதலில், ஈராக் தோன்றிய காலத்திலேயே பிரிட்டன் திணித்த மிகப்பெரும் பற்றாக்குறையோடு நிர்வாகம் தொடங்கியது. 1922-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, பிரிட்டன் - ஈராக் ஒப்பந்தப்படி, ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய பொதுக்கடன் நிர்வாகத்திற்கு ஈராக்கியர்கள் பங்கு செலுத்தியாக வேண்டும். இந்தக் கடன்கள் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம், ஏகாதிபத்திய அரசுகளுக்கு செலுத்தவேண்டிய நீண்டகாலக் கடன்களாகும். அதுமட்டுமல்லாமல், துருக்கிக்கு எதிரான போரில் இராணுவத் தளவாடங்கள், பொருட்கள் மற்றும் இராணுவப் பணிகளுக்கான செலவையும் ஈராக் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பிரிட்டன் கோரியது. இராணுவத்திற்கான ரயில்வே அமைப்பு செலவையும், ஈராக் ஏற்றுக்கொள்ள வேண்டிவந்தது. இதனால், ஈராக்கிற்கு வர்த்தக அடிப்படையில் எந்தப் பலனும் இல்லை. மேலும், ஈராக் அரசாங்கம் தனது வருவாயில் குறைந்தபட்சம் 25 சதவீதம் பாதுகாப்பிற்காக -- பிரிட்டிஷ் ஆட்சிக்கும் தங்களது இன தலைவர்களுக்கும் எதிராக கிளர்ச்சி செய்கின்ற மக்களை ஒடுக்குவதற்கு தீயசொல்லை மறைத்துக்கூறும் நற்சொல்லாக--பயன்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஈராக் மீது திணித்ததற்கான செலவு முழுவதையும், ஈராக்கை ஆளும் மேல்தட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதே உறவுதான் இன்றைய தினம் ஈராக்கில் போருக்குப் பின்னர், அமெரிக்க நிர்வாகம் உருவாக்கியுள்ள திட்டங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஏற்பாட்டிற்கு ஐ.நா. சம்மதித்துவிட்டது.

பிரிட்டனால் ஊக்குவிக்கப்பட்ட நிலபிரபுத்துவத்தாலும், பிராந்தியம் ஏகாதிபத்திய துண்டாடல்களை அடுத்தும், வர்த்தகம் சீர்குலைந்ததன் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது தாங்க முடியாத அளவிற்கு வரி விதிப்பதன் மூலம் இது நிறைவேற்றப்பட இருந்தது. அந்த காலத்தில் ஒரு சிலர் தான் கல்வி பொது சுகாதாரம் வேளாண்மை பாசனம் போன்ற துறைகளில் பணியாற்றி வந்தார்கள். பிரிட்டன் அதன் வரவு-செலவு திட்டத்தை சரிப்படுத்த வேண்டி, இவர்களது ஊதியங்களை கடுமையாக குறைக்குமாறு அரசாங்கத்தைக் கோரியதன் மூலம் பிரிட்டன் அதன் நெருக்குதலை இன்னும் இறுக்கியது.

ஒரு பக்கம் கற்பாறைபோல் நின்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றொரு பக்கம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டிருந்த மக்களுக்கு இடையிலும் ஆளும் நிலபிரபுத்துவ கும்பல் சிக்கிக்கொண்டது. அடிக்கடி நிதி நெருக்கடி ஏற்பட்டது, இதனால் ஆளும் குழுவிற்குள்ளேயே மோதல்கள் உருவாயின. 1921-முதல் 1958-வரை ஈராக்கில் 59-மந்திரி சபைகள் செயல்பட்டிருக்கின்றன. எந்த கோஷ்டி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்கள் ஆனார்கள். 37-ஆண்டு காலத்தில் 166-பேர்தான், இத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இது பிரிட்டனின் சார்பு அரசின் குறுகலான சமுதாய அடிப்படை பற்றிய சில குறிகாட்டலை வழங்குகிறது. ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தில் பயிற்சி பெற்ற ஒரு இராணுவ அதிகாரி நூரி-அல்சையத் (Nuri al-Said) அவர் மன்னர் பைசல் ஆட்சியில் மிக பிரபலமானவர், பைசல் மந்திரி சபையில் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு மந்திரியாக பணியாற்றியிருக்கிறார்.

ஆகையால், பைசலும் அவரது ஆட்சியும், பிரிட்டனின் புதிய "விமானப்படை கட்டுப்படுத்தல்" உதவியின்றி கிளர்ச்சியுற்ற மக்களை அடக்கியிருக்க முடியாது, அதுதான் மிக செலவு குறைந்த மற்றும் மிகத் திறமான வகையில் நாட்டை "அமைதிப்படுத்தும்" வழியாகும். "ஈராக்கினை பிரிட்டன் தனது விமானப்படை பயிற்சிக்களமாக பயன்படுத்தி வருகிறது. அதற்கு ஏற்ற நில அமைப்பு கொண்டது ஈராக். ஆண்டிற்கு ஆண்டு இத்தகைய பயிற்சியின் மதிப்பு அதிகரித்து கொண்டே செல்லும்" என்று பிரிட்டனின் தலைமை தளபதி குறிப்பு ஒன்றை எழுதிவைத்திருக்கிறார்.

தொடரும்......


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved