World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Wall Street Journal
editorial reveals imperialist arrogance and racism behind US war drive

அமெரிக்கப் போர் முயற்சிக்கு ஆதரவாக, வோல் ஸ்ரீட் ஜேர்னல் தலையங்கம் ஏகாதிபத்திய மூர்கத்தனத்தையும் இனவெறியையும் வெளிப்படுத்துகின்றது

By Patrick Martin
13 March 2003

Back to screen version

புதன்கிழமையன்று வோல் ஸ்ரீட் ஜேர்னல் எழுதியுள்ள தலையங்கத்தில், ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர், ''மனித உரிமைகளை'' காப்பதற்கானதும் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு என்ற ஏமாற்றை கைவிட்டுவிட்டது. அத்துடன் புஷ் நிர்வாகத்தின் போர்த் திட்டங்களுக்கு எதிரான எந்தவிதமான சர்வதேச எதிர்ப்பையும் அதை வெட்கக்கேடான முறையில் இனவாத மற்றும் ஏகாதிபத்திய வார்த்தைகளில் மூர்க்கமாக கண்டனம் செய்திருக்கிறது.

அந்தத் தலையங்கத்திற்கு, ''குள்ளாக்கள் சாம்ராஜ்யத்தில் புஷ்'' என்று தலைப்பிட்டிருக்கிறது. அமெரிக்கா உலகை பாதுகாக்கும் கல்லிவர் (Gulliver) என்று சித்தரித்துக் காட்டி, அவரது பாதையில் குறுக்கிடும் எதிரிகள் மிகவும் அற்பமானவர்கள் என்று புறக்கணித்து தள்ளிவைக்கப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டது. கமரூன், மெக்சிக்கோ, சிலி, மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் ஈராக் மீது போர் தொடுப்பதற்கு அங்கீகாரம் வழங்கக்கோரி அமெரிக்காவும், பிரிட்டனும் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று அமெரிக்கா மிகப்பெரும் நிர்ப்பந்தங்களைக் கொடுத்தாலும், இந்த ஆறு நாடுகளும் அத்தகைய உறுதிமொழி எதையும் தருவதற்கு இதுவரை மறுத்தே வருகின்றன.

புஷ் நிர்வாகம், ஐ.நா வின் அங்கீகாரம் கோரி இரண்டாவது தீர்மானம் தாக்கல் செய்வதற்கு முடிவு செய்தது குறித்து, ஜேர்னல் வருந்தி ''இந்த நாடுகளை இலஞ்சம் கொடுத்து அல்லது அவர்களது ஆதரவிற்காக இதர சலுகைகளை வழங்கும் அளவிற்கு அமெரிக்கா கீழே இறங்கிவரும் நிலை ஏற்பட்டுவிட்டது'' எனவும், அப்படி இருந்தும் அந்த நாடுகள் நமக்கு ஆதரவு தருவது மிகவும் பிரச்சனையாக உள்ளதுடன், உலக அரங்கில் தங்களது 10 நிமிட புகழுக்காக அவர்கள் ஹாம்லட்டு (Hamlet) களாக நாடகமாடி வருகின்றனர்'' என அப்பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் முன்னணி செய்திப் பத்திரிகை, அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவரும் ஆறு நாடுகளையும் இனவெறி உணர்வோடு விமர்சனம் செய்திருக்கிறது. ''மெக்சிக்கோ மற்றும் சிலி பண்டாங்கோ (fandango- ஸ்பானிய நடனமாடுபவர்கள்)'' என்று மரியாதைக் குறைவாக வர்ணித்துள்ளது. ''எப்போதும் மூலோபாய முக்கியத்துவமான கமரூன்'' என அந்நாட்டைப் பரிகாசம் செய்திருக்கிறது. மூன்று ஆபிரிக்க நாடுகள் உட்பட ஆறு நாடுகளையும், ''சித்திரக்குள்ளர்கள்'' (pygmies) என்று வர்ணித்திருக்கிறது. (இது அறியாமையையும், அதே நேரத்தில் இனவெறிப்போக்கையும் காட்டுகிறது. இந்த ஆறு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 293 மில்லியன். இது அமெரிக்காவைவிட அதிகமானதாகும்).

ஜேர்னல் தலையங்கம், ஐ.நாடுகள் ஆயுத பரிசோதகர்கள், ஈராக்கை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி கண்டனம் செய்திருக்கிறது. குறிப்பாக, அணு ஆயுத வசதிகளை சோதனையிடும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் முஹம்மத் எல்பரடாய் ஐ கண்டித்திருக்கின்றது. ''பிரிட்டனும், அமெரிக்காவும் வழங்கிய தகவல் ஒரு தவறானது என எல்பரடாய் சென்ற வாரம் பகிரங்கமாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், ஈராக்கிடம் பாரிய அழிவிற்குரிய ஆயுதங்கள் உள்ளன என்பதற்கு இது முக்கியமான சான்று அல்ல'' என அந்த பத்திரிகை மிக சர்வ சாதாரணதமாக, பாதுகாப்பு சபையில் நடைபெற்ற முக்கியமான விவாதத்திற்கான பிரச்சனைகளை தள்ளுபடி செய்திருக்கிறது. அந்த விவாதத்தில், எல்பரடாய் அணு குண்டு செய்வதற்காக யூரேனியத்தை பெறவதற்கு ஈராக் முயன்று வருகிறது என்ற அமெரிக்க - பிரிட்டடின் குற்றச்சாட்டுக்கள் போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டவை என குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த தலையங்கத்தில் ஓர் உண்மையான வாக்கியம் இடம்பெற்றிருக்கிறது. ''ஒவ்வொரு நாளும் கடந்து செல்கையில், ஐக்கிய நாடுகள் சபை ஆய்வாளர்கள், சதாம் ஹூசேனை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை, அமெரிக்காவை கட்டுப்படுத்துகின்றது என்பதற்கான சான்றுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன'' எனக் குறிப்பிட்டது. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது புஷ் நிர்வாகமேயல்லாது சதாம் ஹூசேன் அல்ல என்று உலகத்தின் பெரும்பகுதி கருதுகின்றது.

அந்தப் பத்திரிக்கையின் போலியான வார்த்தைகள் ஐக்கிய நாடுகள் சபையில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதும், திரிபுபட்ட அளவிலும் காணப்படும் ஜனநாயகம் மற்றும் தேசிய இறையாண்மை தொடர்பான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உண்மையான அணுகுமுறை என்பதை வெளிப்படுத்திக்காட்டுகின்றது. வாஷிங்டனின் போர் வெறியர்களும், வோல் ஸ்ரீட்டிலுள்ள அவரது ஆதரவாளர்களும், அமெரிக்காவின் தேசிய இறையாண்மையை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்ளுகின்றனர். தனது குறிக்கோள்களை அடைவதற்காக படை பலத்தையும், பலாத்கார முறைகளையும் பயன்படுத்துவதில் எந்தவிதமான சர்வதேச கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள அமெரிக்கா மறுத்து வருகிறது.

ஐ.நாடுகள் சபை நாடுகளின் சமத்துவத்தை ஆகக்குறைந்தது கொள்கை அடிப்படையில் அடித்தளமாக கொண்டுள்ளது. 191 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா சபையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வாக்களிக்கும் உரிமை உண்டு. ஐ.நா. பாதுகாப்பு சபை மிகவும் குறுகலான அதிகார வரம்பிற்கு உள்பட்டது. ஐந்து நாடுகள் அதன் நிரந்தர உறுப்பினர்கள், அந்த நாடுகளுக்கு, வீட்டோ அதிகாரம் என்று சொல்லப்படுகின்ற ரத்து அதிகாரம் உண்டு. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் தேர்ந்தெடுக்கப்படும் மற்றைய பத்து நாடுகள் சுழற்சி முறையில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த நடைமுறைகள் எதுவும் ஓர் உண்மையை மாற்றிவிடவில்லை. ஐ.நா. அதன் ஆரம்ப நாளில் இருந்து பெரிய ஏகாதிபத்திய அரசுகளின் கைப்பொம்மையாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கும் மேலாக அமெரிக்காவின் கைப்பொம்மையாகும். அமெரிக்கா இலஞ்சம் கொடுப்பது மற்றும் அச்சுறுத்துவது இரண்டையும் கலந்தே தன்வழியில் செய்து வருகின்றது. ஜேர்னல் விஷத்தை கக்கியிருப்பது, முக்கியமாக பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா காட்டிவருகின்ற எதிர்ப்பு காரணமாக தனது வழமையான பாணியில் இயங்க முடியாதுள்ள அமெரிக்க ஆளும் தட்டின் இயலாமையால் உருவான விரக்தியை காட்டுகின்றது.

பாதுகாப்பு சபையில் புஷ்ஷிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போர் ஆரம்பமாகியதும் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் போர்வீரர்களின் மரணத்திற்கு பொறுப்பானவர்களாகவும், போர் அபாயம் சூழ்ந்துகொண்டு வருவதால் ஏற்படும் பொருளாதார பேரழிவிற்கும் காரணமானவர்களாக கருதப்படுவார்கள் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. ஆனால், அந்தப் பத்திரிகையின் உண்மையான பயம் என்னவென்றால், மத்தியகிழக்கில் யுத்தம் கட்டவிழ்த்துவிடப்பட்டுமானால், அதனால் ஏற்படும் மிகப்பெரும் உயிர் சேதத்திற்கு அமெரிக்கா பொறுப்பாக கருதப்படும் என்பதுதான்.

இந்தச் சூழ்நிலையில், புஷ் நிர்வாகம் அங்கீகரிக்க பிடிவாதமாக எதிர்க்கும் மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு கட்டுப்படுவதற்கு அமெரிக்கா இணங்காத, கடந்த திங்கள் அன்று ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஆரம்ப விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கலந்துகொண்டார் என்பதை கவனிப்பது முக்கியமானது. அவர் அப்போது உரையாற்றும்போது, ஐ.நா. பாதுகாப்பு சபையை மீறி ஈராக் மீது போர் தொடுக்கப்படுமானால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் அவர் அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்ட இடத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, புதிய வளைகுடாப்போரை ஆரம்பிக்கின்ற அமெரிக்க மற்றும் பிரிட்டனின் தலைவர்கள் போர் முடிந்ததும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணை கூட்டப்படலாம் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளரின் உரை கோடிட்டு காட்டுகிறது.

மார்ச் 12ம் திகதி பிரசுரிக்கப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் குற்றச்சாட்டுக்களை சந்திக்க வேண்டி வரலாம் என்று கூறப்பட்டிருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. '' போர் தொடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்காலத்தில் வழக்கு தொடுக்கப்படுகின்ற நிலை ஏற்படலாம் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் புதிதாக கவலை தெரிவித்திருக்கின்றனர். இந்த நீதிமன்றத்திற்கு போர் குற்றங்களை விசாரிப்பதற்குரிய அதிகார வரம்பு உள்ளது. இந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் பிரிட்டன் கையெழுத்திட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. சென்ற அக்டோபர் மாதம் பிரிட்டனின் சட்டமா அதிபரால் பிளேயருக்கு வழங்கப்பட்ட சட்ட ஆலோசனையில் 'பாக்தாத்தில் ஆட்சி' மாற்றத்திற்கு இராணுவ நடவடிக்கை எடுப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது'' இவ்வாறு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் எழுதியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved