World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British intelligence employee arrested for leaks on US bugging of UN

ஐ.நா.வில் அமெரிக்கா ஒட்டுகேட்டதை வெளிவிட்டதற்காக பிரிட்டிஷ் புலனாய்வு அலுவலர் கைது

By Julie Hyland
13 March 2003

Back to screen version

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உறுப்பினர்களது நடவடிக்கையை வேவு பார்ப்பதற்காக புஷ் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இரகசியங்களை வெளியில் தெரிவித்ததாக பிரிட்டனின் தலைமை இரகசிய அரசு கண்காணிப்பு தலைமையகமான GCHQ இல் பணியாற்றி வந்த பெண் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈராக் மீது போர் தொடுப்பதற்கான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (NSA) நுட்ப கருவிகளை பொருத்தியிருப்பதாக மார்ச் 2 அன்று ஒப்சேர்வர் செய்தி வெளியிட்டிருந்தது. ஜனாதிபதி புஷ்சின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹொண்டலீசா ரைஸ் (Condoleezza Rice) இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது. பிரிட்டனும், அமெரிக்காவும் ஐ.நா. அங்கீகாரம் கோரி தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு காட்டுமாறு, பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கு நிர்பந்தம் கொடுக்கும் நோக்கத்தோடு இந்த ஒட்டுகேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. வீடுகள் மற்றும் அலுவலக தொலைபேசி தொடர்புகளையும், மின்னஞ்சல்களையும் இடைமறித்து தகவல்களை தெரிந்துகொள்ளவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஒப்சேர்வர் பத்திரிகை ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் NSA -அதிகாரியான பிராங் கோசா (Frank Koza) மேரிலாந்திலிருந்து ஐ.நா. சபை அமெரிக்காவின் ஒட்டுகேட்கும் நடவடிக்கையில் கலந்துகொள்ளுமாறு இங்கிலாந்தின் செல்டன்ஹாம் (Cheltenham) இல் உள்ள GCHQ அமைப்பினை கேட்டுக்கொண்டு ஒரு குறிப்பை அனுப்பியதாக எழுதியது. அதில் அங்கோலா, கமரூன், கயானா, பல்கேரியா மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றின் மீது (முடிவெடுக்காத ஐ..நா. அமைப்பின் நாடுகள்) குறிப்பாக கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டிருந்தது. இந்நாடுகள் தொடர்பான கொள்கைகள், உடன்பாட்டு நிலைப்பாடுகள் மற்றும் கூட்டுக்கள் என்பன தொடர்பாக கேட்கப்பட்டிருந்த தகவல்கள் அமெரிக்காவின் நோக்கத்திற்கு சாதகமாக முடிவெடுப்பதற்கு அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவுவதுடன், மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐ.நா அங்கத்துவ நாடுகளின் மீதும் இந்நடவடிக்கையை விரிவாக்கலாம் என்பதை வெளிப்படுத்தியது.

இது வெளிவந்தது தொடர்பாக தொலைத்தொடர்பு சாதனங்கள் மிகவும் மேலெழுந்தவாரியாகவே குறிப்பிட்டிருந்தன. அமெரிக்காவின் தொலைத்தொடர்பு சாதனங்கள் இதுதொடர்பாக ஒன்றும் குறிப்பிடவில்லை. அத்துடன், பாதுகாப்பு அமைப்புகள் இத் தகவலை மூடிமறைக்க முயல்வதுடன், இது யாரால் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் அறிய முயல்கின்றது.

இவ்வார இறுதியில் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறிய ஐயுறவின் பேரில் 29 வயதான GCHQ ஊழியரை கைது செய்ததாக பொலிஸ் உறுதிப்படுத்தியது. பல வருடங்களாக பாரியளவில் ''உளவு வேட்டையாடல்'' (Spy Hunt) பிரித்தானியாவில் பலவருடங்களாக இடம்பெறுவதால் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என ஒப்சேர்வர் தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவின் இவ் உளவுவேலை தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அனுப்பிய குறிப்பின் இரகசியம் வெளிவந்திருப்பது குறித்து புஷ் நிர்வாகம் மிகுந்த ஆத்திரத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் இத்தகைய நடவடிக்கை தொடர்பான முடிவில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்த முடிவு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷிற்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் ஒப்சேர்வர் பத்திரிக்கைகு ஊர்ஜிதமான தகவல் தந்திருக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்களை கண்காணிப்பது அவர்களது நடவடிக்கைகளை வேவு பார்ப்பது ஆகியவை அமெரிக்காவின் போர் திட்டத்தில் ஒரு பகுதி தான். ஈராக் மீது, படையெடுத்து அந்நாட்டை தனது இராணுவ வலிமைக்கு அடிமைபடுத்திக்கொள்வதில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆதரவை பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் மேற்க்கொண்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள ஏழை நாடுகளைச் சார்ந்தவர்களை தனது போர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள செய்வதற்காக அச்சுறுத்துவது, இலஞ்சம் கொடுப்பது போன்ற முயற்சியில் புஷ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இந்தக் குறிப்பு தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் சர்வதேச கண்காணிப்பு திட்டத்தின் Echelon செய்மதி மூலமாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என ஒப்சேர்வர் தெரிவிக்கின்றது. இந்த கூட்டினை பிரான்ஸ், இதற்கு முன்னர் தனி உரிமை படைத்த ''ஆங்கிலோ சாக்சன் கிளப்'' (privileged Anglo-Saxon) என்று கண்டித்திருக்கிறது.

இந்த சுற்றறிக்கை பற்றிய இரகசியம் வெளியிடப்பட்டதில் தனி மனிதர்களின் மனசாட்சி உறுத்தல் என்பதற்கு அப்பால், அமெரிக்காவின் போர் முயற்சிக்கு எதிராக புலனாய்வு சேவைகளுக்கு உள்ளேயே நிலவுகின்ற ஆழமான பிளவுகள் வெளிப்படுவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

எலெக்ட்ரானிக் பிரைவைசி இன்பர்மேஷன் சென்டர் (Electronic Privacy Information Centre) அமைப்பைச் சார்ந்த வேன் மாட்சன், இது பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''இந்த இரகசிய தகவல் வெளியிடப்பட்டது அதிகாரபூர்வமான அங்கீகார முத்திரையோடுதான் நடந்திருக்கிறது என்பதுதான் எனது உணர்வாகும். அல்கொய்தா அமைப்போடு ஈராக்கை தொடர்புபடுத்துவதற்கு தங்களது அரசுகள் புலனாய்வு தகவல்களை 'கற்பனையாக சிருஷ்டித்து வருகிறார்கள்' என்பது குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டனின் புலனாய்வு சமுதாயம் ஆழமான கவலை கொண்டிருக்கின்றது என எனக்கு பல மாதங்களாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒப்சேர்வர் பத்திரிகை ஆரம்பத்தில் இது சம்மந்தமாக வெளியிட்ட ஒரு தகவலில், ''நட்பான வெளிநாட்டு புலனாய்வு ஏஜென்சிக்கு'' அந்த விபரக் குறிப்பு அனுப்பப்பட்ட பின்னர் அதை தான் பெற்றதாக குறிப்பிட்டது. ஆனால், தனது மார்ச் 9 திகதி இதழில், அதே பத்திரிகை ஊர்ஜிதமாக ஒரு தகவலை கூறியிருக்கிறது. ''அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டதை ஆட்சேபித்த பிரிட்டனின் பாதுகாப்பு வட்டாரங்கள் அந்த தகவலை இந்த பத்திரிகைக்கு தந்தது'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

''இந்த இரகசிய தகவல்கள் வெளியேவருகின்ற அளவிற்கு இணையான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இந்தக் கேள்விகளில் மிக முக்கியமானது, ஒரு புலனாய்வு நிரந்தர அதிகாரி இப்படி ஒரு தகவலை வெளியிட்டு அதனால் வருகின்ற இழிவையும், சிறைத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ள துணிந்தது ஏன் என்பது முதலில் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்'' என்று ஒப்சேர்வர் குறிப்பிட்டிருக்கிறது.

அந்தப் பத்திரிகை தந்திருக்கின்ற தகவல்களின்படி கடந்த சில மாதங்களாகவே, பிளேயர் நிர்வாகத்திற்கும் புலனாய்வு சேவை பிரிவிற்கும் இடையே கொந்தளிப்பு உருவாகி வருவது தெளிவாக தெரிகிறது. பிளேயர் ஒட்டுமொத்தமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிட்டனின் நிர்வாக அமைப்பிற்குள்ளேயே கடுமையான, கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. குறிப்பாக, பிரதமர் சர்வதேச மற்றும் உள்நாட்டு மக்களது உணர்வுகளுக்கு எதிராக செயல்பட விருப்பம் தெரிவித்து வருவதால் ஐரோப்பாவிற்கு உள்ளேயும் பிரிட்டனுக்கு உள்ளேயும் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

பெப்ரவரி 26 அன்று, நாடாளுமன்றத்தில் 199 உறுப்பினர்கள் அரசாங்கம் போருக்கு செல்லக்கூடாது என்று கூறி அரசை கண்டிக்கும் திருத்ததிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் தொழிற்கட்சியைச் சார்ந்த 121 பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்தை ஆதரித்தனர். தொழிற் கட்சி வரலாற்றிலேயே, முதல் தடவையாக பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி புரட்சி செய்து அரசிற்கு எதிராக வாக்களித்திருப்பது இதுவே முதல் தடவை.

அதிருப்தியாளர்கள் அனைவரும் அமைதிவாதிகளோ அல்லது பிரித்தானிய ஏகாதிபத்தியம் புத்துயிர் பெறுவதை எதிர்ப்பவர்களோ அல்லர். இத்தகைய அதிருப்தியாளர்களின் கருத்துக்களை ''பழைமைவாத'' கட்சியின் முன்னாள் பிரிட்டனின் நிதியாமைச்சராக பணியாற்றிய கென்னத் கிளார்க் சுருக்கமாக விளக்கியிருக்கிறார். அமெரிக்காவின் நெருக்கமான, நண்பராக பிளேயர் விளங்க முயற்சிப்பதை தாம் ஆதரிப்பதாக குறிப்பிட்டார். ஐரோப்பாவிற்கு இணைப்பு பாலமாக செயல்படுவதையும் வரவேற்றார். ஆனால், அரசாங்கம் தனது முயற்சிகளை நியாயப்படுத்துவதற்காக, அப்பட்டமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவதை கண்டித்தார். சதாம் ஹுசேனுக்கும், அல்கொய்தா அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக பொய்யான தகவல்களை கூறியிருப்பது எமது ''புலனாய்வுத்துறைக்கு ஒரு அவமரியாதை'' என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்கள் மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும் பிரிட்டனும் கேந்திரநலன்களுக்கு அச்சுறுத்துகின்றது என தெரிவித்தார்.

ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆதரவு தெரிவிப்பதை நியாயப்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு பொய்யான தகவல்களை அரசாங்கம் கூறி வருவதாக அம்பலத்திற்கு வந்ததும் குறுகிய கால அரசியல் இலாபத்திற்காக, புலனாய்வு ஏஜென்சிகளின் பெருமை இழிவுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு சேவையின் சில பிரிவினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் அரசாங்கம், ஈராக்கிடம் பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் இருப்பது தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையை போர் முயற்சியை நியாயப்படுத்தும் அப்பட்டமான பிரசார அறிக்கை என உலகில் மிகப்பெரும்பாலோர் கண்டித்தனர். இதற்கிடையில் பிரதமரின் தலைமை அலுவலகத்திற்கும் பாதுகாப்புச் சேவைகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் வெடித்தன. அரசியல் நோக்கில் வெற்றி பெறுவதற்காக தங்களது சேவை பயன்படுத்தி கொள்ளப்படுவதாக பாதுகாப்புச் சேவையால் புகார் கூறப்பட்டது.

டிசம்பர் மாதம் அரசாங்கம், ஈராக் பற்றி இரண்டாவது புலனாய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த முறை, வெளியுறவுத்துறை ஈராக்கில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி அந்த அறிக்கையை வெளிவிட்டிருந்தது. அத்தகைய நடவக்கை போர் நடவடிக்கையோடு வெளிப்படையாக தொடர்புபடுத்துவதாகும். இந்த அறிக்கைகளை சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கண்டித்தது. சந்தர்ப்பவாத அடிப்படையில் சில குறிப்பிட்ட தகவல்களை தேர்ந்தெடுத்து, ஆய்வு அறிக்கை மூலம் ஈராக்கிற்கு எதிராக அவை பயன்படுத்தப்படுவதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை கருத்து தெரிவித்தது. ஐரோப்பாவில் இந்த அறிக்கைகள் ''ஒரு கசப்பான உப்புச்சப்பற்றதானது'' என ஜேர்மனியின் Frankfurter Rundschau பத்திரிக்கை கருத்து தெரிவித்தது.

இவற்றில் படுமோசமான புலனாய்வு அறிக்கை ஒன்று ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைக்கு ''ஈராக்கின் அதன் மோசடி, மூடிமறைப்பு மற்றும் அச்சுறுத்தல் கட்டமைப்பு'' என்று தலைப்பிட்டிருந்தார்கள். இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் பெப்ரவரி 5 ம் திகதி ஆற்றிய உரையில் வெகுவாக பாராட்டியதுடன் இது மிக அண்மைக்காலத்தில் திரட்டப்பட்ட தகவல் என்றும் குறிப்பிட்டார். இது ஐ.நா.வை தன் வசப்படுத்தும் நடவடிக்கையாகும். எப்படியிருந்தபோதும், அறிக்கை வெளியிடப்பட்டு சில மணி நேரத்திற்குள்ளேயே, பிரிட்டனின் புலனாய்வு அறிக்கை ஒரு அமெரிக்க மாணவரின் டாக்டர் பட்ட தேர்வு அறிக்கையில் (PhD thesis) இருந்து விரிவாக திருடப்பட்டதுதான் என்பது அம்பலத்திற்கு வந்தது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved